குருவிகள் என்னும் நல்ல விஞ்ஞான வலைப்பதிவினை நடாத்திவரும் நண்பர் வலைப்பதிவு, வலைத்திரட்டிகளின் 2003-2004 கணிவரலாற்றில் சில சுவடுகளைப் பதிந்துள்ளார். (குருவிகள் ஒரு புனைபெயர், இயற்பெயர் அறிந்துகொள்ள ஆசை).
தற்காலப் பதிவர்களுக்கு ஆரம்ப காலக் கணிசரிதத்தில் சில முன்னெடுப்புகளையும், கலைச்சொல் ஆக்கங்களையும் பற்றிய சில செய்திகள், நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள இம்மடல்.
>வலைப்பூ திரட்டிகள் எவ்வாறு பெருகினையோ அதே போன்று
> வலைப்பூக்களின் எண்ணிக்கையும் 2003 இல் சில பத்துகளாக
>இருந்து இன்று பல நூறுகளாகப் பெருகிவிட்டன.
தமிழ்மணம் திரட்டி ஆகஸ்ட் 2009-ல் ஐந்தாம் ஆண்டு நிறைவுவிழாக் கொண்டாடுகிறது. நாள்தோறும் 300 பதிவுகளையும், 2300 மறுமொழிகளையும், மொத்தம் ~6000 பதிவுகளையும் தமிழ்மணம் திரட்டுகிறது. சுமார் 15 ஆயிரம் கணினிகள் தமிழ்மணத்தை வாசிக்கின்றன. ஓப்பன்-ஐடி முறையை இந்திய மொழிகளில் அறிமுகம் செய்துள்ள திரட்டி தமிழ்மணம்தான். அதைப் பயன்படுத்தி பதிவுகளுக்கு வாக்களிக்கிறீர்களா?
http://kundumani.blogspot.com/2009/07/blog-post_21.html
”அப்போதைய பொழுதுகளில் வலைப்பூப் பதிவுகளை ஊக்குவித்துக் கொண்டிருந்தவர்களில் திசைகள் மாலன், சுரதா யாழ்வாணன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
சுரதா யாழ்வாணன் பிளாக்கர்களுக்கு யாழ் இணையத்தில் குடில்கள் என்று தமிழில் பெயரிட்டார். இருந்தாலும் பின்னர் திசைகள் மாலன் அவர்கள் (யூலை 2003 இல்) முன்மொழிந்த வலைப்பூ என்பதே அநேகரின் எண்ணத்தைக் கவர.. அது 6 ஆண்டுகளுக்குள் தமிழில் மிகப் பிரசித்தம் பெற்றுவிட்டது.”
மே, ஜூன் 2003-ல் பரவலாக வலைப்பதிவுக்கு என்ன பெயர் வைப்பது என்று யாகூகுழுக்களில் பேசப்பட்டது. மாலன் “இணையப்பட்டி, இணைப்பதிவு“ என்றார். நா. கண்ணன் வலைக்கதிர், வலைத்தொகை, சுரதா குடில், நான் நாட்குறிப்பு போல இருப்பதால் வலைச்சுவடு, ... என்றோம்.
http://emadal.blogspot.com/2003_08_01_archive.html
”பதிப்பு: நா.கண்ணன் Tuesday, August 12, 2003 at Tuesday, August 12, 2003
மடலாடல் மஞ்சரி
புதிதாக அறிமுகமாகியிருக்கும் Weblog என்னும் நுட்பத்திற்கு பல பயன்கள் உண்டு. இதற்கான நாமகரணம் ஆகிவிட்டது. பெயர்த்தேர்வு ஆகவில்லை. இரமணிதரன்: வலைப்பதிவு; நா.கணேசன்: வலைச்சுவடு; மாலன்: "இணையப்பட்டி, இணைப்பதிவு, இணை-வரிசை (அலைவரிசை போல) அல்லது அதன் பயன்பாட்டுத் தன்மையைக் கருதி சிற்றிணை, அல்லது இணைக்குறிப்பு, குறிப்பிணை இப்படி அமையலாமா?"; சுரதா: குடில்; மணிவண்ணன்: வலைப்பூ. கடைசி இரண்டிலும் கவித்துவம் முன் நிற்கிறது.
இதைப் பயன்படுத்திய பின் இன்னும் சில பெயர்களை முன் வைக்கத் தோன்றுகிறது. கலைக்கதிர் என்பது ஒரு அறிவியல் பத்திரிக்கை. அதுபோல் இதை 'வலைக்கதிர்' எனலாம். கதிர் பல்கிப் பெருகி ஒளி வீசுவது போல், சிந்தனை ஒளிவீசும் தளமிது. தொகைப் படுத்துதலும் இதன் முக்கிய வேலை, எனவே 'வலைத்தொகை' என்றும் சொல்லலாம். இராம.கி என்ன சொல்லியுள்ளார் என்று தெரியவில்லை. நான் வலைப்பூ என்பதைப் பயன்படுத்துவதற்கான காரணங்களை முன்பு உயிரெழுத்தில் எழுதினேன், "பயன்பாட்டாளன் என்றளவில் ஏதாவதொரு சொல்லைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். நிற்கும் சொல் வென்றது என்று பொருள்'.
இந்த வலைத்தொகை இப்போது ஒரு காரியம் செய்யலாம்! எத்தனையோ மடலாடற்குழுக்கள் தமிழில் வந்து விட்டன. எல்லோருக்கும் எல்லாவற்றையும் வாசிக்கும் நேரமிருப்பதில்லை. Reader's Digest மாதிரி ஒரு "வலைமஞ்சரி" (இதுவே கூட Weblog என்பதற்கு இணையான சொல்லாகலாம்) -யை உருவாகலாம். இது எவ்வளவோ பயனுள்ளதாக இருக்கும். நானும், ஹவாய் மதியும் பல புதிய பயன்களைக் கண்டுள்ளோம். ஒவ்வொன்றாய் இங்கு சொல்லுவோம். இதற்கிடையில் இந்த 'வலை மஞ்சரி'யை முன்னிருந்து நடத்த ஆர்வமும், நேரமும், கொஞ்சம் கலா ரசனையும், முடிந்தால் editorial அனுபவமும் உள்ளவர்கள் வந்தால் இதைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு செயல்திட்டமாக நாம் நடத்தலாம். வலைத்தொகை அமைப்பிற்கு எங்களாலான் உதவிகளைச் செய்ய முடியும். “
முதலில் வலைப்பூ என்ற சொல்லைக் கவித்துவமாகப் படைத்தவர் மணி மு. மணிவண்ணன். மாலன் கேட்ட கேள்விக்கு மணி அளித்த பதில், மே 15, 2003:
http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/7994
Re: [RKK] Peyar soota vaarungkal
மதிப்பிற்குரிய மாலன் அவர்களுக்கு,
தமிழில் உவெ(ம்)ப் லா(ங்)க் அமைத்ததற்கும், திசைகள் வலையிதழுக்கு வியக்கத்தக்க எண்ணிக்கையில் வாசகர்களை ஈர்த்ததற்கும் உளமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்.
At 5/14/03 08:56 PM, you wrote:
>"Blog என்பதற்கு ஏற்ற தமிழ்ச் சொல் என்ன? Web Log என்ற சொல்லிலிருந்து
>தோன்றியது blog. எனவே இணையப்பட்டி, இணைப்பதிவு, இணை-வரிசை
>(அலைவரிசை போல) அல்லது அதன் பயன்பாட்டுத் தன்மையைக் கருதி சிற்றிணை,
>அல்லது இணைக்குறிப்பு, குறிப்பிணை இப்படி அமையலாமா?"
பொதுவாக இணையம் என்ற சொல்லை இண்டர்நெட்டுக்கும் வலை என்ற சொல்லை உவெப், நெட் என்ற சொற்களுக்கும் புழங்கி வருகிறோம். உவெப் சைட் என்பது வலைத்தளம், இணையத்தளம் இல்லை. உவெப் பேஜ் என்பது வலைப்பக்கம். உவெப்ஸைன் என்பது வலையிதழ், இணைய இதழ் இல்லை.
எனவே உவெப் லாக் என்பதற்கு வலைக் குறிப்பு என்று சொல்லாக்கினால், ப்லாக் என்னும் குறும்(புப்) பெயருக்கு இணையாக வலைப்பு என்று சொல்லலாமா? வலைப்பு என்ற சொல் கொலோன் வலையகராதியில் இல்லை. அதனால் இந்தச் சொல் ஏற்கனவே வேறு பொருளில் தமிழில் இருந்திருக்க வாய்ப்பில்லை.
இல்லையேல் இன்னும் குறும்பாக, வலைப்பூ எனலாம். வலையிதழ் என்பது உவெப்சைன் என்பது போல வலைப்பூ என்பது உவெப்லாக் ஆகலாம். ஆனால், புலவர்கள் பொருட்குற்றம் காண்பார்கள்!
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்னும் இலக்கணத்தை மீறி இதற்கு இடுகுறிப்பெயரும் இடலாம். வலைக்குறிப்பு - வலைப்பு, வலைப்பூ, வறிப்பு, வலையரிப்பு(!), லைப்பு, லறிப்பு என்று விளையாடலாம்.
ஆனால், தமிழனுக்கு ஒரு கவிதையுள்ளம் உண்டு. இண்டர்நெட்டுக்குப் பல இதயங்களை இணைக்கும் மையம் என்னும் பொருள் தர இணையம் என்று சொல்லைப் படைத்தவன் தமிழன். பத்திரிக்கைகளுக்கு தினமலர், வார இதழ், ஆண்டு மலர், என்று பெயர் வைப்பவன் தமிழன். எனவே வலைப்பூ என்ற சொல் தமிழ் உள்ளங்களைக் கவரும் என்று எண்ணுகிறேன்.
அன்புடன், மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.
பி. கு. உவெப் லாக் எப்படி உவெ(ம்)ப் லா(ங்)க் ஆகியது என்று எண்ணும் நண்பர்களுக்கு,
ஆங்கிலத்தில் ஓசையற்ற எழுத்துகள் உச்சரிப்பைப் பாதிப்பது போல் தமிழிலும் செய்தால் என்ன என்று சில சமயம் விளையாடிப் பார்த்திருக்கிறேன். வல்லின பகரத்துக்கு முன்னர் மெல்லின மகர மெய்யை இட்டால் வல்லினம் மெலிகிறதல்லவா? அதே போல் ககரத்துக்கு முன்னர் ஙகரம். Web எப்படி உவெப் ஆகிற்று என்பவர்கள் உச்சரிப்பில் Veb க்கும் Webக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். Web எனக்கு உவப்பு தான்!”
ஆக, மணி மு. மணிவண்ணன் ராயர்காப்பி கிளப் யாகூ குழுவில், மாலனின் மடலுக்கு பதிலில் வலைப்பூ என்று பரிந்துரைத்தார். web-log blog ஆவதுபோல், வலைப்பு வலைப்பூ ஆகலாம் என்றார்.
வலைப்பூ, வலைத்தேனீ, குடில், ... என்பதெல்லாம் இலக்கியங்களில் பாவிக்கச் சிறப்பாக இருக்கும், ஆனால் தொழில்நுட்புக் கலைச்சொல்லாக இருக்க முடியாது என்றும் பதிவர்களால் உணரப்பட்டது. ஆகவே, “வலைப்பதிவு” என்ற சொல் இணையத்தில் வலம்வரலாயிற்று.
மேலதிகமாக,
இணையம் - மலேசியா ‘நயனம்’ ராஜகுமரன் (1996)
வைய விரிவு வலை - டாக்டர் ஜேபி (1997)
பின்னூட்டம் - ரமணி தன் ஆய்வுத்துறையில் 2001-லிருந்தே பயன்படுத்தியுள்ளார்.
வலைப்பதிவு - 2002-2003ல் முனைவர் இரமணீதரன் கந்தையா.
ஒருங்குறி - முனைவர் இராமகி
மட்டுநர் (மாடரேட்டர்) - நா. கணேசன்
திரட்டி (aggregator) - செல்வராஜ், பின் காசி பயன்படுத்த பிரபலம் அடைந்தது. இந்திய மொழிகளிலேயே தமிழ் திரட்டிநுட்பை முன்னெடுத்த மொழியாகும். உ-ம்: செல்வராஜ் வலைத்திரட்டிகள் பற்றிப் பேசிய 1/2/2004-ல் பேசிய வலைப்பதிவு:
http://blog.selvaraj.us/archives/34
தமிழின் முதல் வலைப்பதிவர்: கார்த்திகேயன் ராமசாமி
http://ta.wikipedia.org/wiki/வலைப்பதிவு
தமிழின் முதல் blog:
http://karthikramas.blogdrive.com/archive/21.html
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு - குறள் (392) சொல்லுமாப்போலே
கணிவலை ஏனை ஒருங்குறி இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் தமிழ்க்கு!
நா. கணேசன்
--------------
மாதவராஜ் பதிவில் கணினி அச்சாக்கம் எவ்வகையில்
பழைய அச்சுத் தொழிலாளிகளைப் பாதித்து என்று எழுதியுள்ளார்.
கண்களைப் பனிக்கச் செய்த பதிவது:
எழுத்துக்களைக் கோர்த்தவன் எங்கே போனான்?
http://mathavaraj.blogspot.com/2009/03/blog-post.html
காற்றலையில் பவனிவரும் கணினித் தமிழ்,
கல்யாண்குமார், இந்த வாரத் தமிழ்மண நட்சத்திரம்:
http://kalyanje.blogspot.com/2008/05/blog-post_08.html
மு.இளங்கோவன், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் 23,24-05-2009இல் நடத்திய 40 ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம்.
வலைப்பதிவுலகில் திரட்டிகளின் பங்களிப்பு
http://muelangovan.blogspot.com/2009/05/blog-post_25.html
கணித்தமிழ் – கடந்து வந்த பாதையும், தற்போதைய நிலையும்
(ஃபெட்னா மாநாடு, 2008) ~ ஜே. சௌந்தர், டல்லஸ், டெக்சாஸ்
http://nganesan.blogspot.com/2009/06/soundar-fetna-2008.html
தமிழ் விக்கிப்பீடியா: இ. மயூரநாதனுடன் நேர்காணல்
- அண்ணாகண்ணன்
http://nganesan.blogspot.com/2009/06/tamil-wiki.html
பதிவுலகின் கலைச்சொற்கள் - கணிவரலாற்றில் ஓர் ஏடு!
Posted by
நா. கணேசன்
at
7
comments
கவிதையில் கடிதம்! - 200 ஆண்டுகள் பழைய சீட்டுக்கவி
கவிதை வடிவத்தில் கடிதம் எழுதுவதைச் சீட்டுக்கவி எனத் தமிழ் இலக்கியம் பேசுகிறது. சீட்டுக் கவிதையில் ஆணையோ, வேண்டுகோளோ இருக்கும். சுப்பிரமணிய பாரதியார் எட்டையபுரம் ஃசமீந்தாருக்கு 1919-ல் எழுதிய சீட்டுக் கவிதையை ஓலைத் தூக்கு என்று குறித்துள்ளார் [1]. சிறுகுறிப்பு எழுதி வைக்கும் காகிதத்தைச் சிட்டை என்பதுண்டு. லேபிள் என்பதற்கும் சிட்டை பொருந்தும். கடன்-சிட்டை = credit card. டிவிட்டர் சிட்டு அனுப்பும் சிற்றஞ்சலைச் சிட்டி என்று அழைக்கலாம் தானே:
நுண்பதிவுலகம் (microblogs), சிட்டி (twits), சிட்டர் (twitter-er), தமிழ்ச்சிட்டு திரட்டி
200 ஆண்டுகளுக்கு முன் ஒரு கவிஞர் எழுதிய சீட்டுக்கவியைத் தருகிறேன். மடவளாகம் இலக்குமண பாரதியார் இப்போது புகழ்பெற்றுள்ள கந்தசஷ்டிக் கவசத்தின் ஆசிரியர் தேவராய சாமிகளின் வழிவந்த சிவாச்சாரியர் குருக்கள். 15 - 20ஆம் நூற்றாண்டுவரை பாரதி அந்தணர் மரபில் இசை, கல்வி, கேள்வியில் சிறந்தவர்களுக்குக் கிடைத்த பட்டம் ஆகும். லட்சுமண பாரதியின் இரண்டு நூல்கள் மடவளாகத் தலபுராணம், சிவமலை முருகன் மயில் விடுதூது அழிந்துபட்டன. ஆனால், அவர் பாடிய அழகான சிவமலைக் குறவஞ்சி அச்சாகியுள்ளது, என்னிடமும் இருக்கிறது. மடவளாகத்தில் பச்சோடநாதர் - பாற்பதி பச்சைநாயகி சந்நிதியில் கிடைத்த தமிழிசைக் கருவூலம்தான் “பஞ்சமரபு” என்னும் நூல். பச்சோடு, சித்தோடு, பேரோடு, ஈரோடு போன்ற ஊர்ப்பெயர்கள் சைவ உட்சமயங்களான காபாலிக, காளாமுகர்களின் தாக்கத்தைக் குறிப்பவை என்று தமிழறிஞர் காட்டியுள்ளனர்.
அவர் விண்ணப்பிக்கும் வள்ளியம்மாள் கொங்குநாட்டில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வெள்ளையர்களால் சங்ககிரி துர்க்கத்தில் தூக்கிலிடப்பட்ட 'தீரன்' சின்னமலையின் குடும்பத்து முன்னோர். பாட்டுடைத் தலைவி பழயகோட்டை வள்ளியம்மன் சின்னமலைக்குப் பெரிய தாயார். திப்பு சுல்தானின் தோழனான தீரன் சின்னமலையின் காலம்: ஏப்ரல் 17, 1756 – ஜூலை 31, 1805.
சிவராத்திரித் தேவையிதெனச் சீட்டுக்கவி:
திருமருவு பழநிமலை முருகேசர் அரவிந்த
செங்கமல பாத தியானம்
திரிகின்ற தண்டுமிண் டுகள்கொண்ட கவிமலை
செகுத்திடச் செய்வச் சிரம்
செய்யகார் காலமழை என்னவே மதுரித
செழுந்தமிழ் கொழிக்கும் மேகம்
தென்பரவு மங்கைபுர இலட்சுமண பாரதி
தெளிந்தெழுதி விட்ட நிருபம், தருவுலவு காரையூர் நல்லசே னாபதிச்
சர்க்கரைமன் றாடி ராசன்
தனதுமனை யாள்இனிய கற்பினில் அருந்ததி
சமானசற் குணபூ டணி
சந்ததி நிரம்பிவளர் சிவமலைப் பல்லவன்
தந்தசீ மந்த புத்ரி
தருமமிகு பயிறகுல வள்ளிநா யகியெனும்
தாய்மனம் மகிழ்ந்து காண்க, அருள்பரவு சிவன்உமைக் குத்திருக் கல்யாணம்
ஆனசுப தினம்நா ளையே
ஆகையால் மாங்கலிய விரதபூ சனைசெய்ய
ஆரும்ஆ தரவ றிகிலேன்
ஐந்துவள் ளப்பச்சை அரிசிபா சிப்பயறு
அதற்குள்ள மேல்முஸ் திதி
ஆவின்நெய் வெல்லம் உழுந்துபால் தயிர்வெண்ணெய்
அரியதயிர் எண்ணு கறிகாய் மருவுலவு சந்தனம் குங்குமம் புனுகுசவ்
வாதுபரி மளமும் உனது
மருமகட் கோர்புடவை பாக்குவெற் றிலைநல்ல
வாழையிலை இவையா வுமே
வாணருக் கார்அனுப் பினதெனக் கேட்பவர்
மனதுமென் மேலும் மெச்ச
மன்னர்புகழ் சர்க்கரைத் துரைராசி தந்ததென
வரவனுப் பிடவேண் டுமே! ~ மடவளாகம்
இலக்குமண பாரதி (1767 -1859)இன்னொரு சமயம் வேறு சில நல்ல சீட்டுக்கவிகளைக் காண்போம்!
நா. கணேசன்
[1] மகாகவி பாரதியார் 2 மே 1919 அன்று எட்டையபுரத்தில் எழுதிய சீட்டுக்கவி:
ராஜமகா ராஜேந்த்ர ராஜகுல
சேகரன் ஸ்ரீராஜ ராஜன்
தேசமெலாம் புகழ்விளங்கும் இளசைவெங்க
டேசுரெட்ட சிங்கன் காண்க!
வாசமிகு துழாய்த் தாரன் கண்ணனடி
மறவாத மனத்தான் சக்தி
தாசனெனப் புகழ்விளங்கும் சுப்ரமண்ய
பாரதிதான் சமைத்த தூக்கு! மன்னவனே தமிழ்நாட்டில் தமிழறிந்த
மன்னரிலை என்று மாந்தர்
இன்னலுறப் புகன்றவசை நீமகுடம்
புனைந்தபொழு திருந்த தன்றே!
சொன்னலமும் பொருணலமும் சுவைகண்டு
சுவைகண்டு துய்த்துத் துய்த்துக்
கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள்போல்
தமிழ்ச்சுவைநீ களித்தாய் அன்றே! புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டிற் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே!
சுவைபுதிது! பொருள்புதிது! வளம்புதிது!
சொற்புதிது! சோதி மிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத
மாகவிதை என்று நன்கு! பிரான்ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர்
புலவோரும் பிறகு மாங்கே
விராவுபுகழ் ஆங்கிலத்தீங் கவியரசர்
தாமுமிக வியந்து கூறிப்
பராவியென்றன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப்
போற்றுகின்றார் பாரோ ரேத்துந்
தராதிபனே! இளசைவெங்க டேசுரெட்டா!
நின்பால்அத் தமிழ்கொ ணர்ந்தேன்! வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென்
கவிதையினை வேந்த னே!நின்
நயப்படுசந் நிதிதனிலே நான்பாட
நீகேட்டு நன்கு போற்றி
ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள்
பொற்பைகள் ஜதிபல் லக்கு
வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப்
பல்லூழி வாழ்க நீயே!
Posted by
நா. கணேசன்
at
12
comments
கணினியில் தமிழ் - பயிலரங்கு (அட்லாண்டா, ஜியார்ஜியா, ஜூலை 4, 2009)
அன்பு நண்பர்களே,
கணினியில் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆர்வலர்களுக்குத் தமிழை மிக எளிதாகக் கணினியில் பயன்படுத்தும் வழிகளைப் பயிற்சியளிக்க ஃபெட்னா (http://fetna.org ) தனிப் பயிற்சிப் பட்டறை அமைத்துள்ளது.
என்னால் கணினி (Computer) வழி தமிழைத் தர முடியுமா, மின்னஞ்சல் எழுதுவது எப்படி போன்ற வினாக்கள் தங்கள் சிந்தனை ஓட்டத்தில் ஓடி மறைந்தால், இந்தப் பயிலரங்கு தங்களுக்கே.
வட அமெரிக்க உத்தமம் (http://www.infitt.org/), தமிழ்மணத்துடன் இணைந்து தமிழில் கணினியில் எப்படி எளிதாக எழுதுவது, வலைப்பதிவுகளைத் தமிழ்மணத்தில் சேர்ப்பது எப்படி போன்ற வினாக்களுக்கு விடையளிக்கவும், சில சிறந்த பயிற்சியாளர்களை அடையாளம் கண்டுள்ளது.
இந்தச் சிறந்த பயிற்சியாளர்கள், தங்களுக்குப் பயிற்சி அளிப்பதுடன், தங்களையும் இந்தச் சிறந்த பயிற்சியாளர் குழுவில் இணைக்க வழிவகையும் காண்பர், தங்களுக்கு ஆர்வமிருப்பின். பயிலரங்குப் பதிவுக்கு : http://www.infitt.org/fetna2009_signup.php
அட்லாண்டா தமிழ்விழாவுக்கு நீங்களோ, நண்பர் குழாமோ, உற்றார் உறவினர்களோ பங்கேற்றால் உத்தமம்-தமிழ்மணம் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க அழைக்க வேண்டுகிறோம். நன்றி!
நா. கணேசன்
விழா நிகழ்ச்சி நிரலுக்கு கீழே உள்ள படங்களைச் சொடுக்குக. எழுத்துக்கள் தெளிவாகத் தெரியும்.

Posted by
நா. கணேசன்
at
1
comments
Labels: அட்லாண்டா விழா , அனுபவம் , ஃபெட்னா , கணினி , நிகழ்வுகள்
நுண்பதிவுலகம் (microblogs), சிட்டி (twits), சிட்டர் (twitter-er), தமிழ்ச்சிட்டு
தமிழ்மரபு அறக்கட்டளை முனைவர் நா. கண்ணன் மின்தமிழ் கூகுள்குழுவில் Twitter(http://twitter.com/) பற்றி அறிமுகம் ஒன்றை எழுதினார். அங்கே, 'மைக்ரோப்லாக்கிங்', ’ட்விட்டர்’ - இணையான தமிழ்ச் சொற்கள் பற்றி ஒரு சுவையான திரி இழைக்கப்படுகிறது.
நா. கண்ணன்: ட்விட்டர் என்பது மிகப் பிரபலமாகி வரும் ஒரு இணையப் போக்கு. இதுவொரு குறுஞ்சேதி யோடை. சின்னச் சின்ன தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஊடகம். சும்மா உட்கார்ந்து கதையளக்க முடியாது. 140 அட்சரம். அவ்வளவு தான். வள்ளுவருக்குப் பிடிக்கும். இதை 'நான் என்ன செய்கிறேன்?' எனும் கேள்விக்கு விடையாக அறிமுகப் படுத்தினாலும், இது சும்மா, 'நான் மதிய உணவிற்குப் போகிறேன்' 'குட்நைட், தூங்கப் போகிறேன்' என்று சொல்ல வந்ததல்ல என்று தோன்றுகிறது. ஈரான் தேர்தல் விவரம் சுடச்சுட இவ்வோடையில் பரிமாறி யிருக்கிறது.
சின்னதாக அழகாக டிவிட்டர் என்பதுடன் ஒத்திசைவாக (rhyme with twitter) ஒரு சொல் வேண்டும்!
ஆம். ட்விட்டர் நுண்பதிவுலகை (microblogging) தோன்றச் செய்துள்ளது! twitter அனுப்பும் tweet தமிழில் ”சிட்டி” என்றாலே போதுமே. twitter-er = சிட்டு மடல் ”சிட்டி” அனுப்புபவர் “சிட்டர்” . சிட்டர் என்னும் சொல்லைத் திருவாசகத்தில் கூடக் காணலாம்: ’சிட்டாய சிட்டற்கே’ (திருவாசகம் 10, 7). வள்ளுவரின் வழித்தோன்றல்கள் நம் கணினிச் சிட்டர்கள்!
பூஞ்சிட்டு = சிறுகுருவி, தேன்சிட்டு = அமெரிக்காவின் சிறப்புகளில் ஒன்றாகிய ’ஹம்மிங்’ சிட்டுப்பறவைகள். இந்த ‘ஹம்மிங்’ இசை தேன்சிட்டின் சிறகுகள் வேகமாகக் காற்றில் அதிர்வதனால் ஏற்படும் இசை. சிட்டு = சிறு பறவை. சிட்டுக்குருவி, ...
சிட்டி/சிட்டுரை = நுண்பதிவில் இடும் சிறுமடல்/சிறுகடிதம்.
சிட்டுக்குருவி/சிட்டர் அனுப்பும் சிட்டுமடல் = “சிட்டி” இடுகை.
சிட்டி யென்பது நுண்பதிவின் இடுகை; அதுவொரு குறட்பதிவு. எண்ணச் சிக்கனம், நேரச் சிக்கனம் அங்கே இன்றியமையாதது.
நுணாக் காய் = சிறிய காய்வகையில் ஒன்று. இலந்தை வகை. அப்பெயர் பெற்ற ஊர், திரு-நுணா - திரு-நணா (தேவாரம்). வானி நதி காவிரியை வவ்வும் வவ்வானி/பவானி்யின் இடத்தில் பழைய ஊர்ப்பெயர் திருநணா. எழுத்தாளர் “சிட்டி”யில் இருந்து பாடகருக்கு வருவோம் :)
‘மைக்ரோப்லாக்’ நுண்மடல் இடுகை = நுண்ணி/உண்ணி. (ஈரம் < நீர்-. அதுபோல் உண்ணி < நுண்ணி). குருவாயூர் குழந்தைக் கண்ணன் உண்ணிக் கிருஷ்ணனை அறிவீர்கள்தானே.
‘மைக்ரோப்லாக்’ = நுண்பதிவு. செழுந்தமிழ் இலக்கியச் சொல்லாக, ’மைக்ரோபிலாக்’ நுண்மடல் இடுகையை நுணா/நுணல்/உண்ணி என்றும் அழைக்கலாம்.
யூனிகோட் நிறுவனம் தமிழில் ஒருங்குறி நிறுவனம் ஆவதுபோல் (அ) ஃபையர்பாக்ஸை நெருப்புநரி என அன்பாய் விளிப்பதுபோல்! ட்விட்டர் கம்பனிச் சேவையைப் பயனிக்கும் சிட்டுகள்/சிட்டர் அனுப்பும் நுண்மடல்கள் ”சிட்டிகள்”!
twitter-er (one who sends tweet messages) = சிட்டு (அ) சிட்டர்
twitter "tweet" message = சிட்டி (அ) சிட்டுரை
ட்விட்டர் சிட்டிகளுக்கு உதாரணமாக,
http://twitter.com/nchokkan
http://twitter.com/ksnagarajan
தமிழ்மணம் அன்பர்கள்,
http://twitter.com/thamizhsasi
http://twitter.com/rselvaraj
நுண்பதிவுலகின் ஒளிமயமான வருங்காலம்!
பழைய பனையோலைகள் போல நகர்கணிகளில் (மொபைல் கருவிகள்) தமிழ் வாசிக்கும் நாள் வந்துவிட்டது. கணிஞர்கள் எல்லோரும் சேர்ந்து இண்பிட் கருத்தரங்கு (http://www.infitt.org/ti2009/) போன்றவை நடாத்திப் பெரிய கம்பெனிகளை அணுகினால் எல்லாச் செல்பேசிகளிலும் தமிழ் தெரிய வைத்துவிடலாம்,
மேசைக்கணி, மடிக்கணி ~ இந்தியாவில் எல்லோரும் வாங்குவது என்பது எட்டாக் கனியாக உள்ளது. அரசாங்கம் எல்லாப் பள்ளி, நூலகம், பஞ்சாயத்து அலுவங்கள், ... இணைய வசதி தந்தாலொழிய இணையம் பல கோடி மக்களை எட்டவே எட்டாது. இதுபற்றிய என்பதிவு இங்கே.
இணையமும், இணையத் தொடுப்புகளும் செல்பேசிகளின் வழியாகத்தான் பல லட்சம் பேருக்கு இந்தியாவில் சென்றடையும். நுண்பதிவுச் சிட்டிகளில் குறுந்தொடுப்புகளாய்
(உ-ம்: http://bit.ly) செல்பேசிகளில் தமிழ் வலைப்பதிவுத் தொடுப்புகள் மக்களைச் சென்று சேரும். அரசாங்கம் பொது இடங்களில் உருவாக்கப்போகும் வலையேந்தல் (infrastructure) கூடங்களை நாடிச் சென்று விரும்புவோர் சிட்டர்கள் தரும் bit.ly தொடுப்புகளை வாசித்துக் கொள்வர்.
சிட்டிகளுக்குத் துழாவிகளும் உருவாகி வருகின்றன. கலெக்டா இன்னும் தமிழ்ச்சிட்டிகளைத் தேடமாட்டேன் என்கிறது :)
http://cybersimman.wordpress.com/2009/06/22/search-4/
தமிழ் நுண்பதிவுச் சிட்டிகளைத் திரட்டும் ”தமிழ்ச்சிட்டு” திரட்டியைத் தமிழ்மணம் விரைவில் தரலாமே.
நா. கணேசன்
மேலும் உசாவ,
ட்விட்டர்: எளிய அறிமுகம் - பாஸ்டன் பாலா
http://bit.ly/ljA9K
உங்கள் ட்விட்டர் தகவல்களை அப்படியே தரவிறக்க
http://www.tamilnenjam.org/2009/06/blog-post_5046.html
அடிக்கடி பதியும் சிட்டர்:
http://snapjudge.com/2009/06/12/top-16-tamil-twitter-users-by-influence/
நெருப்புநரி உலாவியில் ஒரு சிட்டிக் கும்மி
http://maruthanayagam.blogspot.com/2008/09/twitterfox-firefox.html
Posted by
நா. கணேசன்
at
7
comments
Labels: microblogs , twits , twitter-er , சிட்டர் , சிட்டி , தமிழ்ச்சிட்டு திரட்டி , நுண்பதிவுலகம்
தமிழ் விக்கிப்பீடியா: இ. மயூரநாதனுடன் நேர்காணல்
தமிழ் விக்கிபீடியா - சென்னைக் கூட்டம்
தமிழ் வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்புகளை விளக்கி சென்னையில் சூன் 13, 2009 அன்று கூட்டம் நடைபெறுகிறது. விவரங்களுக்கு விக்கிப்பீடியா: சூன் 13, 2009 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை பார்க்கவும்.
நாள்: சூன் 13, 2009 சனிக்கிழமை மாலை 6 மணி.
இடம்: கிழக்குப் பதிப்பகம் மொட்டை மாடி
முகவரி: நியூ ஹொரைஃசான் மீடியா,
எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018
தமிழ் விக்கிப்பீடியா: இ.மயூரநாதன் உடன் இ-நேர்காணல்.
நன்றி: அண்ணாகண்ணன், சென்னை ஆன்லைன், மே 30, 2009
தமிழ் விக்கிப்பீடியா, இன்று இந்திய மொழிகளில், பல தர அளவீடுகளில் முன்னணியில் நிற்கும் ஒரு கட்டற்ற கலைக் களஞ்சியம். இதில் 2009 மே 30 அன்று வரை 18,226 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 2003இல் இதனை முறையாக உருவாக்கியதிலிருந்து இன்றைய வளர்ச்சி நிலை வரை இதற்குத் துணை நிற்பவர், இ. மயூரநாதன்; இவர், இது வரை பல்வேறு தலைப்புகளில் 2760 கட்டுரைகளை தொடங்கி எழுதியுள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கிறார்; கட்டடவியல் கலைஞர். தம் ஓய்வு நேரத்தைத் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காக, ஆக்கபூர்வமாகச் செலவிட்டு வருகிறார். இவருடன் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணா கண்ணன் மின் அரட்டை வழியே உரையாடினார். அந்த இ-நேர்காணல் வருமாறு:
அண்ணா: விக்கிபீடியாவைப் பற்றி ஒரு பொதுவான அறிமுகத்தைத் தாருங்கள்.
மயூரநாதன்: இது ஒரு கட்டற்ற பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டம். பல மொழிகளில் இயங்கும் இந்த விக்கிப்பீடியாக்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பங்களிப்புச் செய்து வருகின்றனர். இதில் எவரும் கட்டுரைகளைப் புதிதாக எழுதவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும், திருத்தவும் முடியும். இதற்காகப் பதிவு செய்து கொள்வது கூட அவசியம் இல்லை. விக்கிப்பீடியா ஐந்து அடிப்படைகளைக் கொண்டது. 1) கலைக் களஞ்சியம் வடிவில் அமைதல், 2) கட்டுரைகள் நடுநிலை நோக்கோடு அமைதல், 3) கட்டற்ற உள்ளடக்கம், 4) அடிப்படையான சில நடத்தை நெறிமுறைகள், 5) இறுக்கமான சட்ட திட்டங்கள் இல்லாமை.
அண்ணா: விக்சனரி, விக்கி செய்திகள், விக்கி பல்கலைக்கழகம், விக்கி மேற்கோள்கள், விக்கி மூலம், விக்கி நூல்கள், விக்கி இனங்கள், விக்கி பொது... எனப் பல பிரிவுகளைக் கண்டேன். இந்த விக்கி என்பதை விவரியுங்கள்.
மயூரநாதன்: விக்சனரி என்பது ஒரு அகரமுதலி. விக்கிச் செய்திகள், செய்திகளைத் தரும் ஒரு விக்கி மீடியாத் தளம். விக்கி மேற்கோள் என்பதில் பல்வேறு வகையான மேற்கோள்கள் தொகுக்கப்படுகின்றன. விக்கி மூலம் என்பது ஒரு முக்கியமான ஒரு விக்கித் திட்டம் இதில் பல மூல ஆவணங்களின் பிரதிகள் உள்ளன. விக்கி இனங்கள் பலவகையான உயிரினங்கள் தொடர்பான தகவல்களைத் தருவது. விக்கி பொது என்பது, பொது உரிமைப் பரப்பில் உள்ள படிமங்களைக் சேகரித்து வைக்கும் ஒரு விக்கித் திட்டம்.
அண்ணா: விக்கி என்பது ஒருவரின் பெயரா?
மயூரநாதன்: இல்லை. விக்கி என்பது ஹவாய் மொழியில் "விரைவு" என்னும் பொருள் கொண்டதாம்.
அண்ணா: இதை யார், எப்போது, ஏன் தொடங்கினார்கள்?
மயூரநாதன்: விக்கிமீடியா பவுண்டேசன் என்னும் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் இத் திட்டம் 2001ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. ஜிம்மி வேல்ஸ் (அமெரிக்க இணையத் தொழில்முனைவர் - American Internet Entrepreneur), லாரி சாங்கர் (அமெரிக்க மெய்யியலாளர் - American Philosopher) என்போர் இணைந்து விக்கிப்பீடியாவை நிறுவினர். உண்மையில் இதற்கு முன்னர் "நூப்பீடியா" என்னும் ஒரு கலைக்களஞ்சியத் திட்டத்தை ஜிம்மி வேல்ஸ் தனது தனியார் நிறுவனத்தின் மூலம் நடத்தி வந்தார். அது இதைப் போல யாரும் பங்களிக்கத்தக்க ஒரு கலைக் களஞ்சியம் அல்ல. ஏன் விக்கிப்பீடியாவைத் தொடங்கினார் என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை.
அண்ணா: என்சைக்ளோபீடியா என்பதை நினைவூட்டும் வகையில்தான் விக்கிப்பீடியா எனத் தலைப்பு இடப்பட்டதா?
மயூரநாதன்: ஆம். இது "விக்கி" ,"என்சைக்கிளோப்பீடியா என்னும் இரு சொற்களின் சேர்க்கையினால் உருவானது.
அண்ணா: 267 மொழிகளில் இயங்கும் விக்கிப்பீடியாவில் ஆங்கில மொழி 28,97,231 கட்டுரைகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழ், 18,226 கட்டுரைகளுடன் 68ஆம் இடத்தில் உள்ளது. தமிழ் விக்கிபீடியா எப்போது தோன்றியது? அதற்கு முன்முயற்சிகள் எடுத்தோர் யார் எவர்?
மயூரநாதன்: தமிழ் விக்கிப்பீடியா 2003ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன. ஆனால் இது தமிழ் விக்கிப்பீடியாவுக்காக ஒரு இடம் ஒதுக்கப்பட்டதையே குறிக்கிறது. அப்போது ஆங்கில இடைமுகத்துடன் கூடிய ஒரு வெற்றுப் பக்கமே இருந்தது. அவ்வாண்டு நவம்பர் மாதத்திலேயே தமிழ் இடைமுகத்துடன் கூடிய முறையான தமிழ் விக்கிப்பீடியா உருவானது. செப்டெம்பர் 2003இல் ஒரு தமிழ் அன்பர் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான ஒரு பக்கத்தைத் திறந்துவிட்டார். இது ஆங்கில இடைமுகத்தோடு கூடிய ஒரு பக்கம். இதில் இருந்த ஓரிரு சொற்கள் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பானவை அல்ல. இது ஒரு சோதனை முயற்சியாக இருக்கலாம். பின்னர் நான் நவம்பர் முதல் பகுதியில் தமிழ் இடைமுகத்தை உருவாக்குவதற்கான மென்பொருளை மொழிபெயர்க்கத் தொடங்கி அம்மாத இறுதியில் முடித்தேன். அத்துடன் அக்காலத்தில் இருந்த ஆங்கில விக்கியின் முதல் பக்கத்தைத் தழுவி ஒரு தமிழ் முதல் பக்கத்தையும் உருவாக்கினேன். அது முதல் முறையான தமிழ் விக்கிப்பீடியா உருவானது எனலாம்.
அண்ணா: இந்திய மொழிகளில் தெலுங்கு (42,918), இந்தி (32,681), மணிப்புரி (23,414), மராத்தி (23,211), பெங்காலி (19,674) ஆகியவை தமிழைக் காட்டிலும் அதிகக் கட்டுரைகளுடன் உள்ளன. அவர்களுக்கு அதிக விழிப்புணர்வு இருப்பதாகக் கொள்ளலாமா?
மயூரநாதன்: அப்படிச் சொல்வதற்கு இல்லை. சில இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் உட்படப் பல விக்கிப்பீடியாக்களில் புள்ளி விபரங்களில் கட்டுரை எண்ணிக்கைகளைக் கூடுதலாகக் காட்டும் நோக்கில் மிக மிகச் சிறிய அல்லது வெற்றுக் கட்டுரைகளை ஆயிரக்கணக்கில் தானியங்கிகள் மூலம் உருவாக்கியுள்ளனர். இந்த விடயத்தில் நாம் தொடக்கம் முதலே கட்டுப்பாட்டுடன் நடந்து வருகிறோம். கூடியவரை கட்டுரைகள் பயனுள்ள தகவல்களைக் கொண்டவையாக இருக்கவேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம்.
இதனால், முன்னர் கூறியது போல் பொதுவான கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா இந்திய மொழிகளுள் ஆறாவது இடத்தில் இருந்தாலும், பல முக்கியமான தர அளவீடுகளில் முன்னணியிலேயே உள்ளது. விக்கிப்பீடியாவில் இரண்டு முறைகளில் கட்டுரை எண்ணிக்கை கணக்கிடப்படுகின்றது. ஒரு முறையில் கட்டுரையின் அளவைக் கவனிக்காமல் எல்லாக் கட்டுரைகளையுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள் இன்னொரு முறையில் 200க்கும் குறைந்த எழுத்துகளைக் கொண்ட மிகச் சிறிய கட்டுரைகளைத் தவிர்த்து விட்டுக் கணக்கெடுக்கிறார்கள். இந்த இரண்டாம் முறையின் அடிப்படையில் பார்க்கும்போது தமிழ் விக்கிப்பீடியா இந்திய மொழிகளில் முதல் நிலையில் உள்ளதைக் காணலாம். இதில் 3.4 மில்லியன் சொற்களுக்கு மேல் உள்ளன. அத்துடன் தொடர்ச்சியாக மிகவும் முனைப்பாக இயங்கும், இந்திய மொழிகளில் உள்ள மிகச் சில விக்கிப்பீடியாக்களில் தமிழும் ஒன்று.
அண்ணா: தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் என்ன?
மயூரநாதன்: ஆங்கில மொழி பேசுவோருக்கு ஆங்கில விக்கிப்பீடியாவின் முக்கியத்துவத்தையும் அது அவர்களுக்கு ஆற்றும் பங்கையும் விட, தமிழ் விக்கிப்பீடியா தமிழ் மக்களுக்குக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் அவர்களுடைய வளர்ச்சிக்குக் கூடிய பங்காற்றக் கூடியது என்பதும் எனது கருத்து.
உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு, உலகின் பல்வேறு அறிவுத் துறைகள் தொடர்பிலான, தமிழ் மொழி மூலமான, முதன்மையான, பொது உசாத்துணை வளமாக இருப்பதற்கான வாய்ப்பு, விக்கிப்பீடியாவுக்கு உண்டு. எண்ணற்ற கட்டுரைகளை உள்ளிடுவதற்கான இடவசதிக்குப் பஞ்சம் இல்லை. பல்வேறு மொழி விக்கிப்பீடியாக்களிலும் காணப்படும் கோடிக்கணக்கான தகவல்களையும் படிமங்களையும் காப்புரிமைப் பிரச்சினைகள் இன்றிப் பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதி; உலகின் எந்த மூலையிலும் இருந்து இலகுவாக அணுகக்கூடிய வசதி; உலகின் எப்பகுதியிலுமிருந்து, எவரும் இலகுவாகப் பங்களிப்புச் செய்யக்கூடிய வசதி; இவற்றுக்கான தொழில் நுட்பத் திறன்களையும், நிதித் தேவைகளையும் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இனங்களையும் சேர்ந்த ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி என்பன தமிழ் மக்களுக்கு மிகப் பயன் தரக்கூடியவை ஆகும்.
உலகின் எல்லாப் பகுதிகளிலும் குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற தாயகப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்காகப் பொதுவான கலைச்சொற்களை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு தளம் இதுவரை கிடையாது. இதனால் ஒரு பகுதியினருடைய நூல்களை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்புக் குறைகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் எதுவும் குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெற்றதாகத் தெரியவில்லை. இவ்விடயத்தில் தமிழ் விக்கிப்பீடியாவை மிகத் திறமையாகப் பயன்படுத்த முடியும். இந்த வகையில் விக்கிப்பீடியாவின் இணைத் திட்டங்களில் ஒன்றான விக்சனரியுடன் இணைந்து பணியாற்ற முடியும்.
பிற முன்னேறிய நாடுகளில் வழங்கும் மொழிகளைப் போலன்றித் தமிழ் மொழியில் விபரமான கலைக் களஞ்சியங்களை வெளியிடக்கூடிய வசதிகளோ, அப்படி வெளியிட்டாலும் குறிப்பிட்ட கால இடைவெளிகளிலாவது அவற்றை இற்றைப்படுத்தித் திருத்தி வெளியிடக்கூடிய வசதியோ நமக்கு இல்லை. வாதத்துக்காக இது முடியும் என்று வைத்துக் கொண்டாலும்கூட அவற்றை வாங்கிப் பயன்படுத்தக்கூடிய வசதி நம்மில் மிக மிகப் பலருக்குக் கிடைக்காது. இந்தப் பின்னணியில் விக்கிப்பீடியா தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள ஒரு பெரும் கொடை எனலாம். மிகக் குறைந்த பணம் மற்றும் நேரச் செலவுகளுடன் மிகப் பெரிய கலைக் களஞ்சியம் ஒன்றை உருவாக்கக்கூடிய வாய்ப்பு நம் கையில் உள்ளது. இதனை உணர்ந்துகொண்டு பயன்படுத்திப் பயனடைய நாம் முயல வேண்டும்.
தமிழ் அனைத்து உயர் அறிவுத் துறைகளையும் தழுவிய மொழியாக வளர வேண்டும். இது தொடர்பில் முக்கியமான பணி, நமது தாய்மொழி மீது நம்மவர்களுக்கே உள்ள நம்பிக்கையின்மையை இல்லாமலாக்க உதவுவதுதான். தமிழ் விக்கிப்பீடியாவை ஒரு சாதாரண கலைக் களஞ்சியமாக மட்டுமன்றித் தமிழ் மொழி மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் சின்னமாகவும் வளர்த்து எடுக்க முடியும். இதனால் எல்லோருக்கும் தமிழ் மொழியின் வல்லமை குறித்த நம்பிக்கை இன்மையைப் போக்க முடியும்.
தமிழில் எழுதக்கூடிய வல்லமை கொண்ட துறை வல்லுனர்களும், பிற அறிஞர்களும் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க முன்வர வேண்டும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் முதலியவற்றைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் போன்றவர்கள் இக் கலைக் களஞ்சியத்தை நம்பகத்தன்மை கொண்ட முழுமையான ஒன்றாக வளர்த்தெடுக்க தங்கள் பங்கைச் செலுத்த வேண்டும்.
அண்ணா: தமிழ் விக்கியில் கட்டுரைகள் என்ற சொல் பயன்பாட்டினை விளக்குங்கள். குறிப்புகள், செய்திகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றிலிருந்து இங்குள்ள கட்டுரைகளை வேறுபடுத்த முடியுமா?
மயூரநாதன்: இங்கே கட்டுரை என்பது கலைக்களஞ்சிய வடிவில் அமைந்த ஒரு ஆக்கத்தைக் குறிக்கும். இது பிற மொழிக் கட்டுரைகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால், செய்திகள், குறிப்புகள் என்பதில் இருந்து இது வேறுபட்டது. விக்கிப்பீடியாவில், கட்டுரைகள் என்பதைத் தவிர மேலும் பல விதமான பக்கங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, படிமப் பக்கங்கள், வழிமாற்றுப் பக்கங்கள், உதவிப் பக்கங்கள், உரையாடல் பக்கங்கள், தொகுப்பு வரலாற்றுப் பக்கங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
அண்ணா: ஓரிரு வரிகள் கொண்ட சிறு குறிப்புகளைக் குறுங்கட்டுரைகள் என்ற தலைப்பில் கண்டேன். இது பொருந்துமா?
மயூரநாதன்: இவ்வாறான கட்டுரைகளை ஆங்கில விக்கியில் Stub என்பார்கள். இதையே தமிழில் குறுங்கட்டுரை எனத் தமிழில் குறிப்பிடுகின்றோம். பொது விதிகளின் படி இதை ஒரு கட்டுரை என்று கூறமுடியாவிட்டாலும் மேலும் விரிவாக்குவதற்கான ஒரு ஆரம்ப நிலைக் கட்டுரையாக இதைக் கொள்ளலாம்.
அண்ணா: ஒலிபெயர்ப்புகளில் தமிழ் விக்கியின் கொள்கை என்ன? ஆலன் பார்டர் எனத் தமிழகத் தமிழ் நாளிதழ்கள் எழுதும் பெயர், அலன் போடர் என இருக்கக் கண்டேன்?
மயூரநாதன்: இது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு இருக்கக்கூடிய முக்கியமான ஒரு பிரச்சினை. தமிழ் விக்கிப்பீடியாவில் உலகின் பல பாகங்களிலும் இருந்து தமிழர்கள் பங்களிக்கிறார்கள். இவர்களில் பலர், இலங்கைத் தமிழர்கள். இலங்கையில் தமிழ்நாட்டில் எழுதுவது போல் ஆலன் பார்டர் என்று எழுதுவதில்லை. அலன் போடர் என்றுதான் எழுதுவார்கள். இது ஆங்கிலப் பெயர்களை ஒலிபெயர்க்கும் பல சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினை. இது பற்றி ஒரு முடிவான கொள்கை எதுவும் வகுக்கப்படவில்லை. ஆனால், ஒரு முறையில் யாராவது எழுதும்போது, மற்ற முறையையும் அடைப்புக் குறிக்குள் தரலாம் என்று பரிந்துரை செய்கிறோம்.
அண்ணா: மணித்தியாலங்கள், திகதி.. என இலங்கைத் தமிழின் மணம் அதிகமாக வீசுகிறது?
மயூரநாதன்: இருக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் கூடிய தொகுப்புகளைச் செய்தவர்களில் பெரும்பாலோர் இலங்கைத் தமிழராக இருப்பதைக் காணலாம். இதனால் இந்தத் "தமிழ் மணம்" தவிர்க்க முடியாததே. ஆனால், இந் நிலை இப்போது முன்னரிலும் குறைவாகவே உள்ளது. மேலும் பல பங்களிப்பாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து வரும்போது இந்தச் சமமின்மை நீங்கிவிடும்.
அண்ணா: தமிழ் விக்கியில் ஆங்கிலத்தைத் தவிர்க்கும் முயற்சி இருப்பினும் வடசொற்கள் நிறைய கலந்திருக்கின்றன. இதில் மொழித் தூய்மை பேணும் முயற்சி ஏதும் உண்டா?
மயூரநாதன்: ஆம். இயன்ற அளவு வட மொழி தவிர்த்து எழுதுவது என்பதே எமது குறிக்கோள். ஆனால், பல சொற்கள் தமிழ் போலவே மாறிவிட்டதனால், எழுதும் எல்லோருக்குமே அது வட சொல் எனத் தெரியாது. தெரிந்தாலும் அதற்கு ஈடான தமிழ்ச் சொல் தெரிவதில்லை. இதை விட புழக்கத்திலுள்ள வட சொற்களை நீக்குவது சரியில்லை என்று வாதிடும் பங்களிப்பாளர்களும் இருக்கின்றனர். இதனால், படிப்படியாகத்தான் ஏதாவது செய்ய முடியும்.
அண்ணா: கட்டிடம் என்பதை விட, கட்டடம் எனக் கூறுவதே சரி. எண்ணிணால், நூல்கலை எனப் பல தட்டச்சுப் பிழைகளையும் கண்டேன். தமிழ் விக்கிபீடியாவில் இலக்கணம், மொழி நடை ஆகியவற்றைச் சீரமைக்க வழியுண்டா?
மயூரநாதன்: நீங்கள் சொல்வது சரிதான். இத்தகைய பிழைகளை விக்கிப்பீடியாவில் மிகச் சுலபமாகவே திருத்த முடியும் ஆனால், இதற்குப் பல பங்களிப்பாளர்கள் வேண்டும். கட்டுரைகளாக எழுதாவிட்டாலும், தமிழ் அறிவு உள்ளவர்கள் இத்தகைய பிழைகளைத் திருத்தவாவது உதவி செய்யலாம்.
அண்ணா: ஒருவர் உள்ளிடும் ஆக்கம், அவருடைய சொந்த ஆக்கம் என்பதை எப்படி கண்டறிவீர்கள்? காப்புரிமையைப் பொறுத்த அளவில் விக்கிபீடியாவின் நிலை என்ன?
மயூரநாதன்: விக்கிப்பீடியாவைப் பொறுத்தவரை ஒருவருடைய ஆக்கம் அவருடைய சொந்த ஆக்கமாக ஆகாது. ஒவ்வொரு கட்டுரையின் உருவாக்கத்திலும் பலர் பங்கு பெறுவதால் இதில் எவருக்கும் தனியுரிமை கிடையாது. விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகள் அனைத்துமே குனூ கட்டற்ற ஆவண உரிமம் என்னும் உரிமத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. இதன்படி எவரும் இக்கட்டுரைகளைப் பிரதி செய்யவோ, மாற்றவோ, விநியோகிக்கவோ முடியும்.
அண்ணா: கட்டுரையை எழுதியவர் / திருத்தியவரின் பெயரை அந்தந்தக் கட்டுரைகளில் காட்டுவது அவர்களை ஊக்குவிக்கும்தானே? இப்படி பெயர்கூட இல்லாமல் எப்படி தன்னார்வலர்கள் முன்வருகிறார்கள்?
மயூரநாதன்: கட்டுரைகளைத் தொடங்கியவர்கள், விரிவாக்கியவர்கள், திருத்தியவர்கள், என்ன திருத்தம் செய்தார்கள், எவ்வளவு தகவல்களைச் சேர்த்தார்கள் போன்ற எல்லா விபரங்களும் திருத்த வரலாற்றுப் பக்கங்களில் பதியப்பட்டுள்ளன. உள்ளிடப்படும் எந்த விபரமுமே அழிந்து போவதில்லை. ஐந்து வருடத்துக்கு முன் நான் தொடங்கிய கட்டுரை ஒன்றின் அக்கால வடிவத்தை இன்றும் பார்க்க முடியும். ஒவ்வொரு கட்டுரைப் பக்கத்தின் மேற்பகுதியிலும் காணப்படும் "வரலாறு" என்னும் பொத்தானை அழுத்தினால் போதும்.
அண்ணா: அருமை.
ஒரு செய்தியை இருவர் இரு கோணத்தில் எழுதினால் அதில் விக்கிப்பீடியாவின் நிலை என்ன? உதாரணத்திற்குப் பிரபாகரனைப் போராளி என ஒருவரும் தீவிரவாதி என ஒருவரும் எழுதினால் விக்கிப்பீடியா எதை ஏற்கும்?
மயூரநாதன்: நடுநிலை நோக்கு என்பது விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. இதனால், கட்டுரைகளை எழுதும் எவரும் தமது சொந்தக் கருத்துகளைக் கட்டுரைகளில் சொல்ல முடியாது. ஒருவரை உலகத்தில் உள்ள அனைவருமே தீவிரவாதி என்பார்களானால், அவரைத் தீவிரவாதி என எழுதலாம். ஆனால் இன்னொரு பகுதியினர் அவரைப் போராளி என்பார்களானால், இரு கருத்துகளையும் கட்டுரையில் குறிப்பிட வேண்டும். "ஒரு பகுதியினர் தீவிரவாதி என்கின்றனர்; ஆனால் வேறு சிலரோ அவரைப் போராளி என்கின்றனர்" என்பது போல் எழுதுவதே முறை.
அண்ணா: கட்டுரைகளின் கீழ் அடிக்குறிப்புகள், சுட்டிகள், விளக்கங்கள் ஆகியவற்றைத் தருவது, ஆய்வாளர்களின் பாணி ஆயிற்றே! நம் கட்டுரையாளர்கள், இந்தப் பயிற்சியை எப்படிப் பெறுகிறார்கள்?
மயூரநாதன்: இப்போதுள்ள பெரும்பாலான பங்களிப்பாளர்கள் இது தொடர்பில் பழக்கம் உள்ளவர்கள் தான். அப்படியான பழக்கங்கள் இல்லாதவரும் கூட பங்களிக்கும் போது பழகிவிடலாம். பிற பயனர்களின் உதவியைப் பெறவும் முடியும். நிற்க! இவற்றை உரிய முறையில் அமைப்பதற்கான வார்ப்புருக்களும் உள்ளன.
அண்ணா: கூகுள் தேடுபொறியில் தமிழில் தேடினால், விக்கிபீடியாவின் தரவுகள் முதலில் இடம் பெறுகின்றன. இதற்கு ஏற்ப, தகுந்த குறிச் சொற்கள் இடுகிறீர்களா?
மயூரநாதன்: இதற்கு நாங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. கூகுள், விக்கிப்பீடியாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் தேடு பொறியை அமைத்துள்ளதாகக் கருதுகிறேன்.
அண்ணா: பொதுவாகத் தலைப்புகள் நீல நிறத்தில் இருக்க, சில தலைப்புகள் சிவப்பு நிறத்தில் உள்ளன. அவை முக்கியம் எனக் காட்டுவதற்காகவா? புதியவை எனக் காட்டுவதற்காகவா?
மயூரநாதன்: விக்கிப்பீடியாவில் நீலம் அல்லது சிவப்பு நிறத்தில் உள்ள சொற்கள் உள்ளிணைப்புக்களைக் குறிக்கின்றன. நீல இணைப்புகள் அச் சொற்கள் குறிக்கும் தலைப்பில் கட்டுரைகள் இருப்பதைக் குறிக்கின்றன. அவற்றை அழுத்திக் குறிப்பிட்ட கட்டுரைப் பக்கத்துக்குச் செல்ல முடியும். சிவப்பு இணைப்புகள் அத்தலைப்புகளில் இன்னும் கட்டுரைகள் எழுதப்படவில்லை என்பதைக் காட்டுகின்றன. அந்த இணைப்புகளின் மீது அழுத்தும்போது அத்தலைப்புகளில் புதிய கட்டுரைகளை எழுதுவதற்கான தொகுப்புப் பக்கம் கிடைக்கும். அங்கே புதிய கட்டுரைகளை எழுதத் தொடங்கலாம்.
அண்ணா: விக்கிப்பீடியாவில் உள்ள 'மணல் தொட்டி' வசதி குறித்துச் சொல்லுங்கள். இந்தப் பெயரைச் சூட்டியவர் யார்?
மயூரநாதன்: இது புதிய பங்களிப்பாளர்கள் பயிற்சி செய்வதற்கான இடம். இங்கே ஏற்கெனவே உள்ள கட்டுரைகளைக் குழப்பிவிடுவோமோ என்ற பயமின்றி விரும்பியபடி பயிற்சி செய்யலாம். ஆங்கிலத்தில் " sand box" என்று இருப்பதை நான் தான் "மணல் தொட்டி" என்று மொழி பெயர்த்தேன். இது ஆங்கிலச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பாக இருக்கிறதே என்று சிலர் கேட்டார்கள். ஆனாலும், நமக்கும் இது பொருந்தி வருவதால்தான் அச் சொல்லைத் தொடக்கத்தில் நான் பயன்படுத்தினேன். சிறுவயதில் எழுத்துகளை மணல் மீது எழுதிப் பழகுவது உண்டல்லவா? பல பங்களிப்பாளர்களும் இதனை ஏற்றுக்கொண்டதால் இது நிலைத்துவிட்டது.
அண்ணா: விக்கிப்பீடியா பக்கங்களில் விளம்பரங்கள் வெளியிடாதது ஏன்?
மயூரநாதன்: ஒரு கலைக் களஞ்சியத்தில் விளம்பரங்கள் இருப்பது பொருந்தாது என்பதனாலாக இருக்கலாம். விளம்பரங்கள் இல்லாமல் இருப்பது நல்லது என்றே நினைக்கிறேன். ஆனால், இதன் விளம்பரப் பெறுமானம் ஆண்டுக்கு 600 மில்லியன் டாலர்கள் வரை இருக்கக்கூடும் எனக் கூறுகிறார்கள்.
அண்ணா: தமிழ் விக்கியில் உள்ள ஒலிப்பதிவுகள் 'ஆக்' (ogg) வடிவில் இருக்கின்றன. இதை எப்படி கேட்பது? விக்கியில் பயன்படுத்தும் அனைத்துமே கட்டற்ற மென்பொருள்கள்தானா?
மயூரநாதன்: இது எனக்கும் பிரச்சினையாகத்தான் உள்ளது. 'ஆக்' (ogg) வடிவிலான ஒலிப்பதிவு எதையும் என்னால் கேட்க முடியவில்லை. இவையெல்லாம் கட்டற்ற மென்பொருள்களே.
அண்ணா: தமிழ் விக்கியில் உள்ள தரவுகள், தொடர்ந்து இற்றைப்படுத்தப்படுகின்றனவா?
மயூரநாதன்: முடிந்தவரை செய்கிறோம். நான் முன்னர் குறிப்பிட்டதுபோல பங்களிப்பவர்கள் கூடுதலாக வரும்போது இதனை மேலும் சிறப்பாகச் செய்ய முடியும்.
அண்ணா: தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது? தள நிர்வாகிகள், கட்டுரையாளர்கள், பயனாளர்கள் எவ்வளவு பேர் உள்ளனர்?
மயூரநாதன்: தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 9,000 பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். பங்களிப்பவர்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவே. கடந்த ஐந்து வருட காலத்தில் ஐந்து தொகுப்பாவது செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 250 வரையில் இருக்கும். குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்தவர்கள் சுமார் 60 பேர். தற்போது ஓரளவு தீவிரமாகச் செயற்படுபவர்கள் 20 -25 பேர் இருக்கலாம். இவர்களில் 17 நிர்வாகிகளும், அதிகாரி தரத்தில் நால்வரும் உள்ளனர்.
அண்ணா: இவர்கள் அனைவரும் பகுதி நேரத் தன்னார்வலர்களா?
மயூரநாதன்: அனைவரும் ஓய்வு நேரங்களின் பங்களிப்புச் செய்பவர்களே.
அண்ணா: நிர்வாகிகள் / அதிகாரிகள் தர நிலை குறித்துச் சொன்னீர்கள். இந்த நிலைகளுக்கு வருவதற்கு வேண்டிய தகுதிகள் என்னென்ன?
மயூரநாதன்: இவற்றுக்குச் சிறப்புத் தகுதிகள் என்று எதுவும் கிடையாது அதே போல் சிறப்புச் சலுகைகளும் இல்லை. பொதுவாக ஒருவருடைய பெயரை நிர்வாகி பதவிக்கோ, அதிகாரி பதவிக்கோ இன்னொருவர் நியமனம் செய்யலாம் அல்லது தானே தன்னை நியமித்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இது தொடர்பாக விரும்பும் பயனர்கள் வாக்களிப்பர். அக்கால முடிவில் அவருக்கு இருக்கும் ஆதரவைப் பொறுத்து அதிகாரி நிலையில் உள்ள ஒருவர் அவருக்கு நிர்வாகி அல்லது அதிகாரி அணுக்கத்தை வழங்கலாம். நிர்வாகி தரத்தில் உள்ள ஒருவர் தொகுப்புகளின்போது கட்டுரைகளை நீக்குதல் போன்ற சில கூடுதல் பணிகளைச் செய்ய முடியும். நிர்வாகி அல்லது அதிகாரிகளுக்கான அணுக்கம் அளித்தல், அதிகாரி தரத்தில் உள்ளவர்களுக்கான மேலதிக அணுக்க வசதி ஆகும்.
அண்ணா: தீவிரமாகச் செயலாற்றும் சிலரின் பெயர்களைக் குறிப்பிடலாமா?
மயூரநாதன்: தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது தீவிரமாகச் செயலாற்றுபவர்களில், சுந்தர், நற்கீரன், ரவிசங்கர், சிவகுமார், உமாபதி, கனக சிறீதரன், பேராசிரியர் செல்வக்குமார், பேராசிரியர் வி.கே, குறும்பன், கார்த்திக்பாலா, டானியேல் பாண்டியன், தேனி. எம். சுப்பிரமணி, அருண், செல்வம், பரிதிமதி ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களைவிட தற்போது குறைவாகவே பங்களித்தாலும் முன்னர் குறிப்பிடத்தக்க பங்களித்தவர்களாகப் பின் வருபவர்களையும் குறிப்பிட முடியும்: சந்தோஷ்குரு, கலாநிதி, மயூரேசன், மு. மயூரன், சிறீனிவாசன், கோபி, நிரஞ்சன் சக்திவேல், டெரென்ஸ், சந்திரவதனா, வினோத், சிந்து, விஜய ஷண்முகம், பாலாஜி, வைகுண்டராஜா, பாலச்சந்திரன், வேர்க்லோரம்.
அண்ணா: இவர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுகள்.
மயூரநாதன்: நன்றிகள்.
அண்ணா: உங்கள் பணி / தொழில் குறித்துச் சொல்லுங்கள்.
மயூரநாதன்: நான் கடந்த 30 ஆண்டுகளாகக் கட்டடக் கலைஞராகப் பணியாற்றி வருகிறேன். இலங்கையில் கட்டடக் கலையில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர் 15 ஆண்டுகள் இலங்கையிலேயே பணியாற்றினேன். பின்னர் 1993ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்து பணி செய்யத் தொடங்கினேன். கடந்த 15 ஆண்டுகளாக இங்கே பணி புரிந்து வருகிறேன்.
அண்ணா: உங்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆர்வம் பிறந்தது எப்படி?
மயூரநாதன்: பொதுவாகவே தமிழில் அறிவுத் துறைகளை வளர்க்க வேண்டும் என்னும் ஆர்வம் எனக்கு சிறு வயது முதற்கொண்டே உள்ளது. 2003ஆம் ஆண்டில் ஒரு வலைத்தளம் மூலம் விக்கிப்பீடியா பற்றி அறிந்தேன். அங்கே ஒரு அன்பர் தமிழிலும் இதனைத் தொடங்க முடியும் என்று குறிப்பொன்றை விட்டிருந்தார். அன்றிலிருந்து இத்திட்டத்தில் ஈடுபடத் தொடங்கிக் கடந்த 5 1/2 ஆண்டுகளாகத் தொடர்ந்து பங்களித்து வருகிறேன்.
அண்ணா: தனி நபராக 2760க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதிய அனுபவத்தை விவரியுங்கள். உங்களுக்கு விருப்பமான துறைகள், தலைப்புகள் என்னென்ன? உங்கள் கட்டுரைகளின் மூலம் எவை? விவரங்களை எவ்வாறு திரட்டுகிறீர்கள்?
மயூரநாதன்: நான் எழுதிய கட்டுரைகள் என்பதிலும் நான் தொடங்கிய கட்டுரைகள் என்று சொல்வது தான் பொருத்தமானது. நான் தொடங்கிய கட்டுரைகள் பலவற்றை வேறு பலர் விரிவாக்கி உள்ளனர். அது போலவே நானும் பிற பங்களிப்பாளர்கள் தொடங்கிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளை விரிவாக்கி உள்ளேன். நான் தொடங்கிய பெரும்பாலான கட்டுரைகள் ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்த்தவையே. இவற்றைச் செய்ததில் உள்ள அனுபவம் என்பதிலும், என்ன அடிப்படையில் இவற்றைச் செய்தேன் என்று சொல்கிறேன். பெரும்பாலும் நான் கட்டுரைகளை எழுதும்போது தனித் தனிக் கட்டுரைகளாக அன்றி ஒரு தொகுதியாகவே எழுதுவதுண்டு. இதனால் ஒரு குறிப்பிட்ட தலைப்பைத் தெரிவு செய்து கொண்டு அது தொடர்பாக 25, 50 எனக் கட்டுரைகளை எழுதுவது உண்டு. எடுத்துக்காட்டாக, சோழர்களைப் பற்றி ஒரு தொகுதியாகக் கட்டுரைகள் எழுதினேன் அண்மையில் முடிச்சுகள் என்னும் தலைப்பிலும் பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினேன். இதனால், ஒரு கட்டுரையில் இருந்து இன்னொரு கட்டுரைக்கு இணைப்புகள் கொடுத்து ஒன்றிலிருந்து ஒன்றுக்குச் செல்லும் வாய்ப்பை அதிகரிக்க முடிகிறது. அத்துடன் ஒரே விடயத்தில் எழுதும்போது, தகவல்கள் சேகரிப்பதும், எழுதுவதும் இலகுவாகவும் அமைகின்றது. நாம் பல துறைகளில் கட்டுரைகளைத் தொடங்கியுள்ளேன். முக்கியமாகக் கட்டடக் கலை, பிற கலைகள், தமிழ், மொழியியல், சூழலியல், வரலாறு, அறிவியல் போன்ற பல்வேறு துறைகள் இவற்றுள் அடங்கும். பல தகவல்களை நான் ஆங்கில விக்கியில் இருந்து பெறுவதுண்டு. இவை தவிர என்னிடமும் ஓரளவு நூல்கள் உள்ளன, இவற்றிலிருந்தும் தகவல்கள் எனக்குக் கிடைக்கின்றன.
அண்ணா: கிலோமீட்டர், கனமீட்டர் எனப் பலவற்றை அப்படியே பயன்படுத்தும் நிலையில் இருக்கிறோம். அறிவியல், தொழில்நுட்பச் சொற்களுக்கும் இதே நிலைதான். மொழிபெயர்ப்பிலும் ஒலிபெயர்ப்பிலும் நீங்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன?
மயூரநாதன்: மொழிபெயர்ப்பிலும், ஒலி பெயர்ப்பிலும் வரக்கூடிய முக்கிய சவால்கள் பெரும்பாலும் கலைச்சொற்கள் தொடர்பானவையும், ஆங்கிலப் பெயர்களை ஒலிபெயர்த்தல் தொடர்பானவையும் ஆகும். இவை தவிர அண்மைக் காலத்தில் கிரந்த எழுத்துப் பயன்பாடு தொடர்பிலும் சவால்கள் உள்ளன. கலைச் சொற்கள் தொடர்பில் பெரும்பாலான கலைச்சொற்களுக்கு ஏற்கெனவே இருக்கும் கலைச்சொல் தொகுப்புகளில் உள்ள கலைச் சொற்களையே பயன்படுத்தி வருகிறேன். இதில் உள்ள முக்கிய பிரச்சினை இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் பயன்படுத்தப்படும் கலைச் சொற்களுக்கு இடையிலான வேறுபாடுகள் ஆகும். எனக்கு இலங்கையில் பயன்படுத்தப்படும் கலைச் சொற்கள் பழக்கமானவை. ஆனால், இவற்றைப் பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதனால் பல அகராதிகளிலும் தேடி உரிய சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. ஆங்கிலச் சொற்களின் ஒலி பெயர்ப்பிலும் முக்கியமான சிக்கல் தமிழ் நாட்டவர், இலங்கைத் தமிழர் இடையிலான உச்சரிப்பு வேறுபாடுகள் ஆகும். இது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் விக்கிப்பீடியாவின் உரையாடல் பக்கங்களில் இருப்பதைக் காணலாம். எனினும் கலந்துரையாடல்கள் மூலம் இணக்கத்துக்கு வர முடிகிறது.
அண்ணா: நீங்கள் உருவாக்கிய புதிய சொற்கள் எவை?
மயூரநாதன்: நான் பொதுவாகப் புதிய சொற்களை உருவாக்குவதில் ஈடுபடுவதில்லை. எனினும் அவ்வப்போது தேவை ஏற்பட்டால் ஓரிரு சொற்களை உருவாக்குவது உண்டு. இப்பொழுது ஞாபகம் இல்லை.
அண்ணா: தமிழ் விக்கிபீடியாவில் என்னென்ன துறைகளில் பங்களிப்பாளர்கள் இருக்கிறார்கள்? இன்னும் என்னென்ன துறைகளில் பங்களிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள்?
மயூரநாதன்: பங்களிப்பவர்களில், பெரும்பாலோர் தகவல் தொழில்நுட்பம், கணினித் துறைகளைச் சேர்ந்தவர்களே. இவர்களைத் தவிரக் கணிதம், மின்னியல், கட்டடக் கலை, உயிரித் தொழில்நுட்பம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். எனினும் இவர்களிற் பலர் பல்துறை ஆர்வம் கொண்டவர்கள். பல துறைகள் தொடர்பான கட்டுரைகளை எழுதக் கூடியவர்கள். எனினும் பல முக்கிய துறைகளில் ஆர்வலர்கள் வேண்டும். எடுத்துக்காட்டாக, மருத்துவம், சட்டம், பொருளியல் போன்ற பல துறைகளில் நுணுக்கமாகக் கட்டுரைகளை எழுதக் கூடியவர்களின் பங்களிப்புத் தேவை.
அண்ணா: புதிதாகப் பங்களிக்க விரும்புவோருக்கு உங்கள் குறிப்புகள் என்னென்ன?
மயூரநாதன்: தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் புதிதாகப் பங்களிக்க வருவோர், தமிழில் உள்ளீடு செய்யத் தெரிந்திருப்பது அடிப்படையானது. இதற்கான வழிகாட்டிகளை விக்கிப்பீடியாவிலே பார்க்க முடியும். தவிர ஏற்கெனவே அனுபவம் பெற்ற பயனர்களிடம் இது தொடர்பில் உதவி பெற்றுக்கொள்ளவும் முடியும். தற்போது சில இடங்களில் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க விரும்புவோருக்கான பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்று வருகின்றன. இவ்விடங்களுக்குச் செல்ல முடிந்தவர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ள முடியும்.
முக்கியமாக விக்கிப்பீடியாவின் தன்மையைப் புரிந்துகொள்வது அவசியம். இது பலர் கூடி உருவாக்கும் ஒரு கலைக் களஞ்சியம். ஒருவர் எழுதும் கட்டுரையில் இன்னொருவர் திருத்தங்களைச் செய்ய முடியும். புதிய கருத்துகளைச் சேர்க்க முடியும். கட்டுரையின் அமைப்பே மாறிவிடக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. இவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பாங்கு அவசியம். ஆனால், இவ்வாறான மாற்றங்கள் எழுந்தமானமாக நடைபெறுவது இல்லை. சர்ச்சைக்கு உரிய மாற்றங்கள் எனில், முதலில் உரையாடல் பக்கத்தில் கலந்துரையாடல் நிகழும். நான் கட்டுரைகளை எழுதுகிறேன் என்றில்லாமல், பலருடன் நானும் கூட்டாக ஒரு கலைக் களஞ்சியத்தை உருவாக்குகிறேன் என்னும் மனப்பாங்கு இருக்க வேண்டியது அவசியம்.
அண்ணா: தமிழ் விக்கியின் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?
மயூரநாதன்: தனித்தனி மொழிகளுக்கான விக்கிப்பீடியாக்களின் வளர்ச்சியைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கான பதவிகளோ அல்லது குழுக்களோ எதுவும் கிடையாது. முறைப்படியாகச் சேர்ந்து இயங்குவதற்கான அமைப்பு முறைகளும் கிடையாது. ஆனாலும், கலந்துரையாடல்களின் மூலம் விக்கிப்பீடியாக்களின் வளர்ச்சி குறித்த இலக்குகளையும் நடைமுறைகளையும் ஓரளவுக்கு வகுத்துக்கொள்ள முடியும். தமிழ் விக்கிப்பீடியாவிலும் இத்தகைய கலந்துரையாடல்கள் மூலம் சில திட்டங்கள் உருவாகின்றன.
எங்களுடைய அடிப்படை நோக்கம் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அக் கட்டுரைகள் முழுமையானவையாகவும், தரமுள்ளவையாகவும் அமைவதை உறுதி செய்வதுமே. இதற்கான முதன்மைத் தேவை, பங்களிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகும்.
தற்போது பங்களித்து வரும் பயனர்களின் புவியியற் பரம்பலைக் கவனித்தால் இப் பரம்பலில் உள்ள சில குறைபாடுகளைக் கவனிக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பவர்கள் சுமார் 10 நாடுகளிலிருந்து பங்களிப்புச் செய்கின்றனர். இவர்களில் இந்தியா, இலங்கை ஆகிய தாயகப் பகுதிகளில் வாழ்வோர் அரைப் பங்கினருக்கும் குறைவே. பெரும்பாலோர் தாயகப் பகுதிகளுக்கு வெளியே வாழும் தமிழர்களே. உலகத் தமிழர்களில் 95% மக்கள் வாழும் தமிழ்நாட்டிலிருந்து பங்களிப்பவர்கள் சுமார் ஐந்தில் ஒரு பங்கினர் மட்டுமே. இந் நிலையை மாற்றுவதற்குத் தாயகப் பகுதிகளிலிருந்து, குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து பல புதிய பங்களிப்பாளர்களை உருவாக்க வேண்டும்.
இதனால் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இணையத்துக்கு வெளியில் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்துவதற்கும், ஆர்வமுள்ளவர்களுக்கு இது குறித்த பயிற்சிகளை அளிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர்கள் சிலர் விக்கிப்பீடியா ஆர்வலர்கள் சிலருடன் இணைந்து இவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இதுவரை பெங்களூரிலும், சென்னையிலும் பயிற்சிப் பட்டறைகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.
தரத்தைப் பொறுத்தவரை தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரைகள் பெருமளவில் முன்னேற இடம் உண்டு. கூடியமட்டிலும் சான்றுகளுக்கு முன்னுரிமை தந்து சுட்டுகிறோம். எனினும் பல கட்டுரைகளில் மேற்கோள்கள் சுட்டப்பட வேண்டியுள்ளது. பொதுவான தமிழ் நடை பற்றிய குறைபாடுகளும் உண்டு. இவற்றைக் கவனித்து உரிய திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம். வரும் நாட்களில் இது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். இப்போதுள்ள குறைந்த எண்ணிக்கையிலான பங்களிப்பாளர்களுடன் இவ்வாறான பணிகளைச் செய்து முடித்தல் கடினம். பல புதியவர்கள் பங்களிக்க முன்வந்தால் தான் இவற்றைத் திறம்படச் செய்யலாம்.
இவை தவிர தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலத் திட்டங்கள் பற்றிச் சிந்திக்கும் போது, தமிழ் மக்களுக்குத் தனித்துவமாக இருக்கக்கூடிய தேவைகள், அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள், சாதக பாதக நிலைமைகள் என்பன பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. முக்கியமாக புதிய அறிவுத் துறைகளில் உருவாகும் அறிவுச் செல்வங்களைத் தமிழில் கொண்டு வருவதில் உள்ள பிரச்சினைகள் பற்றித் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதன் மூலம் தான் விக்கிப்பீடியாவைத் தமிழில் மக்களுக்குப் பயன் தரத்தக்க வகையில் வளர்த்தெடுக்கலாம்.
ஆங்கிலம் போன்ற மொழிகளிலுள்ள விக்கிப்பீடியாக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுடன் நமது பிரச்சினைகளை ஒப்பிட முடியாது. உலக மொழி என்ற அளவில் ஆங்கில மொழிக்கு உலக அளவில் பெரும் சாதக நிலை உண்டு. உயர்கல்விக்கு உரிய மொழியாகத் தமிழை நாங்கள் பயன்படுத்தாமை காரணமாக தமிழர்களான அறிஞர்கள் பலர், தமிழ் மூலம் தங்கள் அறிவை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல முடியாதவர்களாக இருக்கின்றனர் என்பது ஒருபுறம் இருக்க, உயரறிவுத் தரம் கொண்ட கட்டுரைகளைத் தமிழில் யார் பயன் படுத்துவார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது. எனவே எவ்வாறான கட்டுரைகள் தமிழ் மக்களுக்குப் பயன்படும், உயரறிவுத் தரம் கொண்ட கட்டுரைகளின் தேவை எத்தகையது போன்ற விடயங்களைச் சீர் தூக்கிப் பார்த்துத் தமிழ் விக்கிப்பீடியா வளர்த்து எடுக்கப்பட வேண்டும்.
அண்ணா: இவ்வளவு நேரம் பொறுமையாகப் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. தங்கள் பணியும் விக்கிப்பீடியாவின் வீச்சும் மேலும் சிறக்க வாழ்த்துகள்.
மயூரநாதன்: என்னை உங்களுடன் உரையாட அழைத்தமைக்காகவும், தமிழ் விக்கிப்பீடியா பற்றிக் கூறுவதற்கு வாய்ப்புத் தந்தமைக்காகவும் நன்றி.
----------------
13 ஜூன் 2009, சனிக்கிழமை, மாலை 6.00 மணிக்கு, கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் தமிழ் விக்கிபீடியா பற்றி ரவிசங்கர் பேசுகிறார். அவர் எழுதிய குறிப்பு:
இந்திய மொழிகளில் இந்திக்கு அடுத்து தமிழ்தான் இணையத்தில் அதிக அளவு இடம் பெற்றிருக்கிறது. 5,000-க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன. ஆனால், இந்தத் தமிழ் உள்ளடக்கம் பெருமளவு பக்கச் சார்புடையதாகவும், கருத்து சார்ந்ததாகவும், அரசியல்-திரைப்படம்-சமையல்-ஆன்மிகம்-கிரிக்கெட் என்று குறுகிய வட்டத்தில் உழல்வதாகவும் உள்ளது. கல்வி நோக்கில் ஒரு தலைப்பு குறித்துத் தேடினால், தகவலை முன்வைத்து நடுநிலையுடன் எழுதப்பட்ட விரிவான கட்டுரைகள் குறைவே.
ஆங்கிலத்தில் இந்தத் தேவையை நிறைவு செய்ய ஏராளமான தளங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது ஆங்கில விக்கிபீடியா. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு கலைக்களஞ்சிய ஆங்கிலக் கட்டுரையைப் புரிந்து பயன்படுத்தும் மக்கள் 30 விழுக்காடாவது இருப்பார்களா என்பது கேள்விக்குரியது.
ஆங்கிலம் போல் தமிழில் ஏராளமான தகவல் தளங்கள் இல்லை. தமிழ் விக்கிபீடியா மட்டுமே ஒரே ஒருங்கிணைந்த தகவல் தளமாக இருப்பதால், தமிழ் விக்கிபீடியாவை வளர்க்க வேண்டியது முக்கியம். கடந்த 5 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ் விக்கிபீடியாவில் 18,000+ கட்டுரைகளே உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்க அளவு குறுங்கட்டுரைகள். இன்னும் பல முக்கிய துறைகளைக் குறித்து அடிப்படைக் கட்டுரைகள்கூட இல்லை. குறைந்தது ஒரு இலட்சம் கட்டுரைகளாவது இருந்தாலே ஒரு குறைந்தபட்ச பயனை நல்க இயலும்.
தமிழ் விக்கிபீடியாவுக்குப் பங்களிக்க இருக்கும் மிகப் பெரிய தடைகள்:
* கணினியில் தமிழில் எழுதத் தெரியாமை.
* தமிழில் கோர்வையாகக் கட்டுரை எழுத இயலாமை.
* இணையம் குறித்த அடிப்படை அறிவின்மை. வலையில் எழுதும் பழக்கமின்மை.
* சரியான கணினி, இணைய வசதிகள் இல்லாமை.
தமிழ் வலைப்பதிவர்கள், இந்தத் தடைகளைக் கடந்தவர்கள். பல நாடுகளில் இருந்து பல துறைகள் குறித்து எழுதக்கூடியவர்கள். எனவே, வலைப்பதிவர்களிடம் இருந்து பெரிய அளவில் பங்களிப்புகளை எதிர்ப்பார்க்கிறோம். இருப்பினும், ஏறத்தாழ பத்து தமிழ் வலைப்பதிவர்கள் மட்டுமே தமிழ் விக்கிபீடியாவுக்கு பங்களித்து வருகிறார்கள். வலைப்பதிவர்கள் பங்களிப்பதற்கான தடைகள்:
* பிளாகர், வேர்டுபிரெசு போல மீடியாவிக்கி மென்பொருள் பயன்படுத்த இலகுவாக இல்லாமை.
* வலைப்பதிந்தால் மறுமொழிகள், நண்பர்கள், ஊடக வாய்ப்புகள் என்று பயன்கள் கிட்டுவது போல விக்கிபீடியாவுக்குப் பங்களிப்பதால் தனக்கு என்ன நன்மை கிடைக்கும் என்ற கேள்வி.
* விக்கிபீடியா செயல்படும் தன்மை பற்றி தெளிவின்மை. (நான் எழுதும் கட்டுரையை இன்னொருவர் எப்படித் திருத்தலாம், திருத்தினால் நான் எழுதியது வீணாகாதா, விக்கிபீடியா நடுநிலையானதா, மற்ற பங்களிப்பாளர்களிடம் மல்லுக்கட்டி நேரம் போகுமா, ஆங்கில விக்கிபீடியா போல் இங்கும் பிரச்னை வருமா... போன்ற கேள்விகள்.)
வலைப்பதிவர்கள் மனத்தில் இருக்கும் இக்கேள்விகளுக்கு விடை அளிக்கும் முகமாகவும், கூடிய பங்களிப்புகளை வேண்டியும் இந்தக் கூட்டம் நடைபெறும். கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்:
* விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்.
* விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவது எப்படி? ஒரு பத்து நிமிட அறிமுகம்.
* விக்கிபீடியாவுக்கு வலைப்பதிவர்கள் எப்படிப் பங்களிக்கலாம்?
* கேள்வி-பதில், கலந்துரையாடல்.
Posted by
நா. கணேசன்
at
2
comments