மகரம்: 12 ராசி மாதப் பெயர்களில் தூய பழந்தமிழ்ப் பெயர்

மகரம்: 12 ராசி மாதப் பெயர்களில் தூய பழந்தமிழ்ப் பெயர்
-----------------------------------------
தைப் பொங்கல், மகர சங்கிராந்தி என்று இந்தியாவின் பல மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. மகரம் என்பது முதலையின் ஆதிப் பெயர் என முதலில் விளக்கியவர், இந்தியக் கலைவரலாற்று நிபுணர், ஆனந்த குமாரசாமி ஆவார்.  https://en.wikipedia.org/wiki/Ananda_Coomaraswamy அவரது தந்தையார் ஸர் முத்துக்குமாரசாமி யாழ்ப்பாணத்தார். தமிழர்களில் முதல் பார்-அட்-லா.  மகரம் துருவ நட்சத்திரத்தின் சின்னமாக, 4700 ஆண்டுகளாக விளங்கி வருகிறது: http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html இந்தியாவில் மூன்று வகையான மகரங்கள் வாழ்கின்றன: (1) நன்னீர் முதலை (2) உவர்நீர் முதலை (கராம்; Cf. கரை - கடற் கரை) (3) கங்கை முதலை (விடங்கர்/இடங்கர் Cf. விந்து/இந்து). இந்த விடங்கர் எனப்படும் முதலை இனமானது லிங்கத்தின் தோற்றம், மகரவாய் எனப்படும் கோவில் நீர்வழிகளின் சிற்பங்கள், திருவாசிகள், காதுகளில் குண்டலம், ... எனப் பல இடங்களில் பயன்படுவது.  [References: 1 & 2]. மூன்று முதலை இனங்களையும் தொல்காப்பியம் மரபியல் உரையில் பேராசிரியரும், சங்க இலக்கியம், தொல்காப்பிய உரைகளில் நச்சினார்க்கினியரும் விளக்கியுள்ளனர். 
மகரம் என்பதன் உண்மையான பொருளும், அந்த உயிரினமும் தென்னிந்தியாவில் மறைந்த காலங்களில் உருவான தமிழ் இலக்கியங்களில், மகரம் என்பதைச் சுறா மீன் என்று பாடத் தொடங்கினர். ஆனால், சிந்துவெளியிலோ, சங்க காலத்திலோ மகரம் என்பது சுறா மீன் (சுறவம்) அன்று என்பது தெள்ளத் தெளிவாகத் தொல்லியல், சிற்பவியல், நாணயவியல், பனுவலியல் (Study of Texts), மொழியியல் போன்ற துறைகளின் ஆராய்ச்சியால் நிறுவப்பெற்றுள்ளது. உதாரணமாக, தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-துணைவேந்தர் பேரா. வ. ஐ. சுப்பிரமணியம் அவர்களின் நினைவஞ்சலி மலரில் என் கட்டுரையை வாசிக்கலாம். 
மகரயாழ் என்பதை, விடங்கர் https://en.wikipedia.org/wiki/Gharial கொண்டே சுவாமி விபுலானந்தர் தம் யாழ்நூலின் முகப்போவியமாய் அமைத்தார். 
இந்தியாவின் செம்மொழி இலக்கியங்களில் 27 நட்சத்திரங்கள் மிகப் பழமையானவை. சிந்துவெளியிலே கண்டுபிடிக்கப் பெற்றவை என்பதை விரிவாக பேரா. அஸ்கோ பார்ப்போலா போன்றோர் ஆழமாக ஆராய்ந்து காட்டியுள்ளனர் சீனாவுக்கும் அவ் வானியல் அறிவு சென்றுள்ளது. தொல்காப்பியத்தில் 27 நட்சத்திரப் பெயர்களுக்கான சூத்திரம் தந்துள்ளார் தொல்காப்பியர்.  பௌர்ணமி திதியில் எந்த நக்ஷத்திரம் உள்ளதோ, அந்த விண்மீனின் பெயரால் அமைவது தமிழ்த் திங்கள்/மாதத்தின் பெயராகும். இந்தப் 12 மாதப் பெயர்களில் தந்தை, தலைவன், கடவுள் எனப் பொருள்கொண்ட “தை” ஒன்றே தமிழ்ப் பெயர். குரீ/குரீஇ போல, தை தைஇ என்றும் தொன்மையான வடிவில் சங்க நூல்களில் வரும். சில ஆயிரம் ஆண்டு பின்னர். ராசி சக்கரம் (Zodiac)  பாபிலோனில் உருவாகி, இந்தியா வந்தடைந்தது.
தை - திங்கட் பெயர்க் காரணம்
------------------------------
-----------------
தை, தையல், தைத்தல் முக்கியமான சொற்கள். தய்-க்கல்/தய்-த்தல்:: தச்சன்/தக்‌ஷன் என்ற சொற்கள் உருவாகும் வினைச்சொல் தைத்தல்/தச்சு. 12 மாதப் பெயர்களில் “தை” என்ற சொல் தனித்தமிழாக விளங்குகிறது. புள்ளிருக்குவேளூரில் தையல்நாயகிக்கு வாலாம்பிகை எனப் பெயர். எனவே, தையல் = வாலை (< Baalaa) என தமிழ்த்தாத்தா உவேசா விளக்கியுள்ளார்கள். தை, தையல், தைக்கல் - தாந்திரிகப் பொருளும் உண்டு. இதன் அருத்தம் சிந்துவெளிக் கலைகளை ஆய்ந்தால் தெரியும்.
தை என்னும் வினைச்சொல் மிகப் பழையது. பெயர்ச்சொல் ஆகவும் வரும். உ-ம்: தை மாதம். தை தய்ப்பது தையல். தந்தை (தன்+தை), முந்தை, நுந்தை, எந்தை (எம்+தை)... என்ற உறவுப்பெயர்கள், சாத்தந்தை (சாத்தன்+தை), கொற்றந்தை, ஆந்தை, பூந்தை, கண்ணந்தை, ... குலப்பெயர்களிலும் விரவி வரும் பெயர் ‘தை’. தை என்ற வினைச்சொல் தருவது தைக்கன் (தக்கன்/தக்‌ஷன், தச்சன்) என ஐராவதம் விளக்கியுள்ளார் தனது ஹார்வர்ட் நூலில்.
தமிழின் 12 மாதப் பேர்களில் தை ஒன்றுதான் தமிழ்ப்பெயர். மற்றவை பாபிலோனில் இருந்து வந்த 11 ராசிகளுக்கான வடசொற்கள். பாபிலோனில் இருந்து 12 ராசிச் சக்கரம் வந்தபோது இந்தியாவின் எல்லா ராசிகளும் - ஒன்றைத்தவிர பாபிலோன் ராசிகள் ஆகிவிட்டன. ஆனால் மகர விடங்கர் என்னும் தை மாதப் பேர் தமிழில் நிலைத்து இருக்கிறது. எல்லா இந்திய பஞ்சாங்கங்களிலும் மகரம் (முதலை) தான் தை மாஸத்துக்கு. ஆக, இந்தியாவில் மற்ற 11 ராசிகள் பஞ்சாங்கம், ஜோதிஷ சாஸ்திரங்களில் பாபிலோன் அஸ்ட்ரானமி படி மாறிவிட்டன. ஆனால், பழமையால் மகரம் என்னும் தை பெயர் மாத்திரம் மாறவில்லை. மகரம்/தை மாதத்தின் 4700 வருஷ பழமை, தமிழர்க்கு அதிலுள்ள பங்கு. Divine Couple in Ancient Indian Astronomy from 4MSR (Binjor) to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai
https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

In an important and profusely illustrated coffee-table volume on Indus civilization, my article on Makara Viṭaṅkar is published in pages 314 - 321. Its title is: Crocodile worship in Indus times. It can be read and downloaded from: https://archive.org/details/harappan-civ-the-hindu-dr-nganesan-essay

சில குறிப்புகள் இங்கே சொல்லியுள்ளேன்:. http://www.vallamai.com/?p=49442
மேலும், கொஞ்சம்: http://nganesan.blogspot.com/2013/10/pandya-peruvazuti-coin.html

மேலும் ஒன்று:
பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்,
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்றென்றே வளையும் சோரும்,
சந்தோகன் பௌழியன் ஐந் தழலோம்பு தைத்திரியன் சாம வேதி,
அந்தோ வந் தென்மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே,

வேதத்தின் சாகைகளைப் பேசும் ஆழ்வார் பாசுரம் இது.
பௌழியன்² pauḻiyaṉ , n. < bahvṛc. God, as described in the Ṛg Vēda; திஷ்யம் என்பது மூலம் என்றால் தௌழியம் போன்ற ஒரு சொல்லாக, தமிழ் மாதப் பெயர் அமைந்திருக்கும். கலூழ் வடமொழியில் கலூஷ ஆகிறது. திருவிழா திருவிஷா என காவேரி டெல்ட்டா பகுதியில் ஆகிறது என்பர். அ.மு.ப. சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் விழுதல் விஷு என்கிறோம். மகரவிஷு உத்தராயன காலத் தொடக்கம். எனவே, தைப் பொங்கல் (மகர விஷு) சூரியனைப் பூசிக்கும் திருவிழா.
பூசம் என்னும் நக்ஷத்ரப் பெயர் புஷ்யம் என்ற சொல் என்பர். திஷ்யம் என்ற பெயர் திஸ்ஸன்/திசன் என்றெல்லாம் இலங்கை, தமிழ்நாடு பிராமி கல்வெட்டுகளில் உண்டு. -ஐகார உயிர்மெய் கொண்டு வடமொழி மூலச்சொற்கள் தோன்றா. கைதை என்னும் தமிழ்ச் சொல் கேதகி என்றாகியுள்ளது. எனவே, தை/தைஇ எனும் பழந்தமிழ்ச் சொல் (வினை, பெயர்) வடசொல் அல்ல என்பது உறுதி.
தை மாதத்தின் மற்றொரு பெயர் மகர மாசம். மகரம் என்பதும் நல்ல தொல்தமிழ்/திராவிடச் சொல்லே. தமிழ்ப் பல்கலை, திராவிடப் பல்கலை (ஆந்திரா), திராவிடவியல் ஆய்வுநிறுவனம் நிறுவிய வ. ஐ. சுப்பிரமணியன் ஐயா நினைவஞ்சலி மலர்க் கட்டுரையில் மகரம் என்ற சொற்பிறப்பியலை விளக்கியுள்ளேன்: A Dravidian Etymology for Makara – Crocodile, Prof. V. I. Subramanian Commemoration Volume,  Int. School of Dravidian Linguistics, 2011. https://archive.org/details/MakaraADravidianEtymology2011

மொகர/மகர => மொசலெ ==> முதலை என வரும். மூன்று வகையான மகரங்கள் வாழ்கின்றன: (1) நன்னீர் முதலை (2) உவர்நீர் முதலை (கராம்; Cf. கரை - கடற் கரை) (3) கங்கை முதலை (விடங்கர்/இடங்கர் Cf. விந்து/இந்து). இந்த விடங்கர் எனப்படும் முதலை இனமானது லிங்கத்தின் தோற்றம், மகரவாய் எனப்படும் கோவில் நீர்வழிகளின் சிற்பங்கள், திருவாசிகள், காதுகளில் குண்டலம், ... எனப் பல இடங்களில் பயன்படுவது.  [References: 1 & 2]. மூன்று முதலை இனங்களையும் தொல்காப்பியம் மரபியல் உரையில் பேராசிரியரும், சங்க இலக்கியம், தொல்காப்பிய உரைகளில் நச்சினார்க்கினியரும் விளக்கியுள்ளனர்.
புலவர் இ.மு. சுப்பிரமணிய பிள்ளை திராவிட இயக்கத்தின் முதல் எழுத்தாளர்களில் ஒருவர். தலவரலாறுகள், இதிகாசங்கள் போன்றவற்றைப் பற்றி நிறைய எழுதிய தமிழாசிரியர். கலைச்சொல் ஆக்கத்தில் உழைத்தவர். ஆ. ரா. வேங்கடாசலபதியின் ‘திராவிட இயக்கமும், வேளாளரும்’ என்ற முக்கியமான ஆய்வுநூலில் இ. மு. சுப்பிரமணிய பிள்ளை பற்றித் தெரிந்துகொள்ளலாம். இ.மு.சு. பிள்ளை தமிழ் மாதப் பெயர்களை, தொல்காப்பியத்திலே கூடக் குறிப்பிடும் மிகத் தொன்மையான விண்மீன் பெயர்களில் இருந்து மாற்றிச் சோதிடத்தில் ராசிக் கட்டம் என்றிருக்கும், ராசிச் சக்கரப் பெயர்களாக்க முற்பட்டார். மக்களிடையே இம்முயற்சி வெற்றியடையவில்லை. மிகப் பிற்காலத்தில் ஏற்பட்ட மலையாள மாதங்களில் இவ்வாறே ராசிகளின் பெயர்கள் மாதப் பெயர்களாக அமைந்துள்ளன. மலையாள மாதப் பெயர்களுக்கு, புதுமையாக தனித்தமிழ்ப் பெயர்களை உருவாக்கி இ. மு. சுப்பிரமணிய பிள்ளை எழுதினார். அவற்றைத் தனித்தமிழ் இயக்க ஆசிரியர்கள் சிலர் இன்றும் எழுதுவதை அவ்வப்போது காணலாம். ஆனால், தைத் திங்களுக்கு சுறவம் என்ற சொல்லை விட, தொல்தமிழ்/திராவிடப் பெயராக 5000 ஆண்டுகளாக உள்ள மகரம் என்ற சொல்லே பொருத்தமானது எனத் தொல்லியல், கலைவரலாறு, மொழியியல் காட்டுகின்றன.  சுறவம் என்று மகரத்தைக் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பழந்தமிழ்ச் சொல்லாகிய - சங்க இலக்கியத்தில் பயிலும் “மகரம்” என்ற சொல்லை தனித்தமிழ் ஆர்வலர்கள் இராசிச் சக்கரத்தால் புதிதாக உருவாகும் 12 மாதப் பெயர்களில் பயன்படுத்த வேண்டும். மகரம் வேறு, சுறவம் வேறு. எனவே, ராசி சக்கிரத்துக்கு உள்ள பெயர்களில் தனித்தமிழ் திங்கட் பெயர்களில் மகரம் என்ற தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துவோம்.
இவ்வாண்டு. கி.பி. 2022-ல் திருவள்ளுவர் ஆண்டு எனத் தொடராண்டாகத் தைப் பொங்கல் தொடங்கி  Linear Year-ஐயும், சித்திரை முதல்நாளைத் தமிழ் புத்தாண்டு தினம் என்றும் தமிழ்நாட்டு அரசாங்கம் கொண்டாடுகிறது.
நா. கணேசன்

இ. மு. சுப்பிரமணிய பிள்ளை அமைக்கும் தனித்தமிழ் 12 ராசி மாதப் பெயர்கள்:
------------------------------------------------------------
"ஆரியர் தமிழ்நாட்டிற்கு வருமுன் வான நூலை ஒரு சிறிதும் அறியார். அவர் அறிந்ததெல்லாம் திங்களுடைய வளர்ச்சி தளர்ச்சியைக் கண்டு காலத்தைக் குறிப்பிடுவது மட்டுந்தான். உவாவு (அமாவாசை)க்கு ஒரு உவா மாதம் என்று அவர்கள் கணக்கிட்டனர்.
அவர்கள் பல்கித் தமிழ்நாட்டை அடைந்தபோதே தமிழர்களுடைய மதி நுட்பத்தையும், கணித முறைகளையும் கண்டு வியந்து தாமும் தம் முறையைக் கையாளத் தொடங்கினர்.
அவர்கள் தங்கள் பிறை மாதங்களுக்குப் பெயர் கொடுக்க நினைத்துச் சித்திரை, வைகாசி முதலிய மாதப் பெயர்களையே பெரும்பாலும் சைத்திரம், வைசாகம் எனத் திரித்து வழங்கத் தொடங்கினர்.
சித்திரை மாதத்தில் வரும் உவா நாளுடன் முடிகிற மாதம் சைத்திரம் எனவும், இவ்வாறே ஏனைய மாதங்களுக்கும் பெயர் வைத்துக்கொள்ள ஆரிய மக்கள் சில ஆண்டுகளின் பின் தங்களின் கொள்கைக்கு மாறாகச் சைத்திரம் பங்குனியிலும் வைகாசம் சித்திரையிலும் இவ்வாறே ஏனைய மாதங்களும் முடிவதைக் கண்டு அஞ்சினர்களாய் சித்திரை முதலிய மாதங்களே நிலையானவை; ஆதலினால் அவற்றோடு தங்கள் புதிய மாதங்கள் கூடாமற் போனால் பயனற்றுப்போம் என்று தெரிந்து பங்குனியோடு முடிகிற தமது சைத்திரத்தை அதிமாதம் அல்லது பொய் மாதம் என்று தள்ளிச் சித்திரை மாதத்தின் உவாவுடன் முடிகிற பிழை மாதமே உண்மைச் சைத்திரம் (நிசசைத்திரம்) என்று கொள்வாராயினர்.
ஆகவே சித்திரை முதலிய பன்னிரு மாதப் பெயர்களும் ஆரியமயப்பட்டுக் கிடத்தல் அறியப்படும்.
பழந்தமிழ் மக்கள் ஓரைப் (நட்சத்திர) பெயர்களையே மாதப் பெயர்களாகக் கொண்டிருந்தனர் என்பது அறிஞர் பெருமக்களால் தெளிவுறுத்தப்படுதலாலும் பழஞ் சேர நாடான மலையாளத்தில் இவ்வழக்கே இன்றும் நடை முறையிலிருப்பது அறியப்படுதலாலும், சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை என்னும் ஓரைப் பெயர்களால் சுட்டுவதே சிறந்தென்று தமிழ் மக்கள் கடைப்பிடித்தல் வேண்டும்! " - இ. மு. சுப்பிரமணிய பிள்ளை
(செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 25, 1950).
References:
------------------
(1) N. Ganesan, A Dravidian Etymology for Makara – Crocodile, Prof. V. I. Subramanian Commemoration Volume,  Int. School of Dravidian Linguistics, 2011. https://archive.org/details/MakaraADravidianEtymology2011
(2)  N. Ganesan, Indus Crocodile Religion as seen in the Iron Age Tamil Nadu, 16th World Sanskrit Conference Proceedings, Bangkok, Thailand, 2016.     https://archive.org/stream/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/IVC_Religion_in_IronAge_TamilNadu_by_NGanesan_2016_16th_WSC#page/n0/mode/2up
(3) Asko Parpola, Beginnings of Indian and Chinese Calendrical Astronomy.
Journal of the American Oriental Society. Vol. 134, No. 1 (January-March 2014), pp. 107-112.
(4) Asko Parpola, Crocodile in the Indus Civilization and later South Asian tradition, 2011, Kyoto, Japan. 53 p.
(5) Divine Couple in Ancient Indian Astronomy from 4MSR site near Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai:

crocodilian-symbol-in-pre-mauryan-coins

 Crocodilian Symbol in Pre-Mauryan Punch Marked Coins

Abstract: In the Pre-Mauryan punch-marked coins of the Magadha country on the banks of Ganges river, an important symbol is taken as Taurine symbol. This is done looking at Greek coins.

However, this ancient sign should rather be called as Crocodilian symbol. This essay in Tamil explains the reasons for which I use the recently found Pre-Mauryan punch marked coin from MaNalUr (Keezhadi) near Madurai as an example. This is published in the January 2022 issue of OmSakthi, Coimbatore. The crocodilian symbolism is India is ancient,  and represents the Pole Star in Indian astronomy. http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

கீழடி தொல்லியல் அகழாய்வில் முத்திரைக் காசுகள்

நா. கணேசன்,  ஹூஸ்டன்,  அமெரிக்கா

கீழடி அகழாய்வில் கிடைத்திருக்கும் மௌரியர் காலத்திற்கும் முந்தைய முத்திரைக் காசு கங்கை, யமுனை நதிக்கரை நாகரிகத்துக்கும், தமிழகத்துக்குமான உறவுகளைக் காட்டுகிறது. சங்க காலத்தை நிர்ணையிக்கும் ஆற்றல் வாய்ந்ததாக, நாணயவியல் ஆய்வுகளை முனைவர் ரா. கிருஷ்ணமூர்த்தி நிலைநாட்டினார். தொல்லியல் ஆய்வுகள் தாம் ஹெர்மன் டீக்கன் போன்ற ஐரோப்பிய அறிஞர்கள் சங்க இலக்கியம் 8-ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப் பெற்றன என்ற கருத்தை உடைக்க உதவின. மௌரியருக்கு முன்பாகவே தமிழி எனப்படும் தமிழ் பிராமியின் காலம் எனக் காட்டப் பேரா. கா. ராஜன் கொடுமணல், பொருந்தல் போன்ற கொங்குநாட்டு ஊர்களில் நிகழ்ந்த அகழாய்வுகள் துணை செய்கின்றன. வில்லியம் ஜோன்ஸ் கண்டறிந்த இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம், சென்னை கலெக்டர் எல்லிஸ் கண்டறிந்த திராவிட மொழிக் குடும்பம் இரண்டுக்கும் உள்ள உறவுகளையும், தொடர்புகளையும் மொழியியல், மரபணு அறிவியல், சிந்துவெளி மற்றும் தமிழகத் தொல்லியல் அகழாய்வுகள் மூலம் ஆராய்கிறோம். தமிழுக்கு எழுத்து மற்றும் புள்ளி உருவான கால நிர்ணயத்திற்கும் தொல்லியல் தான் சான்றுகளைத் தருகிறது.

மௌரியர் காலத்துக்கு முந்தைய முத்திரைக் காசுகள் இரண்டு இப்போது கீழடியில் கிடைத்துள்ளன. நான்காம் கட்ட அகழ்வில், 162 செ.மீ ஆழத்திலும், ஏழாம் கட்ட அகழ்வில் 147 செ.மீ ஆழத்திலும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. மகத ஜனபதக் காசுகளில் வகைப்படுத்தப்படுபவை இக் காசுகள். இவற்றின் காலத்தை கி.மு. நான்காம் நூற்றாண்டின் மத்தியப் பகுதி எனக் கணிக்கலாம். சங்க காலச் சேரர்களின் தலைநகராக விளங்கிய கரூரில் கங்கைச் சமவெளி முத்திரைக் காசுகளைச் அச்சடிக்கும் அச்சுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.   கரூர், கொடுமணல், கொடைக்கானல், அழகன்குளம், திருநெல்வேலி, போடிநாயக்கனூர், இலந்தக்கரை, மாம்பலம், வெம்பாவூர், பூம்புகார் போன்ற பல இடங்களில் மௌரியர் கால முத்திரைக் காசுகள் கிடைக்கின்றன.

கீழடி முத்திரைக் காசில் “டவுரின்  சின்னம் (Taurine symbol)  

ஐரோப்பியக் காளைகளின் பெயரில் ஒரு சின்னம் கீழடியில் தற்போது கிடைத்துள்ள முத்திரைக் காசில் உள்ளது. ”டவுரின்” என்று பெயரில் அழைப்பார்கள்.  ஆனால், அப்பெயர் பொருந்துமா? மகத ஜனபத நாணயங்கள் பலவற்றுடன் ஒப்பிடும்போது, “டவுரின்” சின்னம் நீர்நிலைகள் ஆகிய குளம், ஏரி அருகிலே இருக்கிறது. மேலும், காளை தனியாக அச்சிடப்பட்டுள்ளது. எனவே, இச்சின்னத்தைக் காளை என்று அழைப்பதை விட,  ”மகரச் சின்னம்” (Crocodilian symbol) என்பது பொருந்தும் (படம் 1). கிடைமட்டமாக இந்த நீருயிரிகள் வடிவமைப்பு இருக்கிறது. மேலும், முதலைகள் எப்பொழுதும் வாயைத் திறந்திருக்கும் இயல்பு உடையவை. திறந்த வாயினைக் காளையின் கொம்பு எனக் கருதி, ஆங்கிலேயர் பெயர் தங்கள் ஊர்க் காளையின் பேர் வைத்திருக்கலாம். வேத கால வருணனின் சின்னமாக, மகர விடங்கர் வழிபாடு இருந்துள்ளதைக் கீழடியில் கிடைக்கும் பானை ஓடுகளிலும் காண்கிறோம்.

Figure 1. Pre-Mauryan Punch Marked Coin of Keezhadi
(Note Crocodilian Symbol near a pond)

இந்த மகரச் சின்னம் அசுவமேத யாகம் செய்த அரசர்கள் வெளியிட்ட பல காசுகளில் இடம்பெறுகிறது. இதனால் ”பெருவழுதி” பெயர்பொறித்த நாணயம், “மாறன்” என்ற பெயர் உடைய ஜல்லிக்கட்டுக் காசு, அதியமான் என்று பெயர் எழுதிய காசு, மலையமான் காசு, சேரமன்னர் காசு எனப் பல அரசர்களும், ’பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி’ போலவே வேள்விகளை ஆதரித்தனர் எனத் தெரிய வருகிறது. மேலும், இந்த மகரச் சின்னம் குதிரை அருகே உள்ள காசுகள் இலங்கையிலும் கிடைக்கின்றன. பௌத்தர்கள் அசுவமேத வேள்வி வேட்கவில்லை. பாண்டியர் அல்லது சோழர்கள் இக் காசுகளை இலங்கையில் வெளியிட்டிருக்கக் கூடும். தொல்காப்பியத்தில் நெய்தல் திணையின் தெய்வம் வருணன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ”மழுவாள் நெடியோன்” என்று வருணனை மதுரைக் காஞ்சி என்னும் சங்க நூல் விவரிக்கிறது. மோட்டூர், உடையார்நத்தம் போன்ற ஊர்களில் உள்ள சிற்பம் போலவே, உலோகத்தில் கங்கைச் சமவெளியில் ஈமக் குழிகளில் சிற்பங்கள் கிடைத்துள்ளன. ஆங்கிலத்தில், ஹிந்து பத்திரிகையில் திருப்பரங்குன்றத்தில் கிடைத்த தமிழ் பிராமிக் கல்வெட்டு “மூ நாக்ர – மூ சக்தி” வெளியானது. நாக்ர என்றால் வடமொழியில் முதலை. மோட்டூர் மெகாலித்திக் சிற்பம், திருப்பரங்குன்றக் கல்வெட்டு, பாண்டியன் பெருவழுதிக் காசு, கீழடியில் கிடைத்துள்ள மகத ஜனபத முத்திரைக் காசுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. எனவே, கீழடி முத்திரைக் காசில் உள்ள சின்னத்தை, பெருவழுதிக் காசு போலவே, மகரச் சின்னம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

 

Figure 2. Pre-Mauryan Punch Marked Coins from Kodumanal