உலக இட்டவி நாள் (World idli day)

உலக இட்டவி நாள் (World Idli Day)
-------------------------------

அவித்தல் = steaming. புளித்த மாவை இட்டு அவித்துச் செய்யும் உணவு “இட்டவி” என்று பெயர். பண், இசை என்பன வினைச்சொல்லில் இருந்து பெயர்ச்சொல் ஆதல் போல, இடு+அவி = இட்டவி என்கையில் அவி என்பது பெயர்ச்சொல் ஆகியுள்ளது (தொழிற்பெயர் = verbal noun). இட்டவி நீராவியில் அவிக்கும்போது, தட்டில் மாவை ஊற்றி எடுப்பதை “ஈடு” என்கிறோம் (Cf. கிவாஜ வெண்பா)

ஏடுகள், கல்வெட்டு இவற்றில் வி, லி பிரித்துப் படிப்பது கடினம். எனவே, இட்டவி இட்டலி ஆகியுள்ளது. கல்வெட்டறிஞர் சி. கோவிந்தராசனார் (தண்செய்) திருப்பதிக் கல்வெட்டில் “இட்டவி” உள்ளதைக் குறிப்பிட்டார் எனப் பாவாணர் எழுதியுள்ளார்  (செந்தமிழ்ச்  செல்வி,  சிலம்பு 31, பரல் 6, பக்கம் 270 (1957 பிப்ரவரி)). வி, லி ஆதற்குக் காட்டு பாரதிதாசன் இளமையில் பாடிய திருப்புகழ் அச்சுப் புஸ்தகங்களில் காணலாம். இட்டவி : இட்டலி, வ > ல பிறழ்ச்சி கல்வெட்டுப் படிப்போரால் ஏற்பட்டாற்போல், ”உளமதி னினைகுவ தெனிலவர்” - வ என்பது ல என்று அச்சாகியுள்ளது. இது “உளமதில் நினைகுவது எனில் அவர்” என்று பதம் பிரிக்கவேண்டும். 'தொழுகுவது' என்றும் அடுத்து அதே வரியில் வருவதால் 'நினைகுவது' என்று கொள்க. ”நினைகுலது” என்றால் பொருள் இல்லை. முழுப்பாட்டும், பொருளும்: மணக்குள விநாயகர் திருப்புகழ், http://nganesan.blogspot.com/2009/08/manakkula-ganapati.html

இடு- எனும் வினைச்சொல்லை வைத்து உருவாகும் முக்கியமான பெயர்ச்சொல்: இட்டி/இட்டிகை (சங்க இலக்கியம்) > இஷ்டகா/இஷ்டிகா என்னும் செங்கல் (= staight stone. cf. ceGkOl 'sceptre'). செங்கல் பிற்காலச் சொல் ஆகும்.  நேர்கோடாக உள்ளது செங்கோட்டியாழ். ஆங்கிலத்தில் Stick Zither என்பர். சிலப்பதிகாரத்தில் பார்வதி நோக்க, சிவபிரான் செங்கோட்டியாழ் மீட்டுவதாகச் சொல்லியிருக்கிறது.  கருங்கோடு என்பது எருமையின் கொம்பு போல் வளைந்த தண்டு. கருங்கோட்டியாழுடன் தமிழ்த்தாய் ஓவியம். கருங்கோட்டி யாழில் சற்றே வளைந்த stick zither வடிவம் காண்க. http://nganesan.blogspot.com/2020/06/thamizthaay-50-years-state-anthem.html கோடிக்கணக்கான இட்டிகை சிந்துவெளியின் ஆயிரக்கணக்கான கிராமங்களில், 10 நகரங்களில் கிடைக்கிறது. இட்டிகை வைத்துக் கட்டும் வேள்விக் குண்டங்களால் இந்தியாவின் ஜியாமெட்ரி கணிதம் உருவாகிறது.    https://en.wikipedia.org/wiki/Shulba_Sutras  இதன் வளர்ச்சியால் உலகில் முதன்முதலாக, Calculus என்னும் கணிதம் பிறக்கிறது. ஶுல்வம் = கயிறு (śulba: "string, cord, rope"). இது குல்லை என்னும் தாவரத்தால் உருவாகும் பெயர். இந்தியக் கணிதத்தின் தோற்றுவாய் இழையில் குல்லை என்பது என்ன செடி? குல்லைச் செடியில் செய்யும் ஶுல்பம் (chord) பற்றிச் சொல்லலாம். குல்லை என்னும் தாவரத்தைப் பற்றிச் சங்க இலக்கியம் விரிவாகக் குறிப்பிட்டாலும், என்ன தாவரம் முக்கியம் என நிச்சயிக்க, சுல்ப சூத்திரங்கள் உதவுகின்றன. ஶுல்வ சூத்திரங்கள், ஶுல்வம் தரும் குல்லைச் செடி பற்றி இங்கே பார்ப்போம்: https://groups.google.com/g/santhavasantham/c/b4pB_pNT0cE

இது போல் சில சொற்கள்,
1) முட்டி : முஷ்டி  (மூட்டுதல் joint ). முடக்கு: முடக்கல், கையை மடக்கிச் சண்டை. முஷ்டாண்ட ,..
(2) வீட்டுக் கூரைக்கு வைக்கும் விட்டம் (> விஷ்ட), விடு- என்னும் வினைச் சொல். (சங்க இலக்கியம்)
(3) விரல் போன்றவற்றை அழுகச்செய்து குட்டை ஆக்கும் குட்டம் (> குஷ்டம்)
(4) இடு- என்னும் வினைச்சொல்லில் இருந்து இட்டு எழுப்பும் சுவர். எனவே செங்கல்லுக்கு இட்டி, இட்டிகை என்ற பெயர் (சங்க இலக்கியம்). வேள்வியில் யாக குண்டங்கள் கட்ட எழுப்புவது இட்டி  (> இஷ்டி). விரும்புவதை வேண்டும் வேள்வி வேட்பதாகையால் இஷ்டம் என்றால் “விருப்பம்” என்ற பொருள் பின்னர் ஏற்பட்டுள்ளது: இட்டி/இஷ்டி என்னும் செங்கல், வேள்விக் குண்டம் - இதன் நீட்சிப் பொருள் எனலாம். (புத்ர காமேஷ்டி யாகம்).
(5) காடு/கட்டை > காஷ்ட

உழுந்தும், அரிசியும் பல காலமாக இருந்தாலும், இட்டலி பற்றிய குறிப்புகள் சுமார் 1000 ஆண்டுகளாகத் தான் கிடைக்கின்றன. எனவே, பல்லவர், சோழர் காலங்களில் தென்கிழக்கு ஆசியா உறவுகள் இட்டவியின் தோற்றத்துக்கு ஒரு காரணம் என்பார் உண்டு. ஆனால், இக் கருதுகோள் மீது கேள்விகளும் உண்டு. அரிசி, உழுந்து, நொதிக்கச் செய்தல் (உ-ம்: சாராயம்) எல்லாம் 3000 வருடமாய் நம்மிடையே உண்டே. https://thehindutvatimes.wordpress.com/2018/03/30/origin-of-idli-busting-the-myths/
http://arumughompillai.blogspot.com/2016/01/blog-post_24.html

ஒரு காலத்தில், அரிசியால் செய்யும் இட்டிலி ஏழை மக்களுக்குக் கிடைக்காத உணவு. இதை ஏழைச் சிறுமி பாடுவதாகக் கவிமணி தேவி பாடியுள்ளார்கள்.
     ஏழைச்சிறுமியர் மனப்புழுக்கம்
https://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=147&pno=125
   இட்டெலி ஐந்தாறு தின்றோம் என்பீர் - நீங்கள்
        ஏதும் கருணை யிலீரோ? - நீங்கள்.
   பட்டினி யாக இறந்திடினும் - நாங்கள்
        பாவம் பழிசெய்ய மாட்டோம், அம்மா!

‘தமிழுலகம் ஏற்றிப் போற்றுகிற வாகீச கலாநிதி கி.வா.ஜ. அண்மைக் காலத்தில் வாழ்ந்த "காளமேகம்" என அறுதியிட்டுச் சொல்லலாம். சிவபெருமானுக்கும், இட்டிலிக்கும் அவர் பாடியுள்ள சிலேடைப் பாடல், அவர் புலமையையும், அன்னைத் தமிழின் அருமையையும் ஒருசேர உணர்த்துகிறது.

 "ஆட்டியபின் ஆவியிலே பக்குவம்கண்டு அங்குஎடுக்கும்
  ஈட்டால், பொடி வெண்மை ஏய்வுறலால் - போட்ட இலை
  மேல்உறலால், சாம்பாரில் மேவி இன்பம் தந்திடலால்
  கோலும் அரன் இட்டிலியாய்க் கொள்''

 உயிர்களைப் பிறக்க வைத்து, அவ்வுயிர்களின் பக்குவம் அறிந்து மேற்கதி (முக்தி-வீடுபேறு) தருகிறார் சிவபெருமான் என்பதை "ஆட்டியபின் ... ஈட்டால்'' எனும் தொடர் விளக்குகிறது. அதே தொடர் மாவை ஆட்டிய பிறகு ஆவியிலே வேகவைத்துப் பக்குவம் அறிந்து இட்டிலியை எடுப்பதையும் குறிக்கிறது. திருநீறு துலங்க சிவன் பொலிவதையும், "பொடி வெண்மை ஏய்வுறலால்'' என்பது குறிக்கிறது. அர்ச்சித்த வில்வ இலையோடு சிவன், வாழையிலை மேல் இட்டிலி - இது "போட்ட இலை மேலுறலால்'' என்பதைக் குறிக்கிறது. சாம் பாராகிய சுடலையில் சிவன் - சாம்பாரில் இட்டிலி என்பதை இறுதித் தொடர் விளக்குகிறது.’ (மதிவண்ணன், தினமணி)

இட்டிலியில் பல வகைகள் உண்டு. காஞ்சிபுரம் இட்லி, ராமச்சேரி இட்லி, மினி-இட்லி, ...கருவுற்றார்க்குப் பயறு வகையொடு செய்து தரப்படும் இட்டிலி (இட்டவி)யைச் சினையிட்டிலி என்பது முகவை, நெல்லை வட்டார வழக்கென அறிய வருகின்றது. https://solalvallan.com/சினையிட்டிலி/
சினை எனுஞ்சொல் மானிடப் பெண்ணுக்குப் பயன்படும் பழய வழக்கு இது.


சென்னை மாநகரில் இனியவன் என்பவர் நூற்றுக்கணக்கான இட்டலி வகைகளைச் சமைத்துக்காட்டி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றதால், ஒவ்வொரு மார்ச் 30-ம் தேதியும் ‘உலக இட்டவி நாள்’ எனக் கொண்டாடப்படுகிறது. http://jayasrimahi.blogspot.com/2018/03/30.html 10 பேருடன் கோவையில் பிறந்த இனியவன் ‘இட்லி ராஜா’ என அறியப்படுகிறார். அவரால் ‘உலக இட்லி தினம்’ கிடைத்தது. https://ta.quora.com/itli-iniyavan-yar-ulaka-itli-tinam-kontatappatuvatu-en

நா. கணேசன்
உலக இட்டவி நாள், 2022


பி. கு.

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இட்டவி என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் எனக் கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) சொன்னார். ஆனால். எனக்கு அவர் அனுப்பிய நூல் கிடைக்கவில்லை. கிடைத்தால் சிறப்பு.
http://groups.google.com/group/minTamil/msg/5f210b9e8f9fe38c
> தமிழலங்காரம் எனும் பழைய, எந்த நூற்றாண்டு நூல் என்று தெரியவில்லை. முதல் பக்கமெல்லாம் காணோம்.
> ஆசிரியரின் பெயரும் காணோம். அந்நூலில் 878ம் பக்கம் தந்துள்ள தகவல்--
> இட்டலிக்கு  இட்டவி என்றும் பெயருண்டு.ஆனால் இட்டாவி என்பதுதான் சரியான சொல்----
> காளஞ்சி முனிவர் காலையாகாரத்துக்கு , யாகத்திலிருந்து விழித்ததும்,ஞானதிருஷ்டியாலேயே
> உணர்ந்து உண்டாக்கிய உணவாம்------etc
> கமலம்
https://groups.google.com/g/mintamil/c/z-in7xFO-ko/m/EewNusMTGUgJ
On Dec 25, 11:22 am, 2010: Kamala Devi <saahith...@yahoo.com.sg> wrote:
> கணேசன்
> ஞான் யூ. எஸ் வரவில்லை, கணவரின் உடல்நலம் பயணத்துக்கு ஏற்குமோ என்ற பயத்தில்
> அப்போதைய என்டெ பயணம் கேன்சலாகிவிட்டது
> அந்நூல், யூ.எஸ்.ஸிலிருந்து வந்த மாணவர் சுனில் குட்டனிடம் கொடுத்தனுப்பினேன்.
> நிங்ஙளின் முகவரியும் நிங்ஙள் கொடுத்த தொலைபேசி எண்ணும் கூட அனுப்பினேன்.
> அந்த நூலோடு, மறவர் சரிதம் எனும் நூலும் அனுப்பியிருந்தேன்
> அவர் எனக்கு பின்னர் எழுதவே இல்லை.
> நிங்ஙலும் நன்றி சொல்லி எழுதவில்லை,அப்படியானால் நிங்ஙள் கேட்பது பார்த்தால், --
> மிகவும் கவலையாக உள்ளது.
> கணேசன் , சதயமாயிட்டும் அவர் நிங்ஙளை சந்திக்கவில்லையா?
> என்று கேட்கக்கூட தயக்கமாக உள்ளது
> கவலையுடன் கமலம்
>  http://www.kamalagaanam.blogspot.com

Gowri, w/o Iravatham Mahadevan cooked good idlis.
https://www.thehindu.com/opinion/op-ed/remembering-iravatham-mahadevan/article25600049.ece
Romila Thapar,
"I was startled to discover that he was more knowledgeable about Indian epigraphy and the linguistic aspects of Dravidian and Indo-Aryan than some of the specialists. So we got talking on and off on what he was doing and there were even long telephone calls discussing his theories. This also resulted in a friendship between him and his wife and my mother and myself. He maintained that *Gowri* made the softest idlis and so she did and we would go to their home for an occasional Sunday brunch."

சந்தவசந்தத்தில்,
 “இட்டு அவி , (அதாவது மாவை இட்டு ஆவியில் வேக வை),  இட்டவி, இட்லியாக ஆயிருக்கும்.

நெல்லும் உளுந்தும் நிறைந்த வயலிருக்கக்
கல்லுக் குழவியும் கல்லுரலும் காத்திருக்க
புட்டுகள் பண்ணிய  பாட்டியின் பக்குவத்தில்
இட்லி பிறந்தது இங்கேயே !

இவங்களை இப்படியே விட்டால் ஆங்கிலேயர் அட்லிதான் இட்லியைக் கண்டுபிடித்தார்,
இடாலியின் தயாரிப்பு இட்லி என்றெல்லாம்  சொல்லுவார். (;-)

இலக்கியச் சான்றைத் தேடிப் பார்க்கிறேன்.

எல்லே சுவாமிநாதன். மே 13, 2016.”

தட்டில் ததும்பிடும் சாம்பார் அணைநடுவில்
கெட்டித்தேங் காயரைத்த சட்னியுடன் -- வெட்டவெட்ட
வட்ட வடிப்பஞ்சாய் வந்துவிழுஞ் சூடான
இட்டலிக் குண்டோ இணை.  - பசுபதி

தட்டில் குளமாகச் சாம்பாரும், கெட்டியாய்ச்
சட்டினியெண் ணெய்ப்பொடி சங்கமிக்க  - வெட்டவெட்ட
வட்டமாம் பஞ்சுபோல் வந்துவிழுஞ் சூடான
இட்டலிக் குண்டோ இணை. - பசுபதி

http://madhisudi.blogspot.com/2018/06/0304067.html
சிவன் - இட்டலி - சிலேடை
-------------------------------------------------------------
பொடியோடும் சேருமே பொங்குமா மேலும்
வடிவாகும் ஒத்திருக்கும் பூவை அடிமேலே
ஆகுமே ஆவியுள் நிற்குமே இட்டலி
ஆகுலம்தீர் ஈசன் அறி. - சிவசிவா

இட்டவி யாயினென்? இட்டலி யாயினென்?
தட்டிலே யிட்டபின் தக்கதாம்- தொட்டுக்க
சட்டினி  யும்மணக்கும் சாம்பாரும் வைத்தபின்
இட்டமாய் வெட்டுவோம் ஈண்டு - அசோக்

சட்டினியாய் மூவர்ணம் தட்டிலே அத்துடன்
தட்டின் குழியிலே சாம்பாராம் - ஒட்டிநாம்
உட்கார்ந்தே ஓட்டலில் உண்ணும் ஒருபிளேட்
இட்டிலிக் குண்டோ இணை? --ரமணி, 04/02/2015

ஆவியில் வெந்தெடுத்த ஆரமுதோ? அன்னத்தின்
தூவியோ? மல்லிகையின் தூமலரோ? -நாவினில்
வட்டமிடும் வெள்ளுடை வான்மகளோ? என்றிலங்கும்
இட்டலிக் குண்டோ இணை? - தில்லைவேந்தன்

          சுவையின் சொத்து!
வட்டிலில்    வந்து    பூத்த மல்லிகைப் பூவின் கொத்தோ?
தட்டினில்  தவழு  கின்ற  தண்முழு மதியின் வித்தோ?
பட்டென மென்மை கொண்ட பாற்கடல் விளைந்த முத்தோ?
இட்டலி    என்ற    பேரில் இங்குநம் சுவையின் சொத்தோ?     -- தில்லைவேந்தன்

இட்டலிக்(கு) ஏற்றதுணை இவ்வுலகில் ஏதென்னும்
பட்டிமன்றம் பள்ளியிலே பார்த்ததுண்டு ; நற்சுவை
முட்டும் மிளகாய்ப் பொடிமூழ்த்தும் எண்ணையா ?
சட்டினியா ? சாம்பாரா ? சாற்று.  பசுபதி, 26/06/21

சட்டினியும் வெங்காயச் சாம்பாரும் தோய்த்துண்ணும்
இட்டிலிக் குண்டோ இணை

வட்டமாய் மெத்தென்று மல்லிகைப் பூப்போன்ற
இட்டலிக் குண்டோ இணை

குட்டிகுட்டி  யாய்ச்சாம்பார்  கூடும் குளத்திலமிழ்
இட்டலிக்  குண்டோ இணை

இட்டிரண்டு நாளாயிற் றென்றாலும் உப்புமா
இட்டலிக் குண்டோ இணை

இட்டமுடன் துண்டாக்கி எண்ணையி லேபொரித்த
இட்டலிக் குண்டோ இணை

கொட்டாவி தான்பறக்கக்  கொஞ்சிக் கொடுக்கின்ற
இட்டலிக் குண்டோ இணை (தட்டிலிருந்து கொட்டும் போது சூடாக எழும் ஆவி கொட்டாவி)

கொட்டியெண்ணை  ஊற்றிக் குழைத்தமிள காய்ப்பொடிதோய்
இட்டலிக் குண்டோ இணை

பட்டினிக்குப் பின்னே பலகார மாகவரும்
இட்டலிக் குண்டோ இணை

பொட்டலத்தைத் தான்பிரித்துப் போகும்போ தேதின்னும்
இட்டலிக் குண்டோ இணை

கட்டியவள் வாசனையும்  கைமணமும் கொண்டிலங்கும்
இட்டலிக் குண்டோ இணை.

இட்டவியே மாறியிங்கே இட்டலியே ஆயிற்றாம்
பட்டவியல் ஆய்வின் பயன்.

ஆட்டுரல் தன்னில் அரைத்தமா விட்டிலிக்குப்
போட்டியெதும் உண்டோ புகல்
     - இலந்தை

0 comments: