விளங்காயும் விளாங்காயும் - பேரா. இராம. சுப்பிரமணியன் (வெண்பா இயற்றும் மரபு)


2018-08-02 6:01 GMT-07:00 இலந்தை சு. ராமசாமி :
>
> வெறும் விளாங்காய்களை மட்டும் கொண்டு ஒரு நொண்டி வெண்பா எழுதினால் எப்படியிருக்கும் எனக் காண எழுதிய பாடல் இது
>
> ஏகநாதன் சாமிநாதன் நாகநாதன் கூட்டமாக
> ஏகினார்கள் ஆடினார்கள் பாடினார்கள் - வேகமாகச்
> சாடினார்கள் தாவினார்கள் தாங்கினார்கள் தேடினார்கள்
> ஓடினார்கள் வாடினார் கள்
>
> இலந்தை

வெண்பாவிற்கான ஓசை இல்லாதுபோகிறது. கணிதத்தில், பொறியியலில் “in the limit, Limiting solution" விளிம்பு என்பார்கள். அதுபோல், எல்லையான வழுவெண்பா. அக்‌ஷரமுகத்தில் வெண்பாக்களை அலகிடுகிறபோது, “விளாங்காய்ச் சீர்” என்பதனைக் குறிக்க திரு. வினோதைக் கேட்கலாம்.

“ஓசையில் விளாங்காய்ச் சீர் நான்கசைச் சீர்போல் ஒலித்து, செப்பலோசைக்கு ஊறு விளைவிக்கிறது  என்பதே மறைந்திருக்கும் இலக்கண உண்மை.” (சு. பசுபதி, 11/8/2014 சந்தவசந்தத்தில்).
அவர் இரா. திருமுருகன் செப்பலோசை இல்லாத வெண்பாவிற்கு உதாரணமாக ஒன்று செய்து காட்டியிருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். புதுவை திருமுருகன் தரும் செப்பலோசை வழுவும் வெண்பா:
வாய்க்குவாய்த்த சொல்லிலான மாலைபோலச் செய்யுளாக்கித்
தாய்க்குநீங்கள் ஆற்றலாமோ தாழ்வு?

1892-ஆம் ஆண்டில் பாம்பன் சுவாமிகள் விளாங்காய்ச்சீரைத் தவிர்க்க வேண்டி எழுதியிருக்கிறார். பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் “ திருவலங்கற்றிரட்டில்” இருந்து : “ வெண்பாவுக்குரிய காய்ச்சீர் நான்கனுள் இடையிற் குறினெடிலிணைந்த நிரையசையுடையனவும், இரண்டு மாஞ்சீராகப் பிரிக்கத்தகுவனுமான ‘தம்பிரானே’ என்பதுபோன்ற கூவிளங்காயும், ‘சருவசாரம்’ என்பது போன்ற கருவிளங்காயும் வெண்பாவில் வரவொண்ணாவெனவும், வரின் ஓசைநயங் கெடுமெனவு மறிக. கலிப்பாவில் வரும் காய்ச்சீர்கட்கு மிந்நியாயங் கொள்க.” பின்னர், கிவாஜ, திருமுருகன் அறிவுரை தந்து வழிகாட்டினர். ஆனால், ஆழமாக ஆராய்ந்து இளம்பூரணர், பரிமேலழகர் உரைகளில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டதெல்லாம் கண்டு கூறினவர் பேரா. இராம. சுப்பிரமணியன் அவர்களே. 1960களில் இருந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்துகையில் இந்த இலக்கண விதியைக் கற்பித்துள்ளார். ஆனால்,  நான் இப்பதிவில் இணைத்துள்ள கட்டுரை 1998-ல் அச்சில் வெளியான நூல்தான்.

இதற்கு ஓர் ஒப்பீடாக, ஆறுமுக நாவலர் வாழ்க்கையிலிருந்து சான்று காட்டலாம். அவர் பாதிரியார்களிடம் இருந்து விலகி, வசனநடையில் தமிழும் சைவமும் வளர்க்கப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தினார். அதுபோழ்து, அகத்தியர் மாணவர்கள் பன்னிருவர் பெயர்கள் என வரிசையாய்த் தொகுத்துக் கற்பித்தார். இது நாடெங்கும் பரவியது. ஆங்கில நூலிலும் சைமன் காசிச்செட்டியால் இடம்பெற்றது. அதற்கப்புறமே, “தமிழ்” என்ற கட்டுரை ஆறுமுக நாவலர் பாலபாடம் (இறுதித்தொகுதியில்) அச்சானது. அதுபோல், தமிழறிஞர்கள் நெடுங்காலம் போதிக்கும் செய்திகள் அச்சில் வருதற்கு வருடங்கள் பல கழிந்துவிடுகின்றன.

எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்தல்போல், விளாங்காய்ச் சீர் விலக்கல் விதி உருவாக இவர் கட்டுரை உதவியிருக்கிறது. அவர் இலக்கணக்கடலாக வாழ்ந்தவர். அவரது ஒளிப்படம் இணையத்தில் இடம்பெறச் செய்யவேண்டும். புலவரேறு ச. சீனிவாசன் பேரா. இராம. சுப்பிரமணியன் வழிநடந்து எழுதியுள்ளார்.
http://nganesan.blogspot.com/2018/07/venpavil-vilaangaayc-ciir-vilakku.html

இப்பதிவில், பேரா. இராம. சுப்பிரமணியன் கட்டுரையை வருடி இணைத்துள்ளேன். மரபுச் செய்யுள் முனைவோருக்குப் பயனாகும்.
---------

விளாங்காய்ச் சீர் இருந்தால் வகையுளியாப் பிரித்து வெண்பாக்கள் பாடுகிறார்கள். இதனைத் தனிப்பாடல் திரட்டில் உள்ள வெண்பாக்களில் இருந்து யாராவது தொகுக்கவேண்டும்.

இலக்கணச் சுடர்’ இரா. திருமுருகனின் ஒரு “கேள்வி-பதில்”
கே: வெண்பாவில் வீடுபேற்றை, கேட்கமாட்டேன் என்பன போன்ற விளாங்காய்ச் சீர் வரலாமா?
பதில்: வெண்பாவில் என்ன? எவ்வகைப் பாவிலும் விளாங்காய்ச் சீர் வருவது விரும்பத் தக்கதன்று. அது எந்தப் பாவில் அமைந்தாலும் அப்பாவுக்குரிய ஓசையைக் கெடுத்துவிடும்.

இரா. திருமுருகன் கூறுவதுபோன்றே பாரதியாரும் “சாமிநா தப்புலவன்” என்று வகையுளியாகப் பாடியுள்ளார் - உவேசா வாழ்த்தில்.

(1)
கவிமணி தேவி உவேசாவின்பால் எழுதிய இரங்கற்பா:

எவ்வேடு தேடிநீ எந்நாட்டில் எப்பதியில்
எவ்வீடு நோக்கியின் றேகினையோ? - அவ்வான்
அமிழ்தம் அமிழ்தமென அள்ளியள்ளிச் சங்கத்
தமிழ்தந்த சாமிநா தா!

(2)
தில்லையம்பூர்  சந்திரசேகர கவிராஜ பண்டிதர் தனிப்பாடல் திரட்டைச் சேதுநாட்டில் செந்தமிழாட்சி செய்த பொன்னுச்சாமித்தேவர் வேண்டுகோளால் முதன்முதலாகத் தொகுத்தவர்.

”சுப்பிரமணிய தேசிகர் தம் ஸந்தோஷத்தைக் குறிப்பாகப்
புலப்படுத்தினர். பண்டிதர் மகிழ்ந்து என்னைப் பாராட்டி,

நேமிநா தன்வழுத்தும் நித்தன் கயிலையுறை
வாமிநா தன்புகழை வாழ்த்து மென்மேல் - தோமினற்சீர்
சாமிநா தக்கவிஞன் சாற்றும் பனுவலைப் போல்
பாமினா ளும்பகர் வளோ!

என்ற செய்யுளைச் சொன்னார்.
[நேமிநாதன் - திருமால். வாமிநாதன் - சிவபெருமான்; வாமி - உமை. பாமினாள் - கலைமகள்.]

தம்பிரான்களும் சடகோபாசாரியரும் கேட்ட கேள்விகளால் மன அமைதியை இழந்திருந்த பண்டிதர் என்னுடைய பாட்டினால் மிக்க மகிழ்ச்சியுற்றார். அதன் விளைவாக எழுந்ததே இச்செய்யுள்.” (உவேசா, என் சரித்திரம்)

(3)
கிருபானந்த வாரியார் ‘கண்ணதா சக்கவிஞன்’ என்று வாழ்த்தில் செய்துள்ளார்: http://s-pasupathy.blogspot.com/2014/01/24.html
2001 ஆண்டில் 'இசைப் பேரறிஞர்' என்ற பட்டத்தை சங்கீத கலாநிதி மதுரை சேஷகோபாலனுக்கு தமிழிசைச் சங்கம் அளித்தது. அந்த வருடம் கவிஞர் கண்ணதாசன் கவிதைகளுக்கு ராகங்கள் அமைத்து , வித்வான் சேஷகோபாலன் தமிழிசைச் சங்கத்தில் முழுநேரக் கச்சேரி செய்தார். முதற் பாடல் ஒரு வெண்பா.

எத்திக்கும் தித்திக்கும் இன்பக் கவிதைகளைச்
சித்திக்கும் வித்தாகச் செப்புகின்றான் -- சத்திக்கும்
கண்ணதா சக்கவிஞன் கந்தன் கருணையினால்
வண்ணமுடன் வாழி மகிழ்ந்து.

இது கிருபானந்தவாரியார் கண்ணதாசனுக்கு அளித்த ஒரு வாழ்த்துப்பா.
( கண்ணதாசன் கவிதைத் தொகுப்பு-4 இல் , அணிந்துரையின் கடையில், இருக்கும். )


(4)
"காலம்" மீ.விசுவநாதன்

பண்ணோடும் , மண்ணோடு பாச உணர்வோடும் ,
விண்ணோடு மோதும் விரிந்தபொருள் எண்ணத்தின்
வண்ணவரிப் பூச்சொரியும் வாசச் சிறப்போடும்
கண்ணதா சன்கவிதை காண்.                       (434) 24.06.2016
(இன்று கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்)

(5)
தொண்ணூறும்   மேலும்  தொடரும்  பலவாண்டும்
கண்ணதா   சன்புகழைக்   காட்டிடுமே! -  வண்ணத்
தமிழால்   சிறந்திட்ட   தங்கக்    கவிஞர்தமை
இமையோரும்  வாழ்த்துவா   ரே!
                  - புலவர் இராமமூர்த்தி.

---------------
(6)
வள்ளலார்:
http://www.tamilvu.org/slet/l5F31/l5F31s01.jsp?id=570
 நின்னிலையை என்னருளால் நீயுணர்ந்து நின்றடங்கின்
 என்னிலையை அந்நிலையே எய்துதிகாண் - முன்னிலையை
 இற்குருவி னாட்டாதே என்றுரைத்தான் ஏரகம்வாழ்
 சற்குருஎன் சாமிநா தன். 

புள்ளிருக்கு வேளூர்க்குச் சென்றிருந்த வள்ளற்பெருமான், சுவாமி மலைக்குச் சென்று முருகப்பெருமானைக் கண்ணாரக் கண்டு வழி பட்டு வந்தாராகக் குரு தரிசனம் எப்படி என்று வினாவிய உலகநாதத் தம்பிரான் சுவாமிகட்கு விடையாகத் தந்த வெண்பா இது என்பர்.

(7)
வெண்பாவிரும்பி:

(நேரிசை வெண்பா)

உத்தம தானபுரத் துற்றார் மகிழுறநன்
முத்தெனத் தோன்றி முழுவதுமாய் - முத்தமிழ்த்
தாயைத் தரிசித்த சாமிநா தப்பெயர்கொண்
மாயை வரமெண்ணு வாம்.

மா ஐ=பேராசான்


(8)
பொருநராற்றுப்படை வெண்பா:

(நேரிசை வெண்பா)
ஏரியும் ஏற்றத்தி னானும் பிறர்நாட்டு
வாரி சுரக்கும் வளமெல்லாம் - தேரின்
அரிகாலின் கீழுகூஉம் அந்நெல்லே சாலும்
கரிகாலன் காவிரிசூழ் நாடு.

இங்கு, அளபெடை இன்னிசை வகையாதலால் அலகு பெறாததெனக் கொள்ளவேண்டும். 
     கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.
இக் குறளில், அளபெடை இசைநிறை அளபெடை. எனவே, அளபெடை அலகு பெறும். விட்டிசைத்து வாசிக்கவேண்டும்.

---------
நா. கணேசன்

அரிமா, தமிழவேள் இராம. சுப்பிரமணியன், கணக்கு வழக்கு (இலக்கிய இலக்கணம்), திருமகள் நிலையம், 1998, பக். 75-79








































































0 comments: