உலகம் உன் கையில்!
தம்பி!
கொஞ்சம் நில்.
என்ன சுமை உன்முதுகில்?
கவலைகள் கைக்குழந்தைகள்
அல்ல.
அவற்றைக் கீழே இறக்கிவிடு
நீ சிரித்தால் உலகம் உன்னுடன்
சேர்ந்து சிரிக்கும்.
அழுது கொண்டிருப்பவனின்
நிழல் கூட அவனை நெருங்கப்
பயப்படும்!
காற்றைப் பதுக்கி வைப்பதால்
கால்பந்து உதை வாங்குகிறது!
புல்லாங்குழலோ
காற்றை வெளியேற்றி இசை
தருவதால்
கலைஞனிடம் முத்தம் பெறுகிறது!
வெளிச்சத்துக்கு வா!
பூக்களிடம் பேசு!
மரங்களிடம் நட்பு வை.
காக்கை குருவிகளிடம் கவிதை
கேள்!
நம்பிக்கை வீணையை
நன்கு முழக்கு!
இமயமலை கூட எதிர்வந்து
நிற்கும்!
கவலைப் பிசாசு கை கட்டிநின்று
பணிவிடை செய்யும்! - உன்
பாதம் பிடிக்கும்!
நம்பிக்கை ஒரு நல்ல விமானம்
விண்ணிலும் பறக்கும்! மேலும்
பறக்கும்!
சந்திர மண்டலத்திலும்
தரையிறங்கும்!
நம்பிக்கைச் சங்கொலி
நன்கு முழங்கினால்
வேலை நிறுத்தங்கள்
விலகிப்போகும்!
ஆலைகள் எல்லாம்
ஆலயங்கள் ஆகும்!
பஞ்சாலை நூலைப் பலரும் அறிவர்
நெஞ்சாலை நூற்கும் நூல்?
நம்பிக்கை நூல்!
எந்தப் புயல்
எங்கு மையம் கொண்டால் என்ன?
இதயக் கப்பலை - நம்பிக்கை
முனையில்
நங்கூரம் பாய்ச்சு!
கலங்காத நம்பிக்கை கப்பலைக்
காக்கும்!
கரை கொண்டு சேர்க்கும்!
உள்ளே நாம் சுவாசிக்கும்
உட்காற்றும் வெளிக் காற்றும்
நம்பிக்கை நூல் இழை
நடத்தும் நாடகம்!
~ வானம்பாடிக் கவிஞர் 'சக்திக்கனல்'
அனைவருக்கும் இனியதாய் 2008 இலங்குவதாக!
நா. கணேசன்
Showing posts with label புத்தாண்டு. Show all posts
Showing posts with label புத்தாண்டு. Show all posts
உலகம் உன் கையில்!
Posted by
நா. கணேசன்
at
12
comments
Labels: கவிதை , சக்திக்கனல் , புத்தாண்டு
Subscribe to:
Posts (
Atom)