கிரந்த எழுத்து பற்றித் தொல்காப்பியனார்:
தொல்காப்பியர் வரையறுத்துக் கூறும் "வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த தமிழ்ச் சொல் ஆகும்மே. சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்." - தொல். சொல். 2.9:5-6 என்பதில் ஆராத நம்பிக்கை உடையவன் நான். கொங்குநாட்டின் நிரம்பை [1] ஊரைச் சேர்ந்த அடியார்க்கு நல்லார் தொல். சூத்திரத்தை நன்கு விளக்குகிறார்: "தமிழாவது வடவெழுத்து ஒரீஇ வந்த எழுத்தானே கட்டப்பட்ட வாக்கியக் கூறுகளும், இயல் இசை நாடகங்களுமென்று சொல்லப் படாநின்ற மூன்று தமிழ்களும்". அதாவது, தமிழ் என்றால் அது நம் 18 மெய்யெழுத்துக்குள் அடங்கவேண்டும். மற்ற கிரந்த எழுத்துக்கள் தமிழுக்கு அயலானவை, அவை என்றும் தமிழாகா. கிரந்த எழுத்துக்கள் தவிர்த்து எப்படி எளிதாக யாரும் கணினி மடல்களில் எழுதமுடியும் என்று பேரா. செ. ரா. செல்வகுமார் 1999-லேயே காட்டியும் இருக்கிறார். அக் கட்டுரையை யாவரும் பயின்று சிந்திக்கலாம்.
யூனிக்கோடில் ஶ (sha) எழுத்தும் , அதன் கூட்டெழுத்து ஸ்ரீயும்:
வாழ்க்கையும், விஞ்ஞானமும் அதிவேகமாக நகர்ந்து கொண்டுள்ளன. பல கருத்துக்களும் கண்டுபிடிப்புகளும் தமிழில் புகவேண்டும். அறிவியற் கலைச்சொற்கள் (tech jargon), கருதுகோள்கள் (hypothesis), தேற்றங்கள் (theory) போல்வன ஆங்கிலம், 'யப்பானியம் போன்றவற்றிலிருந்து தமிழுக்கு இறக்குமதி ஆகும்போது சில படிநிலைகள் உள. முழுதுமாக உள்வாங்கித் தமிழ் தன்வயம் ஆக்க எதற்கும் சிலகாலம் செல்லும். அதற்கிடையில், சில கிரந்த எழுத்துக்களைப் பயனித்தல் தவிக்க முடியாத செயல். முதற்படியாக, தமிழுக்கு வேற்றுமொழிச் சொற்களை இறக்குகையில் ஶ எழுத்தை உபயோகிக்கலாம். மற்ற இந்திய மொழி வலைப்பக்கங்கள், செய்தித் தாள்களைத் தமிழ் எழுத்தில் எழுத்துப் பெயர்த்து வாசிக்கவும் இந்த ஶ (மலையாளத்தில் ശ, உரோமனில் śa) அவசியத் தேவையாக இருக்கிறது. எழுத்துப்பேர்ப்பு பற்றிப் பின்னர் ஒரு பதிவில் விரிவாக ஆய்வோம். முடிபுநிலை தமிழின் தனி மெய்கள் 18 தான். எனினும், பத்திரிகைகள், தமிழ்மக்கட் பெயர்கள், ஆங்கில வார்த்தைகள் போன்றன பலர் பயன்படுத்துவதும் எதார்த்தநிலை தானே. எனவே கணினிக் குறியீட்டில் கிரந்த எழுத்துக்கள் தேவைப்படுகின்றன.
யூனிக்கோட் தொடர்பாக, அதன் தொழில்நுட்பக் குழுக்களில் ஏறத்தாழ 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். சென்னைப் பல்கலைத் தமிழ்ப் பேரகராதி 7 தொகுதிகளில் மு. இராகவையங்கார், ச. வையாபுரிப்பிள்ளை, தெ. பொ. மீனாட்சிசுந்தரம் போன்ற பேராசிரியர்கள் வழிப்படுத்தி உருவானது. அதில் ஒரு கிரந்த எழுத்து ஶ வரிசையில் ஒரு 20-30 வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஶ எழுத்து முன்னர் தமிழ் யூனிக்கோடு பிளாக்கில் (block) இல்லாதிருந்தது. தொட்டணன் சிவராசு முயற்சிகள் எடுத்தார். சிவராஜ் எழுதிய முன்னிகைக்குச் (proposal) சான்றளிக்கை, மேம்படுத்தலில் இண்பிட் ஒருங்குறிக் குழுவில் உதவினேன். சிவராசின் ஆவணம் இதுதான். இந்த ஶ யூனிக்கோடு பொந்தில் U+0BB6 பொருந்தி, அதன் உயிர்மெய் எழுத்துக்களுடன் விண்டோஸ் விஸ்டாவில் இப்பொழுது தொழிற்படுகிறது. அறிவியல், பொறியியல், கணியியல், மருத்துவம் போன்ற துறைகளில் வெளிநாட்டார் கண்டுபிடிப்புகளைப் படிக்க வேண்டியதிருக்கிறது. அதற்காகவும் மக்கள் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்த நேர்கிறது அல்லவா? கல்லூரிகளில் அறிவியற் பட்டப் படிப்புகள் தமிழில் உருவாக முதலில் அறிவியலைத் தமிழ்ப்படுத்தும் முறை எளிதாக வேண்டியிருக்கிறது.
மைக்ரோசாவ்ட் நிறுவனம் விஸ்டா வெளியிடும்போது அவர்களிடம் தொடர்பு கொண்டு ஶ (U+0BB6) துணைக்கொண்டும் ஸ்ரீ தயாரிக்க ஏற்பாடு செய்தேன். இப்பொழுது தமிழில் ஸ்ரீ தோற்றம் இரு தொடர்களால் இயங்குகிறது: <0BB6, 0BCD, 0BB0, 0BC0> மற்றும் <0BB8, 0BCD, 0BB0, 0BC0 >
ஸ்ரீ < ஶ ~ இதனால் என்ன பயன்? தமிழக அரசாங்கம் யுனிக்கோடரிடம் அடுத்த மாதம் தனி மெய்யெழுத்துக்களும், உயிர்மெய்களுக்கும் தனி கோட்பாய்ண்ட் கேட்க இருக்கிறது. அப்போது யூனிக்கோட் அதிகாரிகள் "ஏற்கெனவே எல்லாத் தமிழ் எழுத்துக்களும் கணித்திரைகள் காட்டுகின்றனவே" என்ற காரணம் காட்டி மறுக்க வாய்ப்புள்ளது. அப்பொழுது, தமிழக அரசுக்குழு "ஸ்ரீ எழுத்தை இரண்டு விதமாகச் செய்ய அனுமதிக்கிறீர்களே, அதுபோலவே, தமிழ் மெய்யெழுத்துக்களுக்கும் தனி கோட்பாய்ண்ட் தந்து ஆதரிக்கவும்" என்று கோர இந்த ஶ எழுத்தின் ஸ்ரீ உறுதியாய் உதவும்.
யூனிக்கோடில் தமிழ் ஓம்: 
தமிழ்நாட்டிலே, கோயிற் கருவறைகளில் கூட, டி-சட்டைகளிலும் இந்தி ஓம் போட்டுக்கொண்டு திரிவது பரவிவருகிறது. இதனை வடநாட்டார் செய்தால் பரவாயில்லை. ஆனால் சாமியார்கள் நடத்தும் 'திடீர்' யோகா வகுப்புகள், ... போன்றன பரப்புவதால் தமிழ் மக்களுக்கு இந்தி ஓம் தான் ஓம் என்றாகிவிடும்.
ஓங்கார எழுத்து அகர, உகர, மகரங்கள் கொண்டது என்று திருமூலர் பல திருமந்திரப் பாடல்களில் அறிவித்துள்ளார். பழங்காலத்தில், ஓகார நெடிலெழுத்துக்கு அடிச்சுழியில்லை, வீரமாமுனிவர் (Costantino Giuseppe Beschi, 1680-1747 CE) ஓகார நெடிலை ஒகரக் குறிலில் இருந்து வேறுபடுத்த ஓ என்று எழுதிச் (சுழி ஒன்றைக் கடைசியில் இட்டு) முதன்முதலாய்க் காட்டினார். அதுவே இன்று நிலைத்துவிட்டது. முற்காலத்தில் ஓ எழுத்தின் பக்கத்தில் அநுஸ்வாரம் என்னும் ஒரு சிறு பூச்சியம் இருக்கும். இச்சிறு வட்டம் மலையாள ஓமில் இன்னும் உண்டு. இத் துவாரம் ஓலைகளை அழிக்கும் என்பதால் எழுதாது விட்டு வெறும் ஒ எழுதி ஓம் என்று பனையேடுகளில் படித்தனர். ஒகரம் மருவி உருவடைந்தது தான் பிள்ளையார் சுழி (உ).
20-ஆம் நூற்றாண்டில், கோவில் ராயகோபுரங்களிலே ஓம் ஓரெழுத்தாக மகர மெய் உள்ளடங்கி உருவாகியதைப் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் 'ப்லெயின் டெக்ஸ்ட்' ஆகத் தமிழ் ஓங்காரம் வருவதில்லை என்று சொல்லி யூனிக்கோடு சில வருடங்கள் தரவில்லை. "வடமொழியில் நமஸ்தே/நமஸ்காரம் என்பதற்கு இணையான சொல் தமிழில் உண்டு, அது வணக்கம் என்பதாகும்" என இன்றைய வடக்கே இந்தி பேசுவோர் கூடத் தெரிந்து வைத்துள்ளனர். அதுபோல் தமிழ்த் தெய்வம் முருகனுக்குத் தமிழ் ஓம் இருந்தால் நல்லது, மேலும் அடுத்த தலைமுறையினருக்கும் மறக்காது என்று முயற்சி மேற்கொண்டேன். ஈரான் தேசத்துப் பாரசீக (ஃபார்சி) மொழியின் நமாஸ் என்ற வார்த்தைக்கும், சம்ஸ்கிருத வார்த்தையான நமஸ்தே என்ற சொல்லுக்கும் மூலவேர் ஒன்றே: வளைதல்/வணங்கல். நமஸ்தே இந்துக்களாலும் நமாஸ் இசுலாமியராலும் அவரவர் மதங்களில் பயன்படுத்தப் படுகிறது. ஆரிய மொழிகளான ஸம்ஸ்க்ருதம், பாரசீகம் (ஃபார்ஸி) இரண்டும் நெருங்கிய தொடர்புடைய உறவு மொழிகள்.
பாரதத்தில் தோன்றிய அனைத்துச் சமயங்களிலும் ~ வைணவம், சைவம், சீக்கியம், சமணம், பௌத்தம், ... ~ தியான மந்திரமாய் ஓங்காரம் திகழ்கிறது. தமிழில் அழகான ஓம் என்னும் குறியுண்டு என்று உலகுக்கு அறிவிக்க அரிய வழியிது என்று கருதி யூனிக்கோடில், இந்தி ஓமுக்கு சரியிணையாகத் தமிழ் ஓம் வைத்திட இண்பிட் முன்னிகை தயாரித்தேன். முத்து, கல்யாண், யுடிசி உமா போன்றோர் வெற்றிகாண உதவினர். இன்று யூனிக்கோடு 5.1ல் தமிழ் ஓம் அரங்கேறி வலைவலம் செய்கிறது. தமிழ் ஓம் புரபோசல் ஐஎஸ்ஓ வலைப்பீடத்தில் என்றும் வாழ்கிறது. இளைய தலைமுறை தமிழின் ஓம் எழுத்தை கூகுள் போன்ற தேடெந்திரங்களில் துழாவிப் பார்த்தால், அத்துடன் வணக்கம் என்று எழுதலாம். இந்தி வலைத்தாளைத் தமிழ் எழுத்தாக்கும்போது இந்த ஓம் ((U+0BD0) இந்தி ஓமின் சரிநிகர் சமானமாகக் காலமெல்லாம் கணினிகளில் பயன்படும்.
தமிழுக்கு ஏற்ற யூனிக்கோடு:
பொருளும், காலமும் செலவிட்டு சில ஆண்டுகள் உலக எழுத்து முறைகளை ஆய்ந்து தமிழுக்குப் பொருத்தமான யுனிகோட் சார்ட் எது எனத் தேடினேன். எனக்குத் தெரிந்தளவில், தமிழ் ப்ளாக் அறிவியல், தமிழிலக்கண நெறிப்படி அமைந்திருக்கவேண்டும். அப்படி மாலத்தீவின் எழுத்தின் குறியேற்றம் அமைந்துள்ளது. ஆனால் தமிழக அரசு யூனிக்கோடு தமிழில் இடம்பெறும் போது கேள்விகள் எழுப்பாமல் விட்டது. யூனிக்கோட்டை அதிகாரிகள் கோட்டைவிட்டனர். இப்போது மாற்ற வேண்டுமென்கையில் தொல்லைகள் எழுகின்றன. பார்ப்போம்.
நா. கணேசன்
[1] நிரம்பை என்னும் ஊரினர் சிலம்பின் உரைகாரர் அடியார்க்கு நல்லார். முனைவர் செ. இராசுவின் 'கொங்குநாட்டில் சமணம்' என்னும் புத்தத்தில் தரவுகளைக் காணலாம். மதுரைப் பல்கலைக்கழக ஆய்வேடு (1991) அச்சேற உதவினோம். இராசுவின் ஈரோடு போன் எண்: 0424-2262664.
[2] சிலருக்குக் காலிக் கட்டங்களாகத் தெரியும் sha எழுத்து. ஏனெனில் அக் கணினியில் மேம்படுத்தப் பெற்ற எழுத்துரு இல்லாதிருக்கலாம். புதிதாக வரும் விஸ்டா போன்றவற்றில் இப் பிரச்சினை இருக்காது.
யூனிக்கோடில் ஸ்ரீயின் ஶ (sha), ஓரெழுத்தாய் ஓம் ...
Posted by
நா. கணேசன்
at
7
comments
கிரந்த எழுத்தை நீக்க எளிய ஒருமுறை (கி.பி. 1999)
பேராசிரியர் செ. இரா. செல்வகுமார் (டொராண்டோ, கனடா) அவர்கள் 9 ஆண்டுகளுக்கு முன்னர் கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து அயன்மொழிச் சொற்களை எழுத எளிய முறை ஒன்றைத் தமிழ்.நெட்டில் பரிந்துரைத்தார்:
http://www.tamil.net/list/1999-09/msg00632.html
முனைவர் செல்வாவின் பரிந்துரை கருத்தூன்றிப் பயிலவேண்டிய ஒன்று. 1999-ல் பேரா. செல்வா எழுதிய மடலை இங்கே முற்செலுத்துகிறேன். என் அடுத்த மடல்களில் மேலும் பேச ஆசை.
நட்புடன்,
நா. கணேசன்
-----------------------------------------------------
அன்புள்ள தமிழ் இணையத்தாருக்கு:
வணக்கம்.
பயனுடையதாக இருக்கும் என்று எண்ணித் தமிழ் மொழியின் நலத்திற்காக ஒரு புதிய கருத்தை இங்கே முன் வைக்கிறேன்.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று திருவள்ளுவப் பெருந்தகையார் கூறியிருப்பதை நினைவிற் கொண்டு என் கருத்தை அருள்கூர்ந்து சீர் தூக்கிப் பார்க்க வேண்டுகிறேன்.
தமிழ் மொழியின் இனிமைக்குக் குறைபாடு வாராமல் தமிழ் மொழியிலே பிற மொழி ஒலிப்புகளை எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதே கேள்வி. தொழில் நுட்பப் புரட்சியால் (ஊர்தி, தொலை தொடர்பு, கணிணி முதலான நுட்பங்களிலே கடந்த 30-40 ஆண்டுகளிலே
ஏற்பட்ட மிகப்பெரும் வளர்ச்சிகளினால்) இன்று மக்கள் உறவாட்டத்திலே உலகம் மிகச் சுருங்கி வருவதை பலரும் நன்கு உணர்வர். இதனால் வேற்று மொழி ஒலியன்களைத் தமிழில் எடுத்தாள வேண்டிய தேவை இன்னும் வலுவாக ஏற்படுகிறது.
வேற்று மொழிப் பெயர்களிலே வழங்கும் b, d, f, g, h, முதலான எழுத்தொலிகளை எவ்வாறு தமிழில் வழங்கலாம் ?
ஏற்கனவே கணிணி எழுத்துப் பலகைகளில் உள்ள சில குறிகளைப் பயன் படுத்தி பல புதிய ஒலிப்புகளைக் குறிக்கலாம் என்பதே என் எண்ணமும் அடிக்கருத்தும். முதலில் தமிழ் முறை என்னவென்று கீழே சற்று விளக்கிவிட்டு பின்னர் புதிய முறையை விளக்குகிறேன். அருள்கூர்ந்து பொறுமையாக எண்ணிப் பாருங்கள்.
1. தமிழில் 18 மெய் எழுத்துக்களே உள்ளன. அவற்றில் 6 எழுத்துக்கள் மட்டுமே வல்லின எழுத்துக்கள். அவையாவன க், ச், ட், த், ப், ற் என்பனவே. இந்த 6 எழுத்துக்களிலும் நான்கு எழுத்துக்கள் மட்டுமே, ட், ற் நீங்கலாக, உயிரோடு சேர்ந்து ஒரு தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடியவை.
எனவே க், ச், த், ப் என்னும் நான்கு வல்லின எழுத்துக்கள் மட்டுமே உயிர் எழுத்தோடு கூடி தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக வரும். தமிழ் மொழியிலே வல்லின எழுத்துக்கள் வலித்து ஒலித்தல் இரண்டே இடங்களில் தான்.
முதலாவது ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வந்தால் வலித்து ஒலிக்கும். இரண்டாவது, புள்ளி வைத்த (தமிழில் இதற்கு ஒற்று என்று பெயர்) ஒரு வல்லின எழுத்துக்கு பின் வரும் பொழுது வல்லின எழுத்து வலித்து ஒலிக்கும். மற்ற இடங்களில் எல்லாம் வல்லின எழுத்து மெலிந்தே ஒலிக்கும்.
சில எடுத்துக் காட்டுகளைப் பார்த்தால் சட்டென்று விளங்கும்:
கடல் என்னும் சொல்லைப் பாருங்கள். முதல் எழுத்தாகிய க என்னும் வல்லின எழுத்து, சொல்லின் முதல் எழுத்தாக வருவதால் வலித்து ஒலிக்கின்றது. கடல் என்னும் சொல்லில் வரும் இரண்டாவது எழுத்தாகிய டகரமும் வல்லின எழுத்துதான், என்றாலும் மெலிந்தே ஒலிக்கின்றது. ஏன் ? அந்த டகரத்திற்கு முன் புள்ளி வைத்த வல்லின எழுத்து வரவில்லை. இப்பொழுது, வேறு ஒரு சொல்லாகிய கட்டம் என்னும் சொல்லை எடுத்துக்கொண்டால், அதில் வரும் மூன்றாவது எழுத்தாகிய டகரம் வலித்து ஒலிக்கின்றது. ஏனென்றால், புள்ளி வைத்த ட் என்னும் வல்லின எழுத்து இரண்டாவது எழுத்தாக வந்து டகரத்திற்கு முன்னால் இருப்பதால் கட்டம் என்னும் சொல்லில் உள்ள டகரம் வலித்து ஒலிக்கின்றது. முன்னே வரும் புள்ளி வைத்த எழுத்து வல்லின எழுத்தாக இல்லாமல், மெல்லின எழுத்தாக இருந்தால் மெலிந்தே ஒலிக்கும், வலித்து ஒலிக்காது. இப்பொழுது கீழ்க்காணும் சொற்களை எழுத்தொலி விளங்க ஒலித்துப் பாருங்கள், வாய் விட்டு சொல்லிப்பாருங்கள் (பலுக்கிப்பாருங்கள்).
வாடு - வாட்டு - வாண்டு (டு என்னும் எழுத்தை எப்படி ஒலிக்கின்றோம் (பலுக்குகின்றோம் ) ?)அக்கம் பக்கம் - அகம் - அங்கம்- தங்கம் (க என்னும் எழுத்தை எப்படி பலுக்குகிறோம் ?) பத்து - பந்து - பதுங்கு (து என்னும் எழுத்தை எப்படி ஒலிக்கின்றோம் ? ) பச்சை - பஞ்சு - பஞ்சை - குடிசை - பசி (சகரத்தை எப்படி ஒலிக்கின்றோம் ? (மெலிந்து ஒலிக்கும் சகரம் இரு வேறு விதமாக ஒலிக்கும். சொல்லின் முதல் ஒலியாக வரும் சகரமும், மெலிந்து ஒலித்தல் தமிழில் விதி விலக்கு).
காம்பு - காப்பு - கபுக்கென்று (பு என்னும் எழுத்தை எப்படி பலுக்குகிறோம் ?) எனவே வல்லின எழுத்துக்களைத் தமிழில் ஒலிக்கும் முறை என்னவென்றால், ஒரு வல்லின எழுத்து இரண்டே இரண்டு இடங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மெலிந்தே ஒலிக்கும்.
இவ்விரு இடங்களாவன, (1) ஒரு சொல்லின் முதல் எழுத்தும், (2) புள்ளி வைத்த வல்லின எழுத்துக்கும் பின் வரும் வல்லின எழுத்துமே. முதல் எழுத்தாக வரும் சகரம் சிலவிடங்களில் மெலிந்து ஒலிப்பது ஒரு விதி விலக்கு. முதல் எழுத்தை வலித்து (ச்)சட்டி, (ச்)சொல் என்றும் சொல்லலாம். (அப்படிச் சொல்லுவோர்களும் உள்ளனர்) அல்லது முதல் எழுத்தையே காற்றொலி கலந்த மெல்லொலியாக சட்டி, சொல் என்றும் சொல்லலாம். ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வராமல், இடையே வரும் சகரமும், தமிழ் முறைப்படி மெலிந்து ஒலிக்கும் இடங்களிலும், இரு வேறு ஒலிப்புகளுடன் ஒலிக்கின்றது. ஒன்று பாம்பு சீறுவது போல் தோன்றும் காற்றொலியாகவும் மற்றொன்று மூக்கொலி கலந்ததாகவும் உள்ளன. எடுத்துக்காட்டுகள் : கொசு - கொஞ்சு. கொசுவில் வரும் சு காற்றொலி கலந்தது, கொஞ்சு என்னும் சொல்லில் உள்ள சு மூக்கொலி கலந்தது.
2. அடுத்ததாக வேற்று மொழிச் சொற்களைத் தமிழில் எப்படி வழங்கலாம் என்று பார்க்கலாம். முதலாவதாக தமிழில் எவ்வாறு b, d, f, g, h, j, 'dh', 'sh' என்னும் எழுத்தொலிகளைக் குறிக்கலாம் என்று பார்ப்போம். தமிழில் கம்பு என்று சொல்லும் பொழுது அதில் வரும் பு என்னும் எழுத்தொலியானது ஆங்கிலம் போன்ற வேற்று மொழிகளில் வரும் b என்னும் எழுத்தோடு உயிரெழுத்து கூடிய எழுத்தொலியேதான். என்றாலும் Berlin, Bell என்னும் பெயர்ச்சொற்களில் வருவதைப்போல தமிழில் முதலொலியாக வர இஇயலாது (தமிழ் முறைப்படி). எனவே ஒரு வல்லின எழுத்துக்கு முன்னே ஒலி மாறி வருவதைக்குறிக்க (ஒலித்திரிபைக் குறிக்க) ஒரு கணிணி எழுத்துப்ப்லைகையில் உள்ள ஒரு குறியைப் பயன் படுத்தலாம். apostrophe அல்லது single quote என்னும் குறியை (தமிழில் முன்கொட்டு என்று பெயரிடலாம் என்று நினைக்கிறேன்) இட்டுக் குறிக்கலாம் என்று நினைக்கிறேன். இதே முறையில், தமிழில் வழங்கா f, sh முதலிய எழுத்துக்களையும் குறிக்க முன்கொட்டு ஒன்று இட்டு ஒலித்திரிபைக் குறிக்கலாம்.
2.1 முன்கொட்டுடன் வரும் எடுத்துக்காட்டுகள்:
Ball = 'பால்
Bell = 'பெல்
Berlin = 'பெர்லின்
Gandhi = 'காந்தி
Johnson, Jagannaathan = 'சான்சன் , 'சகன்னாதன்
David = 'டேவி 'ட்
Dirac = 'டிராக்
Dumdam Airport = 'டம்டம் வானூர்தி நிலையம் (வான் நிலையம், வான் துறை)
Dadabhai Navroji = 'தாதாபாய் நவ்ரோ'சி
Fermi = 'வெர்மி
Ford = 'வோர் 'ட்
Usha = உ'ழா
Ship = 'ழிப் ( பழக்கத்தில் முன் கொட்டுடன் வரும் 'ழ என்பதை sha என்று
சொல்லிப் பழக வேண்டும்)
2.2 அடுத்ததாக H என்னும் ஒலியை தமிழில் ஆய்த எழுத்தைக்கொண்டு குறிக்கலாம்.
எடுத்துக்காட்டுக்கள்:
Hitler = ·இட்லர்
Hardy = ·ஆர்டி
Hilbert = ·இல்பெர்ட்
2.3. காற்றொலி கலந்தொலிக்கும் S என்பதைக்குறிக்க, தமிழில் (tilda) ~ச் என்று குறிக்கலாம். பெரும்பாலும் இது தேவைப்படாது என்றாலும், சில இடத்தில் இம்முறை பயன் படலாம். எடுத்துகாட்டாக Brooks, Francis முதலான பெயர்ச்சொற்களை 'புரூக்~ச் அல்லது 'ப்ரூக்~ச் என்றும் 'விரான்சி~ச் அல்லது 'வ்ரான்சி~ச் என்றும் எழுதலாம். அல்லது சற்றே தமிழ்ப்படுத்தி 'புரூக்~சு என்றும் 'விரான்சிசு என்றும் எழுதலாம்.
2.4 சில இடங்களில் தமிழ் முறைக்கு மாறாக புள்ளி வைத்த வல்லின எழுத்து வாராமலும்
வல்லின எழுத்துக்கள் வலிந்து ஒலிக்க வேண்டி இருக்கின்றது. எடுத்துக்காட்டாக Bapu என்று வரும் பொழுது நாம் 'பா(ப்)பு என்று எழுதலாம். இவ்வாறு வரும் இடங்கள் மிகக் குறைவானவே என்பதால், இப்படி பிறைக்குறிக்குள் வல்லின ஒற்றை (புள்ளி வைத்த எழுத்தை) எழுதி சரியான ஒலிப்பைக்குறிக்கலாம். அல்லது வேறு விதமாக இரட்டை முன்கொட்டு இட்டும் காட்டலாம். 'பா''பு. Gopi என்பதை 'கோ''பி என்று எழுதலாம்.
2.5 கடைசியாக, அகர-ஏகாரக் கலவை ஒலியாக வழங்கும் ஓர் உயிர் ஒலியை எப்படிக் குறிக்கலாம் என்று பார்ப்போம். கீழ்க்காணும் ஆங்கில சொற்களைப் பார்த்தால் இந்த அகர-ஏகாரக் கலவை ஒலி விளங்கும்: cat, gap, fat முதலிய சொற்களில் வழங்கும் a என்னும் உயிரொலி சற்றே ஏகார ஒலி கலந்து ஒலிப்பதை உணரலாம். இதனைக் குறிக்க, தமிழில் எழுத்தின் முன்னொட்டாக தொப்பி போன்ற கூரைக் குறியை (^) இட்டுக் குறிக்கலாம். ஏனவே Apple Computer என்பதை ^ஆப்பிள் கணினி என்று குறிக்கலாம். Faraday என்னும் பெயரை 'வாரடே என்பதற்கு பதிலாக ^'வேரடே என்றோ அல்லது ^'வாரடே என்றோ குறிக்கலாம்.
2.6 சரி, ஒற்றைக் கொட்டு மேற்கோள் குறியைப் பயன் படுத்துவதால் குழப்பம் வாராதா ? (மேற்கோள் குறி என்பதை சுருக்கமாக மேறி என்று சொல்லலாமா ? மேல் என்னும் சொல்லே அடிப்படை எனவே அது மேற்- என்று மாறும் இயல்புடையதுதான்; இன்னொரு விதமாகப் பார்த்தால், மேற்கோள் என்பதின் முதல் எழுத்தும் (மே), குறி என்பதின் கடை எழுத்தும் (றி) சேர்த்து மேறி என்றாயிற்று என்றும் கொள்ளலாம்) எனவே, தமிழில் நாம் எப்பொழுதும் இரட்டை மேறியை மட்டுமே பயன் படுத்துவோம். அல்லது ஒற்றை மேறியைப் பயன் படுத்துவதானால் ஒற்றை மேறிக்கு அடுத்து சற்று இடைவெளி தர வேண்டும். அவ்வளவுதான்.
3 இந்த முறையினால் என்ன நன்மை ?
3.1 தமிழ் நெடுங்கணக்கில் (எழுத்து வரிசை) உள்ள தமிழ் எழுத்துக்கள் மட்டுமே போதுமானது. (ஜ ஜி, ஷ, ஷி , ஹ, ஹி, ஸ, ஸி போன்ற எழுத்து வரிசைகள் தேவையே இல்லை; இகர,ஈகார ,ஊகார எழுத்துக்களும், புள்ளி வைத்த தனி மெய்யெழுத்துக்களும் தேவையே இல்லை.). தமிழ் மரபில் இருந்து மாற விருப்பம் இல்லா தமிழர்கள் இன்றும் ஜகன்னாதன் என்னும் பெயரை சகன்னாதன் என்றுதான் வழங்குகிறார்கள். இங்கு கூறியுள்ள முறைப்படி 'சகன்னாதன் என்று அவர்களும் ஆர்வமுடன் தேர்ந்தெடுத்து வழங்குவார்கள் என்று நினைக்கிறேன். இனி நான் என் நண்பர் 'கணேசன் என்று எழுத முடியும். என் நண்பரின் மனைவியின் பெயர் உ'ழா. இப்பெயருக்கு வடமொழியில் வைகறை, அதிகாலை, கதிரவன் முளைத்து எழும் சிற்றம் சிறூகாலை எனப்பொருள். கணித மேதை ·இல்பெர்ட்டை தமிழில் எளிதாக எழுதலாம். தமிழ்க் கணித மேதை ராமானு'சன் என்றும் எழுதலாம். கலைமகளை சரசுவதி என்று எழுதுவதே போதும். ~சர~ச்வ(த்)தி என்று எழுதத்தேவை இல்லை என்பது என் கருத்து.
3.2 மேலும் தமிழ் மரபுக்கு மாறாக வரும் பல வேற்றொலிக்கூட்டங்களையும் (மொழி முதலா வரும் G,B,D, Dh ஒலியன்கள் ) மற்றும் தமிழில் வழங்கா F என்னும் ஒலியையும் குறிக்க முடியும். அணுவியல் அறிஞர் 'வெர்மி என்றும், இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த சிந்தனைச் சிற்பிகளில் ஒருவராகிய 'பக்-மினிசு(ட்)டர் 'வுல்லர் என்றும் இனி எழுத முடியும். ஒரு கூண்டுபோல் அமைந்திருக்கும் 60 கரிம அணுக்கள் கொண்ட ஒரு வியப்பூட்டும் கூட்டணுவை (!!) அண்மையில் கண்டுபிடித்து அதற்கு பேரறிஞர் 'வுல்லரின் நினைவாக 'வுல்லரீன் என்று பெயரிட்டுள்ளார்கள்.
3.3 மிகக்குறைந்த எழுத்துக்களுடன் முன்பினும் அதிகமான வேற்று
மொழிச் சொல்லொலிப்புகளைத் தமிழில் வழங்க இயலுகின்றது. எழுத்துக்களைக் குறைப்பது மட்டுமே நோக்கம் இல்லை, ஆனால் இப்பொழுது இருக்கும் நிலைக்கு அதிகம் மாறுபடாத ஒரு வகையில், எவ்வாறு இன்னும் அதிகமான எழுத்தொலிகளைத் தமிழில் வழங்கலாம் என்பதே என் கேள்வி. தமிழில் வழங்கும் அருமையான மரபாகிய வல்லின-மெல்லின ஒலிப்பு முறை மாறாமல் இருப்பதும் என் அடிப்படைநோக்கம்.
3.4 கையால் எழுதும் பொழுதும், இம்முறை மிக எளிதாக கைக்கொள்ளத் தக்கது.
மேற்கண்ட முறையை எல்லோரும் விரைந்து பயன் படுத்தினால், பயன் வளரும் என்று கருதுகிறேன். குற்றம் குறை இருப்பின், அறிஞர்கள் அருள்கூர்ந்து எடுத்துக்கூறி திருத்துமாறு வேண்டிக்கொள்ளுகிறேன்.
அன்புடன்
செல்வா
___________________
செ. இரா. செல்வகுமார்
வாட்டர்லூ, ஒன்ட்டாரியோ, கனடா
ஆக~ச்ட்டு, 24, 1999.
Posted by
நா. கணேசன்
at
7
comments
Labels: கிரந்தம் , தனித்தமிழ் , தொல்காப்பியம்
தமிழர் இணையும் யூனிக்கோடு!
தமிழ்மணம் நடாத்தும் நண்பர்கள் யூனிக்கோடு பற்றிய சில அனுபவங்கள், வரலாறுகளை எழுத அழைத்ததால் எனக்குப் பெருமை. யூனிக்கோடுக்குத் தமிழ் வரலாற்றிலே ஒரு பெருமை உண்டு ~ பெரும்பான்மையான ஒரு குறியேற்றமாக மாறி வலைப்பதிவுகள் போன்றவற்றால் பல்லாயிரக்கணக்கான தமிழரைத் தமிழ்நாட்டிலேயும் வெளியேயும் வையவிரிவலையில் (world-wide web) மடலாட வைத்தது. கணினிக் குறியேற்றங்கள் பல இருந்தாலும் யூனிக்கோடினால் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் பார்க்க முடிகிறது. கணினி என்ற கலைச்சொல் கிண்டி பொறியியற் கல்லூரியில் 1970களின் கடைசியிலே ஏற்பட்டது. யூனிக்கோடுக்கு ஒருங்குறி என்று தமிழ்ப்படுத்தியவர் நண்பர் இராமகி ஆவார். இணையம் (web), உலாவி (browser), மட்டுநர்(moderator), தொடுப்பு (link), ... எத்தனை, எத்தனைக் கலைச்சொற்கள்! தொழில்நுட்புகள் அனைத்துக்கும் உழைக்கும் தமிழ்மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் தமிழன்னைக்கு அழகுச் சொல்மாலைகள் புனையும் முயற்சிக்கு முக்கியமான வழி இணையம் என்றானது. எந்த ஓர் ஆங்கில வார்த்தைக்கும் தமிழில் பொருத்தமான சொல்லைத் தோற்றுவிக்க நொடியினில் முடிகின்றது. இணைய நாட்டாமை மேட்டிமைக் குடிகளால் நடத்த இயலாதவாறு அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கும் வாய்ப்புகளைத் தொழில்நுட்பம் இன்று தருகிறது. வணிக நிறுவனங்களிடம் உள்ள ஊடகங்களிலே எழுதக் காத்திராமல், உடனுக்குடன் தத்தம் படைப்புக்களை, எண்ணங்களை பொதுமக்கள் பகிர்ந்துகொள்ள ஏலுகிறது. 100,000 வலைப்பதிவுகள் தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படும் நாள் தொலைவில் இல்லை எனும் கனா மெய்ப்படவேண்டும்.
யூனிக்கோடில் கூகுள் குழுக்கள்:
முதன்முதலில் ஏற்பட்ட மடலாடு மின்குழு தமிழ்.நெட். பின்னர் கிளைத்து யாகூ குழுமங்கள் பலவாகின. தமிழ்ச் சொற்களைக் கொடுத்துத் தேட வசதிகள் நல்கின கூகுள் குழுமங்கள், ஆனால் அவ்வசதி இன்றுகூட யாகூ குழுக்களில் இல்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். முதன்முதலில் தமிழின் கூகுள்குழு 'அன்புடன்' புகாரி [1] அமைத்துச் சிறப்பாக இயக்கி வருகிறார். இப்போது அன்புடன், முத்தமிழ், மின்தமிழ், பிரவாகம், பண்புடன், ... என்று பல துறைகளில் கூகுள்குழுக்கள் ஒருங்குறியில் நடைபெறுகின்றன, இலட்சக் கணக்கில் கடிதங்கள் பரிமாற்றம்! கூகுள் குழுக்களின் அறிமுகக் கட்டுரைகளைப் ஃபெட்னா மலர்களில் கவிஞர்கள் வரைந்தனர்: புகாரி கட்டுரை (2005), இர. வாசுதேவன் கட்டுரை (2006).
கூகுளில் இணைக்குழு உருவாக்கம்:
2005 வாக்கில் இருந்த பெரிய பிரச்சினை என்னவெனில் மரபுக் கவிஞர்கள், யாகூ குழுவின் முதலாளிகளுக்கும் கூட இணையத்தில் யூனிக்கோடு எழுதுகை என்பது கைவசப்படாத வேளை. மேலும் யூனிக்கோடு மாறுகிறது என்று தமிழ்நாட்டின் பத்திரிகைகளில் சில மாதங்களுக்கு ஒருமுறை செய்திகள் வெளிவந்த காலம். குறியீடு மாறிய பின்னால் மாறுங்கள் என்றும் சொன்னார்கள். அந்நிலையில் யாகூகுழுவில் எழுதுவோர் எழுதட்டும், தானியங்கியாக நிழற்குழு கூகுளில் அமைத்து அந்தத் திஸ்கி மடல்களை யூனிக்கோடுக்குப் பெயர்த்து இணைக்குழுவில் வைப்போம் என்று நினைத்தேன். 'தமிழ்மணம்' காசி மென்கலம் தயாரித்து உதவினார். அதற்கு உடனே அனுமதி அளித்து, தொழில்நுட்ப முன்னெடுப்புக்கு ஆதரவு அளித்தவர் கவிமாமணி இலந்தை இராமசாமி ஆவார். மரபுக் கவிதைக் கடலைக் கடக்கும் கப்பலாகச் சந்தவசந்தம் இலங்குகிறது. அதன் மீகாமன் இலந்தையார். பலரும் பாராட்டினர். கனடா நாட்டுக் கவிஞர் பேரா. அனந்தநாராயணனின் வாழ்த்துப்பா நினைவில் இருக்கிறது [2] :
பாரதம் நூலெழுதும் பங்கேற்றார் பண்டையொரு
வாரணம்; சந்த வசந்தக் கவிஞர்கள்தம்
பாரதம்செல் பாதை படைக்கக் கணேசனே
காரணமாய் நின்றார் களித்து!
உமர் அவர்களின் தேனீ எழுதுருவும், நானும் உதவிய முகுந்தராசின் எ-கலப்பை மென்கலங்கள் பதிவுகள் வளர்ச்சிக்கு உறுதுணையாயின. பின்னர், தமிழ்மணம், தேன்கூடு உருவானதும் தமிழ்வலைப் பதிவுலகம் நிலைபெற்று தமிழர் கூடும் மேடைகளாக வலைத் திரட்டிகள் விளங்க ஆரம்பித்தன.
முனைவர் பொன்னவைக்கோ அவர்களின் டேஸ் பற்றிய என் கருத்துக்கள்? தற்போதைய யூனிக்கோடின் பிழை என்ன? மேலும் புதிதாக யூனிக்கோடு எழுத்துக்களை எவ்வாறு தமிழ் பெறுவது?
என் சிறு ஒருங்குறிப் பட்டறிவை அடுத்த பதிவில் காண்போம்.
நா. கணேசன்
குறிப்புகள்:
[1]
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்
கவிஞர் புகாரி
புலம்பெயர்ந்தாள் புலம்பெயர்ந்தாள்
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய் !
இளமையோடும் புதுமையோடும்
தலைநிமிர்ந்தாள் தமிழ்த்தாய்!
ஓசைகளாய் இருந்தவள்தான்
ஓலைகளில் பெயர்ந்தாள்!
ஓலைகளாய்ப் பெயர்ந்ததனால்
சங்ககாலம் கொண்டாள்!
ஓலைகளில் வாழ்ந்தவள்தான்
தாள்களுக்குள் பெயர்ந்தாள்!
தாள்களுக்குள் பெயர்ந்ததனால்
தரணியெங்கும் நிறைந்தாள்!
காகிதத்தில் கனிந்தவள்தான்
கணினிக்குள் பெயர்ந்தாள்!
கணினிக்குள் பெயர்ந்ததனால்
அண்டவெளி வென்றாள்!
அழிந்திடுவாள் என்றோரின்
நரம்பறுத்து நின்றாள்!
இணையமென்ற மேடைதனில்
மின்னடனம் கண்டாள்!
அயல்மொழியைக் கலந்தோரை
வெட்கியோட வைத்தாள்!
அழகுதமிழ் அமுதத்தமிழ்
ஆட்சிமீண்டும் பெற்றாள்!
[2]
பாரதம் - மகாபாரதம்; பாரதம் = பா ரதம் - கவிதை எனும் தேர் (சந்தவசந்தம் கவிதைக்குழு). வாரணம் = ஆனைமுகன்.
Posted by
நா. கணேசன்
at
21
comments
Labels: ஒருங்குறி , கூகுள்குழுக்கள் , டேஸ் , யூனிக்கோடு
உலகம் உன் கையில்!
உலகம் உன் கையில்!
தம்பி!
கொஞ்சம் நில்.
என்ன சுமை உன்முதுகில்?
கவலைகள் கைக்குழந்தைகள்
அல்ல.
அவற்றைக் கீழே இறக்கிவிடு
நீ சிரித்தால் உலகம் உன்னுடன்
சேர்ந்து சிரிக்கும்.
அழுது கொண்டிருப்பவனின்
நிழல் கூட அவனை நெருங்கப்
பயப்படும்!
காற்றைப் பதுக்கி வைப்பதால்
கால்பந்து உதை வாங்குகிறது!
புல்லாங்குழலோ
காற்றை வெளியேற்றி இசை
தருவதால்
கலைஞனிடம் முத்தம் பெறுகிறது!
வெளிச்சத்துக்கு வா!
பூக்களிடம் பேசு!
மரங்களிடம் நட்பு வை.
காக்கை குருவிகளிடம் கவிதை
கேள்!
நம்பிக்கை வீணையை
நன்கு முழக்கு!
இமயமலை கூட எதிர்வந்து
நிற்கும்!
கவலைப் பிசாசு கை கட்டிநின்று
பணிவிடை செய்யும்! - உன்
பாதம் பிடிக்கும்!
நம்பிக்கை ஒரு நல்ல விமானம்
விண்ணிலும் பறக்கும்! மேலும்
பறக்கும்!
சந்திர மண்டலத்திலும்
தரையிறங்கும்!
நம்பிக்கைச் சங்கொலி
நன்கு முழங்கினால்
வேலை நிறுத்தங்கள்
விலகிப்போகும்!
ஆலைகள் எல்லாம்
ஆலயங்கள் ஆகும்!
பஞ்சாலை நூலைப் பலரும் அறிவர்
நெஞ்சாலை நூற்கும் நூல்?
நம்பிக்கை நூல்!
எந்தப் புயல்
எங்கு மையம் கொண்டால் என்ன?
இதயக் கப்பலை - நம்பிக்கை
முனையில்
நங்கூரம் பாய்ச்சு!
கலங்காத நம்பிக்கை கப்பலைக்
காக்கும்!
கரை கொண்டு சேர்க்கும்!
உள்ளே நாம் சுவாசிக்கும்
உட்காற்றும் வெளிக் காற்றும்
நம்பிக்கை நூல் இழை
நடத்தும் நாடகம்!
~ வானம்பாடிக் கவிஞர் 'சக்திக்கனல்'
அனைவருக்கும் இனியதாய் 2008 இலங்குவதாக!
நா. கணேசன்
Posted by
நா. கணேசன்
at
12
comments
Labels: கவிதை , சக்திக்கனல் , புத்தாண்டு
பால்வீதியின் நடுவே கருங்குழிப் பூதம்
பால்வீதியின் நடுவே கருங்குழிப் பூதம்
Monster of the Milky Way
கருங்குழி (black hole) தேற்றத்தை முதலில் உருவாக்கியவர் நோபெல் விஞ்ஞானி எஸ். சந்திரசேகர். முதலில் சந்திராவின் ஆசிரியர் எட்டிங்டன் (இங்கிலாந்து) இந்த 'சிங்குலாரிட்டி" (singularity) தியரியை ஏற்க மறுத்து எள்ளினார். கொஞ்ச நாளில் அறிஞர் சந்திரா சிகாகோவுக்குக் குடியேறினார்.
நம் உலகம் சுற்றிவரும் சூரியனை மையமாகக் கொண்டது சூரிய மண்டலம் (solar system). அதுபோன்ற கோடிக் கணக்காண நட்சத்திரங்களைக் கொண்டதுதான் அகண்ட பால்வீதி (Milky way). நம் உலகை அடக்கிய சூரியனைக் கொண்டியங்கும் பால்வீதியின் நடுவே ஒரு பெரிய கருங்குழிப் பூதம் இருக்கிறது. அதன் அருகில் வரும் நட்சத்திரங்கள் தன்வேகத்தை மிகவும் அதிகரித்துத் தன்பாதைகளில் சுழல்கின்றன என்பனவற்றை வானவியல் அறிஞர்கள் நாசா அறிவியல் கருவிகளைத் துணைக்கொண்டு (உ-ம்: Keck observatory (Hawaii), Chandra X-Ray Lab) (*) அண்மையில் சில ஆண்டுகளாகக் கண்டறிந்துள்ளனர். இப்பொழுது கருங்குழிப் பூதம் உண்ணாவிரதம் பூண்டிருந்தாலும், பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து நட்சத்திரங்களை விழுங்கும். இரு பால்வீதிகள் இணையும், விண்மீன்கள் (நம் சூரியன் உட்பட) மறையும், புதிதாய்த் தோன்றும். நாம் ஒன்றும் பயப்படத் தேவையில்லை, (1) நம் சூரியன் கருங்குழிக்குத் தொலைவில் உள்ளது (2) இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சூரியன் இருந்தபின்னரே மறையும் (அதுவரை மனித இனம் தன்னைத் தன்னிலிருந்து காத்துக் கொண்டால்)!!
7 அத்தியாயங்களில், ஒரு மணி நேர நிகழ்ச்சியாக, அமெரிக்கப் பொதுத்தொலைகாட்சி (PBS) ஒளிபரப்பியது. பல முன்னணி விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர். இப்போது அந்நிகழ்ச்சி வலைவலம் வருகிறது. முக்கியமாக, இலங்கை, தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் அறிவியல் வகுப்புகளில் காணப்படவேண்டும்:
http://www.pbs.org/wgbh/nova/blackhole/program.html
மேலும் அதிக விவரங்களுக்கு,
http://www.pbs.org/wgbh/nova/blackhole/explained.html
http://www.pbs.org/wgbh/nova/blackhole/
நா. கணேசன்
சங்கிலித் தேற்றம் (ஸ்ட்ரிங் தியரி) பற்றி ராமன் சுந்தரம் என்னும் அறிஞர் முனைந்து இருக்கிறார்.
http://www.sciam.com/print_version.cfm?articleID=000EB657-C6C7-1331-841D83414B7FFE9F
Posted by
நா. கணேசன்
at
0
comments