சிந்து சமவெளியின் 4000+ முத்திரைகளில் உள்ள கலையைச் சில பத்தாண்டுகளாய் ஆழ்ந்து படித்து வருகிறேன். முன்பு ஐராவதம் மகாதேவன் ஜல்லிக்கட்டு என்று இந்து நாளிதழில் விவரித்திருந்த சிந்து முத்திரை கொற்றவை/துர்க்கை மயிடனுடன் போரிடும் காட்சி என்று எழுதி இருந்தது நினைவிருக்கலாம்:
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html
கோவையில் நடந்து முடிந்த பெரிய மாநாட்டில் என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சிந்து முத்திரைகளில் உள்ள சுமார் 400 சின்னங்களை ஐராவதம் மகாதேவனும், அசோகன் பார்ப்போலாவும் வரையறுத்துள்ளனர். அவற்றைக் கணினி மயமாக்கலின் அத்தியாவசியத்தையும், யூனிக்கோடு செய்முறை விதிகளையும் குறித்துச் சொற்பொழிவு ஆற்றினேன். என்னை அறிமுகம் செய்துவைப்பவர் ஸ்டான்போர்ட் பல்கலையில் பொறியியற் பேராசிரியராய் விளங்கும் ஆ. பால்ராஜ் அவர்கள். மொபைல் பேசிகளில் முக்கிய நுட்பங்களாகிய WiMax, WiFi, 4G கண்டுபிடிப்புகளில் பெரும் பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய வானியல் விஞ்ஞானி ‘சந்திரயான்’ ம. அண்ணாதுரை போலப் பால்ராஜ் அவர்களும் பொள்ளாச்சியில் பிறந்தவர் ஆவார்.
சிந்து சமவெளியில் திராவிடர் சமயம் - கோவைப் பொழிவின் காணொளி இதோ:
இச் சொற்பொழிவு 2007 ஆய்வுக் கட்டுரையை அடிப்படையாய்க் கொண்டது.
Gharial god and Tiger goddess in the Indus valley:
Some aspects of Bronze Age Indian Religion
N. Ganesan, 2007 essay
In the Mature Harappan period seals and tablets produced about 4000 years ago, gharial crocodile is portrayed as a 'horned' being. As in the famous Pashupati seals (M-304), this horned gharial deity is the central figure surrounded by a typical set of animals. A female being, often connected with tigers, is seen coupling together with the gharial in a fecundity scene in an Indus Valley Civilization (IVC) creation myth. A number of seals show a man on the tree along with a tiger below. This shaman on the tree and tiger motif is linked archaeologically with the gharial deity in the sky, and the Mesopotamian Gilgamesh-like goddess shown between two tigers in IVC tablets and moulds. Also, the same shaman on tree along with a tiger motif is seen in the 'horned' gharial "Master of Animals" seals. A comprehensive evaluation of the imagery recorded in the Indus glyptic art is needed to understand the pan-Indus founders' myth cycle, and it is illustrated with pictures of the IVC sealings. These religious myths of the gharial and tiger divinities are at least as important as the tree goddess worship in M-1186 with a shaman, markhor goat and seven women in front of a bodhi fig tree.
சிந்து சமவெளியில் திராவிடர் சமயம்
Posted by
நா. கணேசன்
at
6
comments
ஹூஸ்டன் தமிழ்ப் பள்ளிகள் (பாரதி கலைமன்றம்) ஆண்டுவிழா நிகழ்ச்சி!
நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்களையும், அவர்களுக்குத் தமிழ்ப்பால் ஊட்டிடும் பெற்றோர், ஆசிரியர்களைக் காணவும், கலந்துரையாடி உயர்கருத்துக்களை அளிக்கவும் அரியதோர் வாய்ப்பு!
அனைவரும் வருக, அருந்தமிழ் பருக
நா. கணேசன்


Posted by
நா. கணேசன்
at
1
comments
`யுனிகோடுக்கு' மாற 7 பேர் குழு அமைப்பு - செயலர் தேவிதார் அறிவிப்பு
இந்திய அரசாங்கம் யூனிக்கோட் எழுத்துருவை தமிழ் போன்ற எல்லா இந்திய மொழிகளுக்கும் பயன்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை மாநிலங்களில் நடைமுறைப்படுத்தச் சில காலம் செல்லலாம். செம்மொழி மாநாடு இதைச் சாதிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
சொற்பகுப்பாய்வு பற்றிப் பத்ரி சேஷாத்ரியின் பதிவில் பார்த்தேன்.
http://thoughtsintamil.blogspot.com/2010/04/blog-post_17.html
முனைவர் மு. இளங்கோ அரசு நிறுவனங்களில் இணையம் பற்றி உண்மைநிலையை பின்னூட்டம் செய்திருந்தார்:
“ பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களின் கணினி மொழியியல் முயற்சி வறண்ட பாலைநிலைத்தில் ஒரு சுனை நீருக்குச் சமம்.பெரும்பாலான ஆசிரியர்கள் கணினியில் ஆர்வம் காட்டவில்லை. அரசு நிறுவனம் ஒன்றுக்குப் பேசுவதற்குச் சென்றேன்.
வீடியோ கான்பரசிங் வசதி உண்டு என்று அழைத்துச் சென்றனர்.மிகப்பெரிய கற்பனையில் சென்ற எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.இருந்த பல கணினிகள் யாவும் பழுது.பிளக் பாயிண்டு கூட சரிவர இல்லை. நூலாம்படை படிந்து கிடந்தது.இந்த நிலையில்தான் தமிழ் இணையத்தை நாம் அறிமுகம்
செய்யவேண்டியுள்ளது.”
யாப்பாய்வு, சொல்லாய்வு போன்றவற்றில் தமிழர் மிகுதியாக ஈடுபடக் கல்லூரிகளிலும், அரசாங்க அலுவலகங்களிலும் உலகத்தரமான இந்திய அரசின் மின்னாளுகை நடைமுறையானால் வாய்ப்புண்டு.
செ. ச. செந்தில்நாதன் முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணனைப் பேட்டி கண்டு 2007-ல்
காலச்சுவட்டில் எழுதியிருந்தார். அப்போது முனைவர் மு. ஆ. கூறியிருந்தார்:
http://valai.blogspirit.com/archive/2007/02/28/science.html
”இப்படித்தான் கணித்தமிழ்மீதும் ஈடுபாடு வந்ததா?
அந்த ஈடுபாட்டில்தான் கணிப்பொறியியல் துறையில் ஆரம்பத்திலிருந்து (நான் நியூயார்க்கில் இருக்கும்போது), தமிழை எப்படிக் கணிப்பொறியில் பயன்படுத்த முடியும் என்று ஆராய்ந்தேன். அப் போது நானே கணிப்பொறி வாங்கிவைத்து, சின்னச் சின்ன எழுத்துகளை உருவாக்க முயற்சித்தேன். பெரிய "ப" எழுத்து போட்டு. 'ஆ! தமிழ் உருவாகிடுச்சு' என்று மகிழ்ச்சி அடையக்கூடிய நிலைமை. மொழி நம்முடைய மொழி. கலைஞர், முரசொலி மாறன் போன்றோர்களிடம் அடிக்கடி சொல்வேன்:. 15ஆம் நூற்றாண்டில் அச்சுப் பொறி வந்தது. எந்தெந்த மொழிகள் அந்த அச்சுப்பொறியில் பயன்படுத்தப்படவில்லையோ அதெல்லாம் செத்து மடிந்துபோய்விட்டன. அச்சில் வராத மொழி அழிந்துபோனது. அது மாதிரி இன்றைக்குக் கணிப்பொறி. ஓரளவுக்கு எளிமையான முறையில் பலரும் பயன்படுத்தக்கூடிய வகையில் கணிப்பொறியில் தமிழ் வந்தால்தான் தமிழ் மொழியினுடைய மதிப்பு, தமிழனின் செயல்பாடு இதெல்லாம் உயரும். இல்லையெனில் ஆங்கிலம் படித்தவன்தான் கணிப்பொறியைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை வரும். இதனால் 100க்கு 95 சதவீத மக்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் எட்டாமல் போய்விடும். அல்லது கணிப்பொறியைப் படிப்பதற்குத் தமிழ் மொழியைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலமே படிக்கலாம் என்ற நிலைமை உருவாகும். அது தமிழுக்குக் கேடு.
நான் எதிர்பார்த்த அளவுக்கு கணித்தமிழ்த் துறையில் நாம் இன்னும் முன்னேறவில்லை என்பது வேறு விஷயம். எந்த அளவு வந்திருக்க வேண்டும், ஏன் வரவில்லை, அதனால் என்ன பிரச்சினை . . . இதையெல்லாம் பார்க்க வேண்டும். இருந்தாலும் அதை எப்படி அரவணைத்து, இருக்கிற சர்ச்சைகளைக் குறைத்து, ஈடுபாட்டைப் பெருக்குவது என்பதை என் முழு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டிருந்தேன்.
இன்றைக்கு இருக்கிற நிலைமையில் சர்ச்சைகளையெல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு நாம் எல்லோரும் ஒருங்கிணைத்து முன்னேற்றிச் செல்ல முடியும். நேரத்தை வீணாகக் கழிக்கக் கூடாது. இல்லையென்றால் தொழில்நுட்பம் மக்களுக்கு எட்டாமல் போயிடும். அது வளர்ந்த நிலையில் எட்டுவது மிகவும் கடினம். எல்லோரும் தமிழ் படிக்காமல் கணிப்பொறிக்காக ஆங்கிலம் படிக்கப் போனால், மீண்டும் அந்தத் தலைமுறை மக்களைத் தமிழ் படிக்க அழைப்பது கடினம் என்று சொன்னேன்.”
தினமணி, தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிகைகளில் அரசு அலுவலகங்களில் யூனிகோடு எழுத்துரு வருவதாக அரசின் ஐ.டி. தொழிநுட்ப செயலாளர், திரு. தேவிதார் அறிவித்துள்ளமை தெரிகிறோம். தினத்தந்தி செய்தி:
http://www.dailythanthi.com/article.asp?NewsID=557283&disdate=4/1/2010
[விக்கி] ”போட்டி எப்படி?
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர்கள், தமிழகத்தில்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், விக்கிபீடியாவில் இடம்பெறத்தக்க கட்டுரைகளை, 250 முதல் 500 வார்த்தைகளுக்கு மிகாமல், இன்டர்நெட் மூலமாக தமிழில் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். இதற்காக ஆன்லைனில் எங்கள் இணையதளத்திலேயே (http://ta.wikipedia.org) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அனுப்பும் கட்டுரைகள், சொந்தமானவையாக இருக்கவேண்டும். தனிப்பட்ட நபர்கள், அரசியல், மத விமர்சனம் போன்ற ஆட்சேபகரமானவற்றை அனுப்பக்கூடாது. அவரவர் படிக்கும் துறை பற்றி எழுதலாம். தகவல் பக்கங்கள் ஒருங்குறியில் (யுனிகோட்) அமையவேண்டும். வெற்றி பெறுவோருக்கு சிறப்பான பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு ஆனந்தகிருஷ்ணன் கூறினார்.
`யுனிகோடுக்கு' மாற 7 பேர் குழு அமைப்பு
``இணைய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் 8,300 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு விரைவில் பரிசுகள் அளிக்கப்படும்'' என்று அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.
``விக்கிபீடியா என்பது தனி அமைப்பு. தமிழக அரசுதான் இதில் முதல்முறையாக அக்கறையெடுத்து மாணவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. தமிழக அரசு அலுவலகங்களில் `யூனிகோட்' எழுத்துருவை `பான்ட்' கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. (இதனால் இணையதளத்தில் தமிழில் அனுப்பப்படும் தகவல்களை தமிழ் எழுத்துரு இல்லாமலேயே ஒருவர் அப்படியே படித்துவிட முடியும். அதை படிப்பதற்காக ஒரு எழுத்துருவை `டவுன்லோடு' செய்ய தேவையில்லை. யூனிகோட் மிக எளிமையானது). இதுபற்றி முடிவெடுக்க 7 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. உலகத்தமிழ் மாநாட்டுக்கு முன்னதாக இப்பணி முடிக்கப்படும்'' என்று டேவிதார் தெரிவித்தார்.
அப்போது கவிஞர் கனிமொழி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.”
செ.ச. செந்தில்நாதன், இணையம், 2007:
http://ezilnila.com/archives/597
*செம்மொழி மாநாடு இன்னும் 76 நாள்கள்:- கம்பியில்லா இணைய வசதி வளாகமாகிறது 'கொடிசியா'*
தினமணி, 8 ஏப்ரல் 2010
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் கொடிசியா தொழிற்காட்சி வளாகம் கம்பியில்லா இணையதள அலைவரிசை வசதி உடைய வளாகமாக மாற்றப்படுகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடத்தப்படுகிறது. கான்பூர் ஐ.ஐ.டி தலைவர் மு.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் தமிழ் இணைய மாநாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் தற்போது குளிரூட்டப்பட்ட வசதி உள்ள 'இ' பிளாக் அரங்கம் இணைய மாநாட்டுக்கு ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இணைய மாநாட்டையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணைய போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இணைய மாநாடு நடைபெறும் அரங்குக்கு இணையதள இணைப்புக்காக பி.எஸ்.என்.எல் நிறுவனம் மூலமாக கம்பி இழை கேபிள்கள் அமைக்கப்படுகின்றன.
இணைய மாநாடு நடைபெறும் அரங்கம், பத்திரிகையாளர்களுக்கான அரங்கம், பொது தகவல் மையம் ஆகியவற்றில் துரித இணைய இணைப்பு வசதியுடன் கூடிய கணினிகள் நிறுவப்படுகின்றன.
மேலும் கொடிசியா தொழிற்காட்சி வளாகம் முழுவதும் கம்பியில்லா இணையதள அலைவரிசை வசதி கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆயத்தப் பணிகள் தொடர்பாக எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநரும், இணைய மாநாட்டின் உறுப்பினருமான சந்தோஷ் பாபு, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தை வியாழக்கிழமை (08/04/10) பார்வையிட்டார்.
இணைய மாநாட்டுக்குத் தேவையான வசதிகளைச் செய்வது தொடர்பாக பி.எஸ்.என்.எல், தேசிய தகவல் மைய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இணையதள இணைப்பு, அலைபேசி சேவை ஆகியவற்றுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பி.எஸ்.என்.எல் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்
Posted by
நா. கணேசன்
at
3
comments
வசந்தபாலனின் அங்காடித்தெரு - பேரா. மு.இராமசுவாமி
வசந்தபாலனின் அங்காடித்தெரு
தமிழ்ச் சமூகம் பேச மறந்த கதை!
பேரா. மு.இராமசுவாமி
(உங்கள் நூலகம் இதழில் வெளிவந்தது.)
ஒளிப்படம் மற்றும் ஒலிலயக் கோர்வைகளின் நிரல் தொகுப்பில் யதார்த்தச் சலனத்தை உயிரோட்டமாய்ப் பதிவுசெய்யும் திரைப்படக்கலையின் உலகப் பெருமிதங்கள் பற்றிப் பேசுகையில், பெருமிதத்திற்குரிய இலக்கண, இலக்கிய வரலாறுகளைக் கொண்டிருக்கிற தமிழில் உருவான திரைப்படங்களின் தராதரம் பற்றித் தலைநிமிர்வுடன் பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் மிக அரிதாகவே வந்துசெல்லும் நிலையில், 'வெயில்' வசந்தபாலனின் 'அங்காடித்தெரு', நாம் தலைநிமிர மீண்டுமொரு பெரிய சந்தர்ப்பத்தை நமக்கு உருவாக்கித் தந்திருக்கிறது. மெல்லிய தயக்கங்களையும் தவிடுபொடியாக்கி விட்டிருக்கிறது. 'இளமையில் வறுமை'யின் காரணமாய்ச் சொந்த ஊரில் பிச்சை எடுக்கத் தயங்கி, 'சென்னை நகரக் கன'வில் ஊர், உறவைத்தாண்டி, ரங்கநாதன் தெருவில் 'நிமிர்ந்து' நிற்கும் 'சரவணா ஸ்டோர்ஸ்', 'ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ்' அருகில் அய்ந்து மாடியில் அதேபோல் 'நிமிர்ந்து' நிற்கும் 'செந்தில்குமார் ஸ்டோர்'ஸை நடத்தும் தெக்கத்திக்காரச் சொந்தச் சாதி முதலாளியான 'அண்ணாச்சி'யிடம் ஆணும் பெண்ணுமாய் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துச் 'சக்கை'யாகத் தங்கள் இரத்தத்தை உறிஞ்சவிட்டு, தொழுவத்து மாடுகளைப் போல் அவர்கள் போடும் சோத்தைத் தின்று 'பன்றி'க்கூட்டங்களாய்ப் படுத்து உறங்கி, பெண்ணென்றால் மாரைப் பிசைகிற, ஆணென்றால் அடித்துத் துவைக்கிற எல்லாவகை இழிவுகளையும் அவமானங்களையும் கொடுமைகளையும் சகித்தும் புழுங்கியும் கொதித்தும் எதிர்த்தும் போராடியபடியே, அதன் தீராத பக்கங்களில் வண்ணம் பூசிய கவிதையாய் வாழ்வின் அழகைத் தேடிக் களிக்கும் எல்லா ஆண், பெண் இளைஞர்களின் வாழ்க்கையாயும் பதிவாகியிருக்கிறது 'அங்காடித்தெரு'!
இப்படியொரு அழகான தமிழ்ப் பெயரைப் புழங்க விட்டதற்கும் 'த்' போட்டு இலக்கணச் சுத்தமாய் தமிழ்த் திரைப்படத்தின் பெயரொன்று அமைந்துபோயிருப்பதற்கும் வசந்தபாலனுக்கு நன்றி சொல்லவேண்டும். இதைச் சொல்லக் காரணம், முதல்நாள் தஞ்சையில் படம் பார்த்துக் கொண்டிருக்கையில், பக்கத்திலிருந்தவர் தனக்கு அடுத்து இருந்தவரிடம் கேட்டார்: 'அங்காடித் தெருன்னா என்ன அர்த்தம்?' அடுத்தவர் சொன்னார்: 'மார்க்கெட் ப்ளேஸ்'. சரியோ தவறோ யோசிக்க வைத்ததற்குத்தான் அந்த நன்றி! நிஜமான இன்றைய ரங்கநாதன் தெருவும் அதிலுள்ள உண்மையான கடைகளும் நிழலான 'செந்தில்குமார் ஸ்டோர்ஸ்' மூலம் இயல்பான காட்சிகளாக்கப்படுகையில், கதையின் இயல்பில், உரையாடலின் அழுத்தத்தில், படமாக்கிய சாமர்த்தியத்தில், படத்தொகுப்பின் அழகில் நெறியாளுமையின் போக்கில் நிழலும் நிஜமாகிவிட, நிஜமாய் மூளையை உறைய வைக்கிற அத்தனை வலிக்கும் வேதனைக்கும் சமூக அவலத்திற்குமிடையே மெல்லிதாய்த் துளிர்க்கிற மனிதத்திற்கும் அசாத்திய நம்பிக்கைக்கும் நிஜமான சாட்சிகளாய் மனநிலையில் நம்மை ஆக்கியிருப்பதன் மூலம் அடையாளங்கள் இழந்து திரிகிற, நாம் பேச மறந்த ஒரு சமூகத்தவரின் மேல் நம்மைக் கரிசனம் கொள்ள வைத்ததில் வசந்தபாலன் என்கிற திரைப் படைப்பாளி தனித்துத் தெரிகிறார். தமிழ்ச் சமூகம் பேச மறந்த ஒரு வாழ்வியல் கதையை அழகாகத் திரையில் பதிவு செய்ததன் மூலம் சமூகப் பொறுப்பாளியாய் மிளிர்கிறார். காட்சிப்படுத்தலில் கூடுதல் குறைவுகள் இருக்கக்கூடும். ஆயின், படமாக்கல் முறையில், காட்டப்பட்டிருக்கிற அத்தனையும் நிகழக் கூடியதுதான் என்கிற நம்பகத்தன்மையைப் படம் பார்ப்பவரிடம் ஏற்படுத்தியிருப்பதற்கு, அவர்களின் வலியை உயிர்ப்புடன் உள்வாங்கிய வசந்தபாலனின் பிரயத்தனமே காரணமாயிருக்க முடியும்! இதைப் படமாக்குவதற்குத் துணிச்சலும் சமூகப் பொறுப்பும் அதற்கான அர்ப்பணிப்பும் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். அது வசந்தபாலனிடம் நிறைந்திருப்பது தமிழ்த் திரைப்பட உலகின் மீது நம்பிக்கை கொள்ள வைக்கிறது, 'யானை இருக்கிற எடத்துலதான் எறும்பும் இருக்குது' என்பதை உணர்ந்த கதையின் நாயகர்கள் ஜோதிலிங்கமும் சேர்மக்கனியும் ரங்கநாதன் தெருவின் மீது வைத்திருக்கிற நம்பிக்கையைப் போலவே!
ரங்கநாதன் தெருவின் நகைமுகம், அழுகைமுகம், இளிவரல்முகம், மருட்கைமுகம், அச்சமுகம், பெருமிதமுகம், வெகுளிமுகம், உவகைமுகமென்று அதன் பன்முகமும் பதிவாகிக் கதை நாயகமாக ரங்கநாதன் தெருவே இரத்தமும் சதையுமாய் அமைந்துபோயிருப்பதும் அறிமுகமே ஆகியிராத அல்லது கூடுதல் அறிமுகம் தேவைப்படுகிற முகங்கள் 'அங்காடித்தெரு' கதாபாத்திரங்களாய், கூட்ட நெரிசலுக்குள்ளும் நமக்கு நெருக்கமான புதிய முகங்களாய் உலவவிட்டிருப்பதால் அவர்களெல்லாம் இரத்தமும் சதையுமான ரங்கநாதன் தெரு மக்களாகவே மனதில் தங்கிப் போயிருப்பதும் தமிழுக்குப் புதிது! படம் தொடங்குகிற இடம் தி.நகரில் 'நிமிர்ந்து' நிற்கும் 'போத்தீஸ்'க்கு அருகிலிருக்கிற பேருந்து நிறுத்தம். சுற்றுப்புறத்தைப் பற்றிக் கவலைப்படாத, அப்பாவித்தனமும் அழகும் மட்டுமே கொட்டிக் கிடக்கும் மனசோடு குறும்பும் குதூகலமுமாய், ஓட்டமும் துள்ளலுமாய், கால்போன போக்கிலெல்லாம் வானம் சொட்டிய மழைநீரை ஒருவர் மேல் ஒருவர் இறைத்தபடி கால்களுக்குள் கவிதை பேசிய ஓர் இளங் காதல் இணை எதிர்பாராமல் எதிர்கொண்ட விபத்தில், கதை பின்னோக்கி விரிகிறது. சென்னை உதயம் திரையரங்கு அருகில் உண்மையாய் நடந்த விபத்தை -நிஜத்தை- நிழலாக்கிக் கோர்த்த பாங்கில், செய்தியாய் மட்டுமே நம்மைக் கடந்துபோன ஒரு துர்நிகழ்வின் பின்னிருந்த, உயிரோட்டமாய் உணர்வில் தோய்ந்த ஒரு வாழ்க்கை, ஒரு பெருங்கதையாடலாய் விரிவதே 'அங்காடித்தெரு'! இதற்குள் பெரும் பெரும் கதையாடல்களுக்கான சிறுசிறு நிகழ்வுகள் பின்னிப் பிணைந்திருப்பது இன்னுமொரு சிறப்பு!
கதை, ரங்கநாதன் தெருவிலிருக்கிற 'செந்தில் முருகன் ஸ்டோர்'ஸின் உள்ளேயும் வெளியேயும் அதை ஒட்டியிருக்கிற 'செந்தில் முருகன் ஸ்டோர்ஸ்' மெஸ்ஸிற்குள்ளும் 'செந்தில் முருகன் ஸ்டோர்ஸ்' பணியாளர்கள் தங்கும் கொட்டடிக்குள்ளும் சிலவேளை சென்னைத் தெருக்களுக்குள்ளும் நடக்கிறது. 'செந்தில் முருகன் ஸ்டோர்ஸ்'க்கு வெளியே ரங்கநாதன் தெருவில் ஜீவிக்கும் குள்ள கணேஷ்- சின்னத்தாய் வாழ்க்கை ஒரு பெருங்கதையாடலுக்கான நிகழ்வு என்றால், 'விக்கிறவன்தான் ஜெயிக்கிறவன்' என்று முப்பது வருடத்திற்கு முந்திய மனிதர்களை நம்பித் தெருவோரத்தில் கடை போட்ட பார்வையற்ற தஞ்சாவூர்க் கிழவர் குமரேசன் அய்யா இன்னொரு பெருங்கதையாடலுக்கான நிகழ்வு! இளமை முழுவதையும் துணிக்கடையில் நின்றே கொன்றுவிட்டு முதுமையில் 'வெரிகோஸ்' நோயால் தாக்குண்டு, மக்கிப்போகும் குப்பையாகப் பத்திரப்படுத்த யாருமின்றி, ரங்கநாதன்தெரு மண்ணிலேயே மரணத்தைத் தழுவியவர், இன்னொரு பெருங்கதையின் களமாகக்கூடியவர். வேலை கேட்டு யாரும் தராமல், தானாகவே கழிசடைக் கழிவறையைச் சுத்தம் செய்து ஒரு வேலையைத் தனக்கானதாய்ச் செய்து வாழ்க்கையை நகர்த்தும் பெயர் தெரியாத அவரும், பழைய துணிகளை மொத்தமாக வாங்கி அதை 'அயன்' செய்து புதிது போலவாக்கி பத்து ரூபாய்க்குத் தைரியமாய் விற்கும் பெயர் தெரியா இளைஞரும், வயதான காலத்தும் தன் உழைப்பை விட்டுவிடாது வாழ்க்கையை நகர்த்தும் இஸ்லாமியப் பெரியவரும் இன்னொரு இன்னொரு களமாகக் கூடியவர்களே! வானத்தையும் தொட்டுவிடும் வெறியில் 'நிமிர்ந்து' நிற்கும் 'செந்தில் முருகன் ஸ்டோர்'ஸில் வேலை செய்பவர்களிடம் 'மூத்திரம்' பெய்யக்கூட இல்லாத சுதந்திரம் வெளியே உதிரித்தொழில் செய்யும் இவர்களிடம் இருக்கிறது என்பதையும் அவர்கள் ஒவ்வொருவரும் முதலாளியாயும் யாரும் ஏமாற்றிவிடுவார்களோ என்ற அச்சவுணர்வு துளியும் இல்லாதவர்களாயும் இருப்பதைக் காட்டி அவர்களுக்குள் இழையோடும் மனிதத்தையும் 'காமிரா' அழகாகப் பதிவு செய்திருக்கிறது.
'செந்தில்முருகன் ஸ்டோர்ஸ்' துணிக்கடையில் வேலை செய்யும் 'சௌந்திர பாண்டிய'னின் பேடிமைத் தனத்தால் ரங்கநாதன் தெருவில் பிணமாய் விழுந்த 'செல்வராணி'யின் காதலும், வாழ்க்கை அனுபவங்கள் பெரிதாக எதுவுமின்றி, அப்பாவித்தனமும் கோபமும் மட்டுமே கொண்ட விளையாட்டுச் சிறுவனான 'ஜோதிலிங்கம்' வாழ்க்கையின் மேடு பள்ளங்களை அடுக்கடுக்காய் எதிர்கொண்டு,கால்களை இழந்த‘சேர்மக்கனி'யுடன் 'யானைகள் இருக்கும் இடத்திலேயே எறும்பாய்' நம்பிக்கை ததும்பச் சுறுசுறுப்புடன் வாழ்க்கையைத் தொடங்குவதும்,நடிகை சிநேகாவின் உண்மைப் பெயர் சுபாஷினி என்பது தொடங்கி அவருடைய புகைப்பட ஆல்பத்தைப் பொத்திப் பாதுகாப்பது வரைக்கும் 'பொறுப்புட'னும், கடவுள் வாழ்த்துப் பாடலைக் காதல் கடிதமாக்கிய புத்திசாலித்தனத்துடன், நடைமுறை வாழ்விற்குத் தகுந்தமாதிரியும் முடிவெடுக்கும் ஊத்தவாயன் 'மாரிமுத்து'-சோபியா காதலும் புதிதானவை. ஒவ்வொருவருக்குள்ளும் ஊறும் காதலை மறைத்துப் பெருங்கதையாடலுக்கான பெரும்பெரும் கதைகளை உள்ளுக்குள் தேக்கி வைத்து, வெறும் கல்லாக மட்டுமே வாழ்க்கையை நகர்த்தும் 'செந்தில் முருகன் ஸ்டோர்ஸ்' ஊழியர்கள் அனைவர் பற்றியும் அலசத் தொடங்குகிறது மனசு! அந்தவகையில் இந்த வட்டத்திற்குள் கொண்டு வரப்படாது விடப்பட்டிருக்கிற, அங்கு பணிபுரிந்து கொண்டிருக்கும் அனைவரின் வாழ்க்கையைப் பற்றியும் நம் மனசு அசைபோடத் தொடங்கி விடுகின்றது. இதில்தான் வசந்தபாலன் என்கிற படைப்பாளி விதந்து தெரிகிறார்.
'மாரக் கசக்கினான்; நான் பேசாம நின்னுகிட்டிருந்தேன்' எனும் இயலாமையின் உச்சம் தந்த வேதனைப் பொருமலைக் கொட்டிக் குமுறுவதற்கோ ஆதரவுக் கரமாய்ப் பற்றி அழுவதற்கோ யாருமின்றி, வாடிக்கையாளரிடம் துணியைப் பற்றிப் பேசுகிற வியாபார சாமர்த்தியமாய்க் கடைத் துணிகளை எடுத்து வாடிக்கையாளர்களிடம் விரித்துக் காட்டியபடி, ஜோதிலிங்கத்திடம் கனி விட்டேத்தியாய்ப் பேசுகிற சூழல் கொடூரமானது. இதன் எதிர்நிலையில் சாய்ந்து கொள்ளும் தோளாய், ஆதரவுக் கரமாய்க் கனிக்கு ஜோதிலிங்கம் ஆனபின்பு, 'விட்டு விடுதலையாகும்' சமயத்திற்கான சூழலை நெருங்குகிறபோது, 'கண்ட எடத்ல கை வைக்கிறாம்லெ' என்று அத்தனைப் பேர் முன்னிலையிலும் உரிமையுடன் ஜோதிலிங்கத்திடம் வெடிப்பது, 'அடித்துத் தொவைடா' என்பதன் பிறிதுமொழியாயிருக்கிறது. மொழியை அளவாகப் பயன்படுத்தி, ஒரு சமூகத்தின் உள்ளார்ந்த வலியை அருமையாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் ஜெயமோகன்!. கூட்டத்திற்குள்ளிருந்துதான் தன்னுணர்ச்சிகளையும் அவர்களால் பகிர்ந்து கொள்ள முடிகிற அவலம் கொடூரமானது. அவர்களின் மேல் பரிதாபத்தை உண்டுபண்ணக் கூடியது. கனி, தன் தங்கை திரும்பிச் செல்லும்போது ஜோதிலிங்கத்தைப் பற்றி விசாரித்ததைக் கூறுகிறபொழுது, 'நீ என்ன சொன்னெ?' என்று குறும்பாக ஜோதிலிங்கம் கேட்கவும், கனி, 'சிரிச்சேன்' என்று கவிதையின் சிதறலாய்க் கூறுகிற இடம், காலையில் கடைக்கு வேலை செய்யக் கூட்டமாகப் பேசிக்கொண்டு வரும்போது! நெகிழ்வான கணங்களையும் போகிற போக்கில் வெற்று வார்த்தைகளாய்ப் பகிர்வதெனில் என்ன வாழ்க்கை அது! மாதவரத்தில் வேதங் கற்ற ஓர் ஆச்சார அனுஷ்டானக் குடும்பத்தில் 'குழந்தைத் தொழிலாளி'யாய்க் கனியின் தங்கை படும் அவலம் மிகக் கொடூரமானது. அதை நினைப்பதற்கும் பகிர்வதற்கும் செயல்படுவதற்கும்கூட எந்தவகையுமின்றி, கூட்டத்தின் நடுவில் அழுவதற்கும் வக்கின்றிப் போகிற போக்கிலேயே அதன் இழுப்பிலேயே 'நினைக்கிற நேரம் வேதனை' என்றபடி வாழுகிற கனியின் வாழ்க்கைக்கு என்னதான் செய்வது? இன்னொன்று, துணியைக் காயப் போடும் சோபியாவிடம் கனி துணிக்குச் சோப்பு போட்டபடி, 'இந்த ஒத்த ஆம்ப்ளைட்டயாவது நான் மானரோஷத்தோட இருக்கனே' என்று நெஞ்சிலறைகிற விதமாய்ப் பேசுகிற பேச்சு! இவை எல்லாமே போகிற போக்கில் நெஞ்சில் நெருப்பை விதைத்து விடும் மனப் பொருமலாயிருக்கின்றன. இதன் முத்தாய்ப்பு, 'யான இருக்ற எடத்லதாம்லெ எறும்பும் இருக்குது. ஒன்னாலெ என்ன செய்ய முடியும்னு பாக்கலாம்லெ' என்று கருங்காலியிடம் சவால் விடுகிற இடம்! வலிகளின் விதைப்பில் துளிர்க்கும் இந்தவகைப் பொருமல்களின் ஒளிக் கோர்ப்புதான் 'அங்காடித்தெரு'! இந்தப் பொருமல்களின் ஒத்தடங்களாகச் சிறுசிறு கவிதை நறுக்குகள்! அதிலொன்று, சிலேடை இலக்கிய நயம் சொட்டும் 'கனியிருக்கக் காய் கவர்ந்தற்று'! குரூரங்களின் நடுவேதான் இவர்களின் குதூகலமும் அமைந்து இவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன என்பதன் பதிவாகவும் 'அங்காடித்தெரு' அமைந்திருக்கிறது.
ஜோதிலிங்கமும் கனியும் இருவரும் தங்களின் முதற்காதலைப் பகிர்ந்து கொள்ளும் இடமும் சந்தடி நிறைந்த சரக்கறையில், அனைவருமிருக்க ஒருவருக்கொருவர் குறும்புகள் புரிந்து வேலை செய்து கொண்டிருக்கையில்தான்! சோடா குடித்தால் ஏப்பம் வருவது மாதிரி பருவம் வந்தால் காதல் எல்லாருக்குள்ளும் வந்து போகும் ஒன்றுதான் என்பதும் மிக இயல்பாகச் சொல்லப்படுகிறது. பெண் தன் முதற்காதலைச் சொல்லுவது ஒரு கட்டுடைப்புதான்! இட்டாமொழிக் கிராமத்தைச் சேர்ந்த ஏழை ஜோதிலிங்கத்தின் கதையில் அவனின் முதற்காதலி பணக்காரி; நகரத்தின் நவநாகரிக யுவதி அசுவினி! ஏழை ஜோதிலிங்கத்தின் காதல் நின்று போனதற்குக் காரணம் பணக்கார அசுவினி, 'குசுவினி'யாயிருந்ததுதான்! இது தமிழ் மரபிற்குப் புதுசு! ஏழை, பணக்காரன், நடுத்தரவர்க்கம் எனும் பேதம் பார்க்காமல், மாநகரம், நகரம், கிராமம் எனும் பிரிவு பார்க்காமல், நாகரிகம், நாட்டுப்புறம், காட்டுமிராண்டி எனும் பிரிவினை பார்க்காமல், ஆண், பெண், திருநங்கை எனும் பாலினம் பார்க்காமல், குழந்தைகள், விடலைகள், பெருசுகள் என்று வயோதிகம் பார்க்காமல், முதல் உலக நாடு, இரண்டாம் உலக நாடுகள், மூன்றாம் உலக நாடுகள் என்று நாட்டினம் பார்க்காமல் எல்லா உயிர்க்கும் குசு பொதுவானதாயிருக்க, இது விசயத்தில் கிராமத்துக்காரர்களையும் கால்சராய் போட்டவர்களையும் வயசாளிகளையும் மட்டுமே இதுவரையும் கேலி செய்து வந்த தமிழ்த் திரைமரபை மாற்றி, நகரத்து நவநாகரிகப் பெண்ணும் குசு விடமுடியுமென்று அவரைக் கேலிக்குரியதாக்கியதில் ஒரு கட்டுடைப்பு நிகழ்ந்திருக்கிறது என்பது முக்கியமானது! இதேபோல் சேர்மத்துரையுடனான கனியின் காதல், பத்தாம் வகுப்புத் தேர்வில் கனி தோற்று, சேர்மத்துரை வெற்றி பெற்றதால், சேர்மத்துரை அம்மா சொல்படி கனியை விட்டு சேர்மத்துரை விலக, 'கனி'யின் கோபத்தெறிப்பில் அங்கேயே அடி உதையுடன் அந்தக் காதல் நின்று போகிறது. பெண் தேர்வில் தோற்று, ஆண் தேர்வில் வெற்றி பெறுவது என்பதுங்கூட, தமிழ்த்திரையைப் பொருத்தவரை சிறு கட்டுடைப்புதான்! இவை மூலக்கதைக்குத் துணை செய்யாத போதுங்கூட, அவர்களின் மகிழ்ச்சிப் பகிர்தலை விகற்பமின்றி வெளிப்படுத்தும் மனக்கொட்டல்களின் மூலம் அவர்களின் மனநெருக்கம் உணர்த்தப்படுகிறது. சிறுசிறு கட்டுடைப்புகளையும் அவை செய்து முடிக்கின்றன.
தமிழகத்தின் தென்பகுதியான திசையன்விளை, தேரிக்காடு, உடன்குடி, இட்டாமொழி,திருச்செந்தூர் என்று 'நாடார்' சமூகத்தவர் அதிகம் வசிக்கும் ஊர்களாக அறியப்பட்டிருக்கிற இடங்களிலிருந்து, அந்தச் சமூகத்திலிருந்து, வறுமையின் பிடியில் வாழ்ந்துவரும், அப்பா அல்லது அம்மா இல்லாத குடும்பத்து இளைஞர்களைக் குறிவைத்து, வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் அந்தச் சமூகத்து முதலாளிகளால் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுத் தங்கள் கடைகளில் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டவர்களின் வாழ்க்கைப் பதிவுதான் 'அங்காடித்தெரு'! திருச்செந்தூர்க்காரியான கனியின் அப்பாவின் தொழில் நொங்கு, பதினி இறக்குவதென்பது கனியின் உரையாடலில் பதிவு பெறுகிறது. அதேபோல், நெல்லை 'சென்ட்ரல் கபே' மாடியில் அண்ணாச்சி கடைக்கு ஆள் பிடிக்கையில், 'அப்பா, அம்மா இல்லாத நம்ம சாதிப் பையங்களாவே எடுங்க' என்கிற பதிவு, அண்ணாச்சியும் அங்கு பணிபுரிபவர்களும், பெரும்பாலும் அல்லது அனைவரும் ஒரே சாதியை அல்லது ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதையே உறுதிப்படுத்துகின்றன. சொல்லாமலே,அவர்கள் 'நாடார்' சமூகத்தவர் என்பது புரிகிறது. பணி செய்யும் இடத்தில் உரிமையைக் கேட்டுத் தொழிற்சங்கங்கள் ஏதும் உருவாகிவிடாதபடி, மிக நுண்ணிய சாதி உணர்வால் அவர்களை இறுக்கக் கட்டி, சொந்தச் சாதி மக்களைச் சக்கையாய்ச் சுரண்டுவதும் கொத்தடிமைகளாக வைத்திருப்பதும் எத்தனைக் கொடுமையானது? சாதியின் வசீகரிப்பில் நடக்கும் பொருளாதாரச் சுரண்டல் இது! குறிப்பிட்ட இந்த சாதிக்கு மட்டுமே இது நிகழ்வதில்லை. எல்லாச் சாதி அண்ணாச்சிகளுக்கும் அவரவர்கள் சாதியில் கொத்தடிமைகளாக ஆட்கள் கிடைத்துக் கொண்டிருப்பதுதான் சோகம்! ஆனால் 'செந்தில் முருகன் ஸ்டோர்ஸ்' கடைக்கு வெளியே ரங்கநாதன் தெருவில் ஆணோ பெண்ணோ உழைக்கிற திறமையிருக்கிறவர் யார் வேண்டுமானாலும் சுதந்திரமாய்ப் பிழைக்கலாம். மாநகராட்சி நபர்களுக்கு, காவல் துறையினருக்கு, தொழிலாளர் நலத்துறையினருக்கு, தாதாக்களுக்கென்று கொஞ்சம் கொட்டி அழவேண்டியிருக்கும்! ஆனால் அதில் 'அண்ணாச்சி'கள் கொட்டிக் குடுப்பதை ஏற்பதில் இருக்கிற பணிவு இராது. வியாபாரிகள் இந்துவாய் இருக்கலாம்; இஸ்லாமியராய் இருக்கலாம்; குள்ளராய் இருக்கலாம்; நெட்டையாய் இருக்கலாம், யார் வேண்டுமாயினும் சுதந்திரமாகப் பிழைக்கலாம்! ஆனால் 'செந்தில் முருகன் ஸ்டோர்ஸ்' என்பது 'நிமிர்ந்து' நிற்கும் நெடிய சிறைக்கொட்டடியாயிருக்கும்!
நெல்லையிலிருந்து கொத்தடிமைகளாய் அவர்கள் சென்னைக்குக் கூட்டி வரப்பட்டதைக் கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையம் பதிவு செய்கிறது. அதன்பின் தி.நகர் வந்து சேர்ந்ததைக் காட்ட தி.நகர் பேருந்து நிலையப் பெரியார் சிலை காட்டப்படுகிறது. பெரியார் சிலையின் கீழ் எறும்புகளாய்க் குறுக்காகக் கடந்து செல்கின்றனர் அழைத்துவரப்படுவோர்! சூத்திரச் சாதி இழிவு நீங்கப் போராடிய பெரியாருக்குப் பெரிதும் கடமைப்பட்டது, 'பார்த்தாலே தீட்டு' என்று சமூகத்தால் புறந்தள்ளப்பட்டிருந்த அந்த 'நாடார்' சமூகம்! எந்த எதிர்பார்ப்புமின்றிப் பெரியாரின் பின்னால் பெரும்படையாய் நின்று சமூக இழிவுக்கு எதிராகக் களமாடிய அந்த 'நாடார்' சமூகத்திற்குப் பெரியாரும் கடன்பட்டவர்! பெரியார் இறுதி உரை நிகழ்த்திக் கல்லாய் உறைந்திருக்கும் அந்த இடத்தில், அவரின் கீழே, சமூகப் பொருளாதார நிலையில் உயர்ந்திருக்கிற சொந்தச் சாதி முதலாளிகளால் பொருளாதாரச் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டு எல்லாவகை இழிவுகளுக்கும் ஆளாக்கப்படப் போகிறவர்கள், அது எதுவும் தெரியாமல் வெறும் கனவுகளை மட்டுமே கைபிடித்தபடி, பெரியாரைக் கடந்து செல்வது அதிர்ச்சி தரும் ஓர் அழகிய காட்சி!
வசந்தபாலன் நாம் பேச மறந்த ஒரு வாழ்க்கையை எளிமையாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். எளிமை என்பது இயல்பைக் குறிப்பது! ரங்கநாதன் தெருவை நம் தேவைக்கேற்ப அப்படியே காட்டுவதும், அதனுள்ளே 'செந்தில் முருகன் ஸ்டோர்ஸ்'ஐ அங்குள்ள கடையாகக் குழப்பமின்றிக் காட்டுவதும், வியாபாரிகள் பலரை ரங்கநாதன் தெரு வியாபாரிகளாய்க் கொண்டு வந்து நிறுத்தியதும் அத்தனை எளிமையானதில்லை! 'இயல்பு' என்கிற எளிமைதான் இயல்பில் மிகவும் கடினமானது! நடிப்பிலும்கூடத்தான்! இயல்பை நேசிக்கிற வசந்தபாலன் செதுக்குகிற உளியிலிருந்து இயல்புதானே முகங்காட்டும்! இயல்பு கடினமானது....மிகக் கடினமானது. அதை இதில் நடித்தவர்கள் எளிமையாக்கியிருக்கிறார்கள், நாம் உண்மையாய் நம்பும்படி! இயல்பு ததும்பும் எளிமையைக் கொண்டு நம்மை அதகளப்படுத்தி விட்டார்கள் கனியாய் நடித்தவரும், கருங்காலியாய் நடித்தவரும், ஜோதிலிங்கமாய் நடித்தவரும்! இவர்களை ஒருசேர இங்குக் குறிப்பிடக் காரணம், இவர்கள் மூவரும் கதை நாயகியாயும், கதையை நகர்த்தும் வினைக்குரிய எதிர்க் கதாபாத்திரமாயும், கதை நாயகராயும் அமைந்திருப்பதால்! மற்றபடி தேவைக்குரிய கதாபாத்திரங்கள் அனைவருமே இயல்பு ததும்ப தங்கள் தங்கள் இடங்களைப் பூரணப்படுத்தி இருக்கிறார்கள். ஆரம்பக் காட்சிகளில் காட்சியின் அழகாய் இசையுமிருந்தது. பிற்பாடு, சில இடங்கள் தவிர்த்து, காட்சிகளின் அழகில் இசையின் இடம் அத்தனைப் பூரிப்பை ஏன் தரவில்லை என்பது தெரியவில்லை.பெரியதொரு இடராகவும் அது தெரியவில்லை! வலி மிகுந்த வாழ்க்கையை நிழற்கவிதையாய் வடித்துத் தந்த படத் தொகுப்பாளருக்கும் படப் பதிவாளருக்கும் பட நெறியாளுநருக்கும் இதைத் தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளருக்கும் தமிழ்ச் சமூகம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. உண்மையான அர்ப்பணிப்புடனும் சமூகப் பொறுப்புடனும் உழைத்தால், அது நிச்சயம் 'மெய்வருத்தக் கூலிதரும்'! வசந்தபாலனின் உழைப்பு இந்தவகையானது என்பதை 'அங்காடித்தெரு' நிரூபித்திருக்கிறது.இதுவரையும் பேசப்படாதிருக்கிற ஒரு கொத்தடிமைச் சமூகத்தின் அழுத்தமான பதிவு இது! இதன் வெற்றி, சமூகப் பொறுப்புடன் இயல்பாகப் படம் பண்ண நினைக்கும் இளம் படைப்பாளிகளின் நம்பிக்கைக்கு ஊற்றும் நீர் என்பதே உண்மை!
சோகத்தைப் புடம்போட்டுத் தங்கள் நெஞ்சுக்குள்ளே புதைத்தபடியும் வாடிக்கையாளரைக் கண்டவுடன் வருவித்துக் கொண்ட வறட்டுச் சிரிப்பை மனதில் தேக்கியபடியும், தன் கனவுகளை ஒளித்துவைத்து, வலிகளையே வண்ணத் துணிகளாய் விரித்துக் காட்டியபடி துணிக்கடைகளில் பணிபுரியும் ஆண்கள், பெண்களைப் பார்க்கையில் இனிமேல் அவர்களுக்குப் பின்னிலிருக்கிற கதைகளாகப் புதிய புதிய கற்பனைகளை மனசு ஏக்கத்தோடும் தவிப்போடும் பேசும். அது விரியும் 'அங்காடித்தெரு'வின் நீட்சியாய்!
Posted by
நா. கணேசன்
at
1
comments
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் தந்த கால்டுவெல் பாதிரியாருக்கு இந்தியா வெளியிடும் தபால்தலை!
இந்திய அரசாங்கம் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த ராபெர்ட் கால்ட்வெல் பாதிரியாரின் தபால்தலையை மே 7, 2010 அன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளது. அதற்கு முன்னரே திராவிட மொழிக் குடும்பக் கோட்பாடு அளித்தவர் ஃபரான்சிஸ் வைட் எல்லிஸ் ஆவார். எல்லிஸ் சிறுவயதில் நஞ்சுணவை உண்டு மாய்ந்ததால், நூல் எழுதவில்லை. 1856-ல் எல்லிஸ் தொடங்கிய பணியைக் கால்டுவெல் பாதிரியார் (மே 7, 1814 - ஆகஸ்ட் 28, 1891) தனிநூலாகச் செப்பமுடன் எழுதி வெளியிட்டார்.
திசையன்விளை அருகுள்ள இடையன்குடி என்ற வெப்பம் மிகுந்த ஊரில் 50 வருடங்கள் வாழ்ந்து கால்டுவெல் ஐயர் கிறிஸ்து சமயத்தைப் பரப்பினார். அந்தக் கிறித்துவ மிஷனரி தொண்டூழியம் பற்றிய விரிவான திரைப்படம்:
கால்டுவெல் 19-ம் நூற்றாண்டில் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிள, தமிழ் என்று ஆனது என்றார். 100 ஆண்டு சென்றபின்னர் இதனை மறுத்து, தமிழ் என்பதே திரமிடம், திராவிடம் என்றானது என்று மொழியியல் அறிஞர் சுவெலபில் போன்றோர் எழுதினர். திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் பெயரே என்பதைக் கால்டுவெல் கூறுகிறார். தமிழை மட்டும் குறிக்க தமிழ் என்னும் சொல்லையும், தமிழையும் அதன் கிளை மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்றவற்றையும் குறிக்க ‘திராவிடம்’ என்னும் சொல்லையும் தான் பயன்படுத்துவதாகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.(மேலது பக். 8). தமிழ் என்ற சொல்லுக்கான சமஸ்கிருதச் சொல் ‘திராவிட’ என்றும், அச்சொல் திராவிடர் என்று அழைக்கப்படும் மக்கள் வாழும் நாட்டையும், அவர்களது மொழியையும் குறிக்கும் என்றும் கால்டுவெல் குறித்தார். (மேலது பக். 12, கவிதாசரண் வெளியீட்டில் உள்ள பக்க எண்கள்).
மேலும் ஆராய,
Y. V. Kumaradoss,
Robert Caldwell, a scholar-missionary in colonial South India
Delhi : ISPCK, 2007
ரா. பி. சேதுப்பிள்ளை, கால்டுவெல் ஐயர் சரிதம்,
1936: ஹிலால் பிரஸ், நெல்லை
1964: பழனியப்பா பிரதர்ஸ்
Minatcicuntaram, Ka.,
Contribution of European scholars to Tamil
University of Madras, 1974 (Tamil translation: 2003).
எல்லீசன் என்றொரு அறிஞன் - ஆ.இரா. வேங்கடாசலபதி
http://www.kalachuvadu.com/issue-89/varalaru.asp
கால்டுவெல் என்ற மனிதர் - தொ. பரமசிவன்
http://www.keetru.com/maatruveli/nov08/tho_paramasivan.php
கால்டுவெல்: பின்காலனிய வாசிப்பு - அ. மங்கை
http://www.keetru.com/maatruveli/nov08/a_mangai.php
கால்டுவெல் என்னும் சிக்கல் - எம். வேதசகாய குமார்
http://www.keetru.com/maatruveli/nov08/vedhasakayakumar.php
கால்டுவெல்லின் திராவிடம்: ஒரு வாசிப்பு -வ. கீதா
http://www.keetru.com/maatruveli/nov08/Va_Geetha.php
M.S.S. Pandian, Non-Brahmin: Genealogies of the Tamil Political Present, Delhi, 2007.
http://muelangovan.blogspot.com/2007/04/1814-1891.html
2009 கிறிஸ்துமஸ் தினத்தன்று முதல்வர் கருணாநிதி தமிழைச் செம்மொழி ஆக்கும் திருப்பணியைத் துவக்கிய கால்டுவெல்லையும், பின்னர் கரந்தைத் தமிழ்ச் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் பற்றி முரசொலியில் எழுதியுள்ளார்.
அறிக்கை:
தமிழ்மொழி செம்மொழியென முதல் குரல் கொடுத்த தமிழர் பரிதிமாற் கலைஞர் என்றால்; தமிழ்மொழி செம்மொழியென்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார்.
பரிதிமாற் கலைஞர் தமிழ்மொழி செம்மொழியென 1887-ம் ஆண்டு குரல் கொடுத்ததற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே, 1856-ம் ஆண்டு அறிஞர் கால்டுவெல், தாம் எழுதிய "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஒப்புவமை காண்பித்திட இயலாத, உயர்பெரும் நூலில், "திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும்.
செந்தமிழ் என்றும் தனித்தமிழ் என்றும் சிறப்பிக்கப் பெறுவதும், பெரும்பாலும் அம்மொழி இலக்கியங்கள் அனைத்தையும் எழுதப் பயன்படுவதுமாகிய பழந்தமிழ் அல்லது இயல்தமிழ், மிக மிகக் குறைந்த சமஸ்கிருதத் தொடர்பையே பெற்றுள்ளது.
சமஸ்கிருதச் சொற்களையும், எழுத்துக்களையும் மேற்கொள்வதை வெறுத்து ஒதுக்கிவிட்டு; பழந்திராவிட தனிச்சிறப்பு வாய்ந்த மூலங்கள், சொல்லுருவங்கள், ஒலி முறைகளை மட்டும் மேற்கொள்வதில் காட்டும் ஆர்வத்தையும் விழிப்புணர்ச்சியையும் விடாமல் மேற்கொண்டிருப்பதினாலேயே அச்செந்தமிழ், தன் மொழியின் உரைநடை, பேச்சு நடைகளோடு சிறப்பாக வேறுபடுகிறது என்று தமிழ்மொழி செம்மொழியே எனச் சான்றாதாரங்களோடு நிரூபித்துக் காட்டினார்.
அறிஞர் கால்டுவெல்லின் ஆழ்ந்த ஆராய்ச்சி அடிப்படையிலான நூல்கள் தமிழகத்தில் பிராமணர் அல்லாதார் இயக்கத்திற்கு ஊக்கமளிப்பதாக அமைந்தன. தமிழ், தமிழர்தம் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த பற்றின் அடிப்படையிலேதான், அண்ணா இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது, அவரது திருவுருவச் சிலையைச் சென்னை மெரினா கடற்கரையில் நிறுவிடச் செய்தார்.
தென்னிந்தியத் திருச்சபையினர் வழங்கிய ராபர்ட் கால்டுவெல் திருவுருவச்சிலை, 2.1.1968 அன்று, அன்றைய தமிழக மேலவைத் தலைவர் எம்.ஏ.மாணிக்கவேலர் தலைமையில், பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையாரால் திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்மொழி செம்மொழியேயென அறுதியிட்டு உறுதியாக சைவ சித்தாந்த மகா சமாஜம் 1918-ம் ஆண்டிலேயே நிறைவேற்றிய தீர்மானம் தமிழ் ஆர்வலர்களாலும், அன்பர்களாலும் மிகுந்த மகிழ்ச்சியோடும், நிறைவோடும் நினைவு கூரத்தக்கதாகும்.
பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தைப் பற்றி, தனித்தமிழ் அறிஞர் மறைமலையடிகளார் 12.3.1918-ந் தேதி பற்றிய தமது நாட்குறிப்பில், "தமிழைச் செம்மொழியாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அரசாங்கத்திற்கு விண்ணப்பம் விடுப்பதற்குப் பச்சையப்பன் கல்லூரியில் 15-ம் நாள் (15.3.1918) நடக்கவிருக்கும் கூட்டத்தில் என்னை உரையாற்றுமாறு, கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ., எம்.எல்., வேண்டினார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சை-கரந்தைத் தமிழ்ச் சங்கம், செம்மொழி வரலாற்றிற்கு வழங்கியுள்ள மிகச்சிறப்பான பங்களிப்பு போற்றத்தக்கது மட்டுமல்ல; புவியில் வாழும் நாள்வரை தமிழர்களால் மறக்கவொண்ணாததுமாகும். த.வே.ராதாகிருஷ்ணப் பிள்ளை உள்ளிட்ட தமிழ் ஆர்வமும், தமிழ்ப் பயிற்சியும் உடையோர் சிலரால் 1911-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கம்; தொடங்கிய காலம் முதல் தமது வாழ்நாள் இறுதிவரை அதன் தலைவராக இருந்து அரும்பணியாற்றியவர் தமிழறிஞர் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை ஆவார். அதனால் தான், 18.2.2006 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் - கலைஞர் அரங்கில் நடைபெற்ற தமிழவேள் உமாமகேசுவரனார் அஞ்சல்தலை வெளியீட்டு விழாவில் நான் உரையாற்றியபோது:
"உமாமகேசுவரனார் பெயர் இன்று மற்ற அறிஞர்களைவிட அதிகமாக நினைவுக்கு வரவேண்டிய காலகட்டம் இது. காரணம் தமிழ்ச் செம்மொழி என்று எண்ணினால், பரிதிமாற் கலைஞருக்கு அடுத்து, நம் நினைவுக்கு வருகிற பெயர் தமிழவேள் உமாமகேசுவரனாரின் பெயர்தான். அவர்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ், செம்மொழியாக ஆக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை இயற்றியவர். இல்லையேல், தமிழ் செம்மொழியாவதற்கு எந்த ஆதாரத்தை வைத்து நாம் மத்தியிலே இருக்கின்ற அரசோடு பேச முடிந்தது?'' - என்று கரந்தை உமாமகேசுவரனாரின் அருமை பெருமைகளுக்கு அணி செய்தது எனது நினைவில் அழுத்தமாக அச்சியற்றப் பெற்றிருக்கிறது.
தஞ்சை - கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஏழு-எட்டாம் ஆண்டுகளுக்கான விழா, 24.5.1919 மற்றும் 25.5.1919 ஆகிய நாட்களில் திருக்கோவிலூர் ஆதீனம், திருப்பாதிரிப்புலியூர் திருஞானியார் மடத்தின் தலைவர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சார்ய சுவாமிகள் தலைமையில், தமிழவேள் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, தமிழறிஞர் வேங்கடசாமி நாட்டார், டி.என்.குருமூர்த்திப் பிள்ளை, டி.கூரத்தாழ்வார் முதலியார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அவ்விழாவில், "தமிழ்மொழியானது தொன்மையும், சீர்மையும், செம்மையும் வாய்ந்து விளங்குகின்ற ஓர் உயர்தனிச் செம்மொழியென உறுதிப்பட பலதிறத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதால், சென்னைப் பல்கலைக் கழகத்தார் தாம் இதுகாறும் கொண்டிருந்த கொள்கையை மாற்றித் தமிழ்மொழி, ஓர் உயர்தனிச் செம்மொழியே என்பதை ஒப்புக் கொண்டு, இத்தென்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் அதற்கு முறைப்படி முதலிடமும், உரிமைகளும் கொடுக்க வேண்டும்'' என்று வற்புறுத்தித் தீர்மானம் இயற்றப்பட்டது.
22.9.1923 மற்றும் 23.9.1923 ஆகிய நாட்களில் தமிழ் வள்ளல் சா.ராம.மு.சித. பெத்தாச்சி செட்டியார் தலைமையில் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரெண்டாவது ஆண்டு விழாவில், "உலகத்து உயர்தனிச் செம்மொழிகளில், முதல் மொழியெனக் கருதப்படுவதற்குரித் தான எல்லா இலக்கணமும் தமிழ் மொழி உடையதாயிருப்பதால், அதனை அத்தகை மொழியாக ஆட்சியாளர் கருதி ஐ.சி.எஸ். பட்டத்திற்கு அதனை ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று இந்திய அரசியலாரை வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளப்படுகிறது'' எனும் தீர்மானம் இயற்றப்பட்டது.
1938-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15, 16, 17 ஆகிய நாட்களில் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவிற்குத் தலைமையேற்ற திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் தனது உரையில், "இத்தகைய பெருமையும், இனிமையும் உடைய தமிழை உயர்தனிச் செம்மொழி என்ற நிலையில் அரசியலார் போற்றாதிருப்பது கவலத்தக்க தாகும்'' என்று தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டார்.
இவ்வாறு கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழவேள் உமாமகேசுவரனார் தலைமையில் தொடக்கக் கட்டத்தில்; தமிழ், செம்மொழியென அரசியல் நிலையில் அங்கீகரிக்கப்பட்டு உரிய முறையில் சிறப்பு செய்யப்படவேண்டும் என்பதற்கு ஆற்றிய பணி அளவிடமுடியாததாகும். செம்மொழி வரலாற்றில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஆற்றல் மிக்கதோர் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
கிறித்துமசு வாழ்த்துச் செய்தி (24. டிச. 2009):
சென்னை, டிச.24 பொறுமையைப் போதித்த இயேசு நாதரின் அடிச்சுவட்டில் வாழும் கிறித்தவ சமுதாய மக்களுக்குத் தனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்வதாக முதலமைச்சர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி:
இயேசு பெருமான் பிறந்த திருநாள் ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் 25 ஆம் நாள் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கிறித்தவ சமுதாய மக்களால் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, வரும் ஜூன் திங்கள் 23 ஆம் நாள் முதல் 27 ஆம் நாள் வரை 5 நாள்கள் கோவையில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டு, ஆயத்தப் பணிகள் நடைபெற்றுவரும் வேளையில், கிறித்தவ சமயத்தைப் பரப்பிடும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த குருமார்கள் பலர் ஆற்றிய தமிழ் வளர்ச்சிப் பணிகள் நினைவில் எழுகின்றன. அவ்வகையில், 1606இல் இத்தாலி நாட்டிலிருந்து வந்து, தமிழ்த் துறவியாக வாழ்ந்து, `தத்துவ போதகர்’ எனத் தம் பெயரையே மாற்றிக் கொண்டு தொண்டாற்றி, தமிழ் உரைநடையைச் செப்பம் செய்த இராபர்ட் டி. நொபிலி!
அதே இத்தாலியிலிருந்து 1700இல் வந்து, கிறித்துவத் தொண்டுகளுடன் தமிழ் வளர்ச்சிப் பணிகளாக, “தேம்பாவணி,” “சதுரகராதி” முதலிய நூல்கள் பல படைத்த வீரமாமுனிவர்! 1709இல் ஜெர்மன் நாட்டிலிருந்து வந்து, தரங்கம்பாடியில் முதன்முதல் அச்சுக்கூடம் நிறுவி, பொறையாறில் இந்தியாவிலேயே முதன் முதலாகக் காகித ஆலையையும் நிறுவி, தமிழ் - இலத்தீன் அகராதி, பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு முதலான தமிழ் நூல்கள் பல கண்ட சீகன் பால்க்!
இங்கிலாந்து நாட்டிலிருந்து, 1839இல் தமிழகம் வந்து சமயப் பணிகளாற்றி, திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததுடன், இங்கிலாந்து திரும்பிச் சென்ற பின் அங்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி மேனாட்டினருக்குத் தமிழின் சிறப்பைப் புலப்படுத்தி, தமிழ் மொழி மீது கொண்ட காதலால், “நான் ஒரு தமிழ் மாணவன்” எனத் தம் கல்லறையில் எழுதச் செய்த ஜி.யூ. போப்!
அயர்லாந்து நாட்டில் பிறந்து 1889இல் தமிழகம் வந்து, நெல்லைச் சீமையில் தங்கி, “திருநெல்வேலி சரித்திரம்” என்னும் ஆங்கில நூலுடன், திராவிட மொழிகளை ஆய்ந்து, “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் அரிய நூலைப் படைத்துத் தமிழ்மொழியின் மேன்மையை மேதினியில் நிலைநாட்டிய மேதை கால்டுவெல் போன்றோர் தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆற்றிய அளப்பரிய தொண்டுகளெல்லாம் வரலாற்றில் நின்று நமக்கு எழுச்சியூட்டுகின்றன.
அக்கிறித்தவப் பெருமக்களை நன்றியோடு நினைவுகூர்ந்து, மண்ணில் மனிதநேயம் தழைக்க, “அடுத்தவனை நேசி; உன் எதிரியிடமும் அன்பு காட்டு; உன்னைச் சபிப்பவர்களை ஆசீர்வாதம் செய்; உன்னை வெறுப்பவர்களுக்கும் உதவி செய்; உன்னை அவமதிப்பவர்களையும் போற்று;” எனப் பொறுமையைப் போதித்த இயேசு நாதரின் அடிச்சுவட்டில் வாழும் கிறித்தவ சமுதாய மக்களுக்குத் தமிழக அரசின் சார்பில் எனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்!
இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
---------------------
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்' பாடலை `தமிழ்த்தாய் வாழ்த்துப்' பாடலாக ஆக்கிய பெருமை தி.மு.க. அரசுக்கு உண்டு; கருணாநிதி அறிக்கை
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1919-ம் ஆண்டு ஜுன் மாதம் 22-ம் நாளன்று, திருச்சி டவுன்ஹாலில் பிராமணர் அல்லாதார் மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில், திருச்சி வழக்கறிஞர் டி.சி.தங்கவேலு, ராவ்பகதூர் ஓ.கந்தசாமி செட்டியார், டி.ஏ.ஜி.ரத்தினம், டி.வி.சுப்பிரமணியம், திவான்பகதூர் பி.ராமராயநிங்கார், ராமநாதபுரம் மன்னர், கொல்லங்கோடு மன்னர், தொட்டப்பநாயக்கனூர் ஜமீன்தார், டி.ஆர்.மருதமுத்து மூப்பனார் போன்ற பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் முன்னணியினர் கலந்து கொண்டனர்.
அந்த மாநாட்டில், பிராமணர் அல்லாதாருக்குத் தனி வாக்குரிமைத் தொகுதி, வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம், கலப்புத் திருமணம் ஆகியவை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியமான தீர்மானம் பின்வருமாறு:-
"சென்னைப் பல்கலைக்கழகமும், அரசுப் பணித் தேர்வாளர்களும்; பாரசீக மொழி, அரேபிய மொழி, வடமொழி ஆகிய மொழிகளுக்குச்சமமாக; செறிவும், செழிப்பும் நிறைந்த மிகப்பழமை வாய்ந்த இலக்கியங்களைக் கொண்டுள்ள தமிழ் மொழியை, செம்மொழியாக அங்கீகாரம் செய்யவேண்டும்.
இவ்வாறு பிராமணரல்லாதார் இயக்கத்தைச் சேர்ந்த நமது நீதிக்கட்சியின் முன்னோர், 1919-ம் ஆண்டிலும்; தமிழவேள் உமாமகேசுவரனார் தலைமையில் அமைந்திருந்த கரந்தைத் தமிழ்ச் சங்கம் கடைசியாக 1923-ம் ஆண்டிலும்; தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்படவேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியதற்குப் பிறகு;
விடுதலைப் போராட்ட வீரரும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், பாகிஸ்தான் பிரிவினையைத் தீவிரமாக எதிர்த்தவரும், உருது, அரேபியம், இந்தி, பாரசீகம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்த பன்மொழி அறிஞரும், கவிஞரும், பண்டிதநேருவின் மத்திய அமைச்சரவையில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவரும், இலவசத் தொடக்கக் கல்வியை அறிமுகப்படுத்தியவரும், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களை அமைத்தவருமான மவுலானா அபுல்கலாம் ஆசாத்; 15.3.1951 அன்று - சாகித்ய அகாடமியை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட மாநாட்டில் தொடக்க உரையாற்றியபோது, தமிழ்மொழி செழுமையும், தொன்மையும்மிக்க இலக்கியத்தைக் கொண்டது; அம்மொழியிலுள்ள கவிதைகள் வெளிநாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்வதற்குரிய தகுதி படைத்தவை; தமிழ் உண்மையிலேயே ஒரு செம்மொழி என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்; தமிழ் செம்மொழியென அங்கீகாரம் செய்வதற்குரிய தகுதிப்பாடுகள் அனைத்தும் பண்டைக் காலத்தைச் சார்ந்தவை என்று தமிழ் செம்மொழியே என்பதைச் சுட்டிக் காட்டினார்.
1955-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26, 27, 28 ஆகிய தேதிகளில் சிதம்பரம் - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய கீழ்த்திசை மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்; 15.3.1951 அன்று மத்திய கல்வி அமைச்சர் மவுலானா அபுல்கலாம் ஆசாத், சாகித்ய அகாடமியை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட மாநாட்டில் ஆற்றிய மேலே குறிப்பிட்ட தொடக்க உரையைச் சுட்டிக்காட்டி, "அவ்வாறு தமிழ்மொழியைச் செம்மொழியென அங்கீகாரம் அளித்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அப்படித் தேவையான அங்கீகாரத்தை இந்தக் கீழ்த்திசை மாநாடு வழங்கவில்லையெனில், வேறு யார் தான் வழங்கமுடியும்? என்று வினாக் கணை தொடுத்தார்.
செம்மொழி வரலாற்றில் அடுத்த கட்டம் 1966-ம் ஆண்டு உருவானது. அதனை உருவாக்கியவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆவார். பாவாணர் நுண்ணிய ஆய்வு ஆராய்ச்சிக்குப் பிறகு, தமிழ்மொழி செம்மொழியே என மொழி அறிஞர்கள் அனைவரும் ஏற்றுப் போற்றும் வகையில், உரிய சான்றுகளுடன் "உலகின் முதன்மையான செம்மொழி என்ற அரிய நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.
"தமிழ்மொழி-செம்மொழி தகுதிபாட்டுச் சான்று ஆதாரங்கள்:-
தொல் இலமூரியா காலத்தோடு தொடர்புடையது, சந்த ஒலிச் சால்பு, உலகளாவிய உணர்வுப் பெருமிதம், ஆரிய மொழிகளுக்கிடையே, தலைநிமிரும் தமிழின் தரம், சொல்லமைப்பின் தொன்மையும் ஒலிச் சுருக்கமும், தமிழ்மொழியில் உள்ள "அம்மா'' "அப்பா'' என்கிற சொற்கள் பிற பழைமையான மொழிகளில் ஒத்த வடிவங்களில் உள்ளன, எழுவாய் வேற்றுமைக்கு தனி விகுதியின்மை, அடைமொழிகள் பிரிக்கத்தக்கவை - ஆழமுடைமை, தமிழ் சொற்களுக்கு பாலினம் இல்லை, தமிழில் ஒழுங்கு முறையற்ற சொற்கள் இல்லை, தமிழ்மொழி தோன்றிய காலத்தை கண்டறிய இயலும், தமிழில் காணப்படும் சொற்கள் இயற்கையான காரண காரிய தொடர்புடையவை, ஒருமை, இருமை, பன்மை என்று வடமொழியில் இருக்க, தமிழில் ஒருமை, பன்மை என்று இரண்டைப் பொருத்தமாகக் கொண்டு இருத்தல், தமிழின் தனித்தன்மையும் - இயற்கைத் தன்மையும், உயர்ந்த இலக்கியத் தரமிகுந்த நூற்கோவைகள்.
பாவாணர் எடுத்துரைத்த அசைக்கமுடியாத ஆதாரங்கள் தமிழ் ஆர்வலர்களையும், அறிஞர்களையும் மட்டுமல்லாமல், பிறமொழி அறிஞர்களையும் குறிப்பாக, வடமொழி மற்றும் ஆங்கிலப் புலமை மிக்கோரையும் பெரிதும் ஈர்த்து ஏற்றுக் கொள்ளச்செய்தன.
பாவாணரின் தமிழ்மொழி மேதைமையையும், ஆழ்ந்த தமிழ்ப்பற்றினையும், தமிழ் செம்மொழியே என அனைவரும் ஏற்றுக்கொள்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட சீரிய முயற்சிகளையும் பாராட்டிப் போற்றிடும் வகையில்; கழக அரசு 1974-ல், "செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்'' ஒன்றினை நிறுவி, அதன் முதல் இயக்குநராக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரை நியமித்தது. பிறமொழித் தாக்கத்திலிருந்து தமிழைப் பாதுகாக்கத் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் வழியைப் பின்பற்றி; "உலகத்தமிழ்க் கழகம்'' கண்ட பெருமைக்குரியவர் பாவாணர். பாவாணர் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்கூட; மதம் - குலம் இவற்றைக் கடந்து தமிழராக அவர் வாழ்ந்ததால், தம் பிள்ளைகளின் பெயர்களை; நச்சினார்க்கினிய நம்பி, சிலுவையை வென்ற செல்வராயன், அருங்கலைவல்லான் அடியார்க்கு நல்லான், மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி, மணிமன்ற வாணன், பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் - என இனிய தனித்தமிழில் வழங்கினார். இருபத்திமூன்று மொழிகளைக் கற்றுத் தேர்ந்து, பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தவர் பாவாணர்.
அத்தகைய பாவாணரின் நினைவைப் போற்றிடும் வகையில் கழக அரசு, 1996-ம் ஆண்டு அவரது படைப்புகள் அனைத்தையும் அரசுடைமையாக்கி, அவரது மரபுரிமையர்க்கு ரூ.20 லட்சம் பரிவுத்தொகையை வழங்கியதோடு; அவரது நினைவு சிறப்பு அஞ்சல்தலையை, மத்திய அரசின் மூலம் 18.2.2006 அன்று வெளியிட்டுப் பெருமைகொண்டது. அதுமட்டுமல்லாமல், மதுரை மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தில், பாவாணருக்கு ரூ.39 லட்சத்து 60 ஆயிரம் செலவில் மணிமண்டபமும், அதில் பாவாணரது முழுஉருவச் சிலையும் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டு, நான் 30.10.2007 அன்று திறந்து வைத்துச் சிறப்பு செய்தேன்.
அதன்பிறகு, நீண்ட இடைவெளி ஏற்பட்டு விட்டது. தமிழைச் செம்மொழியாக அறிவித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை முன்வைத்து, தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலோ, தமிழ் அமைப்புகள் மத்தியிலோ, பெரும் கருத்துருவாக்கம் எதுவும் ஏற்படவில்லை.
அருமை நண்பர் எம்.ஜி.ஆர். தமிழக முதல்-அமைச்சராக இருந்தபோது, மதுரையில் 1981-ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, தமிழைச் செம்மொழியாக அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பற்றியும், அந்த முயற்சிகளுக்கு நேர்ந்த முடிவு பற்றியும், வளர்தமிழ்ச்செல்வர் மணவை முஸ்தபா தனது "செம்மொழி - உள்ளும் புறமும்'' என்ற நூலில் எழுதியுள்ளார்.
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில், இரண்டாம் நாள் காலை, நீதியரசர் மகராஜன் தலைமையில் நடைபெற்ற பொதுநிலைக் கருத்தரங்கில், மணவை முஸ்தபா பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர் தனது உரையில், "செம்மொழிக்குரிய அனைத்துத் தகுதிப்பாடுகளும் இருந்தும், அதற்கு அரசு அங்கீகாரம் அளிக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பற்றி'' விரிவாகப் பேசினார். அவரது உரையைக் கேட்ட எம்.ஜி.ஆர்., மணவை முஸ்தபாவிடம் செம்மொழி தொடர்பாக அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க, 1982-ம் ஆண்டில், மணவை முஸ்தபா செம்மொழி கோரிக்கை மனுவை, தமிழக அரசின் பரிசீலனைக்கு அனுப்பினார். அந்த மனு மீது அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டது என்பது குறித்து யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.
1984-ல் தனக்கு `கலைமாமணி விருது' அளித்ததற்கு நன்றி கூறும் முறையில், முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், மணவை முஸ்தபா செம்மொழி பற்றியும் நினைவூட்டினார். அது அரசுத் துறைச் செயலாளருக்கு அனுப்பப்பட; அன்றைய அரசுச் செயலாளர், அக்கோரிக்கை மனு மீது எழுதிய குறிப்பில், "மணவை முஸ்தபா கூறுவது போல், தமிழைச் செம்மொழியாக்கினால், தமிழைச் செத்த மொழிகளின் பட்டியலில் சேர்த்ததாகிவிடும் என்பதால், இக்கோப்பு இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது'' என்ற முறையில் குறிப்பு எழுதி, கோப்பையே முடித்து வைத்துவிட்டதாக மணவை முஸ்தபா கையறுநிலை கசியக் கசிய கண்ணீர் மல்கிட தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
செம்மொழி கோரிக்கைக்கு இந்த `கதி' ஏற்பட்டதற்கு பிறகும், இந்த களத்தில், யாரும் கவனம் செலுத்தவில்லை. மாநாடுகளிலோ, கருத்தரங்குகளிலோ, செம்மொழி கோரிக்கை முன்வைக்கப்படவில்லை.
1995-ம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது, தமிழ்ச் செம்மொழிக் கோரிக்கை, அப்போதைய இந்தியப் பிரதமர் நரசிம்மராவ் முன்னிலையில் வைக்கப்பட்டதாகவும்; ஆனால் பிரதமர் அக்கோரிக்கை தொடர்பாக எவ்வித கருத்தையும் வெளிப்படுத்தாமல், தன்னுடைய உரையை நிறைவு செய்தார் என்றும் புலவர் த.சுந்தரராசன் (பொதுச் செயலாளர், தலைநகர்த் தமிழ்ச்சங்கம், சென்னை) கட்டுரை ஒன்றில் மிகுந்த கவலையுணர்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்'' என்று தொடங்கும் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதிய பாடலை, 1970-ம் ஆண்டில் `தமிழ்த்தாய் வாழ்த்துப்' பாடலாக ஆக்கிய பெருமை, கழக அரசுக்கு என்றென்றும் உண்டு. அதைப் போலவே, தமிழர்களின் நலன் காக்க, நாளும் பாடுபடும் கழக அரசு, தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் பாடுபடுவதை எந்த நிலையிலும் நிறுத்தாது என்பதற்கு உதாரணம்தான், நான்காம் முறையாக கழக அரசு பதவியேற்றபோது, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியது; அந்தத்துறை, அமைச்சர் முனைவர் தமிழ்க்குடிமகன் தலைமையில், 13.5.1996 முதல் செயல்படத் தொடங்கியது.
புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட அந்தத் துறையின் தலையாய முதல் பணியாக, தமிழைச் செம்மொழி என அறிவிக்கக் கோருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று நான் வழங்கிய அறிவுரைகளையொட்டி; 20.6.1996 அன்று தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் தலைமையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ப.க.பொன்னுசாமி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் - முனைவர் ச.அகத்தியலிங்கம், முனைவர் அவ்வை நடராஜன், முனைவர் சி.பாலசுப்பிரமணியம்; திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ச.முத்துக்குமரன், ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜி.ஜான்சாமுவேல், மணவை முஸ்தபா, தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில்; தமிழ்மொழியைச் செம்மொழியென அறிவிக்கப்படுவது தொடர்பாக, ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சி.ஜான்சாமுவேலால் தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கை பரிசீலிக்கப்பட்டு, ஒரு சிலமாற்றங்களுடன் ஏற்கப்பட்டு, மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டதோடு; தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுக்களின் பரிந்துரைகளையும் பெறலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
தமிழ் செம்மொழி என அறிவிக்கப்படுவதற்குரிய அடிப்படைத் தகுதிகள் அனைத்தையும் பெற்றிருக்கிறது என்பதற்கான வலுவான ஆதாரங்களைக் கொண்டுள்ள அறிக்கை என்பதாலும்; தமிழ் செம்மொழி என அறிவிக்கப்படுவதற்கு அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும், அரசளவிலும், கழக அரசால் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி என்பதாலும்; தமிழ் ஆர்வலர்களும், கழக உடன்பிறப்புகளும் அதனைப் படித்தறிந்து நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையை, தமிழாக்கம் செய்து, அதன் முக்கியப் பகுதிகளை அடுத்த கடிதத்தில் வழங்குகிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.
Posted by
நா. கணேசன்
at
3
comments



