தாதப்பட்டி நெடுங்கல்லில் பழந்தமிழ்க் கல்வெட்டு

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கிடைக்கும் சான்றுகளால் தமிழின் மிகப்பழைய வரலாறு மீளாய்வுக்கு உள்ளாகும். வத்தலக்குண்டு (வெற்றிலைக்குண்டு), நிலக்கோட்டை ஊர்களுக்கு அருகில் வைகைப் படுகையில் பல சங்ககாலக் கல்வெட்டுகள் நெடுங்கல் (menhir), நடுகல் (hero stone) இரண்டிலும் இந்தியாவிலேயே முதன்முறையாகக் கண்டெடுக்கப் பெற்றுள்ளன.

அண்மைக்காலத்தில் அப்பகுதியிலே:
நிலக்கோட்டை ஜமீந்தார்கள் தமிழை ஆதரித்துள்ளனர். கூளப்ப நாயக்கன் காதல், விறலிவிடுதூது காமச்சுவை பொருந்தியன. முதலில் மதுரைத் திருமலை நாயக்கர் மீது பாடி, அங்கே வரவேற்பில்லாமல் போகப் பிறகு நிலக்கோட்டைக் கூளப்ப நாயக்கனைப் பாட்டுடைத் தலைவன் ஆக்கிச் சுப்பிரதீபக் கவிராயர் பாடியுள்ளார். திருமலையை நிந்தித்துத் தூதில், "தொந்தி வடுகன் என்னைச் சுகியானோ" என்று இரு கணிகையர் வாதில் சொல்லாடுவதாய்ச் சுப்ரதீபம் குறித்தார் என்ப. சுப்ரதீபத்தின் அச்சாகாத பழனி மதனவித்தாரம் என்னிடம் சுவடியாக உள்ளது.

வத்தலக்குண்டு தேசபக்தர்களைத் தந்துள்ளது: அவ்வூர்ச் சுப்பிரமணிய சிவா சுதந்திரம் வேண்டிப் பாடுபட்ட பாரதி, வ.உ.சி போன்றவர்களுடன் உழைத்த பெரியவர். வெஞ்சிறையில் வாடுகையில் தொழுநோய் தொற்றிற்று. பாரதமாதா ஆலயம் தருமபுரி பாப்பாரபட்டியில் அமைக்க முயற்சிகளைத் துவக்கியவர். தமிழில் ஏறுதழுவலைச் சொல்லும் கமலாம்பாள் சரித்திரம் எழுதிய பி. ஆர். ராஜமையர் வத்லகுண்டுக்காரர்தான். அது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (The fatal rumour : a nineteenth-century Indian novel. B R Rajam Aiyar; Stuart H Blackburn, OUP, 1998). சி. சு. செல்லப்பா வாடிவாசல் என்ற நாவலிலும் அவ்வட்டார மரபை வடித்துள்ளார்.

2300 ஆண்டுகளுக்கு முன்னரே அப்பகுதியில் தமிழ் தழைத்ததற்கு அரிய சான்றுகள் கிடைத்துள்ளன.

புலிமான் கோம்பை, தாதப்பட்டி என்னும் ஊர்களில்
கண்டறியப்பட்டுள்ள பழந்தமிழ்க் கல்வெட்டுகள்:


புலிமான் கோம்பை வீரக்கற்கள்:
http://www.hindu.com/2006/04/05/stories/2006040518340600.htm

கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ கோள் ” என்று எழுத்துக்களில் பொறித்துள்ளனர்.

விளக்கக் கட்டுரை (எஸ். ராமச்சந்திரன்)

தீ- எனில் இனிமை என்ற பொருளும் உள்ளது. உதாரணமாக,
தீங்கனி, தீந்தேன் என்கிறோம். தீயன் என்றால் த்வீபம் என்னும் வடசொல்லின் தற்பவமாகி ஈழநாட்டாரைக் குறிக்கிறதா? தீபோல் சுடர்பவன் அல்லது இனியவன் என்பாரின் மகன் அந்துவன் என்று பொருள்தரும் தமிழ்ச்சொற்களா என்று ஆராய்தற்கு இடம் இருக்கிறது. கொங்குநாட்டில் அந்துவன் என்னும் வேளாண்மரபினர் வாழ்வதும், பதிற்றுப்பத்து போன்ற சங்க நூல்களையும் குறிப்பிடலாம். மேலும் ஒரு கட்டுரை:
http://www.keetru.com/vizhippunarvu/may06/sivakumar.php

பேரா. கா. இராஜன் அவர்களின் கட்டுரை:
http://www.keetru.com/puthuezhuthu/jul06/rajan.php

இரா. கலைக்கோவன், பாராட்டுவோம்.
http://www.varalaaru.com/Default.asp?articleid=339


மான்குளம் கல்லெழுத்துக்கள் சமண முனிவர்களைக் குறிப்பிடுவது. தமிழில் கி.மு.3-ஆம் நூற்றாண்டு காலம் அது என்பர். அதே காலகட்டத்து பழவெழுத்து மதுரை அரிட்டாபட்டியிலும் கண்டறியப்பட்டுள்ளது.
http://www.hindu.com/2003/09/15/stories/2003091503060500.htm

தற்போது புலிமான்கோம்பை நடுகற் கல்வெட்டுகளும் கி. மு. 3-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளுடன் சேர்ந்துள்ளன. அத்துடன், நிலக்கோட்டை வட்டம் தாதப்பட்டி நெடுங்கல் 'மென்ஹிர்' ஈமச்சின்னப் பழைய எழுத்துக்களும் கிடைத்துள்ளன:
http://www.hindu.com/2006/09/24/stories/2006092406750300.htm

ஊடகங்களில் நெடுங்கல்லில் உள்ள வாசகம் தரப்படவில்லை. ஈரோடு செ. இராசுவிடமும்,
கா. ராஜன் அவர்கள் கி. நாச்சிமுத்துவுக்கு அனுப்பிய மின்மடலிலும் அறிந்த தொடரை இங்கே
நீங்கள் படிக்கத் தருகிறேன்:
" ..தன் அடிஓன் பாகல் பாளி கல் " என்று நெடுங்கல்லில் வெட்டப்பட்டுள்ளது.

"தன்" என்பதன்முன் உள்ள எழுத்துக்கள் அழிந்தன. அது சாத்தன், ஆதன், பூதன் என்பதாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். அடிஓன் = அடியோன். பாகல் என்பது ஒருவரின் பெயர்.

பாகல் என்ற சொல் பலாக்காய், பாகற்காய் என்ற அர்த்தத்தில் இலக்கியச் சான்றுகளில் பயில்கிறது. பாகல் என்றால் பச்சை என்ற பொருள் இருக்கலாம். கருப்பராயன் என்பதுபோல், பச்சைமால், அல்லது பச்சைவண்ணராகிய பாரிசநாதர் (ஒரு தீர்த்தங்கரர்) என்னும் பொருளில் பாகல் என்ற பெயர் ஏற்பட்டதா?? அவர் குரவடிகளா?

தமிழ் எழுத்தின் தாக்கம் பட்டிப்ரோலு பெட்டகப் (Bhattiprolu casket inscription) பழஎழுத்தில் உள்ளது என்பதாக அறிஞர் கொள்வர். ஏற்கெனவே தமிழுக்கும், பாலி மொழிகளுக்கும் தெற்கே (தமிழகம், இலங்கை) முதலில் எழுத்துக்கள் உருவாகி வடக்கே எழுத்துமுறை பரவியதாகச் சொல்லும் சில அறிஞரின் கருதுகோள் அரிட்டாபட்டி, புலிமான்கோம்பை, தாதைப்பட்டிப் பண்டை எழுத்துக்களால் வலுப்பெறுகிறது.

அனுராதபுரம், ஆதித்தநல்லூர் முதுமக்கள் தாழிகள் - இவற்றில் கிடைக்கும் கிமு. 3, 4 நூற்றாண்டு எழுத்துக்களும் இப்புதிய கண்டுபிடிப்புகளும் மேலும் ஆராயப் படுதல் வேண்டும். சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக, பிராமி எழுத்துக்களுக்கும் செமித்திக் (மேற்கு ஆசியா) எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்புகளை ஜார்ஜ் 'ப்யூஹ்லர் போன்றோர் குறித்துள்ளனர். கடல்வழி நடந்த வணிகத்தால் ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் எழுத்துமுறை பரவியதா? என்றறிய ஆய்வுகள் இனி நிகழும் என்று நம்பலாம். இந்தியாவில் வடக்கே வேதங்களை எதிலும் எழுதவே கூடாது என்ற தடை இருந்தது. செய்யாமொழி(1), எழுதாமறை என்பது வழக்கம். மொழியியலில் இந்திய எழுத்துக்களுக்கு விஞ்ஞான அடிப்படையில் நெடுங்கணக்கு வகுத்த பாணினி தன் இலக்கணத்தை வாயால் மொழிந்தார் என்பது இந்தியவியல் (Indology) கோட்பாடு. வணிகம் நிமித்தமாக சிரமண சமயங்கள் (சமணம், பௌத்தம்) ஆதரித்த எழுத்தறிவு வடக்கே தெற்கிலிருந்து போய், அசோகச் சக்கரவர்த்தியால் அரசாணைக் கல்வெட்டுகள் மூலம் பரவலாக்கப் பட்டனவா?

இக் கேள்விகளுக்கு விடைகள் தொல்பொருள் ஆய்வுகள் இனி வரும் ஆண்டுகளில் பல்கலைக்கழக ஆய்வேடுகளில் வெளிவரும். அரிய கல்வெட்டுகளைக் கண்டுபிடித்த தொல்லறிஞருக்கு முதலில் நாம் நன்றி பாராட்டுவோம்.

நா. கணேசன்

ஆய்வுத்துணை:
[1] A. Parpola, Pandaie and SItA: On the historical background of the Sanskrit epics, Journal of the American Oriental Society 122 (2), 2002 p. 361-373.
[2] S. U. Deraniyagala and M. Abeyratne. 'Radiocarbon Chronology of Anuradhapura, Sri Lanka: A Revised Age Estimate'. p.759-789
[3] Coningham R.A.E. 1995. The Origins of the Brahmi Script Reconsidered: The New Evidence from Anuradhapura. Minerva 8(2): 27-31.
[4] Coningham R.A.E. 2002. Beyond and Before the Imperial Frontiers: Early Historic Sri Lanka and the Origins of Indian Ocean Trade. Man and Environment 27: 99-108.
[5] Coningham R.A.E., Allchin F.R., Batt C.M. & Lucy D. 1996. Passage to India? Anuradhapur and the Early Use of the Brahmi Script. Cambridge Archaeological Journal 6(1): 73-97.
[6] Coningham R.A.E. 1995. Monks, Caves and Kings: A Reassessment of the Nature of Early Buddhism in Sri Lanka (Ceylon). World Archaeology 27: 222-242. South Asian Archaeology 1997 Vol. II, 2000, Roma, Italy
மேலும்,
https://www.dur.ac.uk/archaeology/staff/?id=2880&publications=1


குறிப்பு 1: செய்யாமொழி
பேரா. கி. நாச்சிமுத்து (கேரளப் பல்கலை)
"திருவள்ளுவர் அடிப்படையில் சமணர். திருக்குறள் சமண நூலாகவே கருதப்பட்டு வந்தது. அவரும் அவருடைய குறளும் சமணரல்லாதாரால் தம் சார்பினதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுச் சமணருக்கு அன்னியமாக்கப்பட்ட வரலாற்றையே வள்ளுவமாலை காட்டுகிறது" என்பார். 11-ஆம் நூற்றாண்டு வள்ளுவமாலைப் பாடல், செய்யாமொழி என்று அபௌருஷேயத்வம் என்னும் வைதீக தத்துவத்தை மொழிபெயர்க்கிறது.

         செய்யா மொழிக்கும் திருவள் ளுவர்மொழிந்த
         பொய்யா மொழிக்கும் பொருளொன்றே - செய்யா
         அதற்குரியர் அந்தணரே; ஆராயின் ஏனை
         இதற்குரியர் அல்லாதார் இல் (வள்ளுவமாலை 28)

         ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நால்மறையைப்
         போற்றியுரைத்து ஏட்டின் புறத்தெழுதார் - ஏட்டெழுதி
         வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
         சொல்லிடினும் ஆற்றல்சோர்வு இன்று (வள்ளுவமாலை 15)


செய்யாமொழியை எழுதத் தடை இருந்திருக்கிறது. எனவே, தெற்கில் எழுத்து முதலில் தோன்றியதோ?

------

It will be very interesting to find Tamil Brahmi I phase inscriptions where
distinct maatrai markers for vowels, a and aa in Tamil inscriptions.
More about the Tamil-type phenom in BhaTTiprOLu in Andhra Pradesh:
http://www.services.cnrs.fr/wws/arc/ctamil/2006-10/msg00000.html

பத்திரிகைச் செய்தி:

2300ஆண்டுகள் பழமைவாய்ந்த தூயதமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு:
Apr 5 2006

2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய தமிழ் கல்வெட்டுக்கள் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இவையே மிகவும் தொன்மை வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சைப் பல்கலைக்கழக கல்வெட்டியியல் மற்றும் தொல்லியல்துறையினரால் கடந்த மாதம் தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டி பகுதிக்கு அண்மையாகவுள்ள புலிமான்கோம்பை என்ற ஊரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சியில் இக்கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழரின் பொற்காலம் என போற்றப்படும் சங்க காலத்திற்குரிய மூன்று கல்வெட்டுக்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றும் அண்ணளவாக மூன்று அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டவையாக உள்ளன.

இவை ஈமச்சின்னங்களில் நாட்டப்பட்ட நடுகற்களாக இருக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட முதல் கல்வெட்டில் 'கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ கோள்" என பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'கூடல் என்ற ஊரில் நடைபெற்ற ஆகோள் பிணக்கில் உயிர் நீத்த பேடு தீயன் அந்தவன் என்பவனுக்கு எடுத்த கல்" என பொருள் கொள்ளலாம்.

இரண்டாவது கல்வெட்டில் இரு வரிகள் எழுதப்பட்டுள்ளன. அனால் அக்கல்வெட்டின் முன்பகுதி உடைந்து காணப்படுவதால் அதில் எழுதப்பட்டுள்ளவற்றில் சில சொற்களே காணப்படுகின்றன. முதல்வரியில் 'அன் ஊர் அதன்" என்றும் இரண்டாவது வரியில் 'ன் அன் கல்" என்றும் எழுதப்பட்டுள்ளது.

மூன்றாவது கல்வெட்டில் 'வேள் ஊர் பதவன் அவ்வன்" என பொறுக்கப்பட்டுள்ளது. 'வேற்று ஊரைச் சேர்ந்த அவ்வன் என்பவனுக்காக எடுக்கப்பட்ட கல்" என இது பொருள்படுகிறது.

இக்கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துக்கள் முற்று முழுதாக தூய தமிழ் எழுத்துக்களாகும். இதில் எழுதப்பட்டுள்ள சொற்கள் சங்ககால இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்பிராமி வரிவடிவ ஆய்வில் புலமை பெற்ற ஐராவதம் மகாதேவன் அவர்கள் இந்த கல்வெட்டுக்களைப் பார்வையிட்டு, அவை பற்றி கருத்துத் தெரிவிக்கையில், தமிழகத்தில் கிடைத்த தமிழ்பிராமி கல்வெட்டுக்களில் பிராகிருத சொற்கள் கலந்து வரும். ஆனால் இக்கல்வெட்டுக் து}ய தமிழ்ச்சொற்கள் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இவையே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பழமை வாய்ந்தவையாகும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று ஊடகர்களிடம் இது தொடர்பில் தெரிவித்ததாவது: இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளை, கள ஆய்வு மூலமும், அகழாய்வு முலமும் வெளிக்கொணர்ந்து, சங்க கால வரலாற்றை அறிவியல் அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்திருப்பது, தமிழ்மொழிதான் மிகப்பழமையான மொழியென நிரூபிக்க ஆதாரமாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

இக்கல்வெட்டுக்கள் மீட்பின் மூலம் சங்க காலத்தமிழர்கள் பரவலாக எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

இக்கல்வெட்டுக்கள் மீட்கப்பட்ட புலிமான்கோம்பையும் அதைச்சூழ்ந்துள்ள பகுதிகளிலும் பெருமளவான ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.