Friday, December 28, 2007

உலகம் உன் கையில்!

உலகம் உன் கையில்!

தம்பி!
கொஞ்சம் நில்.
என்ன சுமை உன்முதுகில்?

கவலைகள் கைக்குழந்தைகள்
அல்ல.
அவற்றைக் கீழே இறக்கிவிடு

நீ சிரித்தால் உலகம் உன்னுடன்
சேர்ந்து சிரிக்கும்.
அழுது கொண்டிருப்பவனின்
நிழல் கூட அவனை நெருங்கப்
பயப்படும்!

காற்றைப் பதுக்கி வைப்பதால்
கால்பந்து உதை வாங்குகிறது!
புல்லாங்குழலோ
காற்றை வெளியேற்றி இசை
தருவதால்
கலைஞனிடம் முத்தம் பெறுகிறது!

வெளிச்சத்துக்கு வா!
பூக்களிடம் பேசு!
மரங்களிடம் நட்பு வை.
காக்கை குருவிகளிடம் கவிதை
கேள்!

நம்பிக்கை வீணையை
நன்கு முழக்கு!
இமயமலை கூட எதிர்வந்து
நிற்கும்!
கவலைப் பிசாசு கை கட்டிநின்று
பணிவிடை செய்யும்! - உன்
பாதம் பிடிக்கும்!

நம்பிக்கை ஒரு நல்ல விமானம்
விண்ணிலும் பறக்கும்! மேலும்
பறக்கும்!
சந்திர மண்டலத்திலும்
தரையிறங்கும்!

நம்பிக்கைச் சங்கொலி
நன்கு முழங்கினால்
வேலை நிறுத்தங்கள்
விலகிப்போகும்!
ஆலைகள் எல்லாம்
ஆலயங்கள் ஆகும்!

பஞ்சாலை நூலைப் பலரும் அறிவர்
நெஞ்சாலை நூற்கும் நூல்?
நம்பிக்கை நூல்!
எந்தப் புயல்
எங்கு மையம் கொண்டால் என்ன?
இதயக் கப்பலை - நம்பிக்கை
முனையில்
நங்கூரம் பாய்ச்சு!
கலங்காத நம்பிக்கை கப்பலைக்
காக்கும்!
கரை கொண்டு சேர்க்கும்!

உள்ளே நாம் சுவாசிக்கும்
உட்காற்றும் வெளிக் காற்றும்
நம்பிக்கை நூல் இழை
நடத்தும் நாடகம்!

                   ~ வானம்பாடிக் கவிஞர் 'சக்திக்கனல்'


அனைவருக்கும் இனியதாய் 2008 இலங்குவதாக!
நா. கணேசன்

12 comments:

  1. புத்தாண்டு வாழ்த்துகள்!!

    ReplyDelete
  2. உயர்திரு. ஐயா,

    வணக்கங்கள் பல. நம்பிக்(கை)கவிதை நன்று. எழுதிய அவருக்கும் என் வணக்கம். :-)

    ReplyDelete
  3. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். கூடவே நட்சத்திரம் ஆனதற்குமே வாழ்த்துக்கள்.

    தேவர் மகன் ஹிந்தியில் விராசத் என்ற பெயரில் வந்தது. அனில் கபூர், அம்ரீஷ் புரி, தபூ ஆகியோர் நடித்தது. அதன் படப்பிடிப்பும் உங்கள் வீட்டில்தான் நடந்ததா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    எனக்கும் கவிதைக்கும் ரொம்ம்ம்ம்ப தூரம். sorry to say that.

    ReplyDelete
  5. உங்களின் எழுத்துகளைப் பார்த்தவிடத்தில் எல்லாம் தவறாமல் படித்து வரும் வாசகன் நான். நீங்கள் 2008 ஆண்டின் முதல் தமிழ்மண விண்மீனாக வருகிறீர்கள் என்று நா.கண்ணன் ஐயா இரண்டு நாட்களுக்கு முன்னர் சொன்னார். மிக்க மகிழ்ச்சி.

    வாழ்த்துகளும் வணக்கங்களும்.

    ReplyDelete
  6. புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்.படிக்க காத்திருக்கிறேன் உங்களின் பதிவுகள்ய்.

    ReplyDelete
  8. உலகம் உன் கையில் என நம்பிக் -கை வைக்கும் படி கூறுகிறீர்கள். வருச தொடக்கத்தில்
    நம்பிக்கை தருகிறீர்கள்...
    இனிய புதுவருட வாழ்துக்கள்!!!

    ReplyDelete
  9. ஐயா. அண்மையில் நா. கண்ணன் ஐயா நம்மாழ்வார் எழுதிய அகவலைப் பற்றி ஒரு இடுகையை மீள்பதிவு செய்தார். அதன் பின்னூட்டத்தில் அந்த அகவலுக்குப் பொருள் கேட்டிருந்தேன். உங்களிடம் அந்த புத்தகம் இருப்பதாகச் சொல்லியிருந்தார். இயன்றால் அதனை ஒரு இடுகையாக இடுங்கள். இல்லையேல் எனக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள். என் மின்னஞ்சல் முகவரி kumaran dot malli at gmail dot com. நன்றி.

    ReplyDelete
  10. Anonymous12:24 AM

    உங்களுக்கு
    என்
    இனிய புத்தாண்டு
    வாழ்த்துக்கள்
    அன்புடன்
    ரஹீம்
    துபாய்.

    ReplyDelete
  11. மறுமடல்களில் அன்பைப் பொழிந்த
    நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    ராகவன் சார், இந்தி விராசத் படம்
    வலையில் இருக்கிறதா? அதில் இருக்கும்
    வீடு தமிழ்நாட்டில் இருக்காது என
    நினைக்கிறேன்.

    குமரன், வாழ்த்துக்கு நன்றி.
    சில பழைய புத்தகங்களை வலையேற்ற
    உங்கள் உதவி வேணும்.

    தங்கமணி, பானு, குமார், சந்துரு,
    சிபி, யோகன், ரகீம் - தங்களின் வருகைக்கு நன்றி.

    நா. கணேசன்

    ReplyDelete
  12. கட்டாயம் என்னால் ஆன உதவிகளைச் செய்கிறேன் ஐயா. தங்களுக்கு ஒரு தனிமடல் அனுப்புகிறேன்.

    ReplyDelete