கடல் கடந்த உறவுகள் - ர. சு. நல்லபெருமாள்

தெய்வத்திரு. ர. சு. நல்லபெருமாள் அவர்களின் சிறுகதை ஒன்று.

ஐயா அவர்களுக்கு எங்கள் அஞ்சலி, அன்னாரின் குடும்பத்தாருக்கு எங்கள் வணக்கம்,
நா. கணேசன்

==================================================================

கடல் தாண்டிய உறவுகள்

ர.சு.நல்லபெருமாள், 2004


அந்த ஊரில் அது ஒரு சின்ன தெரு. எதிரும் புதிருமாக இருபது வீடுகள் தாம். அங்குள்ள எல்லாரையும் எல்லாருக்கும் தெரியும். அதனால்தான் சுப்பாமணியின் வீட்டில் அந்தத் தெருவே கூடியிருந்தது.

அத்தனை பேருக்கும் அதிர்ச்சி. கால்மணி நேரத்துக்கு முன்னால் தெருவாசலில் யாருடனோ பேசிக்கொண்டு நின்றிருந்த சுப்பாமணியின் மனைவி இப்போது இல்லை '

வாசலில் பேசிவிட்டு வராந்தாவில் கிடந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தவள் மீண்டும் எழுந்திருக்கவே இல்லை. தான் போகப் போகிறோம் என்பதுக்கூடத் தெரியாமலே போய்விட்டாள்.

தெருக்காரர்களுக்கு வியப்புதான். 'கொடுத்து வைத்த ஆத்மா. எந்தச் சங்கடமும் இல்லாமல் பொசுக்கென்று போய்விட்டாள். புண்ணியவதி, ' என்றார் எதிர் வீட்டுக்கோணார்.

'பூர்வஜென்மப் புண்ணியம் சார். இப்படி ஒரு சாவு யாருக்குக் கிடைக்கும். கொடுத்துவைத்தவள், ' என்றார் மேல வீட்டு நாடார்.

நாடாருக்கு வயது எண்பது. உடல் தளர்ந்து பல உபாதைகள் இருந்தாலும், கோலூன்றி எங்கும் சென்று வருவார். இப்படி ஒரு சாவு தனக்குக் கிடைக்கவேண்டுமே என்கிற ஏக்கம் அவருக்கு.

வீட்டுக்குள் மனைவி சங்கரியின் உடலை வெறிக்கப் பார்த்தபடி இருந்தார், சுப்பாமணி.

'பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டாமா ? ' என்று அருகிலிருந்த சுப்பாமணியின் மைத்துனர், கேட்டார்.

'இப்பவே சொல்லி என்ன ஆகப் போகிறது ? அவங்க போன் பண்றபோது சொல்லிக்கலாம், ' என்றார் சுப்பாமணி.

'அதெப்படி ? பிள்ளைகளுக்கு உடனே தகவல் சொல்ல வேண்டாமா ? அப்புறம் கோபப்படுவார்கள். '

'சொன்னால் மட்டும் உடனே வந்துவிடமுடியுமா ? கோபம் என்ன வேண்டிக்கிடக்கு. '

'வாராங்களோ வரலையோ. தகவலையாவது தெரிவிக்க வேண்டாமா ? '

'அதுக்கு இப்போ என்ன அவசரம் ? கொள்ளி போடக்கூட யாரும் வரமுடியாதுங்கறபோது எப்போ சொன்னா என்ன. '

'பிளேனில் டிக்கட் உடனே கிடைத்தால் நாளைன்னுக்கு வந்துவிடலாமே. உடம்பை நாம் ஐஸ் பெட்டியில் வைத்தால் போச்சு. '

'வந்து என்னத்துக்கு, பிரேதத்தைப் பார்க்கவா ?. உயிரோடு இருந்தகாலத்தில் ஆறுதலாகப் பக்கத்தில் இல்லை. செத்தபிறகு வந்தால் என்ன வரட்டாத்தான் என்ன '

'நம்ம கடமையைச் செஞ்சுட வேண்டாமா ? '

'செஞ்ச கடமையெல்லாம் போதும். இப்போ நமக்கு யார் கடமையைச் செய்யப் போறாங்க. பேசாம இரு. '

சுப்பாமணியின் விரக்தியை உணர்ந்து மெளனமானார், மைத்துனர்.

கூடியிருந்த உறவுக்காரர்கள் ஆளுக்கொரு விதமாகப் பேசிக்கொண்டிருந்தனர். சிலர் தேற்றும் பாவனையில் வயிற்றெறிச்சலைக்கொட்டினார்கள்.

'மூணு பிள்ளைகளைப் பெத்தும் ஒண்ணுகூடக் கடைசிக்காலத்தில் உதவ முடியலையே, ' என்றார் ஒருவர். இவர் தாம் ஒருசமயம், ' இவருக்கென்ன ? மூணுபிள்ளைகளும் அமெரிக்கா போயிட்டாங்க. இவருக்கு என்ன குறை ? ' என்றார். வயிறு எரிந்தார்.

சுப்பாமணியின் குறையே அதுதான். மூன்று பிள்ளைகளில் ஒன்றுகூட அருகில் இல்லாத குறை.

'தசரத சக்ரவர்த்திக்கு நான்கு பிள்ளைகள். ஒருவன்கூட அவர் சாகும்போது அருகில் இல்லை. அவரோட கட்டை வேகாமலா போச்சு, ' என்று மனதிற்குள் முனகினார், சுப்பாமணி.

முதல் பையனை அமெரிக்காவிற்கு அனுப்பியபோது சுப்பாமணியும், சங்கரியும் பெருமையால் பூரித்துப் போனார்கள். பல உறவினர்களுக்குப் பொறாமையால் வயிறு எரிந்தது.

இருபது ஆண்டுகளுக்குமுன் முதல் மகனை அமெரிக்காவிற்கு விமானம் ஏற்றிவிட்டுத் திரும்பியபோது சுப்பாமணி மகிழ்ச்சியில் திகழ்ந்தார். அப்போதெல்லாம், அமெரிக்காவிற்கு விசா கிடைத்து மேற்படிப்பிற்குப் போவதென்றால் மிகுந்த சிரமப்படவேண்டும். அமெரிக்க தூதரகம் இலகுவில் விசா தராதகாலம் அது. விசா கிடைக்காமல் தூதரக வாசலில் அழுதுகொண்டு நிற்கும் மாணவர்கள் பலரை அப்போது பார்க்கலாம்.

சங்கரிக்குப் பெருமையாக இருந்தாலும், மகன் கடல்தாண்டிப் பிரிந்து போகிறானே என்ற வருத்தமும் இருந்தது. மற்றவர்களின் புகழ்ச்சியில் வருத்தம் அமிழ்ந்துவிட்டது.

சுப்பாமணிக்கு இன்னும் நினைவிருக்கிறது- கடைசிமகனை மேற்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு விமானம் ஏற்றி அனுப்பிவிட்டுத் திரும்பும்போது அவர் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. திடாரென்று தான் அனாதையாகிவிட்டதாக உணர்ந்தார். மகனை அனுப்பும்போது சங்கரி தேம்பி அழுததைப் பார்த்துக்கொண்டிருந்த சுப்பாமணி, மனதிற்குள் அழுதுகொண்டிருந்தார்.

விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பியபோது 'ஏன் அழறே, இவன்தான் படிப்பு முடிந்ததும் ஊருக்குத் திரும்பி விடுவதாகச் சொன்னானே, ' என்று சமாதானப்படுத்த முயன்றார்.

'மூத்த பிள்ளைகள் இரண்டும் போகும்போது இப்படித்தான் சொன்னார்கள். என்னாச்சு ? படிச்சுட்டு அங்கேயே வேலைக்குச் சேர்ந்திட்டாங்க. இவன் முதலில் அமெரிக்கா வேண்டாம், இந்தியாவில்தான் இருப்பேன்னு சொன்னான். இப்போ என்னாச்சு ? இரண்டு அண்ணாக்களும் இவன் மனசைக் கலைச்சு அங்கே இழுத்துட்டாங்க. அங்கே போன பிறகு இங்கே எங்கே வரப்போறான். ' சங்கரி அழுதாள்.

சுப்பாமணி சோகத்தை வெளிக்காட்டாமல் புழுங்கினார்.

'நமக்குன்னு இங்கே யார் இருக்கா ? என்று ஒருநாள் சங்கரி அங்கலாய்த்தாள். ' அனாதைகள் மாதிரி காலத்தை ஓட்டறோம், ' என்றாள்.

'யாருடைய துணையும் வேண்டாம். அம்பாள் துணை இருக்காள், ' என்று சமாதானப்படுத்த முயன்றார்.

இப்போது சங்கரியின் உடலைப் பார்த்தபடியிருந்த சுப்பாமணிக்கு அப்போது சொன்னது நினைவிற்கு வந்தது. 'உனக்கு நானும், எனக்கு நீயும் துணையாயிருந்தோம். அதையும் அம்பாள் பறிச்சிட்டாளே. '

போன் மணி அடித்தது. அமெரிக்காவிலிருந்து இரண்டாவது மகன் பேசினான். எடுத்த எடுப்பிலேயே கோபத்தில் குமுறினான். 'அம்மா இறந்ததும் ஏன் போன் பண்ணலை ? ' என்றான்.

'உனக்கு எப்படித் தெரியும் ? யார் சொன்னா ? ' -சுப்பாமணி கேட்டார்.

'பாஸ்டனில் இருக்கிறானே எதிர்வீட்டு சுந்தரம், அவன் சொல்லித்தான் எனக்குத் தெரியும். தற்செயலா அவன் ஊருக்கு இப்போ பேசியிருக்கான். அவன் அம்மா சொன்னாளாம். அவன் போனில் என்னிடம் துக்கம் விசாரிச்சான். மூணாம் மனுதன் சொல்லித்தான் எனக்குத் தெரியணுமா ? '

'யார் சொல்லித் தெரிஞ்சா என்னடா ? தெரிஞ்சு என்ன செய்யப்போறே ? '

'என்னப்பா இப்படிப் பேசறே. அம்மா இறந்த செய்தி எனக்குத் தெரியவேணாமா ? '

'வழக்கமா நீ போன் பண்ணுகிறபோது சொல்லலாம் என்றிருந்தேன். உடனே சொல்லி நீ வந்துடப் போறியா ? '

'நான் இன்னிக்கே புறப்படறேன். டிக்கட் கிடைச்சாலும் கிடைக்கும். '

'உடனே புறப்பட்டு என்ன பிரயோஜனம் ? அம்மாவைப் பார்க்கப்போறதில்லை. கொள்ளிகூடப் போடவும் முடியாது. உனக்கு டிக்கட் உடனே கிடைக்கிறதோ இல்லையோ. அதுவரை உடம்பைப் போட்டு வைக்க முடியாது. இங்கே எல்லாரும் வந்தாச்சு. தாமதிக்க முடியாது. நீ மெள்ளவே வா. '

'கருமாதி விசேடத்துக்காவது நான் வந்துடுவேன். '

மற்ற இரு பிள்ளைகளும் தகவல் தெரிந்து போனில் கோபமாகப் பேசினார்கள்.

என்ன கோபம் வேண்டிக்கிடக்கிறது. வயதான காலத்தில் எதுவும் நடக்கலாம். பெற்றோர்களைத் தனியே விட்டுவிட்டுத் தூரதேசம் போனால் இதையெல்லாம் எதிர்பார்க்கவேண்டியதுதான். நானா உங்களைப் போகச் சொன்னேன் ? நிறையச் சம்பாதிக்கலாம் என்று போனீர்கள்....

பதினாறாம் நாள் விசேடத்திற்கு மூன்று பிள்ளைகளும் வந்துவிட்டார்கள் --பிண்டம் இறைக்க.

****

Credits: Thinnai

===================================================================

கல்லுக்குள் ஈரம்

நெல்லைகண்ணன்
Dinamani, First Published : 22 Apr 2011 03:50:23 AM IST

அண்ணாச்சி ர.சு.நல்லபெருமாள் இன்று உடலோடு இல்லை. இயற்கை எய்தினார் இறைவனடி சேர்ந்தார் என்று பலபடச் சொன்னாலும் காலமானார் என்று சொல்லுவதுதான் சாலப் பொருந்தும் அந்தப் பெருமகனாருக்கு. ஆமாம், கல்கியின் அன்புக்குப் பெரிதும் பாத்திரப்பட்டவர் அண்ணாச்சி. அவரது வாழ்க்கை வருங்கால இளையவர்க்குப் பெரும் பாடமாக அமையும். மிகுந்த அன்பு கொண்டவர் அண்ணாச்சி. அதிர்ந்து பேசாத பண்பாளர்.
எந்தவித தீயபழக்கங்களும் இல்லாத தூயவர். அவரது சித்தப்பா சங்கரபாண்டியம் பிள்ளை நாடாளுமன்ற உறுப்பினர் நேரு அவையில். இன்றோ அவரது உறவில் தம்பி ஏ.எல்.எஸ். திருநெல்வேலி மாநகரத் தலைவர். எனினும், அண்ணாச்சிக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகம்.
வழக்கறிஞர் படிப்புப் படித்திருந்தாலும் நீதிமன்றம் செல்லாதவர். பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிட வைக்கும் எளிமையான தோற்றம் கொண்டவர். அவரது எழுத்துகள் மிக மிக இயல்பானவை. அவரது கல்லுக்குள் ஈரம் நாவல்தான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை அவரது இளைய வயதில் போராளியாக்கியது என்று பிரபாகரனே சொல்லியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டத்தை அவர் எழுதியிருக்கும் பாங்கு நமக்கே அந்தப் போராட்டத்தில் பங்குபெற்றதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

"இந்தியச் சிந்தனை மரபு' படிக்க வேண்டிய குறிப்பாக எதிர்காலத் தலைமுறையினர் படிக்க வேண்டிய நூல். விரித்துக்கொண்டே போகலாம். என்னோடு பத்துத் தினங்களுக்கு ஒரு தடவையாவது உரையாட விழைவார்.

மரணம் உறுதி என்றும் உண்மை என்றும் உணர்ந்திருந்தும் நாம் மறந்து போகிறோமே, அது இறைவனின் விளையாடல். நான் பார்த்த மனிதர்கள் சிலரை அவர்கள் தம் ஒழுக்கமான வாழ்க்கையின் அடிப்படையில், அன்பு வாழ்க்கையின் அடிப்படையில் நூறாண்டுகள் வாழப் போகின்றவர்கள் என்று நம்புவதுண்டு. அண்ணாச்சி ர.சு.நல்லபெருமாளையும் அப்படித்தான் கருதினேன். இறைவனைக் கருதாத காரணமோ என்னவோ அண்ணாச்சி இன்று பூத உடலோடு இல்லை. ஆனால், அவர் புகழ் என்றும் என்றும் இருக்கும்.

சிரித்த முகம் சிந்தனையைத் தூண்டும் உரையாடல் என்று அவர் என் வாழ்க்கையின் ஒரு முக்கிய பங்கு. பாளையங்கோட்டையில் அவர் வாழ்ந்த வீடு இருக்கும் மேடை போலீஸ் ஸ்டேஷன் தெருகூட அண்ணாச்சி வாழ்ந்ததனாலேயே அமைதியாக இருந்ததோ என்று நான் வியந்ததுண்டு. பாரதி வாழ்ந்த கடையத்துக்குப் பக்கத்து ஊரான ரவணசமுத்திரத்தில் சுப்பையாபிள்ளை சிவஞானத்தம்மாள் மகனாகப் பிறந்திருந்தாலும் பாளையங்கோட்டை வாழ்க்கையைச் சுவைத்திருந்தார்.

அவரது கல்லுக்குள் ஈரம் நாவல் கல்கியின் பொன்விழா ஆண்டு போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றிருந்தது. விடுதலைப் போராட்டத்தை அதுவும் திருநெல்வேலி மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடந்த போராட்டத்தை அவர் எழுதியிருந்த விதம், அதில் பாத்திரமாகியிருந்த பலரை நாங்கள் நேரில் தரிசிக்கிற பாக்கியம் பெற்றிருந்ததனால் பெருமை கொண்டிருந்தோம்.

ஆனால், பிரண்ட் லைன் ஆங்கில வார இதழில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் உங்களுக்குப் போராளியாக உந்து சக்தி எது என்று ஒரு கேள்வி முன் வைக்கப்படுகிறது. அவர் பதில் தருகின்றார். ர.சு.நல்லபெருமாள் அவர்களின் "கல்லுக்குள் ஈரம்' நாவல் என்று. உடன் நமது அரசின் புலனாய்வுத் துறை அண்ணாச்சியை விசாரிக்கத் தொடங்கியது. அண்ணாச்சியின் எழுத்தின் வலிமை அது. புலனாய்வுத்துறைக்குப் புரியுமா எழுத்தின் வலிமை?

அண்ணாச்சியோடு பழகியவர்களுக்கு அவரின் எழுத்துகளில் அவர் காட்டும் சமூகக் கோபத்தைக் கண்டு வியப்பு. ஆமாம், "எண்ணங்கள் மாறலாம்' முழுக்க முழுக்க மருத்துவத் துறையை அதைச் சீரழிக்கிற மருத்துவர்களைக் குறித்தும் அதனால் சமூகம் படுகிற துன்பங்களையும் துயரங்களையும் குறிக்கும்.

"திருடர்களோ' நீதித்துறைக்குப் படித்துவிட்டுச் சமூக விரோதிகளாக வலம் வருகிற வழக்காடுவோரைப் பற்றியும் அதனால் ஏற்படும் சமூக அவலங்களைப் பற்றியும் விவரிக்கும்.
"போராட்டங்கள்' நாவல் பொது உடைமைத் தோழர்களை அண்ணாச்சிக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தும் நிலைக்குத் தள்ளியது. அந்தப் போராட்டங்கள் நாவல் இந்தியில் சங்கர்ஷ் என்று மொழி பெயர்க்கப்பட்டது. தனக்குச் சரியென்று பட்டதை அண்ணாச்சி எழுத்து வடிவில் தரும்போது பாரதியின் நேர்படப் பேசு என்ற வரியே நம் முன்னே நின்று ஆடும்.
ஆண் தெய்வங்களைப் பெண்கள் விரும்பியதாகச் சொல்லுகிற சமூகத்தில் ஒரு ஆண், பெண் தெய்வத்தை விரும்புகின்றான் என்று ஒரு நாவல் எழுத விரும்பியபோது அபிராமி பட்டரையே அதற்கு ஆதாரமாகக் கொண்டு எழுதிய நாவல் "நம்பிக்கைகள்' (கஸ்தூரி சீனிவாச அறக்கட்டளை விருது 1983 )

அவரின் ஒரே சிறுகதைத் தொகுப்பு சங்கராபரணம். சமீபத்தில் அவரது "மருக்கொழுந்து மங்கை' சரித்திர நாவலை யாரோ படமெடுக்க விரும்புவதாகச் சொன்னவுடன் ஒரு சிறு குழந்தையைப்போல் அவங்களுக்கு எழுதிக் கொடுத்துவிட வேண்டுமோ என்றார். அதன்பின்னர் தான் அதற்குப் பணம் கேட்க வேண்டும் என்றபோது அவ்வளவு கேட்கலாமா தம்பி என்றார் அந்தக் குழந்தை.

1971-ல் புத்த மதம் குறித்து அவர் எழுதிய "சிந்தனை வகுத்த வழி'க்கு சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்தது.

எம்.ஏ.சிதம்பரம் அறக்கட்டளை சார்பாக "உணர்வுகள் உறங்குவதில்லை' நூல் 1991-ல் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்திய வரலாற்றை அவருக்கே உரிய பார்வையில் "பாரதம் வளர்ந்த கதை' என்று அண்ணாச்சி எழுதியுள்ளதைப் படித்தால் அவர் பெருமை விரியும்.

அவரது இன்னொரு தத்துவ நூல் "இந்திய சிந்தனை மரபு'. ஒரு மாதத்துக்கு முன்னர் ஒருநாள், தம்பி இருட்டு பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். அதனை இந்தத் தமிழ் நாட்டுக்குத் தர வேண்டும் என்றார்.

நானும் எனது தமிழ்நாடும் ஒரு உண்மையும் நேர்மையும் ஒழுக்கமும் கொண்ட ஒரு தமிழ்ப் பெரியவரை இழந்து இருட்டில் நிற்கிறோம். ஆனால், அவரின் நேர்மையான எழுத்துகள் ஒளியாய் எம்மை வழிநடத்தும். அவரைப் புரியாதவர்கள் அவர் கல்லோ என்றுகூடக் கருதுவார்கள். ஒரு கல் முழுவதும் ஈரமாகவே இருந்ததை எல்லோரும் அறிவார்கள்.