Saturday, August 09, 2008

ஒளிச்சேர்க்கை அறிவியல் அளிக்கும் மின்சாரம்

உலகத்தில் சூரிய ஒளியின் ஆற்றலை ஒளிச்சேர்க்கை (Photosynthesis) என்னும் செயலால் தமக்குப் பயன்படும் ஆற்றலாகத் தினந்தோறும் தாவரங்கள் மாற்றிக் கொண்டே இருக்கின்றன. இன்னும் ஓர் ஐம்பது ஆண்டுகளில் பெட்ரோல் தீர்ந்து போகும் நிலை, சொல்பம் மிச்சம் இருந்தாலும் எட்டாத உச்சிக் கொம்புக்கு அதன் விலை ஏறிவிடும். எனவே, ஒளிச்சேர்க்கை செயல்படும் விஞ்ஞானத்தை அறியப் பலவகை ஆய்வுகள் நடக்கின்றன.

அமெரிக்காவிலே முதன்மையான பொறியியற் கல்லூரி ஆய்வகம் MIT. அங்கே பணியாற்றும் வேதியியல் பேராசிரியர் டேனியல் நோசீரா தண்ணீரில் இருந்து ஆக்ஸிஜன் வாயுவைப் பிரித்தெடுக்கும் எளிய, செலவு அதிகம் ஆகாத மின்பகுப்பு (electrolysis) முறைக்குப் புதிய ஒரு வினையூக்கியை (catalyst) கண்டுபிடித்துள்ளார். இக் கிரியாஊக்கியைப் பாவித்தால் தற்போதுள்ள முறைக்கு ஆயிரத்தில் ஒரு பங்கே செலவாவதாலும், சாதாரணமான அழுத்தம், வெதுமம், பிஎச் எண்களில்(room pressure, temperature, pH value) வேதிவினை நிகழ்வதாலும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு சாதனை என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.



இவ்வரிய கண்டுபிடிப்பால் சூரியஒளியில் இருந்து சோலார் நுட்பத்தால் ஆக்கப்படும் மின்சக்தியை இரவில் உபயோகிக்க வழிவகை கிடைத்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தத் தொழில் நுட்பத்தின் பலனாக, ஒரு வீட்டின் மின்தேவையைப் பூர்த்திசெய்யும் சோலார்+மின்கலம் அமையம் (photovotaic + fuel cell system) சில இலட்சம் ரூபாய்களுக்குச் சந்தைக்கு வரும்.



http://web.mit.edu/newsoffice/2008/oxygen-0731.html
http://www.sciencemag.org/cgi/content/abstract/1162018v1

Tuesday, August 05, 2008

துணைவேந்தர் Dr. S. அகத்தியலிங்கம்

முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் வலைப்பதிவின் வாயிலாக, பேரா. ச. அகத்தியலிங்கம் (மாரியப்பாநகர், சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) வாகனவிபத்தில் இறந்தார் என்றறிய நேர்ந்தது:
http://muelangovan.blogspot.com/2008/08/blog-post_05.html

அவரது புத்தகங்களின் பட்டியலை அடுத்துத் தருகிறேன். தினத்தந்தி நாளிதழிலும் செய்தி வெளியாகியுள்ளது (தினத்தந்தி போன்றவை யூனிக்கோடுக்கு மாறினால் அவ்விதழ்ச் சேதிகள் விரைவில் பலருக்கும் சென்றடையும். தமிழ்நாட்டுப் பத்திரிகை நிர்வாகத்தை அறிந்தோர்கள் குமுதம், விகடன் போலவே மற்றவற்றையும் யூனிகோடு குறியேற்றத்திற்குச் செல்லத் தூண்டுங்கள். பரிந்துரை செய்ய வேண்டுகிறேன்.)

http://www.dailythanthi.com/article.asp?NewsID=430053&disdate=8/5/2008
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மனைவியுடன் விபத்தில் சாவு கார் டிரைவரும் பலியானார்

வானூர், ஆக. 5, தினத்தந்தி

புதுவை அருகே நடந்த விபத்தில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மனைவியுடன் பலியானார். கார் டிரைவரும் மரணம் அடைந்தார்.

முன்னாள் துணைவேந்தர்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அகஸ்தியலிங்கம் (வயது 75). இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பா நகர். அகஸ்தியலிங்கம் நேற்று பகலில் சென்னையில் இருந்து மனைவி பொன்னம்மாள் (70), பேத்தி லதா (19) ஆகியோருடன் ஒரு காரில் சிதம்பரத்துக்கு வந்துகொண்டு இருந்தார். காரை ஜீவபாலன் (33) என்பவர் ஓட்டிவந்தார்.

பகல் 12.50 மணி அளவில் கிளியனூருக்கும், தைலாபுரத்துக்கும் இடையே கார் வந்துகொண்டு இருந்தது. அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை சென்று கொண்டு இருந்த லாரி மீது கார் மோதியது.

விபத்தில் பலி

இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த முன்னாள் துணைவேந்தர் அகஸ்தியலிங்கம் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக செத்தார்

அவரது மனைவி பொன்னம்மாள், பேத்தி லதா, கார் டிரைவர் ஜீவபாலன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

ஆஸ்பத்திரியில் 2 பேர் சாவு

தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பொன்னம்மாள், கார் டிரைவர் ஜீவபாலன் ஆகியோர் இறந்தனர். படுகாயம் அடைந்த லதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Saturday, August 02, 2008

மரு. சுதீர் பால் - எய்ட்ஸ் சிகிச்சைச் சாதனை

ஹ்யூஸ்டனில் உள்ள டெக்சாஸ் மருத்துவக் கல்லூரியில் இந்திய டாக்டர் சுதீர் பால் தலைமையில் இயங்கும் ஆராய்ச்சிக் குழுவினர் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் வைரசை அழிப்பதற்கான வழிமுறையைக் கண்டுபிடித்ததாக அறிவித்துள்ளனர்.

விலங்கு மாதிரிகளில் (models) நோயைத் தடுத்துக் காட்டியுள்ள மரு. சுதீர் பால் அவர்களின் மருந்துமுறைகள் மனிதர்களிடத்திலும் நோயைக் குணமாக்கலாம். அதற்குப் பல பரிசோதனைகள் இன்னும் மீதமிருக்கின்றன.