மன்னிப்பு - தெலுங்கில் இருந்து வந்த சொல்

நிரஞ்சன் பாரதி கேட்டிருந்தார்:
2018-02-27 18:01 GMT-08:00 Niranjan Bharathi <niranjanbharathi@gmail.com>:
>
> வணக்கம் ,
> அண்மையில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் "மன்னிப்பு" என்பது உருதுச் சொல் என்று கூறப்பட்டிருந்தது .
> அப்படியெனில் அதற்கு நிகரான தூய தமிழ்ச்சொல் என்ன ?
>
> அன்புடன் ,
> நிரஞ்சன்

மன்னிப்பு உர்துச்சொல் அன்று. நல்ல திராவிடமொழிச் சொல் தான்.

மாப்பு என்பது அறபி/உர்துச் சொல் மாபி என்கிறது சென்னைப் பேரகராதி.
மாப்பு² māppu, n. < See மாபி. Colloq.
மாபி māpi, n. < Arab. muāf. Excuse, pardon; மன்னிப்பு. (C. G.)
மாபிசாட்சி māpi-cāṭci , n. < மாபி +. Approver, king's evidence; உடந்தைக்குற்றவாளி யாய் மன்னிப்புக்குரிய சாட்சியாள். (C. G.)

பொறை உடமை - திருக்குறளில் உள்ளது.
பொறை இரத்தல் = Pardon, to excuse எனலாம்.
குறை இரத்தல் = to petition for relief, குறை தீர/நிவாரண விண்ணப்பம்.

பொறுதி அருள்க என்றும் சொல்லலாம்.
பொறுதி poṟuti, n. < பொறு-. 1. Patience, forbearance; பொறுமை. மிகவும் பொறுதியுள்ள வன். (W.) 2. Pardon, forgiveness; மன்னிப்பு. (W.) 3. Indulgence, levity; இளக்காரம். (J.) 4. Suspension of business; ஓய்வு. (J.) 5. Slowness, deliberation, delay; தாமதம். (J.)

---------------------------

மய்யம்/மையம் என்னும் வடசொல் தமிழில் இருப்பது போலவே, கமை என்றசொல் பொறை என்பதற்குப் பல காலமாகத் தமிழில் வழங்கிவருகிறது. கமை < க்ஷமா. க்ஷமிக்கவேண்டும் கமை (=பொறை) ஆழ்வார்களும், நாயன்மார்களும், கம்பனும் அடிக்கடி பயன்படுத்தும் சொல். இப்பயன்பாடுகளைத் தொகுக்கலாம். க்ஷமா - இதற்கான வினைச்சொல் க்ஷமித்தல். இதனை ஆழ்வார் பாசுரங்களுக்கான மணிப்பிரவாள உரைகளிலே நிறையக் காணலாகும். உ-ம்: ராமாநுஜ நூற்றந்தாதிக்கான பழைய உரையில் பார்க்க,

கோலார் மாவட்டம் குருதுமலைக் கோவில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது.
சோமேசுவரர் - க்ஷமதாம்பாள்.
க்ஷமதாம்பாள் = பொறுத்தாள்வாள் என்பது அம்மன் பெயர்.
க்ஷமிக்கவேண்டும் - என்பதுபோல.

குருதுமலை குருந்து என்னும் புதரால் பெற்றபெயர் ஆகலாம். குருந்த நீழலில் திருப்பெருந்துறையில் ஞானாசிரியனை மாணிக்கவாசகர் சந்தித்தார்.

திருமலை எறிவேன் எனும் அவுணனை, "ஓ! சிவசிவ! கமியாய்" எனுமாறு திருவிரல் நுனியால் அழவிடும் அரனே - கயிலைமலையை வீசியெறிவேன் என்று வந்த இராவணன், “ஓலம்! சிவசிவ! என் குற்றத்தைப் பொறுத்தருளாய்" என்று அழுது தொழும்படி, உன் திருவடியின் ஒரு விரல் நுனியை ஊன்றி அவனை நசுக்கி அழவைத்த ஹரனே; (கமித்தல் - மன்னித்தல்; குற்றம் பொறுத்தல்);

க்ஷமித்தருள்க/கமித்தருள்க என்றும் Pardon, to excuse என்பவற்றுக்குப் பாவிக்கலாம். 7-ஆம் நூற்றாண்டிலே அப்பர் கமித்தருளலைக்
கையாள்கிறார்.
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்விதன்னில்,---அவி உண்ண வந்த இமையோர்,
பயம் உறும் எச்சன், அங்கு மதியோனும், உற்றபடி கண்டு நின்று பயம்ஆய்---
அயனொடு மாலும், எங்கள் அறியாமை ஆதி, கமி! என்று இறைஞ்சி அகல,
சயம் உறு தன்மை கண்ட தழல்வண்ணன், எந்தை, கழல் கண்டுகொள்கை கடனே.
(கமி- என்னும் வினைச்சொல்லைத் திருப்புகழ், பிரபந்தங்கள், தலபுராணங்கள் எல்லாவற்றிலும் துழாவணும்.)

“"பிரபோ! க்ஷமிக்க வேண்டும்...." "போனது போகட்டும். மாதா உன்னை க்ஷமித்து விட்டாள். ” (பார்த்திபன் கனவு).
““குருதேவரே! மன்னிக்க வேண்டும்; அபசாரத்தை க்ஷமிக்க வேண்டும்! நம்மாழ்வாரின் பாசுரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளாமையினால் வீண் சண்டைகளில் காலங்கழித்தேன். ” (பொன்னியின் செல்வன்)
“அவனை க்ஷமித்து விட்டுவிட்டார்.(தெய்வத்தின் குரல்)

-----------------------------------

மன்னிப்பு - தெலுங்கில் இருந்து வந்த சொல்:

இனி, மன்னிப்பு என்னும் சொல்லின் பொருளும், தெலுங்கில் இருந்து அதன் தோற்றத்தையும் ஆராய்வோம்.
வள்ளலார் ’அபராத மன்னிப்பு மாலை’ பாடினார். 19-ஆம் நூற்றாண்டு வாக்கில் தமிழ் பத்திரிகைகளில், நீதிமன்றங்களில்
மன்னிப்பு அறிமுகப்படுத்தியுள்ளனர். 1842 - யாழ்ப்பாண அகராதியில் காண்கிறோம் (அமெரிக்கன் மிஷன் பிரஸ்).

மன்றித்தல் = தண்டித்தல். இதனை தேவாரத்தில் காணலாம். திரிபுராதிகளை மன்றித்தல் = தண்டித்தல்.
”நின்ற மதிலரை மன்றியும்
punishing the acurar in the forts who stood without fear” (வி. மு. சுப்பிரமணிய ஐயர்).

மன்றித்தல் - தண்டித்தல்:  (மன்றி விடல் - பழமொழி நானூறு).
மன்றித் தான் ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை யன்றே - சம்பந்தர்.
மன்றிப்பு = தண்டிப்பு. இது வேறு, மன்னிப்பு வேறு என்பது தெளிவு.

See:

C. P. Brown's Telugu-English Dictionary:
మన్నీడు, మన్నియడు (p. 953) mannīḍu, manniyaḍu or మన్నియ mannīḍu. [Tel. మన్ను + ఈడు.] n. A lord, a chieftain, ప్రభువు, మన్నెపుదొర. "మాళనదేశంబు మన్నీలగొంగ." Pal. 52. "ఎన్నడుగుడువకకట్టక. తన్నేమరికూర్చుధనము ధరలో నెపుడున్, మన్నీలకు జూదరులకు, కన్నెలకునుబోవుచుండుగదరా." Sumati §. 49. 
మన్నన (p. 953) mannana or మన్నిక mannana. [Tel.] n. Respect, regard, grace, favour, సమ్మానము, గౌరవము, గొప్పచేయడము. "మనుజనాధునివలన మన్ననలుగనిరి." V. P. ii. 18. adj. Dear, beloved. ప్రియమైన. "పాలవెల్లికిన్ మన్నన యన్నునైతిపసిమంతనపుం దెరయైన తొయ్యలిన్." R. v. 17. మన్నించు manninṭsu. v. a. To respect, మన్ననచేయు, గొప్పచేయు, సమ్మానించు. To excuse, forgive, to pardon. నా తప్పు మన్నించవలెను I pray you to excuse my fault. మన్నింపు mannimpu. n. Respect. గౌరవము. Forgiveness, క్షమాపణ. వానికి దెబ్బలు మన్నింపుచేసినారు they excused him the flogging, i.e., he was not punished. 
==
mannīḍu, manniyaḍu (p. 953) mannīḍu, manniyaḍu or manniya mannīḍu. [Tel. mannu + īḍu.] n. A lord, a chieftain, prabhuvu, mannepudora. "māḷanadēśaṁbu mannīlagoṁga." Pal. 52. "ennaḍuguḍuvakakaṭṭaka. tannēmarikūrcudhanamu dharalō nepuḍun, mannīlaku jūdarulaku, kannelakunubōvucuṁḍugadarā." Sumati §. 49. 
mannana (p. 953) mannana or mannika mannana. [Tel.] n. Respect, regard, grace, favour, sammānamu, gauravamu, goppacēyaḍamu. "manujanādhunivalana mannanaluganiri." V. P. ii. 18. adj. Dear, beloved. priyamaina. "pālavellikin mannana yannunaitipasimaṁtanapuṁ derayaina toyyalin." R. v. 17. manniṁcu manninṭsu. v. a. To respect, mannanacēyu, goppacēyu, sammāniṁcu. To excuse, forgive, to pardon. nā tappu manniṁcavalenu I pray you to excuse my fault. manniṁpu mannimpu. n. Respect. gauravamu. Forgiveness, kṣamāpaṇa. vāniki debbalu manniṁpucēsināru they excused him the flogging, i.e., he was not punished. 

மன்னு-தல், மன்னன், ... என்ற சொற்களுக்கு மரியாதை, கௌரவம் என்ற பொருள். மன்னிம்பு/மன்னிஞ்சு என்று பொருள் விரிந்து “Pardon, to excsue" என்று தெலுங்கிலும், அதில் இருந்து மன்னிப்பு தமிழிலும் உருவாகியுள்ளது.

மன்னிம்பு எனத் தெலுங்கில். அடிப்படையில் மரியாதை செய்தல் எனப் பொருள்.
மரியாதை செய்க என்னும் தொடர் மன்னிஞ்சு என தெலுங்கில் pardon, to excuse என விரிவாகி உள்ளது.
இது தமிழிலும் பரவிற்று.  தியாகராஜர் கீர்த்தனை:


யேசுதாஸ் “மன்னிஞ்சும் அய்யா” எனப் பாடுகிறார். “மன்னிம்புமய்யா” என்றும் பாடுகிறார்கள்.
இதைப் பார்த்து, வள்ளலார் ’அபராத மன்னிப்பு மாலை’ பாடியுள்ளார்.

தெலுங்கில் ”மரியாதை, கௌரவம் செய்க” என மன்னிப்பு செய்தலுக்குப் பொருள். Honorable discharge என்று அமெரிக்கன் மிலிட்டரியில் தொடருண்டு.


நா. கணேசன்

ஸ்ரீபுராணக் கருத்தை வெளிப்படுத்தும் அரிய சமணச் சிற்பம்

கரூர் அரவக்குறிச்சியில்
ஸ்ரீபுராணக் கருத்தை வெளிப்படுத்தும் அரிய சமணச் சிற்பம் கண்டுபிடிப்பு

முன்னுரை
அண்மையில், அரவக்குறிச்சியைச் சேர்ந்த சுகுமார் பூமாலை என்னும் வரலாற்று ஆர்வலர் தம்முடைய ஊர்ப்பகுதியில் சமணர் குகைத்தளம், சமணச் சிற்பம் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளார். செய்தியைக் கோவை கலவெட்டு ஆராய்ச்சியாளர் துரை.சுந்தரம் அவர்களுக்குத் தெரிவித்தார். சுகுமார் பூமாலையோடு சேர்ந்து கலவெட்டு ஆராய்ச்சியாளர் துரை.சுந்தரம் ஆய்வு செய்ததில் அறியப்பட்ட செய்திகள் இங்கு தரப்பட்டுள்ளன.
சமணக்குன்றும் முருகன் கோயிலும்
அரவக்குறிச்சி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் கணக்குவேலம்பட்டி. இவ்வூரில் மொட்டையாண்டவர் திருக்கோவில் என்று மக்களால் அழைக்கப்படும் முருகன் கோயில் அமைந்துள்ளது. கோயில் அமைந்துள்ள இடம் ஒரு சிறிய கரட்டுக் குன்று இருக்குமிடம் ஆகும். குன்று நோக்கியுள்ள சிறிய ஏற்றப்பாதையில் மேலே செல்லுமுன் சமதளத்திலேயே  மிகப்பெரியதொரு பாறை காணப்படுகிறது. மதுரை-ஆனைமலை நரசிங்கப்பெருமாள் கோயிலில் அமைந்துள்ள பாறை போலச் சரிந்து பெரிய சுவர் போலத் தோற்றமளிக்கிறது. பாறையில் சற்றேறத்தாழ ஏழு அடி உயரத்துக்கு மூன்று சமணச்சிலைகள் ஒரே இடத்தில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மூன்று சிற்பங்களும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றன. நடுவில் ஓர் ஆண் உருவமும், அதன் இரு பக்கங்களிலும் இரு பெண் உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. நடுவில் ஆணும், பக்கங்களில் இரு பெண்களும் காணப்படுவதால், சமண வரலாறு அறியாத கிராமத்து மக்கள், இந்தச் சிற்பத் தொகுதியை முருகன், வள்ளி, தேவயானை ஆகிய கடவுள்களாகக் கருதி முருகன் கோயில் எனப் பெயரிட்டு வழிபாடு செய்து வருகின்றனர். 
சமணச் சிற்பங்கள்
சிற்பங்களை ஆய்வு செய்ததில், இச்சிற்பங்கள் சமணச் சிற்பங்கள் என்பது புலப்பட்டது. நடுவில் இருக்கும் ஆண் சிற்பத்தின் தலைக்கு மேல் சமணத்துக்கே உரிய முக்குடை அமைப்புக் காணப்படுகிறது. சமணத் தீர்த்தங்கரர் சிலைகளில் இது போன்ற முக்குடை அமைப்பைக் காணலாம். இங்கு, சிற்பத்தில் ஆடை அணியாத சமணத்துறவியின் நின்ற கோலமும், அவரின் தலைக்குமேல் காணப்படும் முக்குடை அமைப்பும் இச் சிற்பம் ஒரு சமணத் தீர்த்தங்கரரின் சிற்பம் என்பதை உறுதிப்படுத்துகிறது.
சிற்பங்களில் இருப்போர் யார்?
1) பாகுபலியும் அவரின் சகோதரிகள் இருவரும்
சமணத் தீர்த்தங்கரரின் இரு பக்கங்களிலும் இரு பெண்ணுருவங்கள் உள்ளன. சமணத்தில் இரு பெண்கள் குறிப்பிடத்தக்கவர்கள். சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் ஆதி நாதர் என்னும் ரிஷபதேவர் ஆவார். இவர் ஒரு அரசர். இவருக்கு மக்கள் இரு மகன்களும், இரு மகள்களும். பாகுபலி மூத்த மகன்; பரதன் இளைய மகன். பிராமி, சுந்தரி இருவரும் மகள்கள். ஆட்சியை மகன்கள் இருவருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு ரிஷபதேவர் துறவறம் மேற்கொள்கிறார். சக்கரவர்த்தியாகும் எண்ணத்தில் பரதன், பல நாட்டு அரசர்களை வெல்கிறார் உடன்பிறந்த பாகுபலியையும் கொல்ல நினைக்கிறார். மனம் வெறுத்த பாகுபலி, தன் பங்குக்கான ஆட்சிப்பரப்பையும் உடன்பிறந்தானுக்குத் கொடுத்துவிட்டுக் காட்டுக்கு ஏகித் தவத்தில் ஈடுபடுகிறார். சகோதரிகள் பிராமி, சுந்தரி ஆகிய இருவரும், தவத்தைக் கைவிடுமாறு பாகுபலியை   வேண்டிக்கொள்கின்றனர். இந்ந்கழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, நடுவில் பாகுபலியும், அவரது பக்கங்களில் அவரது சகோதரிகளும் நின்றுகொண்டிருப்பது போன்ற தோற்றத்தில், வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பல்வேறு இடங்களில் சமணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இராஜஸ்தானில் ஜோத்பூர், கருநாடகத்தில் அய்ஹொளெ, எலோராக் குடைவரை, பாதாமிக் குடைவரை, தமிழகக் கழுகுமலை ஆகிய இடங்களைக் குறிப்பிடலாம்.
மேற்குறித்த சமணச் சிற்பங்களின் தோற்ற அமைப்பை ஒப்புநோக்கிப் பார்க்கையில், அரவக்குறிச்சியில் இருக்கும் சமணச்சிற்பத்தின் நடுவில் இருப்பவர்பாகுபலி என்னும் சமணத்துறவி என்பதாகவும், அவருக்கு இரு பக்கங்களிலும் நிற்கும் பெண் சிற்பங்கள் பாகுபலியின் சகோதரிகளான பிராமி, சுந்தரிஆகியோர் என்பதாகவும் கருத நேர்கிறது.. 
சிற்பங்களில் இருப்போர் யார்?

2) ரிஷபதேவரும் அவரின் மகள்கள் இருவரும்
ஆதிநாதர் என்னும் ரிஷபதேவர், சமணத்தில் முதலாம் தீர்த்தங்கரர் எனப்பார்த்தோம். தீர்த்தங்கரர் என்னும் உயர்நிலை பெற்ற இருபத்து நான்கு பேரின் சிற்ப,ஓவிய உருவங்களுக்கு அடையாளமாக அவர்களின் தலைக்கு மேல் முக்குடை அமைப்புக் காணப்படும். பார்சுவ நாதருக்கு மட்டும் முக்குடையும் அதன்கீழே அவரைக் காக்கின்ற நாகமும் தலைமேல் காட்டப்பட்டிருக்கும். பாகுபலி தம் தந்தையாகிய ரிஷபதேவரைப் பின்பற்றித் துறவறம் பூண்டு தனிப்பெரும் சிறப்பைச் சமணத்தில் பெற்றிருப்பதால் அவருக்கு ஒரு குடை காட்டப்படுவதுண்டு. ஆனால், அவர் தீர்த்தங்கரர் அல்லர் என்னும் காரணத்தால் அவருக்கு முக்குடை இராது. பாகுபலியின் நீண்ட தவம் காரணமாக அவர் உடலைச் சுற்றிக் கொடிகள் படர்ந்தமையால், பாகுபலியின் சிற்ப உருவங்களில் ஆடையற்ற அவரது உடலைச் சுற்றிக் கொடிகள் தோன்றுமாறு சிற்ப வேலைப்பாடு  காணப்படும். இந்த அமைப்பு, மாறா அமைப்பு. எனவே, அரவக்குறிச்சியில் இருக்கும் சமணச் சிற்பம், முக்குடையோடு இருப்பதாலும், சிற்பத்தின் உடலில் சுற்றிய கொடிகள் இன்மையாலும் தீர்த்தங்கரரான ரிஷபதேவரே என்று கருத நேர்கிறது. மேலும், ரிஷபதேவர் தம் மகள்களுக்கு எண்ணும் எழுத்துமாகிய கல்வியைப் புகட்டியவர் என்று ஸ்ரீபுராணத்தில் குறிப்பிடப்பெறுகிறது. பெண் கல்வி என்பது சமணர் போற்றும் ஒரு கருத்து. பெண் கல்வியின் மேன்மையையும், அருமையையும் தமிழ்ச் சமணர் போற்றியதன் குறியீடாகவே சமணரான இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் காட்டியுள்ள கவுந்தியடிகளைக் கொள்ளலாம். ரிஷபதேவர், தம் மகள்களுக்குக் கல்வி கற்பிக்கையில், பிராமிக்குத் தம் வலக்கையால் எழுத்தையும், இடக்கையால் எண்ணையும் (கணிதத்தையும்) கற்பித்ததாக ஸ்ரீபுராணம் குறிப்பிடுகிறது.
ஸ்ரீபுராணத்திலிருந்து சில வரிகள்
” பகவான் ....................   ஸ்ரீஅஸ்தமிரண்டுனாலும் ஒரு முறையிலேயே எழுத்தினையும் எண்ணையும் அவர்கட்குக் காட்டியருளினர்.
அங்ஙனம்காட்டி அவருள் பிராம்மியென்னும் பெண்ணிற்கு தக்ஷிண அஸ்தத்தால், ‘சித்தந்நம:’ என்றெடுத்துக் கொள்ளப்பட்ட மங்களத்தையும்........... அக்ஷரமாலையினையும்,சம்யோகாக்ஷரங்களது பிறப்பினையும் உபதேசித்தனர்.
சுந்தரியென்னும் பெண்ணிற்கு வாம அஸ்தத்தினால் ஒன்றுபத்துநூறுஆயிரமுதலாக ஒன்றிற்கொன்று பதின்மடங்காகிய கணித ஸ்தானங்களையும். பெருக்குதல்ஈதல் முதலாகிய ஷோடச பரிகர்மங்களையும் உபதேசித்தருளினார். இங்ஙனம் ஸ்வாமி தமது தக்ஷிண அஸ்தத்தினால் எழுத்துக்களை உபதேசித்ததால் எழுத்துக்கள் வலமாக வளர்ந்தன; வாமஹஸ்தத்தினால் எண்களை உபதேசித்தருளியதால் எண்களது ஸ்தானம் இடமாக வளர்ந்தது. 
தமிழ் எழுத்துகள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டன;எழுதப்படுகின்றன. தமிழில் எண்கள் வலமிருந்து இடமாகச் சுட்டப்பட்டன. இன்றும் எண்களின் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் ஆகிய பகுப்புகளில், வலப்புறம் முதலிடத்தில் ஒன்று, அடுத்து, வலப்புறத்திலிருந்து இடப்புறமாகப் பத்து, நூறு, ஆயிரம் என எண்கள் எழுதப்படுவது ஆராயத்தக்கது. தொல்காப்பியத்திலும், எழுத்து இடமிருந்து வலப்புறமாகவும், எண்கள் வலமிருந்து இடப்புறமாகவும் படிக்கப்படுதலைப் பற்றிய குறிப்பு உள்ளது. அரவக்குறிச்சியின் சமணச் சிற்பத்தில், தீர்த்தங்கரருக்கு வலப்புறம் நிற்கும் (ஒளிப்படத்தைப் பார்க்கும் நம் பார்வையில் அல்ல) பிராமி தன் வலக்கையை எழுதும் பாணியில் உயர்த்தி வைத்துள்ளதையும், இடக்கையை, எழுதப்படுகின்ற ஏட்டினை ஏந்தும் பாணியில் தாழ்த்தி வைத்துள்ளதையும் காணலாம். இதைப் பிராமி என்பவள் எழுத்தைக் கற்றதைக் குறிப்பால் உணர்த்தும் குறியீடாகக் கொள்ளலாம். தீர்த்தங்கரருக்கு இடப்புறம் நிற்கும் சுந்தரியின் சிற்பத்தில், சுந்தரி தன் இடக்கையை உயர்த்தியும், வலக்கையைத் தாழ்த்தியும் வைத்துள்ளதைக் காணலாம்.
சிற்பத்தொகுதியில் நடுவில் இருப்பவர் ரிஷபதேவரா? அல்லது பாகுபலியா?
கீழ்க்காணும் தரவுகள் ஆய்வுக்குரியன.
1         ஆண் சிற்பத்தில் முக்குடை காணப்படுகிறது.
2      ஆண் சிற்பத்தில் உடலில் கொடிகள் காணப்படவில்லை.
3      பெண்கள் இருவரின் கைப்பாணி அல்லது முத்திரை, ஆதிநாதர்  எண்ணும் எழுத்தும் கற்பித்த மகள்களாகச் சுந்தரி, பிராமி இருவரைக் குறிப்பதாக உள்ளது.
மேற்காணும் தரவுகள், அரவக்குறிச்சியில் இருக்கும் சமணச் சிற்பம் ஆதிநாதருடையது என்னும் முடிவை நோக்கி நம்மை நகர்த்துகின்றன. இரு வேறு கருதுகோள்களையும் ஆய்வறிஞர்கள் சிலர் இன்னும் தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றனர். ஆய்வு என்பது ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் முடிந்து போவதல்ல. மீளாய்வுகள் தொடரும் நிலையில், நாம் எட்டிய (அல்லது நாம் எட்டியதாக எண்ணிய ) முடிவுகள் மாறக்கூடும். தமிழகத்தில், ஆதிநாதர், மகள்களான பிராமி, சுந்தரி ஆகியோர்  இணைந்த அரிய சிற்பம் இது ஒன்றே எனக் கருதலாம். இவ்வரிய சமணச் சிற்பம் கொங்குப்பகுதியில் அமைந்துள்ளது என்பது கொங்கு நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
சமணச் சிற்பத்தின் காலம்
சமணம், தமிழகத்தில், குறிப்பாகப் பாண்டிநாட்டிலும் கொங்குப்பகுதியிலும் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரை செல்வாக்கோடு இருந்துள்ளது என்று வரலாற்றுக் குறிப்புகள் வாயிலாக அறிகிறோம். இதன் அடிப்படையில், இச் சமணச் சிற்பத்தின் காலத்தைக் கி.பி. 12-ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாகக் கொண்டு செல்லலாம். சிற்பத்தின் பழமையான ஒளிப்படம் ஒன்று, மிகுதியான சிதைவுகளைத் தெளிவாகக் காட்டுகிறது. ஒட்டு மொத்தச் சிற்ப அமைதியையும் சமணத்தின் மறுமலர்ச்சிக் காலத்தையும் கருத்தில்கொண்டால், சிற்பத்தின் காலம் கி.பி. 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டு எனக் கருதக் கூடுதல் வாய்ப்புள்ளது.
முடிவுரை
தமிழகத் தொல்லியல் துறையினர் இச் சிற்பத்தை மீளாய்வு செய்து மேலும் புதிய செய்திகளை வெளிக்கொணர ஆவன செய்யவேண்டும்.

நன்றி: சுகுமாரன் பூமாலை, புங்கம்பாடி

----------------------------------------------------------------------------
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

வா.செ.குழந்தைசாமி நினைவேந்தலும் தமிழ் மேம்பாட்டு விருது அளிப்பும்

கவிஞர் குலோத்துங்கன் (பேரா. வா. செ. குழந்தைசாமி) நாடறிந்த கல்வியாளர், நல்ல கவிஞர். அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நாளை அண்ணா பல்கலை விவேகானந்தர் அரங்கில் நிகழ உள்ளது. சென்னையில் உள்ள தமிழார்வலர்கள் திரளாகக் கலந்து வாழ்த்த வேண்டுகிறோம். கவிஞர் குலோத்துங்கன் இணையப் பல்கலை முதல் தலைவர் ஆகவும், இந்திய அரசு தமிழைச் செம்மொழி என அறிவித்தலிலும் பெரும்பங்கு ஆற்றிய்வர்.

என் கட்டுரையும் பேரா. வா. செ.கு. ஐயா நினைவுமலரில் இடம்பெற்றுள்ளது.

கவிஞர் குலோத்துங்கனின் நூல்கள் யாவும் தமிழ் இணையப் பல்கலை தளத்தில் இலவசமாகப் படிக்கக் கிடைக்கின்றன. தமிழின் எதிர்கால வாழ்வு தமிழ்நாட்டின், இலங்கையின், மற்றுமுள்ள நாடுகளில் உள்ள தமிழ்நூல்கள் பிடிஎப் ஆக இணைய வலம் வருவதில் உள்ளது: http://nganesan.blogspot.com/2013/09/google-aandavar-j-fletcher.html


டாக்டர் வா.செ. குழந்தைசாமி (குலோத்துங்கன்) படைப்புகள்
(By clicking, the PDF will open)

நா. கணேசன்



நைடதத்தின் அழகிய கடவுள் வாழ்த்து - ஓம்சக்தி தீபாவளி மலர் 2017 ஓவியம்

2017 ஓம்சக்தி தீபாவளி மலர் (கோயம்புத்தூர்) அட்டைப்படம்:
சிவன் சிரசதனில் குட்டி நிலாக் கண்ட கணபதி செய்தது என்ன? புகழ்பெற்ற நைடதத்தின் கடவுள்வாழ்த்தில் காண்போம்.

நைடதம் புலவர்க்கு ஔடதம்

நைடதம் - அதிவீரராமபாண்டியர்
கடவுள் வாழ்த்து
தழைவிரி கடுக்கை மாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவிவெண் திங்கள் இற்ற கோட்டது குறையென் றெண்ணிப்
புழைநெடுங் கரத்தாற் பற்றிப் பொற்புற இணைத்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்

என்ன அழகான கற்பனை! உவேசா, வாரியார், ஜெயபாரதி - மூவரும் இப்பாடலின் சிறப்பைக் கூறியுள்ளனர். பழைய பாண்டிய வம்சம் சிறுத்துக் குறுநில மன்னர்களாகியும் தமிழ்ப் புலமையைப் போற்றிதற்குச் சான்று மதுராபுரி அம்பிகை மாலை, நைடதம் போன்ற நூல்கள்.

அழகிய, அரிய இப் பாடலுக்கு ஓவியர் மாருதி சித்திரம் தீட்டியுள்ளார். முதல்முறையாகப் பாண்டிய மன்னரின் பாடலுக்கு ஓவியம்! அதன் விளக்கமும் ஓம்சக்தி தீபாவளி மலர் (2017) தருகிறது. படித்து அருள்க.

நா. கணேசன்


வாரியார் விருந்து..
திருக்கயிலாய மலையில் கருணைக் கடலாகிய சிவபெருானும் ஞானக் கொழுந்தாகிய உமா தேவியாரும் ஒளிமயமான நவரத்ன சிங்காதனத்தில் வீற்றிருந்தார்கள். விநாயக மூர்த்தியும் கந்தக் கடவுளும் ஒருபுறம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். விநாயகர் தம்பியைப் பார்த்து "ஆறுமுகம் "என்று அழைத்தார்.

முருகவேள் அண்ணன் நமது முகத்தை எண்ணி அழைக்கிறார் போலும் என்று கருதி "ஏன் ஏக தந்தரே" என்றார். விநாயகருக்கு ஒரு கொம்புதானே. கஜமுகனை வதைக்கும் பொருட்டு ஒரு கொம்பை ஒடித்து விட்டாரல்லவா?
இளம்பூரணன் ஏகதந்தரே என்றது விநாயகருக்கு சுருக்கென்றிருந்தது. தம்பி நம்மை ஒற்றைக் கொம்பன் என்று விகடமாக அழைக்கின்றான் போலும் என்று எண்ணி நாணினார். இந்த குறை தீர என்ன செய்யலாம் என்று சிந்தித்தார்.

விநாயகர் சிவ மூர்த்தியிடம் சென்று அவரை அடிமுதல் முடிவரை உற்று நோக்கினார். சிவ மூர்த்தியின் முடியில் உள்ள பிறைமதி தன் ஒடிந்த கொம்புக்கு நிகராகும் என்று கருதி நீண்ட தும்பிக்கையால் சடை முடியில் உள்ள பிறையை திருகி எடுத்து அங்குள்ள நிலைக் கண்ணாடிமுன் நின்று ஒடிந்த கொம்புள்ள இடத்தில் பிறைமதியைப் பொருத்தி அழகு பார்த்தார்.
இப்படி ஒரு அறிவுக் கனவு காண்கிறார் புலவர் சிகாமணி அதிராம பாண்டியர். அதை ஒரு பாட்டாகவே பாடினார்.
இதோ அது..

தழைவிரி கடுக்கை மாலை தனிமுதல் சடையில் சூடும்
குழவிவெண் திங்கள் இற்றக் கோட்டது குறையென் றெண்ணிப்
புழைநெடுங் கரத்தால் பற்றிப் பொற்புற இணைத்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்!

------------------

அன்பர்களே,

தழைவிரி கடுக்கை மாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவிவெண் திங்கள் இற்ற கோட்டது குறையென் றெண்ணிப்
புழைநெடுங் கரத்தாற் பற்றிப் பொற்புற இணைத்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்

நைடதம்
அதிவீர ராம பாண்டியர்

பாண்டியர்கள் மதுரையை துருக்கரிடம் இழந்த பின்னர் அதை மீட்டவர்கள் விஜயநகரத்துக் கன்னடியர்கள். அவர்களின் தயவில் மதுரையைக் கொஞ்ச காலம் பாண்டியர்கள் வைத்திருந்தார்கள். ஆனால் வாணதிராயர் என்பவர் அவர்களை மதுரையைவிட்டு விரட்டிவிட்டார்.

அவர்கள் அனைவருமே தென்பாண்டி நாட்டிற்கு வந்து திருநெல்வேலி ஜில்லாவின் தென் பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் நிலை கொண்டனர்.

விஜயநகர ராயர்கள் நாட்டைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து அமரநாயக்கர்கள் என்னும் மிலிட்டரி தலைவர்களிடம் ஒப்படைத்தார்கள். மண்டலங்களாகப் பிரித்து மண்டலேஸ்வரர்கள் என்னும் பெருந்தன அதிகாரிகளிடம் விட்டனர்.

பாண்டியர்களின் நாடுகள் மிகவும் சுருங்கி நெல்லை மாவட்டத்தின் ஓர் ஓரத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அங்கு அவர்கள் குறுநில மன்னர்களாக விளங்கினர்.

நாடு இருந்த நிலையிலும், அவர்களே இருந்த நிலையிலும் 'ஓஹோ' என்று எதையும் செய்யமுடியவில்லை. பராக்கிரம பாண்டியர் தென்காசியில் கோயிலைக் கட்டி, அதன் கோபுரத்தை முடிக்கமுடியாமல் விட்டார்.

அவர்களில் இன்னொரு பராக்கிரம பாண்டியர், அதிவீர ராம பாண்டியர் என்னும் சகோதரர்கள் பெரும் புலவர்களாக விளங்கினர். புலவர்களை தங்களின் குல வழக்கத்தின்படி ஆதரித்தனர்.
இளையவரான அதிவீர ராம பாண்டியர் ஒரு சிறந்த நூல் ஒன்றை இயற்றினார்.

வடநாட்டில் இருந்த நிஷதநாட்டு மன்னர் நள மஹாராஜா. சனியின் பாதிப்பால் மிகவும் சிரமப்பட்டு பிறகு நல்ல நிலைக்கு மீண்டவர். அவருடைய சரித்திரத்தை 'நைஷதம்' என்னும் பெயரால் வடமொழியில் நூலாக இயற்றியிருந்தார்கள்.

அந்த நூலை பாண்டியனார் தமிழில் இயற்றினார். தமிழில் அந்நூலுக்கு 'நைடதம்' என்ற பெயர். அந்த நூல் கடந்த முன்னூறு ஆண்டுகளாகப் புலவர்களால் கற்கப்பட்டு வந்தது. அவர்களின் பாடத்திட்டத்தில் - Syllabus-ஸில் அதுதான் முதல் நூலாக விளங்கியது. "நைடதம் புலவர்க்கு ஔடதம்' - உயிர் உடலைக் காக்கும் மருந்து போன்றது என்ற பழமொழியும் ஏற்படக்கூடிய அளவுக்கு அது சிறந்து விளங்கியது.

சனி கிரகம் சரியில்லாத பலன்களை ஏற்படுத்துவதைத் தடுப்பதற்காக மக்கள் நைடதத்தைப் படிப்பார்கள். குறிப்பாக ஏழரைச் சனி. நைடதத்தின் முதல் பாடல் - காப்புச் செய்யுள்தான் இது.

அன்புடன்

ஜெயபாரதி
------------
http://s-pasupathy.blogspot.com/2017/02/2.html
உ.வே.சா அவருடைய ஆசிரியரை முதன் முதலில் சந்தித்த போது நடந்ததை விவரிக்கிறார்.
பரீட்சை

இவ்வாறு எங்கள் வரலாற்றை அறிந்துகொண்ட பின்பு அக் கவிஞர்
பெருமான் என்னைப் பார்த்து, “நைடதத்தில் ஏதாவது ஒரு பாடலைச்
சொல்லும்” என்றார். அந்த மகா வித்துவானுக்கு முன், காட்டுப்
பிராந்தியங்களிலே தமிழறிவைச் சேகரித்துக் கொண்ட நான் எவ்வளவு
சிறியவன்! எனக்குப் பாடல் சொல்லத் தைரியம் உண்டாகவில்லை. மனம்
நடுங்கியது. உடல் பதறியது; வேர்வை உண்டாயிற்று. நாக்கு உள்ளே இழுத்தது.

இரண்டு மூன்று நிமிஷங்கள் இவ்வாறு நான் தடுமாறினேன். அப்பால் ஒருவாறு நைடதத்திலுள்ள, “தழைவிரி கடுக்கை மாலை” என்னும் காப்புச் செய்யுளைக் கல்யாணி ராகத்தில் மெல்லச் சொன்னேன்; முதலடியை,

தழைவிரி கடுக்கை மாலைத் தனிமுதற் சடையிற் சூடும்”  #

என்று நான் சொன்னேன். பிள்ளையவர்கள் இடைமறித்து, “தனி முதல்
சடையிற்சூடும்” என்று சொல்லித் திருத்தினார். பல காலமாகப் பிழைபட்ட
பாடத்தை உருவேற்றி இருந்த எனக்கு அந்தப் பாடமே முன் வந்தது. என்
நடுக்கம் அதிகமாயிற்று. ஆனாலும் பாடல் முழுவதையும் சொல்லி முடித்தேன்.

நான் அதைச் சொல்லும்போதே அவர் முகத்தையும் கவனித்தேன். “நான்
சொல்வதில் அவருக்கு வெறுப்பு உண்டாகுமோ” என்று பயந்தேன். நல்ல
வேளையாக அவர் முகத்தில் அத்தகைய குறிப்பு ஒன்றும் தோற்றவில்லை.
எனக்கும் சிறிது ஊக்கம் உண்டாயிற்று.

“இன்னும் ஒரு பாடல் சொல்லும்” என்றார் அவர். நான் நைடதத்தின்
சிறப்புப் பாயிரமாகிய, “நிலவு பொழி தனிக்கவிகை” % என்னும் பாடலைச்
சாவேரி ராகத்தில் சொன்னேன். அந்த இரண்டு செய்யுட்களையும் மீட்டும்
சொல்லிப் பொருள் கூறும்படி கூறினார். நான் பாடல்களைச் சொல்லிப்
பொருள் கூறத் தொடங்குகையில் நாக்குத் தழுதழுத்தது.
“தைரியமாகச் சொல்லும்” என்று அக்கவிஞர்பிரான் கூறினார். நான்
இரண்டு செய்யுட்களுக்கும் பொருள் கூறி முடித்தேன்.

“நிகண்டு பாடம் உண்டோ?” என்று அவர் கேட்டார். நான்
“பன்னிரண்டு தொகுதியும் பாடம் உண்டு” என்று கூறவே சில சில
பாடங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டு விட்டு, “நிகண்டை மனனம்
செய்வது நல்லதே. இக்காலத்தில் அதை நெட்டுருப் பண்ணும் வழக்கமே போய் விட்டது. சொன்னால் யாரும் கேட்பதில்லை” என்றார்.