பேராசிரியர் செ. இரா. செல்வகுமார் (டொராண்டோ, கனடா) அவர்கள் 9 ஆண்டுகளுக்கு முன்னர் கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து அயன்மொழிச் சொற்களை எழுத எளிய முறை ஒன்றைத் தமிழ்.நெட்டில் பரிந்துரைத்தார்:
http://www.tamil.net/list/1999-09/msg00632.html
முனைவர் செல்வாவின் பரிந்துரை கருத்தூன்றிப் பயிலவேண்டிய ஒன்று. 1999-ல் பேரா. செல்வா எழுதிய மடலை இங்கே முற்செலுத்துகிறேன். என் அடுத்த மடல்களில் மேலும் பேச ஆசை.
நட்புடன்,
நா. கணேசன்
-----------------------------------------------------
அன்புள்ள தமிழ் இணையத்தாருக்கு:
வணக்கம்.
பயனுடையதாக இருக்கும் என்று எண்ணித் தமிழ் மொழியின் நலத்திற்காக ஒரு புதிய கருத்தை இங்கே முன் வைக்கிறேன்.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று திருவள்ளுவப் பெருந்தகையார் கூறியிருப்பதை நினைவிற் கொண்டு என் கருத்தை அருள்கூர்ந்து சீர் தூக்கிப் பார்க்க வேண்டுகிறேன்.
தமிழ் மொழியின் இனிமைக்குக் குறைபாடு வாராமல் தமிழ் மொழியிலே பிற மொழி ஒலிப்புகளை எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதே கேள்வி. தொழில் நுட்பப் புரட்சியால் (ஊர்தி, தொலை தொடர்பு, கணிணி முதலான நுட்பங்களிலே கடந்த 30-40 ஆண்டுகளிலே
ஏற்பட்ட மிகப்பெரும் வளர்ச்சிகளினால்) இன்று மக்கள் உறவாட்டத்திலே உலகம் மிகச் சுருங்கி வருவதை பலரும் நன்கு உணர்வர். இதனால் வேற்று மொழி ஒலியன்களைத் தமிழில் எடுத்தாள வேண்டிய தேவை இன்னும் வலுவாக ஏற்படுகிறது.
வேற்று மொழிப் பெயர்களிலே வழங்கும் b, d, f, g, h, முதலான எழுத்தொலிகளை எவ்வாறு தமிழில் வழங்கலாம் ?
ஏற்கனவே கணிணி எழுத்துப் பலகைகளில் உள்ள சில குறிகளைப் பயன் படுத்தி பல புதிய ஒலிப்புகளைக் குறிக்கலாம் என்பதே என் எண்ணமும் அடிக்கருத்தும். முதலில் தமிழ் முறை என்னவென்று கீழே சற்று விளக்கிவிட்டு பின்னர் புதிய முறையை விளக்குகிறேன். அருள்கூர்ந்து பொறுமையாக எண்ணிப் பாருங்கள்.
1. தமிழில் 18 மெய் எழுத்துக்களே உள்ளன. அவற்றில் 6 எழுத்துக்கள் மட்டுமே வல்லின எழுத்துக்கள். அவையாவன க், ச், ட், த், ப், ற் என்பனவே. இந்த 6 எழுத்துக்களிலும் நான்கு எழுத்துக்கள் மட்டுமே, ட், ற் நீங்கலாக, உயிரோடு சேர்ந்து ஒரு தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடியவை.
எனவே க், ச், த், ப் என்னும் நான்கு வல்லின எழுத்துக்கள் மட்டுமே உயிர் எழுத்தோடு கூடி தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக வரும். தமிழ் மொழியிலே வல்லின எழுத்துக்கள் வலித்து ஒலித்தல் இரண்டே இடங்களில் தான்.
முதலாவது ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வந்தால் வலித்து ஒலிக்கும். இரண்டாவது, புள்ளி வைத்த (தமிழில் இதற்கு ஒற்று என்று பெயர்) ஒரு வல்லின எழுத்துக்கு பின் வரும் பொழுது வல்லின எழுத்து வலித்து ஒலிக்கும். மற்ற இடங்களில் எல்லாம் வல்லின எழுத்து மெலிந்தே ஒலிக்கும்.
சில எடுத்துக் காட்டுகளைப் பார்த்தால் சட்டென்று விளங்கும்:
கடல் என்னும் சொல்லைப் பாருங்கள். முதல் எழுத்தாகிய க என்னும் வல்லின எழுத்து, சொல்லின் முதல் எழுத்தாக வருவதால் வலித்து ஒலிக்கின்றது. கடல் என்னும் சொல்லில் வரும் இரண்டாவது எழுத்தாகிய டகரமும் வல்லின எழுத்துதான், என்றாலும் மெலிந்தே ஒலிக்கின்றது. ஏன் ? அந்த டகரத்திற்கு முன் புள்ளி வைத்த வல்லின எழுத்து வரவில்லை. இப்பொழுது, வேறு ஒரு சொல்லாகிய கட்டம் என்னும் சொல்லை எடுத்துக்கொண்டால், அதில் வரும் மூன்றாவது எழுத்தாகிய டகரம் வலித்து ஒலிக்கின்றது. ஏனென்றால், புள்ளி வைத்த ட் என்னும் வல்லின எழுத்து இரண்டாவது எழுத்தாக வந்து டகரத்திற்கு முன்னால் இருப்பதால் கட்டம் என்னும் சொல்லில் உள்ள டகரம் வலித்து ஒலிக்கின்றது. முன்னே வரும் புள்ளி வைத்த எழுத்து வல்லின எழுத்தாக இல்லாமல், மெல்லின எழுத்தாக இருந்தால் மெலிந்தே ஒலிக்கும், வலித்து ஒலிக்காது. இப்பொழுது கீழ்க்காணும் சொற்களை எழுத்தொலி விளங்க ஒலித்துப் பாருங்கள், வாய் விட்டு சொல்லிப்பாருங்கள் (பலுக்கிப்பாருங்கள்).
வாடு - வாட்டு - வாண்டு (டு என்னும் எழுத்தை எப்படி ஒலிக்கின்றோம் (பலுக்குகின்றோம் ) ?)அக்கம் பக்கம் - அகம் - அங்கம்- தங்கம் (க என்னும் எழுத்தை எப்படி பலுக்குகிறோம் ?) பத்து - பந்து - பதுங்கு (து என்னும் எழுத்தை எப்படி ஒலிக்கின்றோம் ? ) பச்சை - பஞ்சு - பஞ்சை - குடிசை - பசி (சகரத்தை எப்படி ஒலிக்கின்றோம் ? (மெலிந்து ஒலிக்கும் சகரம் இரு வேறு விதமாக ஒலிக்கும். சொல்லின் முதல் ஒலியாக வரும் சகரமும், மெலிந்து ஒலித்தல் தமிழில் விதி விலக்கு).
காம்பு - காப்பு - கபுக்கென்று (பு என்னும் எழுத்தை எப்படி பலுக்குகிறோம் ?) எனவே வல்லின எழுத்துக்களைத் தமிழில் ஒலிக்கும் முறை என்னவென்றால், ஒரு வல்லின எழுத்து இரண்டே இரண்டு இடங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மெலிந்தே ஒலிக்கும்.
இவ்விரு இடங்களாவன, (1) ஒரு சொல்லின் முதல் எழுத்தும், (2) புள்ளி வைத்த வல்லின எழுத்துக்கும் பின் வரும் வல்லின எழுத்துமே. முதல் எழுத்தாக வரும் சகரம் சிலவிடங்களில் மெலிந்து ஒலிப்பது ஒரு விதி விலக்கு. முதல் எழுத்தை வலித்து (ச்)சட்டி, (ச்)சொல் என்றும் சொல்லலாம். (அப்படிச் சொல்லுவோர்களும் உள்ளனர்) அல்லது முதல் எழுத்தையே காற்றொலி கலந்த மெல்லொலியாக சட்டி, சொல் என்றும் சொல்லலாம். ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வராமல், இடையே வரும் சகரமும், தமிழ் முறைப்படி மெலிந்து ஒலிக்கும் இடங்களிலும், இரு வேறு ஒலிப்புகளுடன் ஒலிக்கின்றது. ஒன்று பாம்பு சீறுவது போல் தோன்றும் காற்றொலியாகவும் மற்றொன்று மூக்கொலி கலந்ததாகவும் உள்ளன. எடுத்துக்காட்டுகள் : கொசு - கொஞ்சு. கொசுவில் வரும் சு காற்றொலி கலந்தது, கொஞ்சு என்னும் சொல்லில் உள்ள சு மூக்கொலி கலந்தது.
2. அடுத்ததாக வேற்று மொழிச் சொற்களைத் தமிழில் எப்படி வழங்கலாம் என்று பார்க்கலாம். முதலாவதாக தமிழில் எவ்வாறு b, d, f, g, h, j, 'dh', 'sh' என்னும் எழுத்தொலிகளைக் குறிக்கலாம் என்று பார்ப்போம். தமிழில் கம்பு என்று சொல்லும் பொழுது அதில் வரும் பு என்னும் எழுத்தொலியானது ஆங்கிலம் போன்ற வேற்று மொழிகளில் வரும் b என்னும் எழுத்தோடு உயிரெழுத்து கூடிய எழுத்தொலியேதான். என்றாலும் Berlin, Bell என்னும் பெயர்ச்சொற்களில் வருவதைப்போல தமிழில் முதலொலியாக வர இஇயலாது (தமிழ் முறைப்படி). எனவே ஒரு வல்லின எழுத்துக்கு முன்னே ஒலி மாறி வருவதைக்குறிக்க (ஒலித்திரிபைக் குறிக்க) ஒரு கணிணி எழுத்துப்ப்லைகையில் உள்ள ஒரு குறியைப் பயன் படுத்தலாம். apostrophe அல்லது single quote என்னும் குறியை (தமிழில் முன்கொட்டு என்று பெயரிடலாம் என்று நினைக்கிறேன்) இட்டுக் குறிக்கலாம் என்று நினைக்கிறேன். இதே முறையில், தமிழில் வழங்கா f, sh முதலிய எழுத்துக்களையும் குறிக்க முன்கொட்டு ஒன்று இட்டு ஒலித்திரிபைக் குறிக்கலாம்.
2.1 முன்கொட்டுடன் வரும் எடுத்துக்காட்டுகள்:
Ball = 'பால்
Bell = 'பெல்
Berlin = 'பெர்லின்
Gandhi = 'காந்தி
Johnson, Jagannaathan = 'சான்சன் , 'சகன்னாதன்
David = 'டேவி 'ட்
Dirac = 'டிராக்
Dumdam Airport = 'டம்டம் வானூர்தி நிலையம் (வான் நிலையம், வான் துறை)
Dadabhai Navroji = 'தாதாபாய் நவ்ரோ'சி
Fermi = 'வெர்மி
Ford = 'வோர் 'ட்
Usha = உ'ழா
Ship = 'ழிப் ( பழக்கத்தில் முன் கொட்டுடன் வரும் 'ழ என்பதை sha என்று
சொல்லிப் பழக வேண்டும்)
2.2 அடுத்ததாக H என்னும் ஒலியை தமிழில் ஆய்த எழுத்தைக்கொண்டு குறிக்கலாம்.
எடுத்துக்காட்டுக்கள்:
Hitler = ·இட்லர்
Hardy = ·ஆர்டி
Hilbert = ·இல்பெர்ட்
2.3. காற்றொலி கலந்தொலிக்கும் S என்பதைக்குறிக்க, தமிழில் (tilda) ~ச் என்று குறிக்கலாம். பெரும்பாலும் இது தேவைப்படாது என்றாலும், சில இடத்தில் இம்முறை பயன் படலாம். எடுத்துகாட்டாக Brooks, Francis முதலான பெயர்ச்சொற்களை 'புரூக்~ச் அல்லது 'ப்ரூக்~ச் என்றும் 'விரான்சி~ச் அல்லது 'வ்ரான்சி~ச் என்றும் எழுதலாம். அல்லது சற்றே தமிழ்ப்படுத்தி 'புரூக்~சு என்றும் 'விரான்சிசு என்றும் எழுதலாம்.
2.4 சில இடங்களில் தமிழ் முறைக்கு மாறாக புள்ளி வைத்த வல்லின எழுத்து வாராமலும்
வல்லின எழுத்துக்கள் வலிந்து ஒலிக்க வேண்டி இருக்கின்றது. எடுத்துக்காட்டாக Bapu என்று வரும் பொழுது நாம் 'பா(ப்)பு என்று எழுதலாம். இவ்வாறு வரும் இடங்கள் மிகக் குறைவானவே என்பதால், இப்படி பிறைக்குறிக்குள் வல்லின ஒற்றை (புள்ளி வைத்த எழுத்தை) எழுதி சரியான ஒலிப்பைக்குறிக்கலாம். அல்லது வேறு விதமாக இரட்டை முன்கொட்டு இட்டும் காட்டலாம். 'பா''பு. Gopi என்பதை 'கோ''பி என்று எழுதலாம்.
2.5 கடைசியாக, அகர-ஏகாரக் கலவை ஒலியாக வழங்கும் ஓர் உயிர் ஒலியை எப்படிக் குறிக்கலாம் என்று பார்ப்போம். கீழ்க்காணும் ஆங்கில சொற்களைப் பார்த்தால் இந்த அகர-ஏகாரக் கலவை ஒலி விளங்கும்: cat, gap, fat முதலிய சொற்களில் வழங்கும் a என்னும் உயிரொலி சற்றே ஏகார ஒலி கலந்து ஒலிப்பதை உணரலாம். இதனைக் குறிக்க, தமிழில் எழுத்தின் முன்னொட்டாக தொப்பி போன்ற கூரைக் குறியை (^) இட்டுக் குறிக்கலாம். ஏனவே Apple Computer என்பதை ^ஆப்பிள் கணினி என்று குறிக்கலாம். Faraday என்னும் பெயரை 'வாரடே என்பதற்கு பதிலாக ^'வேரடே என்றோ அல்லது ^'வாரடே என்றோ குறிக்கலாம்.
2.6 சரி, ஒற்றைக் கொட்டு மேற்கோள் குறியைப் பயன் படுத்துவதால் குழப்பம் வாராதா ? (மேற்கோள் குறி என்பதை சுருக்கமாக மேறி என்று சொல்லலாமா ? மேல் என்னும் சொல்லே அடிப்படை எனவே அது மேற்- என்று மாறும் இயல்புடையதுதான்; இன்னொரு விதமாகப் பார்த்தால், மேற்கோள் என்பதின் முதல் எழுத்தும் (மே), குறி என்பதின் கடை எழுத்தும் (றி) சேர்த்து மேறி என்றாயிற்று என்றும் கொள்ளலாம்) எனவே, தமிழில் நாம் எப்பொழுதும் இரட்டை மேறியை மட்டுமே பயன் படுத்துவோம். அல்லது ஒற்றை மேறியைப் பயன் படுத்துவதானால் ஒற்றை மேறிக்கு அடுத்து சற்று இடைவெளி தர வேண்டும். அவ்வளவுதான்.
3 இந்த முறையினால் என்ன நன்மை ?
3.1 தமிழ் நெடுங்கணக்கில் (எழுத்து வரிசை) உள்ள தமிழ் எழுத்துக்கள் மட்டுமே போதுமானது. (ஜ ஜி, ஷ, ஷி , ஹ, ஹி, ஸ, ஸி போன்ற எழுத்து வரிசைகள் தேவையே இல்லை; இகர,ஈகார ,ஊகார எழுத்துக்களும், புள்ளி வைத்த தனி மெய்யெழுத்துக்களும் தேவையே இல்லை.). தமிழ் மரபில் இருந்து மாற விருப்பம் இல்லா தமிழர்கள் இன்றும் ஜகன்னாதன் என்னும் பெயரை சகன்னாதன் என்றுதான் வழங்குகிறார்கள். இங்கு கூறியுள்ள முறைப்படி 'சகன்னாதன் என்று அவர்களும் ஆர்வமுடன் தேர்ந்தெடுத்து வழங்குவார்கள் என்று நினைக்கிறேன். இனி நான் என் நண்பர் 'கணேசன் என்று எழுத முடியும். என் நண்பரின் மனைவியின் பெயர் உ'ழா. இப்பெயருக்கு வடமொழியில் வைகறை, அதிகாலை, கதிரவன் முளைத்து எழும் சிற்றம் சிறூகாலை எனப்பொருள். கணித மேதை ·இல்பெர்ட்டை தமிழில் எளிதாக எழுதலாம். தமிழ்க் கணித மேதை ராமானு'சன் என்றும் எழுதலாம். கலைமகளை சரசுவதி என்று எழுதுவதே போதும். ~சர~ச்வ(த்)தி என்று எழுதத்தேவை இல்லை என்பது என் கருத்து.
3.2 மேலும் தமிழ் மரபுக்கு மாறாக வரும் பல வேற்றொலிக்கூட்டங்களையும் (மொழி முதலா வரும் G,B,D, Dh ஒலியன்கள் ) மற்றும் தமிழில் வழங்கா F என்னும் ஒலியையும் குறிக்க முடியும். அணுவியல் அறிஞர் 'வெர்மி என்றும், இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த சிந்தனைச் சிற்பிகளில் ஒருவராகிய 'பக்-மினிசு(ட்)டர் 'வுல்லர் என்றும் இனி எழுத முடியும். ஒரு கூண்டுபோல் அமைந்திருக்கும் 60 கரிம அணுக்கள் கொண்ட ஒரு வியப்பூட்டும் கூட்டணுவை (!!) அண்மையில் கண்டுபிடித்து அதற்கு பேரறிஞர் 'வுல்லரின் நினைவாக 'வுல்லரீன் என்று பெயரிட்டுள்ளார்கள்.
3.3 மிகக்குறைந்த எழுத்துக்களுடன் முன்பினும் அதிகமான வேற்று
மொழிச் சொல்லொலிப்புகளைத் தமிழில் வழங்க இயலுகின்றது. எழுத்துக்களைக் குறைப்பது மட்டுமே நோக்கம் இல்லை, ஆனால் இப்பொழுது இருக்கும் நிலைக்கு அதிகம் மாறுபடாத ஒரு வகையில், எவ்வாறு இன்னும் அதிகமான எழுத்தொலிகளைத் தமிழில் வழங்கலாம் என்பதே என் கேள்வி. தமிழில் வழங்கும் அருமையான மரபாகிய வல்லின-மெல்லின ஒலிப்பு முறை மாறாமல் இருப்பதும் என் அடிப்படைநோக்கம்.
3.4 கையால் எழுதும் பொழுதும், இம்முறை மிக எளிதாக கைக்கொள்ளத் தக்கது.
மேற்கண்ட முறையை எல்லோரும் விரைந்து பயன் படுத்தினால், பயன் வளரும் என்று கருதுகிறேன். குற்றம் குறை இருப்பின், அறிஞர்கள் அருள்கூர்ந்து எடுத்துக்கூறி திருத்துமாறு வேண்டிக்கொள்ளுகிறேன்.
அன்புடன்
செல்வா
___________________
செ. இரா. செல்வகுமார்
வாட்டர்லூ, ஒன்ட்டாரியோ, கனடா
ஆக~ச்ட்டு, 24, 1999.
கிரந்த எழுத்தை நீக்க எளிய ஒருமுறை (கி.பி. 1999)
Posted by
நா. கணேசன்
at
7
comments
Labels: கிரந்தம் , தனித்தமிழ் , தொல்காப்பியம்
தமிழர் இணையும் யூனிக்கோடு!
தமிழ்மணம் நடாத்தும் நண்பர்கள் யூனிக்கோடு பற்றிய சில அனுபவங்கள், வரலாறுகளை எழுத அழைத்ததால் எனக்குப் பெருமை. யூனிக்கோடுக்குத் தமிழ் வரலாற்றிலே ஒரு பெருமை உண்டு ~ பெரும்பான்மையான ஒரு குறியேற்றமாக மாறி வலைப்பதிவுகள் போன்றவற்றால் பல்லாயிரக்கணக்கான தமிழரைத் தமிழ்நாட்டிலேயும் வெளியேயும் வையவிரிவலையில் (world-wide web) மடலாட வைத்தது. கணினிக் குறியேற்றங்கள் பல இருந்தாலும் யூனிக்கோடினால் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் பார்க்க முடிகிறது. கணினி என்ற கலைச்சொல் கிண்டி பொறியியற் கல்லூரியில் 1970களின் கடைசியிலே ஏற்பட்டது. யூனிக்கோடுக்கு ஒருங்குறி என்று தமிழ்ப்படுத்தியவர் நண்பர் இராமகி ஆவார். இணையம் (web), உலாவி (browser), மட்டுநர்(moderator), தொடுப்பு (link), ... எத்தனை, எத்தனைக் கலைச்சொற்கள்! தொழில்நுட்புகள் அனைத்துக்கும் உழைக்கும் தமிழ்மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் தமிழன்னைக்கு அழகுச் சொல்மாலைகள் புனையும் முயற்சிக்கு முக்கியமான வழி இணையம் என்றானது. எந்த ஓர் ஆங்கில வார்த்தைக்கும் தமிழில் பொருத்தமான சொல்லைத் தோற்றுவிக்க நொடியினில் முடிகின்றது. இணைய நாட்டாமை மேட்டிமைக் குடிகளால் நடத்த இயலாதவாறு அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கும் வாய்ப்புகளைத் தொழில்நுட்பம் இன்று தருகிறது. வணிக நிறுவனங்களிடம் உள்ள ஊடகங்களிலே எழுதக் காத்திராமல், உடனுக்குடன் தத்தம் படைப்புக்களை, எண்ணங்களை பொதுமக்கள் பகிர்ந்துகொள்ள ஏலுகிறது. 100,000 வலைப்பதிவுகள் தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படும் நாள் தொலைவில் இல்லை எனும் கனா மெய்ப்படவேண்டும்.
யூனிக்கோடில் கூகுள் குழுக்கள்:
முதன்முதலில் ஏற்பட்ட மடலாடு மின்குழு தமிழ்.நெட். பின்னர் கிளைத்து யாகூ குழுமங்கள் பலவாகின. தமிழ்ச் சொற்களைக் கொடுத்துத் தேட வசதிகள் நல்கின கூகுள் குழுமங்கள், ஆனால் அவ்வசதி இன்றுகூட யாகூ குழுக்களில் இல்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். முதன்முதலில் தமிழின் கூகுள்குழு 'அன்புடன்' புகாரி [1] அமைத்துச் சிறப்பாக இயக்கி வருகிறார். இப்போது அன்புடன், முத்தமிழ், மின்தமிழ், பிரவாகம், பண்புடன், ... என்று பல துறைகளில் கூகுள்குழுக்கள் ஒருங்குறியில் நடைபெறுகின்றன, இலட்சக் கணக்கில் கடிதங்கள் பரிமாற்றம்! கூகுள் குழுக்களின் அறிமுகக் கட்டுரைகளைப் ஃபெட்னா மலர்களில் கவிஞர்கள் வரைந்தனர்: புகாரி கட்டுரை (2005), இர. வாசுதேவன் கட்டுரை (2006).
கூகுளில் இணைக்குழு உருவாக்கம்:
2005 வாக்கில் இருந்த பெரிய பிரச்சினை என்னவெனில் மரபுக் கவிஞர்கள், யாகூ குழுவின் முதலாளிகளுக்கும் கூட இணையத்தில் யூனிக்கோடு எழுதுகை என்பது கைவசப்படாத வேளை. மேலும் யூனிக்கோடு மாறுகிறது என்று தமிழ்நாட்டின் பத்திரிகைகளில் சில மாதங்களுக்கு ஒருமுறை செய்திகள் வெளிவந்த காலம். குறியீடு மாறிய பின்னால் மாறுங்கள் என்றும் சொன்னார்கள். அந்நிலையில் யாகூகுழுவில் எழுதுவோர் எழுதட்டும், தானியங்கியாக நிழற்குழு கூகுளில் அமைத்து அந்தத் திஸ்கி மடல்களை யூனிக்கோடுக்குப் பெயர்த்து இணைக்குழுவில் வைப்போம் என்று நினைத்தேன். 'தமிழ்மணம்' காசி மென்கலம் தயாரித்து உதவினார். அதற்கு உடனே அனுமதி அளித்து, தொழில்நுட்ப முன்னெடுப்புக்கு ஆதரவு அளித்தவர் கவிமாமணி இலந்தை இராமசாமி ஆவார். மரபுக் கவிதைக் கடலைக் கடக்கும் கப்பலாகச் சந்தவசந்தம் இலங்குகிறது. அதன் மீகாமன் இலந்தையார். பலரும் பாராட்டினர். கனடா நாட்டுக் கவிஞர் பேரா. அனந்தநாராயணனின் வாழ்த்துப்பா நினைவில் இருக்கிறது [2] :
பாரதம் நூலெழுதும் பங்கேற்றார் பண்டையொரு
வாரணம்; சந்த வசந்தக் கவிஞர்கள்தம்
பாரதம்செல் பாதை படைக்கக் கணேசனே
காரணமாய் நின்றார் களித்து!
உமர் அவர்களின் தேனீ எழுதுருவும், நானும் உதவிய முகுந்தராசின் எ-கலப்பை மென்கலங்கள் பதிவுகள் வளர்ச்சிக்கு உறுதுணையாயின. பின்னர், தமிழ்மணம், தேன்கூடு உருவானதும் தமிழ்வலைப் பதிவுலகம் நிலைபெற்று தமிழர் கூடும் மேடைகளாக வலைத் திரட்டிகள் விளங்க ஆரம்பித்தன.
முனைவர் பொன்னவைக்கோ அவர்களின் டேஸ் பற்றிய என் கருத்துக்கள்? தற்போதைய யூனிக்கோடின் பிழை என்ன? மேலும் புதிதாக யூனிக்கோடு எழுத்துக்களை எவ்வாறு தமிழ் பெறுவது?
என் சிறு ஒருங்குறிப் பட்டறிவை அடுத்த பதிவில் காண்போம்.
நா. கணேசன்
குறிப்புகள்:
[1]
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்
கவிஞர் புகாரி
புலம்பெயர்ந்தாள் புலம்பெயர்ந்தாள்
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய் !
இளமையோடும் புதுமையோடும்
தலைநிமிர்ந்தாள் தமிழ்த்தாய்!
ஓசைகளாய் இருந்தவள்தான்
ஓலைகளில் பெயர்ந்தாள்!
ஓலைகளாய்ப் பெயர்ந்ததனால்
சங்ககாலம் கொண்டாள்!
ஓலைகளில் வாழ்ந்தவள்தான்
தாள்களுக்குள் பெயர்ந்தாள்!
தாள்களுக்குள் பெயர்ந்ததனால்
தரணியெங்கும் நிறைந்தாள்!
காகிதத்தில் கனிந்தவள்தான்
கணினிக்குள் பெயர்ந்தாள்!
கணினிக்குள் பெயர்ந்ததனால்
அண்டவெளி வென்றாள்!
அழிந்திடுவாள் என்றோரின்
நரம்பறுத்து நின்றாள்!
இணையமென்ற மேடைதனில்
மின்னடனம் கண்டாள்!
அயல்மொழியைக் கலந்தோரை
வெட்கியோட வைத்தாள்!
அழகுதமிழ் அமுதத்தமிழ்
ஆட்சிமீண்டும் பெற்றாள்!
[2]
பாரதம் - மகாபாரதம்; பாரதம் = பா ரதம் - கவிதை எனும் தேர் (சந்தவசந்தம் கவிதைக்குழு). வாரணம் = ஆனைமுகன்.
Posted by
நா. கணேசன்
at
21
comments
Labels: ஒருங்குறி , கூகுள்குழுக்கள் , டேஸ் , யூனிக்கோடு
உலகம் உன் கையில்!
உலகம் உன் கையில்!
தம்பி!
கொஞ்சம் நில்.
என்ன சுமை உன்முதுகில்?
கவலைகள் கைக்குழந்தைகள்
அல்ல.
அவற்றைக் கீழே இறக்கிவிடு
நீ சிரித்தால் உலகம் உன்னுடன்
சேர்ந்து சிரிக்கும்.
அழுது கொண்டிருப்பவனின்
நிழல் கூட அவனை நெருங்கப்
பயப்படும்!
காற்றைப் பதுக்கி வைப்பதால்
கால்பந்து உதை வாங்குகிறது!
புல்லாங்குழலோ
காற்றை வெளியேற்றி இசை
தருவதால்
கலைஞனிடம் முத்தம் பெறுகிறது!
வெளிச்சத்துக்கு வா!
பூக்களிடம் பேசு!
மரங்களிடம் நட்பு வை.
காக்கை குருவிகளிடம் கவிதை
கேள்!
நம்பிக்கை வீணையை
நன்கு முழக்கு!
இமயமலை கூட எதிர்வந்து
நிற்கும்!
கவலைப் பிசாசு கை கட்டிநின்று
பணிவிடை செய்யும்! - உன்
பாதம் பிடிக்கும்!
நம்பிக்கை ஒரு நல்ல விமானம்
விண்ணிலும் பறக்கும்! மேலும்
பறக்கும்!
சந்திர மண்டலத்திலும்
தரையிறங்கும்!
நம்பிக்கைச் சங்கொலி
நன்கு முழங்கினால்
வேலை நிறுத்தங்கள்
விலகிப்போகும்!
ஆலைகள் எல்லாம்
ஆலயங்கள் ஆகும்!
பஞ்சாலை நூலைப் பலரும் அறிவர்
நெஞ்சாலை நூற்கும் நூல்?
நம்பிக்கை நூல்!
எந்தப் புயல்
எங்கு மையம் கொண்டால் என்ன?
இதயக் கப்பலை - நம்பிக்கை
முனையில்
நங்கூரம் பாய்ச்சு!
கலங்காத நம்பிக்கை கப்பலைக்
காக்கும்!
கரை கொண்டு சேர்க்கும்!
உள்ளே நாம் சுவாசிக்கும்
உட்காற்றும் வெளிக் காற்றும்
நம்பிக்கை நூல் இழை
நடத்தும் நாடகம்!
~ வானம்பாடிக் கவிஞர் 'சக்திக்கனல்'
அனைவருக்கும் இனியதாய் 2008 இலங்குவதாக!
நா. கணேசன்
Posted by
நா. கணேசன்
at
12
comments
Labels: கவிதை , சக்திக்கனல் , புத்தாண்டு
பால்வீதியின் நடுவே கருங்குழிப் பூதம்
பால்வீதியின் நடுவே கருங்குழிப் பூதம்
Monster of the Milky Way
கருங்குழி (black hole) தேற்றத்தை முதலில் உருவாக்கியவர் நோபெல் விஞ்ஞானி எஸ். சந்திரசேகர். முதலில் சந்திராவின் ஆசிரியர் எட்டிங்டன் (இங்கிலாந்து) இந்த 'சிங்குலாரிட்டி" (singularity) தியரியை ஏற்க மறுத்து எள்ளினார். கொஞ்ச நாளில் அறிஞர் சந்திரா சிகாகோவுக்குக் குடியேறினார்.
நம் உலகம் சுற்றிவரும் சூரியனை மையமாகக் கொண்டது சூரிய மண்டலம் (solar system). அதுபோன்ற கோடிக் கணக்காண நட்சத்திரங்களைக் கொண்டதுதான் அகண்ட பால்வீதி (Milky way). நம் உலகை அடக்கிய சூரியனைக் கொண்டியங்கும் பால்வீதியின் நடுவே ஒரு பெரிய கருங்குழிப் பூதம் இருக்கிறது. அதன் அருகில் வரும் நட்சத்திரங்கள் தன்வேகத்தை மிகவும் அதிகரித்துத் தன்பாதைகளில் சுழல்கின்றன என்பனவற்றை வானவியல் அறிஞர்கள் நாசா அறிவியல் கருவிகளைத் துணைக்கொண்டு (உ-ம்: Keck observatory (Hawaii), Chandra X-Ray Lab) (*) அண்மையில் சில ஆண்டுகளாகக் கண்டறிந்துள்ளனர். இப்பொழுது கருங்குழிப் பூதம் உண்ணாவிரதம் பூண்டிருந்தாலும், பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து நட்சத்திரங்களை விழுங்கும். இரு பால்வீதிகள் இணையும், விண்மீன்கள் (நம் சூரியன் உட்பட) மறையும், புதிதாய்த் தோன்றும். நாம் ஒன்றும் பயப்படத் தேவையில்லை, (1) நம் சூரியன் கருங்குழிக்குத் தொலைவில் உள்ளது (2) இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சூரியன் இருந்தபின்னரே மறையும் (அதுவரை மனித இனம் தன்னைத் தன்னிலிருந்து காத்துக் கொண்டால்)!!
7 அத்தியாயங்களில், ஒரு மணி நேர நிகழ்ச்சியாக, அமெரிக்கப் பொதுத்தொலைகாட்சி (PBS) ஒளிபரப்பியது. பல முன்னணி விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர். இப்போது அந்நிகழ்ச்சி வலைவலம் வருகிறது. முக்கியமாக, இலங்கை, தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் அறிவியல் வகுப்புகளில் காணப்படவேண்டும்:
http://www.pbs.org/wgbh/nova/blackhole/program.html
மேலும் அதிக விவரங்களுக்கு,
http://www.pbs.org/wgbh/nova/blackhole/explained.html
http://www.pbs.org/wgbh/nova/blackhole/
நா. கணேசன்
சங்கிலித் தேற்றம் (ஸ்ட்ரிங் தியரி) பற்றி ராமன் சுந்தரம் என்னும் அறிஞர் முனைந்து இருக்கிறார்.
http://www.sciam.com/print_version.cfm?articleID=000EB657-C6C7-1331-841D83414B7FFE9F
Posted by
நா. கணேசன்
at
0
comments
தாதப்பட்டி நெடுங்கல்லில் பழந்தமிழ்க் கல்வெட்டு
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கிடைக்கும் சான்றுகளால் தமிழின் மிகப்பழைய வரலாறு மீளாய்வுக்கு உள்ளாகும். வத்தலக்குண்டு (வெற்றிலைக்குண்டு), நிலக்கோட்டை ஊர்களுக்கு அருகில் வைகைப் படுகையில் பல சங்ககாலக் கல்வெட்டுகள் நெடுங்கல் (menhir), நடுகல் (hero stone) இரண்டிலும் இந்தியாவிலேயே முதன்முறையாகக் கண்டெடுக்கப் பெற்றுள்ளன.
அண்மைக்காலத்தில் அப்பகுதியிலே:
நிலக்கோட்டை ஜமீந்தார்கள் தமிழை ஆதரித்துள்ளனர். கூளப்ப நாயக்கன் காதல், விறலிவிடுதூது காமச்சுவை பொருந்தியன. முதலில் மதுரைத் திருமலை நாயக்கர் மீது பாடி, அங்கே வரவேற்பில்லாமல் போகப் பிறகு நிலக்கோட்டைக் கூளப்ப நாயக்கனைப் பாட்டுடைத் தலைவன் ஆக்கிச் சுப்பிரதீபக் கவிராயர் பாடியுள்ளார். திருமலையை நிந்தித்துத் தூதில், "தொந்தி வடுகன் என்னைச் சுகியானோ" என்று இரு கணிகையர் வாதில் சொல்லாடுவதாய்ச் சுப்ரதீபம் குறித்தார் என்ப. சுப்ரதீபத்தின் அச்சாகாத பழனி மதனவித்தாரம் என்னிடம் சுவடியாக உள்ளது.
வத்தலக்குண்டு தேசபக்தர்களைத் தந்துள்ளது: அவ்வூர்ச் சுப்பிரமணிய சிவா சுதந்திரம் வேண்டிப் பாடுபட்ட பாரதி, வ.உ.சி போன்றவர்களுடன் உழைத்த பெரியவர். வெஞ்சிறையில் வாடுகையில் தொழுநோய் தொற்றிற்று. பாரதமாதா ஆலயம் தருமபுரி பாப்பாரபட்டியில் அமைக்க முயற்சிகளைத் துவக்கியவர். தமிழில் ஏறுதழுவலைச் சொல்லும் கமலாம்பாள் சரித்திரம் எழுதிய பி. ஆர். ராஜமையர் வத்லகுண்டுக்காரர்தான். அது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (The fatal rumour : a nineteenth-century Indian novel. B R Rajam Aiyar; Stuart H Blackburn, OUP, 1998). சி. சு. செல்லப்பா வாடிவாசல் என்ற நாவலிலும் அவ்வட்டார மரபை வடித்துள்ளார்.
2300 ஆண்டுகளுக்கு முன்னரே அப்பகுதியில் தமிழ் தழைத்ததற்கு அரிய சான்றுகள் கிடைத்துள்ளன.
புலிமான் கோம்பை, தாதப்பட்டி என்னும் ஊர்களில்
கண்டறியப்பட்டுள்ள பழந்தமிழ்க் கல்வெட்டுகள்:
புலிமான் கோம்பை வீரக்கற்கள்:
http://www.hindu.com/2006/04/05/stories/2006040518340600.htm
“ கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ கோள் ” என்று எழுத்துக்களில் பொறித்துள்ளனர்.
விளக்கக் கட்டுரை (எஸ். ராமச்சந்திரன்)
தீ- எனில் இனிமை என்ற பொருளும் உள்ளது. உதாரணமாக,
தீங்கனி, தீந்தேன் என்கிறோம். தீயன் என்றால் த்வீபம் என்னும் வடசொல்லின் தற்பவமாகி ஈழநாட்டாரைக் குறிக்கிறதா? தீபோல் சுடர்பவன் அல்லது இனியவன் என்பாரின் மகன் அந்துவன் என்று பொருள்தரும் தமிழ்ச்சொற்களா என்று ஆராய்தற்கு இடம் இருக்கிறது. கொங்குநாட்டில் அந்துவன் என்னும் வேளாண்மரபினர் வாழ்வதும், பதிற்றுப்பத்து போன்ற சங்க நூல்களையும் குறிப்பிடலாம். மேலும் ஒரு கட்டுரை:
http://www.keetru.com/vizhippunarvu/may06/sivakumar.php
பேரா. கா. இராஜன் அவர்களின் கட்டுரை:
http://www.keetru.com/puthuezhuthu/jul06/rajan.php
இரா. கலைக்கோவன், பாராட்டுவோம்.
http://www.varalaaru.com/Default.asp?articleid=339
மான்குளம் கல்லெழுத்துக்கள் சமண முனிவர்களைக் குறிப்பிடுவது. தமிழில் கி.மு.3-ஆம் நூற்றாண்டு காலம் அது என்பர். அதே காலகட்டத்து பழவெழுத்து மதுரை அரிட்டாபட்டியிலும் கண்டறியப்பட்டுள்ளது.
http://www.hindu.com/2003/09/15/stories/2003091503060500.htm
தற்போது புலிமான்கோம்பை நடுகற் கல்வெட்டுகளும் கி. மு. 3-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளுடன் சேர்ந்துள்ளன. அத்துடன், நிலக்கோட்டை வட்டம் தாதப்பட்டி நெடுங்கல் 'மென்ஹிர்' ஈமச்சின்னப் பழைய எழுத்துக்களும் கிடைத்துள்ளன:
http://www.hindu.com/2006/09/24/stories/2006092406750300.htm
ஊடகங்களில் நெடுங்கல்லில் உள்ள வாசகம் தரப்படவில்லை. ஈரோடு செ. இராசுவிடமும்,
கா. ராஜன் அவர்கள் கி. நாச்சிமுத்துவுக்கு அனுப்பிய மின்மடலிலும் அறிந்த தொடரை இங்கே
நீங்கள் படிக்கத் தருகிறேன்:
" ..தன் அடிஓன் பாகல் பாளி கல் " என்று நெடுங்கல்லில் வெட்டப்பட்டுள்ளது.
"தன்" என்பதன்முன் உள்ள எழுத்துக்கள் அழிந்தன. அது சாத்தன், ஆதன், பூதன் என்பதாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். அடிஓன் = அடியோன். பாகல் என்பது ஒருவரின் பெயர்.
பாகல் என்ற சொல் பலாக்காய், பாகற்காய் என்ற அர்த்தத்தில் இலக்கியச் சான்றுகளில் பயில்கிறது. பாகல் என்றால் பச்சை என்ற பொருள் இருக்கலாம். கருப்பராயன் என்பதுபோல், பச்சைமால், அல்லது பச்சைவண்ணராகிய பாரிசநாதர் (ஒரு தீர்த்தங்கரர்) என்னும் பொருளில் பாகல் என்ற பெயர் ஏற்பட்டதா?? அவர் குரவடிகளா?
தமிழ் எழுத்தின் தாக்கம் பட்டிப்ரோலு பெட்டகப் (Bhattiprolu casket inscription) பழஎழுத்தில் உள்ளது என்பதாக அறிஞர் கொள்வர். ஏற்கெனவே தமிழுக்கும், பாலி மொழிகளுக்கும் தெற்கே (தமிழகம், இலங்கை) முதலில் எழுத்துக்கள் உருவாகி வடக்கே எழுத்துமுறை பரவியதாகச் சொல்லும் சில அறிஞரின் கருதுகோள் அரிட்டாபட்டி, புலிமான்கோம்பை, தாதைப்பட்டிப் பண்டை எழுத்துக்களால் வலுப்பெறுகிறது.
அனுராதபுரம், ஆதித்தநல்லூர் முதுமக்கள் தாழிகள் - இவற்றில் கிடைக்கும் கிமு. 3, 4 நூற்றாண்டு எழுத்துக்களும் இப்புதிய கண்டுபிடிப்புகளும் மேலும் ஆராயப் படுதல் வேண்டும். சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக, பிராமி எழுத்துக்களுக்கும் செமித்திக் (மேற்கு ஆசியா) எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்புகளை ஜார்ஜ் 'ப்யூஹ்லர் போன்றோர் குறித்துள்ளனர். கடல்வழி நடந்த வணிகத்தால் ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் எழுத்துமுறை பரவியதா? என்றறிய ஆய்வுகள் இனி நிகழும் என்று நம்பலாம். இந்தியாவில் வடக்கே வேதங்களை எதிலும் எழுதவே கூடாது என்ற தடை இருந்தது. செய்யாமொழி(1), எழுதாமறை என்பது வழக்கம். மொழியியலில் இந்திய எழுத்துக்களுக்கு விஞ்ஞான அடிப்படையில் நெடுங்கணக்கு வகுத்த பாணினி தன் இலக்கணத்தை வாயால் மொழிந்தார் என்பது இந்தியவியல் (Indology) கோட்பாடு. வணிகம் நிமித்தமாக சிரமண சமயங்கள் (சமணம், பௌத்தம்) ஆதரித்த எழுத்தறிவு வடக்கே தெற்கிலிருந்து போய், அசோகச் சக்கரவர்த்தியால் அரசாணைக் கல்வெட்டுகள் மூலம் பரவலாக்கப் பட்டனவா?
இக் கேள்விகளுக்கு விடைகள் தொல்பொருள் ஆய்வுகள் இனி வரும் ஆண்டுகளில் பல்கலைக்கழக ஆய்வேடுகளில் வெளிவரும். அரிய கல்வெட்டுகளைக் கண்டுபிடித்த தொல்லறிஞருக்கு முதலில் நாம் நன்றி பாராட்டுவோம்.
நா. கணேசன்
ஆய்வுத்துணை:
[1] A. Parpola, Pandaie and SItA: On the historical background of the Sanskrit epics, Journal of the American Oriental Society 122 (2), 2002 p. 361-373.
[2] S. U. Deraniyagala and M. Abeyratne. 'Radiocarbon Chronology of Anuradhapura, Sri Lanka: A Revised Age Estimate'. p.759-789
[3] Coningham R.A.E. 1995. The Origins of the Brahmi Script Reconsidered: The New Evidence from Anuradhapura. Minerva 8(2): 27-31.
[4] Coningham R.A.E. 2002. Beyond and Before the Imperial Frontiers: Early Historic Sri Lanka and the Origins of Indian Ocean Trade. Man and Environment 27: 99-108.
[5] Coningham R.A.E., Allchin F.R., Batt C.M. & Lucy D. 1996. Passage to India? Anuradhapur and the Early Use of the Brahmi Script. Cambridge Archaeological Journal 6(1): 73-97.
[6] Coningham R.A.E. 1995. Monks, Caves and Kings: A Reassessment of the Nature of Early Buddhism in Sri Lanka (Ceylon). World Archaeology 27: 222-242. South Asian Archaeology 1997 Vol. II, 2000, Roma, Italy
மேலும்,
https://www.dur.ac.uk/archaeology/staff/?id=2880&publications=1
குறிப்பு 1: செய்யாமொழி
பேரா. கி. நாச்சிமுத்து (கேரளப் பல்கலை)
"திருவள்ளுவர் அடிப்படையில் சமணர். திருக்குறள் சமண நூலாகவே கருதப்பட்டு வந்தது. அவரும் அவருடைய குறளும் சமணரல்லாதாரால் தம் சார்பினதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுச் சமணருக்கு அன்னியமாக்கப்பட்ட வரலாற்றையே வள்ளுவமாலை காட்டுகிறது" என்பார். 11-ஆம் நூற்றாண்டு வள்ளுவமாலைப் பாடல், செய்யாமொழி என்று அபௌருஷேயத்வம் என்னும் வைதீக தத்துவத்தை மொழிபெயர்க்கிறது.
செய்யா மொழிக்கும் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே - செய்யா
அதற்குரியர் அந்தணரே; ஆராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல் (வள்ளுவமாலை 28)
ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நால்மறையைப்
போற்றியுரைத்து ஏட்டின் புறத்தெழுதார் - ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர்வு இன்று (வள்ளுவமாலை 15)
செய்யாமொழியை எழுதத் தடை இருந்திருக்கிறது. எனவே, தெற்கில் எழுத்து முதலில் தோன்றியதோ?
------
It will be very interesting to find Tamil Brahmi I phase inscriptions where
distinct maatrai markers for vowels, a and aa in Tamil inscriptions.
More about the Tamil-type phenom in BhaTTiprOLu in Andhra Pradesh:
http://www.services.cnrs.fr/wws/arc/ctamil/2006-10/msg00000.html
பத்திரிகைச் செய்தி:
2300ஆண்டுகள் பழமைவாய்ந்த தூயதமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு:
Apr 5 2006
2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய தமிழ் கல்வெட்டுக்கள் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இவையே மிகவும் தொன்மை வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சைப் பல்கலைக்கழக கல்வெட்டியியல் மற்றும் தொல்லியல்துறையினரால் கடந்த மாதம் தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டி பகுதிக்கு அண்மையாகவுள்ள புலிமான்கோம்பை என்ற ஊரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சியில் இக்கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தமிழரின் பொற்காலம் என போற்றப்படும் சங்க காலத்திற்குரிய மூன்று கல்வெட்டுக்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றும் அண்ணளவாக மூன்று அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டவையாக உள்ளன.
இவை ஈமச்சின்னங்களில் நாட்டப்பட்ட நடுகற்களாக இருக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட முதல் கல்வெட்டில் 'கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ கோள்" என பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'கூடல் என்ற ஊரில் நடைபெற்ற ஆகோள் பிணக்கில் உயிர் நீத்த பேடு தீயன் அந்தவன் என்பவனுக்கு எடுத்த கல்" என பொருள் கொள்ளலாம்.
இரண்டாவது கல்வெட்டில் இரு வரிகள் எழுதப்பட்டுள்ளன. அனால் அக்கல்வெட்டின் முன்பகுதி உடைந்து காணப்படுவதால் அதில் எழுதப்பட்டுள்ளவற்றில் சில சொற்களே காணப்படுகின்றன. முதல்வரியில் 'அன் ஊர் அதன்" என்றும் இரண்டாவது வரியில் 'ன் அன் கல்" என்றும் எழுதப்பட்டுள்ளது.
மூன்றாவது கல்வெட்டில் 'வேள் ஊர் பதவன் அவ்வன்" என பொறுக்கப்பட்டுள்ளது. 'வேற்று ஊரைச் சேர்ந்த அவ்வன் என்பவனுக்காக எடுக்கப்பட்ட கல்" என இது பொருள்படுகிறது.
இக்கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துக்கள் முற்று முழுதாக தூய தமிழ் எழுத்துக்களாகும். இதில் எழுதப்பட்டுள்ள சொற்கள் சங்ககால இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்பிராமி வரிவடிவ ஆய்வில் புலமை பெற்ற ஐராவதம் மகாதேவன் அவர்கள் இந்த கல்வெட்டுக்களைப் பார்வையிட்டு, அவை பற்றி கருத்துத் தெரிவிக்கையில், தமிழகத்தில் கிடைத்த தமிழ்பிராமி கல்வெட்டுக்களில் பிராகிருத சொற்கள் கலந்து வரும். ஆனால் இக்கல்வெட்டுக் து}ய தமிழ்ச்சொற்கள் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இவையே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பழமை வாய்ந்தவையாகும் எனக்குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று ஊடகர்களிடம் இது தொடர்பில் தெரிவித்ததாவது: இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளை, கள ஆய்வு மூலமும், அகழாய்வு முலமும் வெளிக்கொணர்ந்து, சங்க கால வரலாற்றை அறிவியல் அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்திருப்பது, தமிழ்மொழிதான் மிகப்பழமையான மொழியென நிரூபிக்க ஆதாரமாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இக்கல்வெட்டுக்கள் மீட்பின் மூலம் சங்க காலத்தமிழர்கள் பரவலாக எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
இக்கல்வெட்டுக்கள் மீட்கப்பட்ட புலிமான்கோம்பையும் அதைச்சூழ்ந்துள்ள பகுதிகளிலும் பெருமளவான ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by
நா. கணேசன்
at
9
comments