தமிழ்த்தாய் வாழ்த்து ~ 50 ஆண்டுகளாக அரசாங்க விழாக்களில்.

தமிழில் கடவுள் வணக்கப் பாடல்கள் இலட்சக்கணக்கில் உள்ளன. தமிழணங்கைக் கொற்றவை, கலைமகள், அலைமகள் என்னும் முத்தெய்வங்களாக வணங்கும் மரபை வில்லிபாரதம் தொடங்கி வைக்கிறது. கொங்கர்கோன் வரபதி ஆட்கொண்டான் ஆதரித்த நான்காம் தமிழ்ச்சங்கத்தில்இம்மரபு தோன்றுகிறது. பிறகு வீரசைவர் ஆகிய கருணைப்பிரகாச சுவாமிகள் தமிழ்த்தெய்வ வணக்கத்தைக் காளத்திப் புராணத்தில் பாடியுள்ளார். 
சீகாளத்திப் புராணம் - தமிழ்த் தெய்வ வணக்கம்
----------------------------------------------------------------------------------

மறைமுதற் கிளந்தவாயான் மதிமுகிழ் முடித்தவேணி
யிறைவர்தம் பெயரைநாட்டி யிலக்கணஞ் செய்யப்பெற்றே
யறைகடல் வரைப்பிற்பாடை யனைத்தும்வென் றாரியத்தோ
டுறழ்தரு தமிழ்த்தெய்வத்தை யுண்ணினைந் தேத்தல்செய்வாம்.
                                            ~ துறைமங்கலம் கருணைப்பிரகாசர்


இப்பாடலை முழுவதும் மேற்கோள் காட்டித், தம் படைப்பை மனோன்மணீய ஆசிரியர் தந்துள்ளார். ஐரோப்பியர்களால் ஏற்பட்ட – சர் வில்லியம் ஜோன்ஸ், சென்னை கலெக்டர் பிரான்சிஸ் எல்லிஸ், கால்டுவெல் பாதிரியார் ஆய்வுகள் – மொழியியல் புரட்சியை உள்வாங்கி, பெ. சுந்தரம்பிள்ளையவர்கள் மனோன்மணீயத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துச் செய்தார்.  பல லக்‌ஷம் கடவுள் வணக்கச் செய்யுள்கள் புராணங்கள், பிரபந்தங்கள், பஜனாவளிகள், கீர்த்தனங்கள் எனத் தமிழில் இருப்பினும், சுந்தரனார் பாடல் தனித்தகுதி பெற்றுவிட்டது. தமிழக அரசாங்கம், உலகெங்கிலும் கூடும் தமிழ் மன்றங்களின் விழாக்களில், கடவுள் வாழ்த்தாகச் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து அமைந்து சரியாக 50 ஆண்டுகள் நிறைவுற்றன. அதற்கான அரசாணை 17.6.1970-ல் வெளியானது.
 பாடலின் முழுப்பொருளைச் சைவசித்தாந்தப் பேரா. கி. நல்லபெருமாளின் விளக்கம்,
http://saivasiddanthambasics.blogspot.com/2016/08/blog-post_8.html
சென்னைக் கம்பன் கழகத்தில், பேரா. பர்வீன் சுல்தானா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் பொருளை விவரிக்கிறார். காணொளியில் கேட்கலாம்.

கரந்தைத் தமிழ்ச் சங்கம் பொதுநிகழ்ச்சிகளில் சுந்தரனார் செய்த தமிழ்த்தாய் வாழ்த்தைக் கடவுள்வணக்கமாகப் பாடும் மரபை 1914-ல் ஏற்படுத்துகிறது. இதற்கு, தமிழவேள் உமாமகேசுவரம்பிள்ளை, திருமிகு. இராமசாமி வன்னியனார் போன்றோர் காரணர்கள். கரந்தை தமிழ்ச்சங்கப் பள்ளியின் திரு. ஜெயக்குமார் அவர்களின் ஆய்ந்து 2012-ல் எழுதியுள்ளார்:
கரந்தை தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த தமிழ்த்தாய் வாழ்த்து பிற பொதுநிகழ்ச்சிகளிலும் இடம்பெறலாயிற்று. உதாரணமாக, 1960-ல் நடந்த ‘பாகப்பிரிவினை’ வெற்றிவிழாக் கொண்டாட்டத்தில் டி.எம். சௌந்தரராஜன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியுள்ளார். இப்படி மக்களிடையே பரவிவந்த தமிழ்த்தாய் வாழ்த்து அரசாங்க வாழ்த்தாக, கலைஞர் மு.க.முயற்சியால் மலர்ந்தது,
”‘பாகப்பிரிவினை’ படத்துக்கு அசோகா ஓட்டலில் வெற்றி விழா நடந்தது. பொதுவாக அப்போதெல்லாம் வெற்றி விழாக்களில் இசையமைப்பாளர் வரைக்கும்தான் கேடயம் கொடுப்பார்கள். பாடகர்களைக் கண்டுகொள்வதே இல்லை. பாகப்பிரிவினை வெற்றி விழாவில் அப்பாதான் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடினார். தேசிய கீதம் பாடி முடித்ததும் எல்லோரும் கிளம்ப முனைந்தார்கள்.”
’வாதாபி கணபதிம்’ போன்ற கர்நாடக சங்கீத கீர்த்தனைகள், தெலுங்கு அல்லது தமிழ் இசைப்பாடல்கள் அரசாங்க விழாக்களில் பாடுவது காங்கிரஸ் ஆட்சிக்கால நடைமுறை. அரசாங்க அங்கீகாரம் பெற்ற தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை முன்மொழிந்து, முதலமைச்சர் மு. கருணாநிதி 1970 மார்ச் 10 சர்வதேச மகளிர் தினத்தன்று, சென்னையில் நடைபெற்ற திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் அரசாங்க விழாக்களில் பாடவேண்டும் என அறிவித்தார். அச் செய்தியை வெளியிட்ட ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி:
கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்து அரசவிழாக்களில் முதலில் பாடப்பெறும் என அறிவித்தவுடன் வாகீச கலாநிதி கிவாஜ தாயுமானவர் பாடிய “அங்கிங்கெனாதபடி” என்ற பாட்டைப் பரிந்துரைத்து ஆனந்தவிகடனில் கட்டுரை எழுதினார். சுந்தரனார் பாடல் தேர்வை ஆதரித்துப் பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரை, டாக்டர் மு.வ., சிலம்புச்செல்வர் ம.பொ.சி போன்றோர் எழுதினர். அண்ணா ஆட்சியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வெற்றிகரமாக நடந்தது. சேதுபதி மகாராஜா இந்துசமயம் பற்றி ஆற்றிய சிகாகோ உரைமுடித்து, பாரதம் மீண்டபோது சுவாமி விவேகானந்தர்  நாட்டிய ஜெயஸ்தம்பத்தில் “சத்யமேவ ஜயதே’ என்ற உபநிஷத வாக்கியம் இடப்பெற்றுப் சுதந்திரத்தின் பின் அது தமிழ்நாட்டு அரச குறிக்கோள் வாக்கியம் ஆகியிருந்தது. ’வாய்மையே வெல்லும்’ எனத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. மதறாஸ் பிரெசிடென்சி, தமிழ்நாடு எனப் பெயர்மாற்றம் அடைந்தது. இவற்றின் தொடர்ச்சியாக கலைஞர் மு.க. அறிவிப்பு அமைந்தது எனலாம். சுந்தரனார் தமிழல்லா மொழிகளைப் பற்றிக்கூறும் வரிகள் அரசாங்கப் பாடலில் இடம்பெறவில்லை. இதற்கான சுரதாளக் குறிப்பு (அமைத்தவர்: எம். எஸ். விசுவநாதன்). மோகன ராகத்தில், திஸ்ர தாளத்தில் பாடப்படுகிறது.
இந்திய நாடாளுமன்றத்தில் வங்காள எம்.பி. சமர் குகா என்பவர் தமிழ்நாட்டு அரசு தேர்ந்துள்ள தமிழ்த்தாய் வாழ்த்து இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்ற கேள்வியையும், விவாதத்தையும் எழுப்பினார். சமர் குகா நேதாஜியுடன் இருந்தவர். அப்போதைய உள்துறைத் துணைமந்திரி கே (கூகலூர்) எஸ். இராமசாமி இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது அல்ல என்று பதில் அளித்தார்.
அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சிறப்பைக் காட்டும் கொடியுண்டு. இந்தியாவில், மாநில கீதங்கள் போல, மாநிலக்கொடிகளும் அமையலாம்.

கம்பன் கழகம் சமைத்த தமிழ்த்தாய் திருவுருவம்:
கம்பன் கழகம் அமைத்த கம்பன் அடிப்பொடி சா. கணேசன் காரைக்குடியில் தமிழ்த்தாய் கோவில் அமைத்துள்ளார். ‘திருக்குறள்’ அழ. இராம்மோகன் நினைவுக் கூட்டத்திற்குச் சென்று, பின்னர் காரைக்குடியில் இக்கோயிலுக்கும் சென்றிருந்தேன். வினைதீர்த்தான் வந்திருந்தார்கள். கம்பன் கழகத்தை 1939-ல் சா. கணேசன் தொடங்கினார். சமைதல் - பெண் சமைந்துவிட்டாள் எனக் கொங்குநாட்டில் செய்யும் சீருக்கு தெருட்டிச்சீர் என்ற பெயர். சங்ககாலப் பெயர் இது. சமையம் என்னும் தமிழ்ச்சொல் ஸமயம் என்று வடமொழியில் வழங்குகிறது. இப்போது தமிழ்நாட்டு அரசியலில் தமிழ்த்தாய்ச் சமயம் பெரும்பங்கு வகிக்கிறது. தமிழ்த்தாய்க்கு ஓருருவைச் சமைத்துத் தந்தவர் காரைக்குடி கம்பன் அடிப்பொடி ஆவார்கள். அதனை இங்கே பார்ப்போம்.

தமிழ்த்தாய் தாமரை மலர் மீது அமர்ந்து நான்கு கைகளில் முறையே ஜபமாலை, ஓலைச்சுவடி, தமிழ்ச்சுடர் மற்றும் கருங்கோட்டு யாழ் ஏந்திக் காட்சித் தருவதாக வடித்திருக்கிறார்கள். செங்கோடு நேரான வீணைத்தண்டு. கம்பன் அடிப்பொடி சா. கணேசன் காரைக்குடியில் கம்பன் கழகம் தொடங்கித் தமிழ்த்தாயின் வடிவத்தை அழகுற, நுட்பமாக அமைத்தவர்களில் முதன்மையானவர்,  1941-ல் காரைக்குடி கம்பன் கழகம் அச்சிட்ட தமிழ்த்தாய் ஓவியம் காண்க [1]. பின்வந்த ஓவியங்கள் பலவற்றையும் சுமதி ராமசாமியின்  புத்தகத்தில் காணலாம். நேர்கோடாக உள்ளது செங்கோட்டியாழ். ஆங்கிலத்தில் Stick Zither என்பர். சிலப்பதிகாரத்தில் பார்வதி நோக்க, சிவபிரான் செங்கோட்டியாழ் மீட்டுவதாகச் சொல்லியிருக்கிறது. கத்திரி என்றும், ஒலிக்குறிப்பால் கொடுகொட்டி/கிடுகிட்டி என்றும் அறியப்படும் தாளக்கருவியும், மகதிவீணை என்னும் செங்கோட்டியாழின் வகையும்  இரு கைகளிலும் லயம், சுருதியின் சின்னங்களாக வைத்திருப்பவர் நாரத முனிவர், நாரதர், தும்புரு என்னும் பெயர்கள் த்ராவிட பாஷையின் நார், தும்பை என்னும் பத்தர் இவற்றால் அமைந்தவை. கருங்கோடு என்பது எருமையின் கொம்பு போல் வளைந்த தண்டு. கருங்கோட்டியாழுடன் தமிழ்த்தாய் ஓவியம். கருங்கோட்டி யாழில் சற்றே வளைந்த stick zither வடிவம் காண்க. மெட்டு - Frets on this curved veena-zither can be seen in the painting. Harp வடிவமாக கருங்கோட்டியாழ் அமைதல் உண்டு. பல பழைய சிற்பங்களில் காணலாம். ஆனால், தமிழ்த்தாய்க்கு அமைந்த தலைசிறந்த முதல் சித்திரத்தில் கருங்கோட்டியாழ் zither  ஆக இருப்பதால் மடியில் வைத்து ஒருகையால் மீட்டி, மலைமகளின் ஓர் வடிவாகிய கலைமகளாய் ஜபமாலை, ஏட்டுச்சுவடி தாங்கி அமர்ந்துள்ளாள் தமிழ்த்தாய். வெள்ளைக் கலையுடுத்தி, வெண்டாமரையில் திருவடிக் கமலத்தை வைத்திருக்கிறாள் அன்னை. Harp ஆக கருங்கோட்டியாழை அமைத்தால், இருகைகள் அதை மீட்டத் தேவை என்பதால் கம்பன் அடிப்பொடி அவர்கள் கோவில் சிற்பங்களிலும், தமிழறிஞர்கள் விபுலானந்த அடிகள், ரசிகமணி டிகேசி, கோவைகிழார், கு. அருணாசலக் கவுண்டர், பக்ஷிராஜையங்கார், நீதிபதி மகராஜபிள்ளை, ... போன்றோருடன் கலந்து தெரிவுசெய்த வடிவம் இது. எருமைக் கொம்பைக் கொற்றவை சிந்துகாலத்திலேயே அணிந்திருக்கிறாள். கவுரி என்ற பெயர் இதனால் அமைந்ததாகும். கலித்தொகை என்னும் சங்க நூலில், முல்லைக்கலிப் பாடல்களில் திருமண வர்ணனையில், எருமைப் பெடையின் கொம்பை வைத்து வழிபாடு இயற்றிக் கலியாணச் சீர்கள் நடைபெற்றதாக உள்ளது. நெய்தற் திணைப் பாடல்களில், மீனவர்கள் வருணனின் அமிசமாக, சுறா மீனின் கொம்பை வைத்து வணங்கினர் என்னும் சங்க காலச் செய்தியுடன் ஒப்பிடத்தக்கது. நீலகிரி மலைகளில், தோடர்கள் வாழ்விலும் எருமைக் கொம்புக்கு மிக முக்கியத்துவம் உண்டு (தோடர் பாடல்கள், பேரா. எமனோ தொகுப்பு). Kavari in Tirukkuṟaḷ and Sangam Texts:  Dravidian word for Gauṛ bison and Tibetan yak, http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html

கலைஞர் (நெஞ்சுக்கு நீதி, முத்துக் குளியல் (2-ம் தொகுதி), கிவாஜ கட்டுரை போன்றன தேடுவோம். Muttukkuiyal, Volume 2, Kalaiñar Mu Karuṇāniti. Pūmpukār Patippakam, 2000.

"அறிஞர் அண்ணா அவர்களுடைய மறைவிற்குப் பிறகு நான் 75-க்கு முன்பு முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த நேரத்தில், நம்முடைய அரசு விழாக்களிலே பாடுவதற்குத் தமிழ்த்தாய் வாழ்த்து ஒன்று தேவை என்று தேடிப் பிடித்து மனோமணீயம் சுந்தரனார் எழுதிய “நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்” என்கின்ற  அந்தப் பாட்டைத் தேடித் தந்து, விஸ்வநாதன் அவர்களிடத்திலே கொடுத்து, இதற்கு மெட்டமைத்துத் தரவேண்டுமென்று நான் கேட்டபோது, 26 விதமான பண்களை, அதாவது மெட்டுக்களை அவர்கள் அமைத்துக் கொடுத்தார்கள். அதிலே இறுதியாக இந்தப் பண்தான் நன்றாக இருக்கிறது என்று தேர்ந்தெடுத்து அதைப் பாடியவர்கள் - இங்கே வீற்றிருக்கின்ற மறைந்த தியாகராஜ பாகவதரை என்றென்றும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்ற டி.எம். சௌந்தரராஜன் அவர்களும், சுசீலா அவர்களும் ஆவார்கள்.” (மதுரையில் நடந்த டிஎம்எஸ் விழாவில் மு.க.)

தமிழ்நாட்டின் அரசாங்கத்தின் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஓர் அழகிய மொழிபெயர்ப்பு (புனரபி பாரதி, 1993):

Anthem to Mother Tamil
------------------------
The earth is a maiden draped
in a sea-sari of surrounding water:
This stretching sub-continent
is her gentle, sublime face.
The Deccan plateau
her compact, crescent forehead,
and the fabled Dravidian land in it,
the sacred vermilion spot she wears.
Mother Tamil! There you were
as that sweet smell of vermilion
spreading in every direction,
and your fame brought joy
to people everywhere.
Ancient spirit! You are still here.
Your splendid youth still endures.
Struck by this miracle,
we forget everything and remember
only to offer you worship and chant:
Greetings! Greetings! Greetings!

              Translated by Punarapi Bharathi - 1993.


நா. கணேசன்
[1]  பாரதமாதா வடிவ உருவாக்கமும், பாரதியாரும்
http://nganesan.blogspot.com/2009/10/popular-prints-bhaaratamata.html


(2) Kamban Kazhakam, started by Kamban Adippodi S. Ganesan in April 1939.
 https://www.thehindu.com/news/cities/chennai/Focus-on-Kamban-poet-extraordinaire/article16302761.ece
https://www.thehindu.com/news/national/tamil-nadu/77yearold-kamban-kazhagam-becomes-a-registered-body/article7401374.ece
https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/the-kamban-dream/article4484453.ece

(3) தமிழரசு, தமிழ்நாட்டு அரசாங்க இதழில் அச்சான தமிழ்த்தாய் வாழ்த்தின் சுரதாளக் குறிப்பு:
















3 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பற்றிய ஒரு பறவைப்பார்வையை அறிந்தேன். நன்றி.

தமிழ்ப்பூ said...

தமிழ்த்தாய் வாழ்த்தின் பின்னணியில் எத்தனை அரிய செய்திகள்! அறியத் தந்தமைக்கு நன்றி.

தமிழ்ப்பூ said...

அரிய செய்திகள்! அருமை!