தமிழ்நாட்டின் ஊர்ப்பாடல்களைப் படிப்பதில் ஆர்வமுடையவன். எடுத்துக்காட்டாக, திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் புகழ்வாய்ந்த இரண்டு கவிஞர்களின் கோவை, மதுரைப் பாட்டுகளை இப்பதிவில் பார்ப்போம்.
தமிழ்நாடு, இலங்கை, ... மற்ற இந்திய, அயல்நாடுகளின் ஊர், நகரங்களைப் பற்றி நல்ல தமிழ்க்கவிதைகள் இருந்தால் அறியத்தர வேண்டுகிறேன்.
அன்புடன்,
நா. கணேசன்
கோயம்புத்தூர்: ஒரு விளக்கம்
கவிஞர் கண்ணதாசன்
கன்னியரின் இதழழகைக் கோவை யென்பார்!
கனிமழலை முழுவடிவைக் கோவை யென்பார்!
தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு
திறமான கவிதொகுத்த கோவை யுண்டு
இந்நகரைக் “கோவை” என ஏனழைத்தார்?
எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்!
என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர்
இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக!
வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின்
மன்னருக்கு மக்களென இருவர் வந்தார்
செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற
செங்குட்டுவன் ஒருவன்! தமிழெடுத்து
அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்
அடுத்தொருவன்! இவ்விருவர் குறிப்பும் பார்த்து
பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான்
பேதையொரு வேதாந்தி! அதனைக் கேட்டு
முன்னவனே நாடாள வேண்டுமென்று
முடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்
தன்னாட்டின் எல்லையிலோர் குடிலமைத்தான்!
தனியாகச் சாத்தனுடன் தங்கிவிட்டான்,
அந்நாளில் இளங்கோவன் அமைத்த புத்தூர்
அங்கோவன் புத்தூராய்ப் பேரெடுத்து
இந்நாளில் கோயம் புத்தூ ராயிற்று!
இயல்பான உருமாற்றம் சரிதச் சான்று!
நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து
நெளிந்துவரும் தென்றலினை வளையவிட்டுப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்
பண்பினையும் அன்பினையும் துணைவர் ஆக்கி
வாழுங்கள் எனவிட்டாள் தமிழ் மூதாட்டி!
வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்!
சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்!
சுவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!
ஏனுங்க! என்னவுங்க! ஆமா முங்க!
இருக்குங்க! சரியிங்க! பாக்க வாங்க!
மானுங்க! வேணுங்களா! வாங்கிக் கோங்க!
மலைப் பழமும் இருக்குங்க! எடுத்துக்கோங்க!
தேனுங்க! கையெடுங்க! சாப்பிடுங்க!
திருப்பூரு நெய்யுங்க! சுத்த முங்க!
ஏனுங்க! எழுந்தீங்க! உக்காருங்க!
ஏ, பையா! பாயசம் எடுத்துப் போடு!
அப்பப்பா! கோவையிலே விருந்து வந்தால்
ஆறுநாள் பசிவேண்டும்! வயிறும் வேண்டும்!
தப்பப்பா! கோவைக்கு வரக்கூடாது!
சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!
ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்!
உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்!
கொடுத்தவரை பாடுவ தெம்குல வழக்கம்
கொடைக்கெனவே படையெடுத்தோர் புலவர் பல்லோர்
இனித்தசுவைப் பழங்கொடுத்த வள்ளல் பற்றி
இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி
தனித்தனியே கனிவைத்துத் தேனும் வைத்துத்
தந்தானைப் புகழ்ந்தானே கம்பன் அன்றும்
கொடுத்தவனைப் புகழ்வதுதான் புலவன் பாட்டு
குறையெதற்கு? நானுமதைச் செய்து விட்டேன்.
---------------------------------------------------------------------------------
மதுரை
கவிஞர் வைரமுத்து (1997)
பாண்டியர் குதிரைக் குளம்படியும் - தூள்
பறக்கும் இளைஞர் சிலம்படியும் - மதி
தோண்டிய புலவர் சொல்லடியும் - இளந்
தோகைமார்தம் மெல்லடியும்
மயங்கி ஒலித்த மாமதுரை - இது
மாலையில் மல்லிகைப் பூமதுரை!
நீண்டு கிடக்கும் வீதிகளும் - வான்
நிமிர்ந்து முட்டும் கோபுரமும்
ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் - தமிழ்
அழுந்தப் பதிந்த சுவடுகளும்
காணக் கிடைக்கும் பழமதுரை - தன்
கட்டுக் கோப்பால் இளமதுரை!
மல்லிகை மௌவல் அரவிந்தம் - வாய்
மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம் குருக்கத்தி - இவை
கொள்ளை அடித்த வையைநதி
நாளும் ஓடிய நதிமதுரை - நீர்
நாட்டிய மாடிய பதிமதுரை
தென்னவன் நீதி பிழைத்ததனால்
தெரிந்து மரணம் அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால் - அவள்
கந்தக முலையில் எரிந்ததனால்
நீதிக் கஞ்சிய தொன்மதுரை - இன்று
ஜாதிக் கஞ்சும் தென்மதுரை!
தமிழைக் குடித்த கடலோடு - நான்
தழுவேன் என்றே சபதமிட்டே
அமிழ்தம் பரப்பும் வையைநதி - நீர்
ஆழி கலப்பது தவிர்ப்பதனால்
மானம் எழுதிய மாமதுரை - இது
மரபுகள் மாறா வேல்மதுரை!
மதுரை தாமரைப் பூவென்றும் - அதன்
மலர்ந்த இதழே தெருவென்றும்
இதழில் ஒட்டிய தாதுக்கள் - அவை
எம்குடி மக்கள் திரளென்றும் - பரி
பாடல் பாடிய பால்மதுரை - வட
மதுரா புரியினும் மேல்மதுரை!
மீசை வளர்த்த பாண்டியரும் - பின்
களப்பிரர் பல்லவர் சோழர்களும் - மண்
ஆசை வளர்த்த அந்நியரும் - அந்த
அந்நிய ரில்சில கண்ணியரும்
ஆட்சி புரிந்த தென்மதுரை - மீ
னாட்சியி னால்இது பெண்மதுரை!
மண்ணைத் திருட வந்தவரைத் - தம்
வயிற்றுப் பசிக்கு வந்தவரை - செம்
பொன்னைத் திருட வந்தவரை - ஊர்
பொசுக்கிப் போக வந்தவரைத் - தன்
சேயாய் மாற்றிய தாய்மதுரை - அவர்
தாயாய் வணங்கிய தூய்மதுரை!
அரபு நாட்டுச் சுண்ணாம்பில் - கரும்பு
அரைத்துப் பிழிந்த சாறூற்றி
மரபுக் கவிதை படைத்தல்போல் - ஒரு
மண்டபம் திருமலை கட்டியதால்
கண்கள் மயங்கும் கலைமதுரை - இது
கவிதைத் தமிழின் தலைமதுரை!
வையைக் கரையின் சோலைகளும் - அங்கு
வரிக்குயில் பாடிய பாடல்களும்
மெய்யைச் சொல்லிய புலவர்களும் - தம்
மேனி கறுத்த மறவர்களும்
மிச்ச மிருக்கும் தொன்மதுரை - தமிழ்
மெச்சி முடிக்கும் தென்மதுரை!
போட்டி வளர்க்கும் மன்றங்களும் - எழும்
பூசை மணிகளின் ஓசைகளும் - இசை
நீட்டி முழங்கும் பேச்சொலியும் - நெஞ்சை
நிறுத்திப் போகும் வளையொலியும்
தொடர்ந்து கேட்கும் எழில்மதுரை - கண்
தூங்கா திருக்கும் தொழில்மதுரை!
ஆலைகள் தொழில்கள் புதுக்காமல் - வெறும்
அரசியல் திரைப்படம் பெருக்கியதில்
வேலைகள் இல்லாத் திருக்கூட்டம் - தினம்
வெட்டிப் பேச்சு வளர்ப்பதனால்
பட்டாக் கத்திகள் சூழ்மதுரை - இன்று
பட்டப் பகலில் பாழ்மதுரை!
நெஞ்சு வறண்டு போனதனால் - வையை
நேர்கோ டாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர்கள் - நதியைப்
பட்டாப் போட்டுக் கொண்டதனால்
முகத்தை இழந்த முதுமதுரை - பழைய
மூச்சில் வாழும் பதிமதுரை!
தமிழ்நாட்டின் பெருநகர்கள் ~ 2 கவிதைகள்
Posted by
நா. கணேசன்
at
14
comments
திருவாய்மொழி: 'மல்லிகை கமழ் தென்றல்'
கண்ணபிரான் மீது காதல் கொண்ட முல்லைநில ஆய்ச்சியர் நெஞ்சுருகிப் பாடிய பத்துப் பாசுரங்கள் தமிழின் கருவூலம்.
இன்கவி பாடும் பரம கவிகளால்
தன்கவிதான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடனாக்கி என்னால் தன்னை
வன்கவி பாடும் என் வைகுந்தநாதனே. (7.9.6)
எனப் பாடிய முத்தமிழ் விநோதர் அல்லவா நம்மாழ்வார்! அந்தாதி அமைப்பைப் பத்துப் பாடல்களையும் வாசித்தால் தெரியும். இரண்டு முறை படித்தால் தமிழ்ப் பயிற்சி கூடும்; பொருளும் விளங்கிவிடும். 1100-1200 ஆண்டுகளுக்கு முன்னால் என்னமாய் பிரபந்நஜன கூடஸ்தர் தமிழில் விளையாடியிருக்கிறார்! பாசுரத்தை நாம் இன்று படித்தாலும் கிருஷ்ணனிடம் முல்லைக்காடுளின் கோபியர் விளையாட்டும், பிரிந்தபோது அவர்கள் ஏக்கமும் வெளிப்படுகின்றன. 1000 ஆண்டுகளாக நாலாயிரத் திவ்விய பிரபந்தத்திற்கு உரைகளின் நெடிய மரபுகள் உண்டு. பக்தி இலக்கியங்களில் நாலாயிரத்துக்கு மாத்திரந்தான் தமிழில் இச்சிறப்பு.
வாசக நண்பர்களின் வாழ்த்துக்களையும், நானறியாப் புதுச் செய்திகளையும் படிக்குங்கால் கவிகுல திலகரின் புகழ்பெற்ற பாசுரத் தொடக்க வாக்கியத்தை வலைத்திரட்டிக்கும் இணைக்கத் தோன்றிற்று:
மல்லிகை கமழ்தென்றல் ஈரு மாலோ!
தமிழ்மணம் கமழ் பதிவுகள் ஈர்க்குமாலோ!
நா. கணேசன்
நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் ஒருபத்து
---------------------------------------
3761
மல்லிகை கமழ்தென்றல் ஈரு மாலோ.
வண்குறிஞ் சியிசை தவழு மாலோ,
செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ.
செக்கர்நன் மேகங்கள் சிதைக்கு மாலோ,
அல்லியந் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறரி யேறெம் மாயோன்,
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமிய மாலோ. 9.9.1
3762
புகலிடம் அறிகிலம் தமிய மாலோ.
புலம்புறும் அணிதென்றல் ஆம்ப லாலோ,
பகலடு மாலைவண் சாந்த மாலோ.
பஞ்சமம் முல்லைதண் வாடை யாலோ,
அகலிடம் படைத்திடந் துண்டு மிழ்ந்து
அளந்தெங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன்,
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்? 9.9.2
3763
இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்
இணைமுலை நமுகநுண் ணிடைநு டங்க,
துனியிருங் கலவிசெய் தாகம் தோய்ந்து
துறந்தெம்மை யிட்டகல் கண்ணன் கள்வன்,
தனியிளஞ் சிங்கமெம் மாயன் வாரான்
தாமரைக் கண்ணும்செவ் வாயும்,நீலப்
பனியிருங் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ. 9.9.3
3764
பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ.
வாடைதண் வாடைவெவ் வாடை யாலோ,
மேவுதண் மதியம்வெம் மதிய மாலோ.
மென்மலர்ப் பள்ளிவெம் பள்ளி யாலோ,
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு
துதைந்த எம் பெண்மையம் பூவி தாலோ,
ஆவியிம் பரமல்ல வகைக ளாலோ.
யாமுடை நெஞ்சமும் துணையன் றாலோ. 9.9.4
3765
யாமுடை நெஞ்சமும் துணையன் றாலோ.
ஆபுகும் மாலையும் ஆகின் றாலோ,
யாமுடை ஆயன்தன் மனம்கல் லாலோ,
அவனுடைத் தீங்குழ லீரு மாலோ,
யாமுடை துணையென்னும் தோழி மாரும்
எம்மின்முன் னவனுக்கு மாய்வ ராலோ,
யாமுடை ஆருயிர் காக்கு மாறென்?
அவனுடை யருள்பெ றும்போது அரிதே. 9.9.5
3766
அவனுடை யருள்பெ றும்போ தரிதால்
அவ்வருள் அல்லன அருளும் அல்ல,
அவனருள் பெறுமள வாவி நில்லாது
அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனொடு பிரமன்வண் திரும டந்தை
சேர்திரு வாகமெம் மாவி யீரும்,
எவனினிப் புகுமிடம்? எவஞ்செய் கேனோ?
ஆருக்கென் சொல்லுகேன் அன்னை மீர்காள். 9.9.6
3767
ஆருக்கென் சொல்லுகேன் அன்னை மீர்காள்.
ஆருயிர் அளவு அன்று இக்கூர்தண் வாடை,
காரொக்கும் மேனிநங் கண்ணன் கள்வம்
கவர்ந்தவத் தனிநெஞ்சம் அவன்க ணஃதே,
சீருற்ற அகிற்புகை யாழ்ந ரம்பு
பஞ்சமம் தண்பசுஞ் சாந்த ணைந்து,
போருற்ற வாடைதண் மல்லி கைப்பூப்
புதுமணம் முகந்துகொண் டெறியு மாலோ. 9.9.7
3768
புதுமணம் முகந்துகொண் டெறியு மாலோ.
பொங்கிள வாடைபுன் செக்க ராலோ,
அதுமணந் தகன்றநங் கண்ணன் கள்வம்
கண்ணினிற் கொடிதினி அதனி லும்பர்,
மதுமன மல்லிகை மந்தக் கோவை
வண்பசுஞ் சாந்தினில் பஞ்ச மம்வைத்து,
அதுமணந் தின்னருள் ஆய்ச்சி யர்க்கே
ஊதுமத் தீங்குழற் கேயுய் யேன்நான். 9.9.8
3769
ஊதுமத் தீங்குழற் கேயுய் யேன்நான்.
அதுமொழிந் திடையிடைத் தஞ்செய் கோலத்,
தூதுசெய் கண்கள்கொண் டொன்று பேசித்
தூமொழி யிசைகள்கொண் டொன்று நோக்கி,
பேதுறும் முகம்செய்து நொந்து நொந்து
பேதைநெஞ் சறவறப் பாடும் பாட்டை,
யாதுமொன் றறிகிலம் அம்ம அம்ம.
மாலையும் வந்தது மாயன் வாரான். 9.9.9
3770
மாலையும் வந்தது மாயன் வாரான்
மாமணி புலம்பல் லேற ணைந்த,
கோலநன் னாகுகள் உகளு மாலோ.
கொடியென குழல்களும் குழறுமாலோ,
வாலொளி வளர்முல்லை கருமு கைகள்
மல்லிகை யலம்பிவண் டாலு மாலோ,
வேலையும் விசம்பில்விண் டலறு மாலோ.
என்சொல்லி யுய்வனிங் கவனை விட்டே? 9.9.10
3771
அவனைவிட் டகன்றுயிர் ஆற்ற கில்லா
அணியிழை ஆய்ச்சியர் மாலைப் பூசல்,
அவனைவிட் டகல்வதற் கேயி ரங்கி
அணிகுரு கூர்ச்சட கோபன் மாறன்,
அவனியுண் டுமிழ்ந்தவன் மேலு ரைத்த
ஆயிரத் துள்ளிவை பத்தும் கொண்டு,
அவனியுள் அலற்றிநின் றுய்ம்மின் தொண்டீர்.
அச்சொன்ன மாலை நண்ணித் தொழுதே. 9.9.11
Posted by
நா. கணேசன்
at
5
comments
யூனிக்கோடில் மேலதிகமாகத் தமிழ்எழுத்துக்கள்
பொருளும், காலமும் செலவிட்டுச் சில ஆண்டுகள் உலக எழுத்து முறைகளில் மூழ்கித் தமிழுக்குப் பொருத்தமான 'யுனிகோட் சார்ட் எது?' தமிழ் ப்ளாக் (block) அறிவியல், தமிழிலக்கண நெறிப்படி அமைந்திருக்க வேண்டுமே என நினைந்தேன். அப்படித் தான் மாலத்தீவின் எழுத்தின் குறியேற்றம் யூனிக்கோடில் அமைந்துள்ளது என்பது அறியற்பாலது.
யூனிக்கோடில் மாலத் தீவின் எழுத்து
மேலோட்டமாக, மாலத்தீவின் எழுத்து (தானா) எனப்படுவது அரபி போலத் தோன்றினாலும், அதன் அடிப்படை விஞ்ஞான பூர்வமானது. அதில் தனிமெய்களும், உயிர்களும் உள்ளன. யுனிக்கோடில் 'தானா' எழுத்து பாருங்கள்: http://www.unicode.org/charts/PDF/U0780.pdf
நம் தொல்காப்பியனாரும், கொங்கின் விளக்கு பவணந்தியாரும் சொன்ன க்+அ = க என்னும் அடிப்படையில் ' தானா' (Thaana) இயன்றதாகும். பார்வைக்குச் சிங்களம், அரபி போன்ற சட்டைகள் போட்டிருந்தாலும் உறவின்முறை (kinship), எழுத்து (Thaana) எல்லாம் மாலத்தீவு அடிப்படையில் தமிழ்வேர்களைக் கொண்டது.
Where Did the Maldives People Come From? Dravidian substratum in Maldives:
http://www.iias.nl/iiasn/iiasn5/insouasi/maloney.html
மாலத்தீவின் எழுத்தமைதியைக் கண்ணுறுங்கள், அங்கே முழுக்க இசுலாமியர் வாழ்தலினால் எழுத்தின் சட்டை அராபிக் போல இருக்கிறது. ஆனால், தனி மெய்யெழுத்துக்களும் உயிரெழுத்துக்களும் கொண்டதே மாலத்தீவின் எழுத்து: http://www.omniglot.com/writing/thaana.htm
தஞ்சை ராசராசன் ஆண்ட பூமியல்லவா மாலத்தீவுகள்? அவர்கள் மெய்யெழுத்தில் அகரம் ஏறவில்லை, கண்டீர்களா?
கணிக்குறியேற்றத்தில் மெய்யெழுத்துக்களின் இன்றியமையாமை:
ஆனால், தமிழ் எழுத்துக்களை யுனிகோடில் பாருங்கள். தமிழர் குலவிளக்குகள் காப்பியனாரும், எங்கள் ஊர்க்காரர் பவணந்தி முனிவரும் போற்றிக்காத்த மெய்யெழுத்துக்களே காணோம்!! தமிழ் யுனிகோட் பிளாக்: http://www.unicode.org/charts/PDF/U0B80.pdf
இந்நிலை ஏன் வந்தது? அடிப்படையில் இந்திய மொழிகளுக்கு இஸ்கி/யுனிகோட் ஸம்ஸ்க்ருதம்/இந்தி மேலாண்மை அளிப்பது. எனவே அக்ஷரம் (அட்சரம்/அக்கரம்) அதன் மூல அடிப்படை ஆகும். அதாவது அகரம் ஏறிய உயிர்மெய்கள் தான் மெய்யெழுத்துக்கள் என்கிறது யுனிகோட். அப்பிழையைத் தமிழ்நாட்டு அதிகாரிகள் யுனிகோட் அமைக்கும் போழ்து சுட்டிக்காட்டி எடுத்துரைக்கத் தவறிவிட்டனர். அதனால்தான், தமிழின் வேராகிய தனி மெய்யெழுத்துக்களை யுனிகோட் கோட்சார்ட்டில் காணோம். எனவே தான், மெய்யெழுத்துக்களை தமிழ் பிளாக்கிலேயே கேளுங்கள் என்று தமிழ்நாட்டு அரசின் அதிகாரிகளிடம் வேண்டியுள்ளேன்.
டாக்டர். உமா அவர்களால் திருத்தப்பெற்ற (edited) யுனிகோட் கேரக்டர் வரையறைகள்: http://std.dkuug.dk/JTC1/SC2/WG2/docs/n2352r.html இதன்படி பார்த்தாலும், மெய்யெழுத்துக்கள் தனி கோட்பாய்ண்ட் பெறும் 'கேரக்டர்' என்பதன் எல்லாத் தகுதியும் கொண்டவை. வேண்டுமானால், தனி மெய்யும், உயிரும் புணர்ந்து தோன்றும் உயிர்மெய்யை 'லெட்டர்' என்றடக்கலாம். (1) மெய்யெழுத்தின் சிறப்பால்தான் தமிழ் இந்திபோலல்லாது கூட்டெழுத்து (சம்யுக்தாக்ஷரம்) இல்லாமல் இயங்குகிறது. இதற்கு எதிர்ப்பதமாக, இந்தியின் வலை அல்லது அச்சில் ஒரு பக்கம் பாருங்கள், ஒரு விராமமும் (=ஹல்(லு) அந்தம்/அக்ஷராந்தம்; நம் மெய்யின் புள்ளிக்கு இணையானது) அனேகமாக இருக்காது. ஆக, நம் மெய்யெழுத்துத் தத்துவம் இந்தி எழுத்தின் வேரன்று. (2) மேலும், மெய்யெழுத்துக்கள் தமிழின் எந்த நூலிலும் ~1/3 பாகம் இருக்கும்; கண்களுக்குத் தெரியும். இதற்கு நேர்மாறாக, இந்திப் பக்கங்களில் அனேகமாக விராமம் இருப்பதே கண்களுக்குத் தெரியாது.
தொல்காப்பியர் முதற் சூத்திரத்தாலேயே "எழுத்து எனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப" இலக்கணகர்த்தர் எழுத்து என்றால் மெய் 18, உயிர் 12 என்று சொல்லிவிட்டார். உயிர்மெய்களை இளம்பூரணர் தன் தொல்காப்பிய உரையிலே குறிப்பிடுகிறார்: "எனப்படுப என்ற சிறப்பால், அளபெடையும், உயிர்மெய்யும் வரிவடிவும் சிறப்பில்லா எழுத்தாகக் கொள்ளப் பட்டன."
ஆக, தொல்காப்பிய முதற் சூத்திரத்திலே குறிக்கப்படும் மெய்கள் யுனிகோடின் 'கேரக்டர்', தொல்காப்பியத்தின் சிறப்பில்லா எழுத்துக்களாம் உயிர்மெய்கள் 'லெட்டெர்' என்று கொள்ள வாய்ப்புண்டு. அதாவது, உயிர்மெய்கள் என்பவை உரைகாரர்களின் 'விரியுள் விரி' என்ற வகையில் அடங்குவன. 12 X 18 = 216 உயிர்மெய்கள் (in matrix format).
மெய்உயிர் என்கோடிங் - என் பரிந்துரை
மேலே கண்ட 'தானா' போல, ஒரு தமிழ்க் குறியேற்றத்தை நாம் அமைத்து ஃபாண்ட் செய்திருக்கலாம், விட்டுவிட்டோம். வருங்காலத்தில் செய்யமுடியும். என் பரிந்துரையாம் 'மெய்உயிர்' என்கோடிங்கும் மூலக்கூறுகளை இங்கே சுருக்கமாகப் பார்ப்போம். ஆங்கிலத்தில் உரைப்பதானால்,
(a) In the MeyUyir encoding, only vowels and consonants (மெய்யெழுத்துக்கள்) of Tamil are encoded atomically.
(b) All uyirmey letters are generated by font intelligence: that is க் followed by உ will automatically produce கு. Nowadays, in Open Type fonts this is trivial, no rendering engine etc., So, Tamil grammar is followed: க் + உ = கு.
(c) In few and rare instances where தமிழ்இனம், mey and uyir letters have to be shown separated, use zwnj (zero-width non-joiner).
(d) க்ஷ is left as non-conjunct by default. E.g., பக்ஷி (bird, name of a Muslim male). Conjunct க்ஷ் is created only when needed using zwj (zero width joiner).
Pure Consonant and Vowels encoding model (my MeyUyir model): If Unicode is newly designed today, my choice is this model for Tamil (and, it will not be optimal for Hindi/Sanskrit). Now, unfortunately, current Indic Unicode is optimal for Hindi, and the overhead on Tamil is high. எனவே தான், தமிழக அரசு டேஸ் குறியீட்டினை நாடுகிறது எனலாம்.
இந்த மெய்உயிர் என்கோடிங்கில், உயிர் எழுத்தும், மெய்யெழுத்தும் தனி கோட்பாய்ண்ட்களுடன் விளங்கும். இதுவரை அப்படி ஓர் என்கோடிங் தமிழுக்கு இல்லை. விசைப்பலகையைக் காட்டிலும் தமிழின் என்கோடிங்கில் அவ்வெழுத்துக்கள் அனைத்தும், முக்கியமாய் மெய்கள், இடம் பெற்றிருக்க வேண்டும். காலம் கனியும், காத்திருப்போம்.
நா. கணேசன்
Posted by
நா. கணேசன்
at
4
comments
யூனிக்கோடில் ஸ்ரீயின் ஶ (sha), ஓரெழுத்தாய் ஓம் ...
கிரந்த எழுத்து பற்றித் தொல்காப்பியனார்:
தொல்காப்பியர் வரையறுத்துக் கூறும் "வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த தமிழ்ச் சொல் ஆகும்மே. சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்." - தொல். சொல். 2.9:5-6 என்பதில் ஆராத நம்பிக்கை உடையவன் நான். கொங்குநாட்டின் நிரம்பை [1] ஊரைச் சேர்ந்த அடியார்க்கு நல்லார் தொல். சூத்திரத்தை நன்கு விளக்குகிறார்: "தமிழாவது வடவெழுத்து ஒரீஇ வந்த எழுத்தானே கட்டப்பட்ட வாக்கியக் கூறுகளும், இயல் இசை நாடகங்களுமென்று சொல்லப் படாநின்ற மூன்று தமிழ்களும்". அதாவது, தமிழ் என்றால் அது நம் 18 மெய்யெழுத்துக்குள் அடங்கவேண்டும். மற்ற கிரந்த எழுத்துக்கள் தமிழுக்கு அயலானவை, அவை என்றும் தமிழாகா. கிரந்த எழுத்துக்கள் தவிர்த்து எப்படி எளிதாக யாரும் கணினி மடல்களில் எழுதமுடியும் என்று பேரா. செ. ரா. செல்வகுமார் 1999-லேயே காட்டியும் இருக்கிறார். அக் கட்டுரையை யாவரும் பயின்று சிந்திக்கலாம்.
யூனிக்கோடில் ஶ (sha) எழுத்தும் , அதன் கூட்டெழுத்து ஸ்ரீயும்:
வாழ்க்கையும், விஞ்ஞானமும் அதிவேகமாக நகர்ந்து கொண்டுள்ளன. பல கருத்துக்களும் கண்டுபிடிப்புகளும் தமிழில் புகவேண்டும். அறிவியற் கலைச்சொற்கள் (tech jargon), கருதுகோள்கள் (hypothesis), தேற்றங்கள் (theory) போல்வன ஆங்கிலம், 'யப்பானியம் போன்றவற்றிலிருந்து தமிழுக்கு இறக்குமதி ஆகும்போது சில படிநிலைகள் உள. முழுதுமாக உள்வாங்கித் தமிழ் தன்வயம் ஆக்க எதற்கும் சிலகாலம் செல்லும். அதற்கிடையில், சில கிரந்த எழுத்துக்களைப் பயனித்தல் தவிக்க முடியாத செயல். முதற்படியாக, தமிழுக்கு வேற்றுமொழிச் சொற்களை இறக்குகையில் ஶ எழுத்தை உபயோகிக்கலாம். மற்ற இந்திய மொழி வலைப்பக்கங்கள், செய்தித் தாள்களைத் தமிழ் எழுத்தில் எழுத்துப் பெயர்த்து வாசிக்கவும் இந்த ஶ (மலையாளத்தில் ശ, உரோமனில் śa) அவசியத் தேவையாக இருக்கிறது. எழுத்துப்பேர்ப்பு பற்றிப் பின்னர் ஒரு பதிவில் விரிவாக ஆய்வோம். முடிபுநிலை தமிழின் தனி மெய்கள் 18 தான். எனினும், பத்திரிகைகள், தமிழ்மக்கட் பெயர்கள், ஆங்கில வார்த்தைகள் போன்றன பலர் பயன்படுத்துவதும் எதார்த்தநிலை தானே. எனவே கணினிக் குறியீட்டில் கிரந்த எழுத்துக்கள் தேவைப்படுகின்றன.
யூனிக்கோட் தொடர்பாக, அதன் தொழில்நுட்பக் குழுக்களில் ஏறத்தாழ 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். சென்னைப் பல்கலைத் தமிழ்ப் பேரகராதி 7 தொகுதிகளில் மு. இராகவையங்கார், ச. வையாபுரிப்பிள்ளை, தெ. பொ. மீனாட்சிசுந்தரம் போன்ற பேராசிரியர்கள் வழிப்படுத்தி உருவானது. அதில் ஒரு கிரந்த எழுத்து ஶ வரிசையில் ஒரு 20-30 வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஶ எழுத்து முன்னர் தமிழ் யூனிக்கோடு பிளாக்கில் (block) இல்லாதிருந்தது. தொட்டணன் சிவராசு முயற்சிகள் எடுத்தார். சிவராஜ் எழுதிய முன்னிகைக்குச் (proposal) சான்றளிக்கை, மேம்படுத்தலில் இண்பிட் ஒருங்குறிக் குழுவில் உதவினேன். சிவராசின் ஆவணம் இதுதான். இந்த ஶ யூனிக்கோடு பொந்தில் U+0BB6 பொருந்தி, அதன் உயிர்மெய் எழுத்துக்களுடன் விண்டோஸ் விஸ்டாவில் இப்பொழுது தொழிற்படுகிறது. அறிவியல், பொறியியல், கணியியல், மருத்துவம் போன்ற துறைகளில் வெளிநாட்டார் கண்டுபிடிப்புகளைப் படிக்க வேண்டியதிருக்கிறது. அதற்காகவும் மக்கள் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்த நேர்கிறது அல்லவா? கல்லூரிகளில் அறிவியற் பட்டப் படிப்புகள் தமிழில் உருவாக முதலில் அறிவியலைத் தமிழ்ப்படுத்தும் முறை எளிதாக வேண்டியிருக்கிறது.
மைக்ரோசாவ்ட் நிறுவனம் விஸ்டா வெளியிடும்போது அவர்களிடம் தொடர்பு கொண்டு ஶ (U+0BB6) துணைக்கொண்டும் ஸ்ரீ தயாரிக்க ஏற்பாடு செய்தேன். இப்பொழுது தமிழில் ஸ்ரீ தோற்றம் இரு தொடர்களால் இயங்குகிறது: <0BB6, 0BCD, 0BB0, 0BC0> மற்றும் <0BB8, 0BCD, 0BB0, 0BC0 >
ஸ்ரீ < ஶ ~ இதனால் என்ன பயன்? தமிழக அரசாங்கம் யுனிக்கோடரிடம் அடுத்த மாதம் தனி மெய்யெழுத்துக்களும், உயிர்மெய்களுக்கும் தனி கோட்பாய்ண்ட் கேட்க இருக்கிறது. அப்போது யூனிக்கோட் அதிகாரிகள் "ஏற்கெனவே எல்லாத் தமிழ் எழுத்துக்களும் கணித்திரைகள் காட்டுகின்றனவே" என்ற காரணம் காட்டி மறுக்க வாய்ப்புள்ளது. அப்பொழுது, தமிழக அரசுக்குழு "ஸ்ரீ எழுத்தை இரண்டு விதமாகச் செய்ய அனுமதிக்கிறீர்களே, அதுபோலவே, தமிழ் மெய்யெழுத்துக்களுக்கும் தனி கோட்பாய்ண்ட் தந்து ஆதரிக்கவும்" என்று கோர இந்த ஶ எழுத்தின் ஸ்ரீ உறுதியாய் உதவும்.
யூனிக்கோடில் தமிழ் ஓம்: 
தமிழ்நாட்டிலே, கோயிற் கருவறைகளில் கூட, டி-சட்டைகளிலும் இந்தி ஓம் போட்டுக்கொண்டு திரிவது பரவிவருகிறது. இதனை வடநாட்டார் செய்தால் பரவாயில்லை. ஆனால் சாமியார்கள் நடத்தும் 'திடீர்' யோகா வகுப்புகள், ... போன்றன பரப்புவதால் தமிழ் மக்களுக்கு இந்தி ஓம் தான் ஓம் என்றாகிவிடும்.
ஓங்கார எழுத்து அகர, உகர, மகரங்கள் கொண்டது என்று திருமூலர் பல திருமந்திரப் பாடல்களில் அறிவித்துள்ளார். பழங்காலத்தில், ஓகார நெடிலெழுத்துக்கு அடிச்சுழியில்லை, வீரமாமுனிவர் (Costantino Giuseppe Beschi, 1680-1747 CE) ஓகார நெடிலை ஒகரக் குறிலில் இருந்து வேறுபடுத்த ஓ என்று எழுதிச் (சுழி ஒன்றைக் கடைசியில் இட்டு) முதன்முதலாய்க் காட்டினார். அதுவே இன்று நிலைத்துவிட்டது. முற்காலத்தில் ஓ எழுத்தின் பக்கத்தில் அநுஸ்வாரம் என்னும் ஒரு சிறு பூச்சியம் இருக்கும். இச்சிறு வட்டம் மலையாள ஓமில் இன்னும் உண்டு. இத் துவாரம் ஓலைகளை அழிக்கும் என்பதால் எழுதாது விட்டு வெறும் ஒ எழுதி ஓம் என்று பனையேடுகளில் படித்தனர். ஒகரம் மருவி உருவடைந்தது தான் பிள்ளையார் சுழி (உ).
20-ஆம் நூற்றாண்டில், கோவில் ராயகோபுரங்களிலே ஓம் ஓரெழுத்தாக மகர மெய் உள்ளடங்கி உருவாகியதைப் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் 'ப்லெயின் டெக்ஸ்ட்' ஆகத் தமிழ் ஓங்காரம் வருவதில்லை என்று சொல்லி யூனிக்கோடு சில வருடங்கள் தரவில்லை. "வடமொழியில் நமஸ்தே/நமஸ்காரம் என்பதற்கு இணையான சொல் தமிழில் உண்டு, அது வணக்கம் என்பதாகும்" என இன்றைய வடக்கே இந்தி பேசுவோர் கூடத் தெரிந்து வைத்துள்ளனர். அதுபோல் தமிழ்த் தெய்வம் முருகனுக்குத் தமிழ் ஓம் இருந்தால் நல்லது, மேலும் அடுத்த தலைமுறையினருக்கும் மறக்காது என்று முயற்சி மேற்கொண்டேன். ஈரான் தேசத்துப் பாரசீக (ஃபார்சி) மொழியின் நமாஸ் என்ற வார்த்தைக்கும், சம்ஸ்கிருத வார்த்தையான நமஸ்தே என்ற சொல்லுக்கும் மூலவேர் ஒன்றே: வளைதல்/வணங்கல். நமஸ்தே இந்துக்களாலும் நமாஸ் இசுலாமியராலும் அவரவர் மதங்களில் பயன்படுத்தப் படுகிறது. ஆரிய மொழிகளான ஸம்ஸ்க்ருதம், பாரசீகம் (ஃபார்ஸி) இரண்டும் நெருங்கிய தொடர்புடைய உறவு மொழிகள்.
பாரதத்தில் தோன்றிய அனைத்துச் சமயங்களிலும் ~ வைணவம், சைவம், சீக்கியம், சமணம், பௌத்தம், ... ~ தியான மந்திரமாய் ஓங்காரம் திகழ்கிறது. தமிழில் அழகான ஓம் என்னும் குறியுண்டு என்று உலகுக்கு அறிவிக்க அரிய வழியிது என்று கருதி யூனிக்கோடில், இந்தி ஓமுக்கு சரியிணையாகத் தமிழ் ஓம் வைத்திட இண்பிட் முன்னிகை தயாரித்தேன். முத்து, கல்யாண், யுடிசி உமா போன்றோர் வெற்றிகாண உதவினர். இன்று யூனிக்கோடு 5.1ல் தமிழ் ஓம் அரங்கேறி வலைவலம் செய்கிறது. தமிழ் ஓம் புரபோசல் ஐஎஸ்ஓ வலைப்பீடத்தில் என்றும் வாழ்கிறது. இளைய தலைமுறை தமிழின் ஓம் எழுத்தை கூகுள் போன்ற தேடெந்திரங்களில் துழாவிப் பார்த்தால், அத்துடன் வணக்கம் என்று எழுதலாம். இந்தி வலைத்தாளைத் தமிழ் எழுத்தாக்கும்போது இந்த ஓம் ((U+0BD0) இந்தி ஓமின் சரிநிகர் சமானமாகக் காலமெல்லாம் கணினிகளில் பயன்படும்.
தமிழுக்கு ஏற்ற யூனிக்கோடு:
பொருளும், காலமும் செலவிட்டு சில ஆண்டுகள் உலக எழுத்து முறைகளை ஆய்ந்து தமிழுக்குப் பொருத்தமான யுனிகோட் சார்ட் எது எனத் தேடினேன். எனக்குத் தெரிந்தளவில், தமிழ் ப்ளாக் அறிவியல், தமிழிலக்கண நெறிப்படி அமைந்திருக்கவேண்டும். அப்படி மாலத்தீவின் எழுத்தின் குறியேற்றம் அமைந்துள்ளது. ஆனால் தமிழக அரசு யூனிக்கோடு தமிழில் இடம்பெறும் போது கேள்விகள் எழுப்பாமல் விட்டது. யூனிக்கோட்டை அதிகாரிகள் கோட்டைவிட்டனர். இப்போது மாற்ற வேண்டுமென்கையில் தொல்லைகள் எழுகின்றன. பார்ப்போம்.
நா. கணேசன்
[1] நிரம்பை என்னும் ஊரினர் சிலம்பின் உரைகாரர் அடியார்க்கு நல்லார். முனைவர் செ. இராசுவின் 'கொங்குநாட்டில் சமணம்' என்னும் புத்தத்தில் தரவுகளைக் காணலாம். மதுரைப் பல்கலைக்கழக ஆய்வேடு (1991) அச்சேற உதவினோம். இராசுவின் ஈரோடு போன் எண்: 0424-2262664.
[2] சிலருக்குக் காலிக் கட்டங்களாகத் தெரியும் sha எழுத்து. ஏனெனில் அக் கணினியில் மேம்படுத்தப் பெற்ற எழுத்துரு இல்லாதிருக்கலாம். புதிதாக வரும் விஸ்டா போன்றவற்றில் இப் பிரச்சினை இருக்காது.
Posted by
நா. கணேசன்
at
7
comments
கிரந்த எழுத்தை நீக்க எளிய ஒருமுறை (கி.பி. 1999)
பேராசிரியர் செ. இரா. செல்வகுமார் (டொராண்டோ, கனடா) அவர்கள் 9 ஆண்டுகளுக்கு முன்னர் கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து அயன்மொழிச் சொற்களை எழுத எளிய முறை ஒன்றைத் தமிழ்.நெட்டில் பரிந்துரைத்தார்:
http://www.tamil.net/list/1999-09/msg00632.html
முனைவர் செல்வாவின் பரிந்துரை கருத்தூன்றிப் பயிலவேண்டிய ஒன்று. 1999-ல் பேரா. செல்வா எழுதிய மடலை இங்கே முற்செலுத்துகிறேன். என் அடுத்த மடல்களில் மேலும் பேச ஆசை.
நட்புடன்,
நா. கணேசன்
-----------------------------------------------------
அன்புள்ள தமிழ் இணையத்தாருக்கு:
வணக்கம்.
பயனுடையதாக இருக்கும் என்று எண்ணித் தமிழ் மொழியின் நலத்திற்காக ஒரு புதிய கருத்தை இங்கே முன் வைக்கிறேன்.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று திருவள்ளுவப் பெருந்தகையார் கூறியிருப்பதை நினைவிற் கொண்டு என் கருத்தை அருள்கூர்ந்து சீர் தூக்கிப் பார்க்க வேண்டுகிறேன்.
தமிழ் மொழியின் இனிமைக்குக் குறைபாடு வாராமல் தமிழ் மொழியிலே பிற மொழி ஒலிப்புகளை எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதே கேள்வி. தொழில் நுட்பப் புரட்சியால் (ஊர்தி, தொலை தொடர்பு, கணிணி முதலான நுட்பங்களிலே கடந்த 30-40 ஆண்டுகளிலே
ஏற்பட்ட மிகப்பெரும் வளர்ச்சிகளினால்) இன்று மக்கள் உறவாட்டத்திலே உலகம் மிகச் சுருங்கி வருவதை பலரும் நன்கு உணர்வர். இதனால் வேற்று மொழி ஒலியன்களைத் தமிழில் எடுத்தாள வேண்டிய தேவை இன்னும் வலுவாக ஏற்படுகிறது.
வேற்று மொழிப் பெயர்களிலே வழங்கும் b, d, f, g, h, முதலான எழுத்தொலிகளை எவ்வாறு தமிழில் வழங்கலாம் ?
ஏற்கனவே கணிணி எழுத்துப் பலகைகளில் உள்ள சில குறிகளைப் பயன் படுத்தி பல புதிய ஒலிப்புகளைக் குறிக்கலாம் என்பதே என் எண்ணமும் அடிக்கருத்தும். முதலில் தமிழ் முறை என்னவென்று கீழே சற்று விளக்கிவிட்டு பின்னர் புதிய முறையை விளக்குகிறேன். அருள்கூர்ந்து பொறுமையாக எண்ணிப் பாருங்கள்.
1. தமிழில் 18 மெய் எழுத்துக்களே உள்ளன. அவற்றில் 6 எழுத்துக்கள் மட்டுமே வல்லின எழுத்துக்கள். அவையாவன க், ச், ட், த், ப், ற் என்பனவே. இந்த 6 எழுத்துக்களிலும் நான்கு எழுத்துக்கள் மட்டுமே, ட், ற் நீங்கலாக, உயிரோடு சேர்ந்து ஒரு தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடியவை.
எனவே க், ச், த், ப் என்னும் நான்கு வல்லின எழுத்துக்கள் மட்டுமே உயிர் எழுத்தோடு கூடி தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக வரும். தமிழ் மொழியிலே வல்லின எழுத்துக்கள் வலித்து ஒலித்தல் இரண்டே இடங்களில் தான்.
முதலாவது ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வந்தால் வலித்து ஒலிக்கும். இரண்டாவது, புள்ளி வைத்த (தமிழில் இதற்கு ஒற்று என்று பெயர்) ஒரு வல்லின எழுத்துக்கு பின் வரும் பொழுது வல்லின எழுத்து வலித்து ஒலிக்கும். மற்ற இடங்களில் எல்லாம் வல்லின எழுத்து மெலிந்தே ஒலிக்கும்.
சில எடுத்துக் காட்டுகளைப் பார்த்தால் சட்டென்று விளங்கும்:
கடல் என்னும் சொல்லைப் பாருங்கள். முதல் எழுத்தாகிய க என்னும் வல்லின எழுத்து, சொல்லின் முதல் எழுத்தாக வருவதால் வலித்து ஒலிக்கின்றது. கடல் என்னும் சொல்லில் வரும் இரண்டாவது எழுத்தாகிய டகரமும் வல்லின எழுத்துதான், என்றாலும் மெலிந்தே ஒலிக்கின்றது. ஏன் ? அந்த டகரத்திற்கு முன் புள்ளி வைத்த வல்லின எழுத்து வரவில்லை. இப்பொழுது, வேறு ஒரு சொல்லாகிய கட்டம் என்னும் சொல்லை எடுத்துக்கொண்டால், அதில் வரும் மூன்றாவது எழுத்தாகிய டகரம் வலித்து ஒலிக்கின்றது. ஏனென்றால், புள்ளி வைத்த ட் என்னும் வல்லின எழுத்து இரண்டாவது எழுத்தாக வந்து டகரத்திற்கு முன்னால் இருப்பதால் கட்டம் என்னும் சொல்லில் உள்ள டகரம் வலித்து ஒலிக்கின்றது. முன்னே வரும் புள்ளி வைத்த எழுத்து வல்லின எழுத்தாக இல்லாமல், மெல்லின எழுத்தாக இருந்தால் மெலிந்தே ஒலிக்கும், வலித்து ஒலிக்காது. இப்பொழுது கீழ்க்காணும் சொற்களை எழுத்தொலி விளங்க ஒலித்துப் பாருங்கள், வாய் விட்டு சொல்லிப்பாருங்கள் (பலுக்கிப்பாருங்கள்).
வாடு - வாட்டு - வாண்டு (டு என்னும் எழுத்தை எப்படி ஒலிக்கின்றோம் (பலுக்குகின்றோம் ) ?)அக்கம் பக்கம் - அகம் - அங்கம்- தங்கம் (க என்னும் எழுத்தை எப்படி பலுக்குகிறோம் ?) பத்து - பந்து - பதுங்கு (து என்னும் எழுத்தை எப்படி ஒலிக்கின்றோம் ? ) பச்சை - பஞ்சு - பஞ்சை - குடிசை - பசி (சகரத்தை எப்படி ஒலிக்கின்றோம் ? (மெலிந்து ஒலிக்கும் சகரம் இரு வேறு விதமாக ஒலிக்கும். சொல்லின் முதல் ஒலியாக வரும் சகரமும், மெலிந்து ஒலித்தல் தமிழில் விதி விலக்கு).
காம்பு - காப்பு - கபுக்கென்று (பு என்னும் எழுத்தை எப்படி பலுக்குகிறோம் ?) எனவே வல்லின எழுத்துக்களைத் தமிழில் ஒலிக்கும் முறை என்னவென்றால், ஒரு வல்லின எழுத்து இரண்டே இரண்டு இடங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மெலிந்தே ஒலிக்கும்.
இவ்விரு இடங்களாவன, (1) ஒரு சொல்லின் முதல் எழுத்தும், (2) புள்ளி வைத்த வல்லின எழுத்துக்கும் பின் வரும் வல்லின எழுத்துமே. முதல் எழுத்தாக வரும் சகரம் சிலவிடங்களில் மெலிந்து ஒலிப்பது ஒரு விதி விலக்கு. முதல் எழுத்தை வலித்து (ச்)சட்டி, (ச்)சொல் என்றும் சொல்லலாம். (அப்படிச் சொல்லுவோர்களும் உள்ளனர்) அல்லது முதல் எழுத்தையே காற்றொலி கலந்த மெல்லொலியாக சட்டி, சொல் என்றும் சொல்லலாம். ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வராமல், இடையே வரும் சகரமும், தமிழ் முறைப்படி மெலிந்து ஒலிக்கும் இடங்களிலும், இரு வேறு ஒலிப்புகளுடன் ஒலிக்கின்றது. ஒன்று பாம்பு சீறுவது போல் தோன்றும் காற்றொலியாகவும் மற்றொன்று மூக்கொலி கலந்ததாகவும் உள்ளன. எடுத்துக்காட்டுகள் : கொசு - கொஞ்சு. கொசுவில் வரும் சு காற்றொலி கலந்தது, கொஞ்சு என்னும் சொல்லில் உள்ள சு மூக்கொலி கலந்தது.
2. அடுத்ததாக வேற்று மொழிச் சொற்களைத் தமிழில் எப்படி வழங்கலாம் என்று பார்க்கலாம். முதலாவதாக தமிழில் எவ்வாறு b, d, f, g, h, j, 'dh', 'sh' என்னும் எழுத்தொலிகளைக் குறிக்கலாம் என்று பார்ப்போம். தமிழில் கம்பு என்று சொல்லும் பொழுது அதில் வரும் பு என்னும் எழுத்தொலியானது ஆங்கிலம் போன்ற வேற்று மொழிகளில் வரும் b என்னும் எழுத்தோடு உயிரெழுத்து கூடிய எழுத்தொலியேதான். என்றாலும் Berlin, Bell என்னும் பெயர்ச்சொற்களில் வருவதைப்போல தமிழில் முதலொலியாக வர இஇயலாது (தமிழ் முறைப்படி). எனவே ஒரு வல்லின எழுத்துக்கு முன்னே ஒலி மாறி வருவதைக்குறிக்க (ஒலித்திரிபைக் குறிக்க) ஒரு கணிணி எழுத்துப்ப்லைகையில் உள்ள ஒரு குறியைப் பயன் படுத்தலாம். apostrophe அல்லது single quote என்னும் குறியை (தமிழில் முன்கொட்டு என்று பெயரிடலாம் என்று நினைக்கிறேன்) இட்டுக் குறிக்கலாம் என்று நினைக்கிறேன். இதே முறையில், தமிழில் வழங்கா f, sh முதலிய எழுத்துக்களையும் குறிக்க முன்கொட்டு ஒன்று இட்டு ஒலித்திரிபைக் குறிக்கலாம்.
2.1 முன்கொட்டுடன் வரும் எடுத்துக்காட்டுகள்:
Ball = 'பால்
Bell = 'பெல்
Berlin = 'பெர்லின்
Gandhi = 'காந்தி
Johnson, Jagannaathan = 'சான்சன் , 'சகன்னாதன்
David = 'டேவி 'ட்
Dirac = 'டிராக்
Dumdam Airport = 'டம்டம் வானூர்தி நிலையம் (வான் நிலையம், வான் துறை)
Dadabhai Navroji = 'தாதாபாய் நவ்ரோ'சி
Fermi = 'வெர்மி
Ford = 'வோர் 'ட்
Usha = உ'ழா
Ship = 'ழிப் ( பழக்கத்தில் முன் கொட்டுடன் வரும் 'ழ என்பதை sha என்று
சொல்லிப் பழக வேண்டும்)
2.2 அடுத்ததாக H என்னும் ஒலியை தமிழில் ஆய்த எழுத்தைக்கொண்டு குறிக்கலாம்.
எடுத்துக்காட்டுக்கள்:
Hitler = ·இட்லர்
Hardy = ·ஆர்டி
Hilbert = ·இல்பெர்ட்
2.3. காற்றொலி கலந்தொலிக்கும் S என்பதைக்குறிக்க, தமிழில் (tilda) ~ச் என்று குறிக்கலாம். பெரும்பாலும் இது தேவைப்படாது என்றாலும், சில இடத்தில் இம்முறை பயன் படலாம். எடுத்துகாட்டாக Brooks, Francis முதலான பெயர்ச்சொற்களை 'புரூக்~ச் அல்லது 'ப்ரூக்~ச் என்றும் 'விரான்சி~ச் அல்லது 'வ்ரான்சி~ச் என்றும் எழுதலாம். அல்லது சற்றே தமிழ்ப்படுத்தி 'புரூக்~சு என்றும் 'விரான்சிசு என்றும் எழுதலாம்.
2.4 சில இடங்களில் தமிழ் முறைக்கு மாறாக புள்ளி வைத்த வல்லின எழுத்து வாராமலும்
வல்லின எழுத்துக்கள் வலிந்து ஒலிக்க வேண்டி இருக்கின்றது. எடுத்துக்காட்டாக Bapu என்று வரும் பொழுது நாம் 'பா(ப்)பு என்று எழுதலாம். இவ்வாறு வரும் இடங்கள் மிகக் குறைவானவே என்பதால், இப்படி பிறைக்குறிக்குள் வல்லின ஒற்றை (புள்ளி வைத்த எழுத்தை) எழுதி சரியான ஒலிப்பைக்குறிக்கலாம். அல்லது வேறு விதமாக இரட்டை முன்கொட்டு இட்டும் காட்டலாம். 'பா''பு. Gopi என்பதை 'கோ''பி என்று எழுதலாம்.
2.5 கடைசியாக, அகர-ஏகாரக் கலவை ஒலியாக வழங்கும் ஓர் உயிர் ஒலியை எப்படிக் குறிக்கலாம் என்று பார்ப்போம். கீழ்க்காணும் ஆங்கில சொற்களைப் பார்த்தால் இந்த அகர-ஏகாரக் கலவை ஒலி விளங்கும்: cat, gap, fat முதலிய சொற்களில் வழங்கும் a என்னும் உயிரொலி சற்றே ஏகார ஒலி கலந்து ஒலிப்பதை உணரலாம். இதனைக் குறிக்க, தமிழில் எழுத்தின் முன்னொட்டாக தொப்பி போன்ற கூரைக் குறியை (^) இட்டுக் குறிக்கலாம். ஏனவே Apple Computer என்பதை ^ஆப்பிள் கணினி என்று குறிக்கலாம். Faraday என்னும் பெயரை 'வாரடே என்பதற்கு பதிலாக ^'வேரடே என்றோ அல்லது ^'வாரடே என்றோ குறிக்கலாம்.
2.6 சரி, ஒற்றைக் கொட்டு மேற்கோள் குறியைப் பயன் படுத்துவதால் குழப்பம் வாராதா ? (மேற்கோள் குறி என்பதை சுருக்கமாக மேறி என்று சொல்லலாமா ? மேல் என்னும் சொல்லே அடிப்படை எனவே அது மேற்- என்று மாறும் இயல்புடையதுதான்; இன்னொரு விதமாகப் பார்த்தால், மேற்கோள் என்பதின் முதல் எழுத்தும் (மே), குறி என்பதின் கடை எழுத்தும் (றி) சேர்த்து மேறி என்றாயிற்று என்றும் கொள்ளலாம்) எனவே, தமிழில் நாம் எப்பொழுதும் இரட்டை மேறியை மட்டுமே பயன் படுத்துவோம். அல்லது ஒற்றை மேறியைப் பயன் படுத்துவதானால் ஒற்றை மேறிக்கு அடுத்து சற்று இடைவெளி தர வேண்டும். அவ்வளவுதான்.
3 இந்த முறையினால் என்ன நன்மை ?
3.1 தமிழ் நெடுங்கணக்கில் (எழுத்து வரிசை) உள்ள தமிழ் எழுத்துக்கள் மட்டுமே போதுமானது. (ஜ ஜி, ஷ, ஷி , ஹ, ஹி, ஸ, ஸி போன்ற எழுத்து வரிசைகள் தேவையே இல்லை; இகர,ஈகார ,ஊகார எழுத்துக்களும், புள்ளி வைத்த தனி மெய்யெழுத்துக்களும் தேவையே இல்லை.). தமிழ் மரபில் இருந்து மாற விருப்பம் இல்லா தமிழர்கள் இன்றும் ஜகன்னாதன் என்னும் பெயரை சகன்னாதன் என்றுதான் வழங்குகிறார்கள். இங்கு கூறியுள்ள முறைப்படி 'சகன்னாதன் என்று அவர்களும் ஆர்வமுடன் தேர்ந்தெடுத்து வழங்குவார்கள் என்று நினைக்கிறேன். இனி நான் என் நண்பர் 'கணேசன் என்று எழுத முடியும். என் நண்பரின் மனைவியின் பெயர் உ'ழா. இப்பெயருக்கு வடமொழியில் வைகறை, அதிகாலை, கதிரவன் முளைத்து எழும் சிற்றம் சிறூகாலை எனப்பொருள். கணித மேதை ·இல்பெர்ட்டை தமிழில் எளிதாக எழுதலாம். தமிழ்க் கணித மேதை ராமானு'சன் என்றும் எழுதலாம். கலைமகளை சரசுவதி என்று எழுதுவதே போதும். ~சர~ச்வ(த்)தி என்று எழுதத்தேவை இல்லை என்பது என் கருத்து.
3.2 மேலும் தமிழ் மரபுக்கு மாறாக வரும் பல வேற்றொலிக்கூட்டங்களையும் (மொழி முதலா வரும் G,B,D, Dh ஒலியன்கள் ) மற்றும் தமிழில் வழங்கா F என்னும் ஒலியையும் குறிக்க முடியும். அணுவியல் அறிஞர் 'வெர்மி என்றும், இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த சிந்தனைச் சிற்பிகளில் ஒருவராகிய 'பக்-மினிசு(ட்)டர் 'வுல்லர் என்றும் இனி எழுத முடியும். ஒரு கூண்டுபோல் அமைந்திருக்கும் 60 கரிம அணுக்கள் கொண்ட ஒரு வியப்பூட்டும் கூட்டணுவை (!!) அண்மையில் கண்டுபிடித்து அதற்கு பேரறிஞர் 'வுல்லரின் நினைவாக 'வுல்லரீன் என்று பெயரிட்டுள்ளார்கள்.
3.3 மிகக்குறைந்த எழுத்துக்களுடன் முன்பினும் அதிகமான வேற்று
மொழிச் சொல்லொலிப்புகளைத் தமிழில் வழங்க இயலுகின்றது. எழுத்துக்களைக் குறைப்பது மட்டுமே நோக்கம் இல்லை, ஆனால் இப்பொழுது இருக்கும் நிலைக்கு அதிகம் மாறுபடாத ஒரு வகையில், எவ்வாறு இன்னும் அதிகமான எழுத்தொலிகளைத் தமிழில் வழங்கலாம் என்பதே என் கேள்வி. தமிழில் வழங்கும் அருமையான மரபாகிய வல்லின-மெல்லின ஒலிப்பு முறை மாறாமல் இருப்பதும் என் அடிப்படைநோக்கம்.
3.4 கையால் எழுதும் பொழுதும், இம்முறை மிக எளிதாக கைக்கொள்ளத் தக்கது.
மேற்கண்ட முறையை எல்லோரும் விரைந்து பயன் படுத்தினால், பயன் வளரும் என்று கருதுகிறேன். குற்றம் குறை இருப்பின், அறிஞர்கள் அருள்கூர்ந்து எடுத்துக்கூறி திருத்துமாறு வேண்டிக்கொள்ளுகிறேன்.
அன்புடன்
செல்வா
___________________
செ. இரா. செல்வகுமார்
வாட்டர்லூ, ஒன்ட்டாரியோ, கனடா
ஆக~ச்ட்டு, 24, 1999.
Posted by
நா. கணேசன்
at
7
comments
Labels: கிரந்தம் , தனித்தமிழ் , தொல்காப்பியம்