ஒரு லட்சம் புத்தகங்கள் (மே 31, 1981 யாழ் நூலகம் எரிப்பு பற்றிய சுஜாதா சிறுகதை)

யாழ்ப்பாணப் பொது நூலகம் இலங்கை அரசினால் எரிக்கப்பட்ட நாள். மே 31, 1981.

எழுத்தாளர் சுஜாதா இந்தக் கொடுமை பற்றி ஓர் சிறுகதை எழுதினார். அவர்
மறைந்தபோது, தமிழ் நூலகங்களுக்கு ஏற்பட்ட மூன்று போகூழ் நிகழ்வுகளைப்
பற்றி எழுதினேன். 2008-ல் எழுதிய பதிவு:
http://nganesan.blogspot.com/2008/02/writer-sujatha.html


தமிழன்னை அழுத தருணங்கள் சில. சென்னையிலே கலெக்டராயிருந்த பிரான்சிஸ் வைட் எல்லிசு திருவள்ளுவனாரைச் சமணத் துற்வியாகத் தங்கக் காசுகள் வெளியிட்டவர். திராவிட மொழிக் குடும்பம் சமற்கிருத்தினின்று வேறுபட்ட மூலத்தில் தோன்றியது என்று உலகுக்கு அறிவித்தவர் எல்லீசனே. 35 ஆண்டு கழித்து 1856-ல் நூலாக விரித்தவர் கால்டுவெல் பாதிரியார். எல்லிஸ் இராமநாதபுரஞ் சென்றபோது நஞ்சுண்டு இளவயதில் மாண்டார். அடுத்து வந்த வெள்ளை ஆட்சியருக்குத் தமிழின்பால் நாட்டமில்லை. எல்லிஸ் அகாலத்தில் அகன்றதால், புலவர்கள் அவரிடம் ஒப்படைத்த பொக்கிசங்களைக் கலெக்டர் மாளிகை 'பட்லர்' சுடுதண்ணீர் அடுப்பெரிக்கப் பயன்படுத்தினான். அத்தனை ஓலைச்சுவடிகளும் ஒன்றில்லாமல் ஒழிந்தன, சமணக் காவியங்கள் (உ-ம்: வளையாபதி), பௌத்தப் பொத்தகங்கள், .... 1820களில் தீக்கிரையாயின.

ஏராளமான பழந்தமிழ்ப் புலவர்கள் சேதுபதி, பாலவநத்தம் பொன்னுசாமித் தேவர், பெத்தாச்சி வள்ளல் போன்ற புரவலர்களை நாடித் தஙகியிருந்த சோலை மதுரைத் தமிழ்ச் சங்கம். அன்றைய தாழ்நிலையில் தமிழ்த் திறமையைக் கொண்டு சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி என்றெல்லாம் சந்தைப்படுத்திக் காசுபார்க்க முடியாது. 20 - சனவரி - 1920ல் மதுரைத் தமிழ்ச் சங்க நூலகம் தீப்பற்றி எரிந்தது, எண்ணிறந்த கருவூலங்களைத் (எ-டு: குறளின் பழைய உரைகள் பல) தமிழ் அன்றும் இழந்துபட்டது. பின்னர் சிங்களக் காடையர்கள் 31- மே- 1981ல் கொளுத்திய யாழ்ப்பாணப் பொது நூல்நிலைய இழப்பு. இத் தீயழிப்பு பற்றிச் சுஜாதா 'ஒரு லட்சம் புத்தகங்கள்' என்னும் சிறுகதை எழுதியுள்ளாராம்.  ~NG, 2008

----------------
ஒரு லட்சம் புத்தகங்கள் - சுஜாதா சிறுகதை
https://azhiyasudargal.blogspot.com/2012/06/blog-post.html

இந்தச் சிறுகதை பற்றிய திறனாய்வு - பேரா. அ. ராமசாமி
https://ramasamywritings.blogspot.com/2009/08/blog-post_5649.html

ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா

சிங்களத் தீவினுக்கோர்

பாலம் அமைப்போம்

-மகாகவி

Welcome to delegates of Bharathi International

நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஓட்டலின் வாயிலில் ஆடின. தலைப்பாகைக்காரரின் படம் கீழே துடித்துக் கொண்டிருந்தது. அருகே பல வர்ணக் கொடிகள் சஞ்சலித்துக் கொண்டிருந்தன. டாக்டர் நல்லுசாமி கண்ணாடிக் கதவைத் திறப்பதற்கு முன் சேவகன் திறந்து புன்னகைத்தான். உள்ளே குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்கில் கம்பளத்தில் தமிழறிஞர்கள் நிறைந்திருந்தார்கள். புதுக்கவிஞர் கேக் கடித்துக்கொண்டிருந்தார். சாகித்திய அகாதமி சிகரெட்  பற்றவைத்துக் கொண்டிருந்தார். பரிபாடல் சோபாவில் உட்கார்ந்து கொண்டு தொடை மேல் காகிதம் வைத்துக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். உரையாடலில் தமிழ் உலவியது.

"தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டு, தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்..."

"இதைச் சொன்னது யாரு, சொல்லுங்க பார்க்கலாம்?"

"பேரறிஞர் அண்ணாங்களா?"

"இல்லைங்க. பார்ப்பனரான சுப்பிரமணிய பாரதி. `காற்று’ன்னு வசன கவிதை படிச்சுப் பாருங்க"

"அவரு எல்லாவிதத்திலும் புரட்சியாளருங்க, ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்து இருபதுகளில் ஒரு பார்ப்பனர் இந்த மாதிரி சொல்றதுக்கு எத்தனை தைரியம் வேணும்"

டாக்டர் நல்லுசாமி அவர்களை அணுக "வாங்க, வாங்க, வாழ்த்துக்கள்."

"எதுக்கு?" என்றார் டாக்டர்.

"அ. தெரியாத மாதிரி கேக்கறிங்க."

"உண்மையிலேயே தெரியாதுங்க"

"பாரதி பல்கலைக் கழகத்துக்கு உங்களைத்தான் துணைவேந்தராப் போடப் போறாங்களாம்."

"ஓ. அதுவா? எத்தனையோ பேர்களில் என் பேரும் இருக்குது."

"இல்ல. நீங்கதான்னு சொல்றாங்க. அமைச்சர் உங்களைக் கவனிக்கத்தான் இன்னிக்கு உங்க கூட்டத்துக்கே வராருன்னு சொல்றாங்க"

"சேச்சே. அமைச்சருக்கு பாரதி மேல அப்படி ஒரு ஈடுபாடுங்க"

"உங்களை விட்டாப் பொருத்தமா வேற யாருங்க...?"

"எதோ பார்க்கலாம். அதெல்லாம் அவ்வளவு சுலபமில்லைங்க. அரசியல் வேற கலக்குது.." டாக்டர் நல்லுசாமி அவர்களை விட்டு விலக..

"வள்ளுவர் சொல்லிக்காரு-

`மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்`னு.

இப்ப யாருங்க பார்ப்பான்? யாரும் கிடையாதுங்க. அந்த அர்த்தத்தில் தான் பாரதி சொல்லியிருக்காரு..."

ரிஸப்ஷனில் அவர் தன் அறைச் சாவியை வாங்கிக் கொள்ளும்போது அந்தப் பெண், "ஸர் யூ ஹேவ் எ மெஸேஜ்" என்று புறாக் கூட்டிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொடுத்தாள். "செல்வரத்னம் மூன்று முறை உங்களுக்காக போன் செய்தார்" நல்லுசாமிக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. யார் இந்த செல்வரத்னம்? புரியவில்லை. "தாங்க்ஸ்" என்று அவளைப் பார்த்தபோது "யூ ஆர் வெல்கம்" என்று புன்னகைத்தபோது அவள் உடுத்தியிருந்த ஸன்ன ஸாரி டாக்டர் அவர்களைப் படுத்தியது. தன் வாழ்நாளிலேயே முதன்முதலாக மனைவி (டாக்டர் மணிமேகலை)யை விட்டு வந்திருக்கிறார். இந்தப் புன்னகையில் நிச்சயம் வரவேற்பிருந்தது.

கூடிப் பிரியாமலே - ஓரிராவெல்லாம் கொஞ்சிக் குலவியங்கே

ஆடி விளையாடியே - உன்றன் மேனியை ஆயிரங்கோடி முறை

நாடித் தழுவி...

"டாக்டர் வணக்கம்"

"ஓ. பெருமாள். வாங்க, எங்க இருக்கிங்க இப்ப?"

"உத்கல்ல. புதுசா டமில் செக்ஷன் ஆரம்பிச்சுருக்காங்க..."

"உத்கல் எங்க இருக்குது?"

பக்கத்தில் பச்சைக் கண்களுடன் ஒரு பெண் பிள்ளை இவர்களைப் பார்த்துச் சிரித்து `ஹலோ` என்று சொல்ல, டாக்டர் பெருமாள் அறிமுகப்படுத்தி வைத்தார்.

"இது வந்து கத்தரினா. ரஷ்யாவில் இருந்து பாரதி ஆராய்ச்சி பண்ண வந்திருக்காங்க. திஸ் இஸ் டாக்டர் நல்லுசாமி"

"ஆ. ஐ ஸீ" என்று பெண்மணி அவர் கையைப் பற்றிக் குலுக்கினாள். சற்று வலித்தது. டிராக்டர் ஓட்டும் பெண் போல ஏராளமாக இருந்தாள். ஒல்லி இடையில்லை. ஓங்கி முன்னிற்கும் மார்பையும் சரியாக மூடாமல் ததும்பினாள்.

"யூர் ரீடிங் பேப்பர், ஆர்ன்ட்யூ?"

"நோ... ஐம் பிரிஸைடிங். மத்தியானம்... ஆஃப்டர்நூன். யூ நோ டாமில்?"

"எஸ். காண்ட் ஸ்பீக்."

"இந்தம்மா பாரதியை வறுமைல ஏன் வாடவிட்டாங்க தமிழங்கன்னு கேக்குது"

"அவர் காலத்து தமிழங்க அவர் பெருமையை உணரலை.."

"டாக்டர்.. உங்களுக்குத் துணைவேந்தர் ஆயிருச்சாமே?"

"சேச்சே. இன்னும் எதும் தீர்மானிக்கலைப்பா?"

"ஆயிட்டுதுன்னுதான் சொல்றாங்க. உங்களைத்தான் நம்பியிருக்கேன். என்னை உத்கல்ல இருநது எப்படியாவது ரீடரா கொண்டு வந்துருங்க. சப்பாத்திச் சாப்பாடு. சூடு அதிகமா....? என்னுடைய பைல்ஸுக்கு ஒத்துக்கிடலை."

"பாக்கலாங்க. முதல்ல ஆகட்டும்" செல்வரத்னம்... எங்கேயோ கேட்ட மாதிரி பேராக இருக்கிறதே. ரஷ்யியைப் பார்த்து மறுபடி புன்னகைத்து விட்டு டாக்டர் மெத்தென்ற மாடிப்படிகளில் ஏறும்போது உற்சாகமாகத்தான் சென்றார்.

மணிமேகலைக்குச் செய்தி சொல்லதான் வேண்டும். அவளுக்குத்தான் சந்தோஷமாக இருக்கும். சே. அதற்குள் எத்தனை கோட்டைகள்.

மெஸ்ஸனைன்னைத் தாண்டியதும் இங்கிருந்தே மாநாட்டு முதல் ஹால் தெரிந்தது. அதன் வாசல் ஏர்கண்டிஷனுக்கு அடைத்திருந்தால் உள்ளே பேச்சுக் கேட்கவில்லை. அவ்வப்போது உள்ளேயிருந்து டெலிகேட் ஒருவர் டாய்லெட் போகவோ அல்லது முந்திரிபருப்பு கேக்குடன் தயாராக இருந்த காபி சாப்பிடவோ கதவைத் திறந்தபோது "அவன் சர்வதேசக் கவிஞன். பிஜி மக்களுக்காக இங்கிருந்து கண்ணீர் வடித்தான். மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள்.. என்று ரஷ்யப் புரட்சியைப் பற்றிப் பாடினான் அவனன்றோ" என்று மாநாடு கசிந்தது. பல பேர் டாக்டரை வணங்கினார்கள். பரிச்சயமில்லா முகங்கள். எல்லோருக்கும் தெரிந்திருக்கும். துணைவேந்தர் என்றால் சும்மாவா? அமைச்சர் அதற்குத்தான் பிற்பகல் கூட்டத்துக்கு வருகிறார். என்னைக் கணிக்கத்தான். நல்லுசாமிக்கு உள்ளுக்குள் புல்லரித்தது. திறமைப்படி கொடுக்க வேண்டுமானால் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அவரைக் காட்டிலும் பாரதி கவிதைகளில் பரிச்சயமுள்ளவர்கள் யாரும் கிடையாது. `பாரதி கவிதைகளில் சமத்துவம்` என்று டாக்டர் பட்டத்துக்கு அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை இன்னும் ஒரு மைல் கல். மத்தியானக் கூட்டம் தொடங்க இன்னும் இரண்டு மணிநேரம் இருந்தது. ஆனால், திறமை மட்டும் போதாதே. அறைக்குச் சென்று சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வரலாம். முடிந்தால் மணிமேகலைக்குத் தொலைபேசி மூலம் விவரம் தெரிவித்து விடலாம்.

டாக்டர் லேசாக,

`காதல் செய்தும் பெறும்பல இன்பம்,

கள்ளில் இன்பம், கலைகளில் இன்பம்,

பூதலத்தினை ஆள்வதில் இன்பம்...`

என்று பாடிக் கொண்டே அறைக் கதவில் சாவியைப் பொருத்தும் போது அறை வாசலில் நின்று கொண்டிருந்தவனைக் கவனித்தார்.

"வணக்கம் ஐயா"

"வணக்கம். நீங்க"

இருபத்தைந்து சொல்லலாம். ஒல்லியாக இருந்தான். உக்கிரமான கண்களுக்குக் கீழ் அவன் வயசுக்குச் சற்று அவசரமான நிழல்கள். தோளில் பை மாட்டியிருந்தான். அதில் விழாவின் சிறப்பு மலர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

"கண்டு கன காலம்" என்றான். டாக்டர் அவனைத் தன் ஞாபக செல்களில் தேடினார்.

எங்கோ பார்த்திருக்கிறோம்? மையமாக... "வாங்க. எப்ப வந்தீங்க?"

"இஞ்சாலையா?"

இப்போது ஞாபகம் வந்துவிட்டது. சிலோன். இவனைச் சிங்களத்தில் பார்த்திருக்கிறோம்.

"நீங்கதானா செல்வரத்னம்?"

"ஐயாவுக்கு நினைப்பு உண்டு. யாழ்பாணத்தில் சந்திச்சிருக்கிறோம்." இப்போது முழுவதும் ஞாபகம் வந்து விட்டது. இவன் வீட்டில் யாழ்பாண உலகத் தமிழ் மகாநாட்டின் போது டாக்டர் இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறார்.

"எங்க வந்தீங்க?"

"சும்மாத்தானாக்கம். இடைசுகம் விசாரிச்சுக் கொண்டு போவமெண்டு வந்தனாக்கம்." மனசுக்குள் மொழிபெயர்த்துக் கொள்ள வேண்டியிருந்த அவன் தமிழ் சற்று நிரடியது. இருந்தும் "வாங்க வாங்க. உள்ள வாங்க." என்றார்.

அறைக்குள் ஆஷ்-டிரே தேடினான். டாக்டர் அவனை நாற்காலி காட்ட அதில் விழுந்தான்.

"விழாவில எண்ட பேச்சும் உண்டு," என்றான்.

"அப்படியா. சந்தோஷம், விழாவில கலந்துக்கறதுக்காக வந்திங்களா சிலோன்ல இருந்து?"

"ஆமாம்."

"ரொம்ப பொருத்தம். சிங்களத் தீவினிக்கோர் பாலமமைப்போம்னு மகாகவி சொன்னதுக்கு ஏற்ப.."

இப்போது அவனை முழுவதும் ஞாபகம் வந்து விட்டது. யாழ்ப்பாணம் மாநாட்டில் இவன் குடும்பமே தமிழில் ஈடுபாடு கொண்டு அவர்கள் வீட்டில் இவருக்கு விருந்து வைத்ததும், இவன் தங்கை இனிமையான குரலில் `நெஞ்சில் உரமுமின்றி` பாடியதும் நினைவுக்கு வந்தது. அந்தப் பெண் பெயர் என்ன...

"உக்காருங்க. ஊர்ல எல்லாரும் சௌக்கியமுங்களா?"

"ஊர்ல யாரும் இல்லிங்க"

"அப்படியா? அவங்களும் வந்திருக்காங்களா? உங்க தங்கச்சி வந்திருக்குதோ?"

"தங்கச்சி இல்லைங்க," என்றான். அவன் கண்களில் பளபளப்பு ஏற்பட்டது.

"என்ன சொல்றீங்க?"

"எண்ட தங்கச்சி, அப்பா, அம்மா எல்லாரும் இறந்துட்டாங்க"

"அடப்பாவமே. எப்ப? எப்படி?"

"ஆகஸ்ட் கலகத்திலதாங்க"

"ஐயையோ, எப்படி இறந்து போனாங்க?"

"தெருவில வெச்சு... வேண்டாங்க, விவரம் வேண்டாங்க. நான் ஒருத்தன் தான் தப்பிச்சேன். அதுவும் தற்செயல்."

டாக்டர் மௌனமாக இருந்தார். எப்படி ஆறுதல் சொல்வது? அவன் சிரமப்பட்டுக் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும்போது எது சொன்னாலும் பிரவாகம் துவங்கிவிடும் என்று தோன்றியது. இருந்தும் ஏதோ பேச வேண்டிய அவசியத்தில்,

"ஏதாவது சாப்பிடறீங்களா?"

"கோப்பி" என்றான்.

"இத்தனை நடந்திருக்குன்னு நினைக்கவே இல்லை, அதும் நமக்குத் தெரிஞ்சவங்க, நாம பழகினவங்க இதில பலியாகி இருக்காங்கன்னா ரத்தம் கொதிக்குது."

"அதைப் பத்தி இப்ப பேச வேண்டாங்க. நான் வந்தது வேற விசயத்துக்காக,"

"சொல்லுங்க. உங்களுக்கு எந்த விதத்தில என்ன உதவி தேவையா இருக்குது?"

"நிகழ்ந்ததெல்லாம் தமிழ்நாட்டில முழுவதும் தெரியாதுண்டுதான் தோணுது. யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில இருந்த ஒரு லட்சம் தமிழ்ப் புத்தகங்களை போலீஸ்காரங்களே எரிச்சாங்க. அது தெரியுமோ உங்களுக்கு?"

"அப்படியா?"

"அருமையான புத்தகங்கள். பாரதியாரே சொந்த செலவில் பதிப்பித்த `ஸ்வதேச கீதங்கள்` 1908-லேயோ என்னவோ வெளியிட்டது. இதன் விலை ரெண்டணா-ண்டு போட்டு இருந்தது. ஆறுமுக நாவலருடைய முதல் எடிஷன்கள் எல்லாம் இருந்தது. 1899-ல் வெளியிட்ட சிங்காரவேலு முதலியாருடைய அபிதான சிந்தாமணி முதல் பிரதி. லட்சம் புத்தகங் களானா எத்தனை தமிழ் வார்த்தைகள். எண்ணிப்பாருங்க. அத்தனையும் தெருவில எரிச்சாங்க."

"அடடா"

"அதை நான் சொல்ல விரும்பறேன். அப்பறம் நான் இந்தியாவுக்கு வந்து பதினைஞ்சு நாளா தமிழ்நாட்டில பார்த்த சில விஷயங்களையும் சொல்ல விரும்பறேன்."

"எங்க சொல்ல விரும்பறீங்க?"

"இன்றைய கூட்டத்திலதான்"

"இன்றைய கூட்டம் பாரதி பற்றியதாச்சே"

"பாரதி பெல்ஜியம் நாட்டுக்காகவும் பிஜி தீவினருக்கும் அனுதாபப்பட்ட சர்வதேசக் கவிஞன். ருஷ்யப் புரட்சியை வாழ்த் தினவன். இன்றைக்கு இருந்திருந்தா சிங்களத் தமிழர்களுக்காக உருகியிருக்க மாட்டானா?"

"கட்டாயம். கட்டாயம்"

"அதைத்தாங்க சொல்லப் போறேன்."

"அதுக்கு இந்த மேடை சரியில்லைங்களே.."

"இந்த மேடைதான் மிகச் சரியானது. தமிழ் பயிலும் எல்லா நாட்டவர்களும் வந்திருக்காங்க. தமிழக அமைச்சர் வரார். சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், அனைத்திந்திய தமிழறிஞர்கள் எல்லாரும் வர இந்த மேடையிலே எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கத்தான் துக்கத்தையும் மறந்து வந்திருக்கேன்."

டாக்டர் சற்றே கவலையுடன் "குறிப்பா என்ன சொல்லப் போறீங்க?" என்றார்.

"சிங்களத் தமிழர்களை தமிழகம் நடத்தற விதத்தையும் பார்த்தேன். அதையும் சொல்லப் போறேன்."

"புரியலீங்க"

"ஐயா. நான் வந்து பதினைந்து தினம் ஆச்சு. முதல்ல மண்டபம் டிரான்ஸிற் காம்ப்புக்குப் போனேன். இலங்கையைத் துறந்து இங்க வந்த தமிழர்கள் என்ன செய்யறாங்க. அவங்களை எப்படி றீட் (treat) பண்ணறாங்கன்னு பாக்கிறத்துக்கு.. ராமேஸ்வரம் வந்து சேர்ந்த அவங்களைத் தமிழகம் எப்படி வரவேற்குது தெரியுமோ? டிரான்ஸிஸ்டர் வெச்சிருக்கியா? டேப்ரிக்கார்டர் கொண்டு வந்திருக்கியா?

தங்கத் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்துட்டோமிண்டு கண்ணில கனவுகளை வெச்சுக்கிட்டு வந்தவங்களுக்கு எல்லாம் ரெண்டே மணி நேரத்தில கலைஞ்சு போயிருதுங்க. அந்தக் காம்ப்பைப் பார்த்ததும். சிறைக் கைதிங்க பரவாயில்லை. சன்னல் இல்லாத ஓட்டு வீடு. பிரிட்டிஷ் காலத்தில் க்வாரண்டைன் காம்ப்பா இருந்ததை இன்னும் மாற்றாம வெச்சிருக் காங்க. இரண்டு ரூமுக்கு பத்து பேற்றை அடைச்சு வெச்சிருக்காங்க. அவங்களுக்கு ஆளுக்கு இரண்டு வாரத்துக்கு எட்டு ரூபா உபகாரப் பணம். ஆறாயிரம் ரூபா சர்க்கார் கடன் கொடுக்குதுன்னு பேரு. எல்லாம் அப்பிளிகேசனாத்தான் இருக்குது. ஆறு மாதம் காத்திருந்தாலும் லஞ்சமில்லாம வாராது. இவங்க உடமைகளை கொண்டு வந்த அற்பப் பணத் தை ஏமாற்றிப் பறிக்க எண்ணூறு பேர். சிலோன் ரூபாய்க்கு எழுபத்து மூணு பைசா கொடுக்கணும், கிடைக்கிறது நாப்ப த்தஞ்சு பைசாதான். எல்லாரும் திரும்பப் போயிரலாம். அந்த நரகமே மேல்னு சொல்றாங்க. திரும்ப சேர்த்துக்க மாட்டாங் க. போக முடியாது.

1964 வரைக்கும் இலங்கையைத்தான் தாயகம்னு நினைச்சுகிட்டு இருந்தாங்க. திடீர்னு `இது உன் தாயகம் இல்லை. தமிழ்நாட்டுக்குப் போன்னு அழையாத விருந்தாளிங்களா பேப்பரை மாற்றிக் கொடுத்துட்டுக் கப்பலில் அனுப்பிச்சுட்டா ங்க. எதுங்க இவங்க தாயகம்? அங்க பொறந்து வளந்து ஆளாகி ஒரே நாளில எல்லாம் கவரப்பட்டு இங்கயும் இல்லாம அங்கயும் இல்லாம இவங்களைப் பந்தாடிக்கிட்டு இருக்காங்க. இது ஒரு சர்வதேசப் பிரச்சினை இல்லையா?"

"எல்லாம் சரிதாங்க. இதை நீங்க சொல்ல வேண்டிய மேடையைப் பத்திதான் எனக்கு..."

"வேற எங்கங்க சொல்ல முடியும்? அரசியல்வாதிவாதிங்ககிட்டயா? ஏடிஎம்கே-காரங்க `இதுக்குத்தான் நாங்க தமிழகம் பூராவும் கதவடைப்பு செஞ்சோமே` ங்கறாங்க, டிஎம்கே `இதுக்குத்தான் நாங்களும் தமிழகம் பூரா கதவடைப்பு செஞ்சமே`ங்கறாங்க"

"இல்லை.. இதைத் தமிழ்ப் பத்திரிக்கைகளில ஒரு கட்டுரை மாதிரி எழுதலாமே நீங்க..."

"சொல்றேங்க. எல்லாப் பத்திரிகையும் போய்ப் பார்த்தேன். விகடன்ல சொன்னாங்க - நாங்க அட்டைப் படமே கண்ணீர் த்துளியா ஒரு இஷ்யூலே போட்டாச்சேன்னாங்க. குமுதம் ஆளுங்களைச் சந்திக்கவே முடியலை. குங்குமத்தில விகடன்லே வந்துருச்சேன்னாங்க. ராணில இதைப் பத்தித்தான் கட்டுரைத் தொடர்ல நாங்களே எழுதுகிட்டிருக் கமேன்னாங்க.."

"நீங்க என்ன எழுதறாதா சொன்னீங்க."

"அந்தப் புத்தகங்களை எரிச்சதைப் பற்றித்தாங்க. ஒரு லட்சம் புத்தகங்க. அத்தனை வார்த்தைகளும் எரிஞ்சு போய் ரா த்திரி பூரா வெளிச்சமா இருந்ததை. ஒருத்தர் மட்டும் சொன்னாரு எழுதுங்கன்னு.. ஆனா அப்படியே உங்க தங்கச்சி றேப்பையும் எழுதுங்க.. அவங்க கலர் ட்ரான்பரன்ஸி இருந்தா கொடுங்க. அட்டையிலே போடுவேம்.. கொஞ்சம் ஹ்யூமன் இன்டரஸ்ட் இருக்கும்னாருங்க. அவர் பேர் சொல்ல விரும்பலை. எனக்கு என் சொந்த சோகத்தை எழுத விருப்பமில்லை. அவளை என் கண் எதிரிலேயே துகிலுரிச்சாங்க. முதல்ல பக்கத்து வீட்டில சிங்களக் குடும்பத்தில்தாங்க அடைக்கலம் கொடுத்தாங்க.. நாள் பூரா கக்கூஸ்ல ஒளிஞ்சிகிட்டு இருந்தது. அவங்க உயிருக்கே ஆபத்து வந்திரும்போல நிலையில பின்பக்கமா ஓடிப் போயிருச்சுங்க. சந்துல வெச்சுப் பிடிச்சுத் தெருவில நடுத் தெருவில.. என் கண் முன்னாலலே.. கண் முன்னாலயே. .." அவன் இப்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதான்.

"ரொம்ப பரிதாபங்க"

கொஞ்ச நேரம் அழுதுவிட்டு "எனக்கு இதைச் சொல்லி அனுதாபம் தேடிக்க விருப்பமில்லைங்க. இந்த மாதிரி வன்முறைங்க உங்க ஊர்லேயும் நிறைய நடக்குது. இங்கயும் றேப்புக்குப் பஞ்சமில்லை. ஆனா அந்தப் புத்தகங்களை எரிச்சது, அது என்னவோ ஒரு சரித்திர சம்பவமாத்தான் எனக்குத் தெரியுது. அந்த நெருப்பில இருந்த வெறுப்பு நிச்சயம் சர்வதேச கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியதுங்க. " சட்டையில் முழங்கைப் பகுதியில் தன் முகத்தைச் சரியாகத் துடைத்துக் கொண்டு, "எனக்கு ஒரு நாட்டுக் குடிமகன்கிறது யாருங்கறதைப் பற்றி ஆதாரமா சந்தேகங்கள் வருதுங்க. சிங்களவர்கள், தமிழர்கள், இரண்டு பேரும் இந்தியாவில இருந்து வந்தவங்க. அவங்க வங்காளம் ஒரிஸ்ஸாவில இருந்து வந்த ஆரியர்களாம். நாங்க ஒண்ட வந்த கள்ளத் தோணிங்களாம், சக்கிலியங்களாம், இதையெல்லாம் சொல்ல வேண்டாம்? ஆறு லட்சம் பேர் எங்க போவோங்க? என்ன செய்வோங்க? இதெல்லாம் சொல்ல வேண்டாமா?"

டாக்டர் மூக்கைச் சொறிந்து கொண்டார். "இவ்வளவு விவரமா சொல்ல வேண்டாங்க. ஏன்னா இது இலக்கியக் கூட்டம். இதில அரசியலை நுழைக்கிறது நல்லால்லை. ஒண்ணு செய்யுங்க..."

"அரசியல் இல்லைங்க. மனித உரிமைப் பிரச்சினை இல்லையா?

சொந்த சகோதரர்கள்

துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்காரடீ – கிளியே

செம்மை மறந்தாரடீ

-ன்னு பாரதி பாடலையா? இலங்கைத் தமிழர்களைச் சகோதரர்கள்னுதானே நீங்க எல்லாரும் சொல்றீங்க?"

"அதும் ஒரு விதத்துல வாஸ்தவம்தான். இருந்தாலும்.."

"எனக்கு இதை விட்டா வேறு வாய்ப்புக் கிடையாதுங்க. ரத்தினாபுரத்தில நடந்ததைச் சொன்னா கண்ணில ரத்தம் வரும். அதெல்லாம் நான் சொல்லப் போறதில்லை. ஒரு லட்சம் புத்தகங்களை எரிச்சாங்க. அதுக்கும் பதில் ஒரே ஒரு புத்தகத்தை மேடையில எரிக்கப் போறேன்."

"என்ன புத்தகம்?" என்றார் கவலையோடு.

"இந்த மாநாட்டு மலரை"

"எதுக்குங்க அதெல்லாம்...?"

"பாரதி சொன்னதை எதும் செய்யாம ஏர்கண்டிசன் ஓட்டல்ல சாக்லேட் கேக் சாப்ட்டுக்கிட்டு மாநாடு போடறது எனக்கு என்னவோ பேத்தலாப் படுது. அதனோட சிகரம்தான் இந்த வெளியீடு. இதை மேடையில எரிச்சுட்டு பாரதி சொன்னதை நடைமுறையில செய்து காண்பிங்கன்னு சொல்லப் போறேன். சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்னு அவன் சொன்னது கான்க்ரீட் பாலமில்லை. முதல்ல மனப்பாலம் அமைங்க. அப்பத்தான் பளிச்சுனு எல்லார் மனசிலையம் பதியும். நேரமாயிடுச்சுங்க. ரெண்டு மணிக்கு இல்ல கூட்டம்?" அவன் எழுந்து வணங்கி விட்டுச் சொன்றான் செல்வரத்தினம்.

டாக்டர் அவன் போன திக்கைத் திகைப்பில் பார்த்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் யோசித்தார். நிகழ்ச்சி நிரலைப் பார்த்தார். இரண்டாவதாகப் பேசுவது `செல்வரத்தினம், ஸ்ரீலங்கா` என்றிருந்தது. யோசித்தார். நாய்க்குட்டி போலிருந்த டெலிபோனை எடுத்தார். மதுரைக்கு டிரங்க்கால் போட்டார். "பிப்பி கால்.. டாக்டர் மணிமேகலை"

பத்து நிமிஷத்தில் கால் வந்தது.

"மணி.. நான்தான்"

"என்ன, விசாரிச்சிங்களா? கிடைச்சிருச்சா?"

"ஏறக்குறைய கிடைச்ச மாதிரிதான். செக்ரட்டேரியட்டிலேயே விசாரிச்சுட்டேன். அமைச்சர் கையெழுத்து ஒண்ணுதான் பாக்கியாம்."

"அப்ப இனிப்பு செய்துட வேண்டியதுதான். இந்தக் கணத்தில் உங்ககூட இருக்க..."

"மணி. ஒரு சின்ன சிக்கல்..."

"என்னது? அருணாசலம் மறுபடி பாயறாரா?"

"அதில்லை மணி, இன்னிக்கு கூட்டத்தில் அமைச்சர் வராரு. எனக்கு முன்னால ஒரு சிலோன்காரன் பேசறதா இருக்கு. நாம யாழ்பாணத்தில உலகத் தமிழ் மகாநாட்டில சந்திச்சிருக்கோம். அவன் பேசறான்."

"பேசட்டுமே. உங்களுக்கென்ன?"

"அதில்லை மணிமேகலை. அவன் சமீபத்தில கலகத்தில ரொம்ப இழந்து போய் ஒரு வெறுப்பில இருக்கான். ஏறக்குறைய தீவிரவாதியா கிறுக்குப் புடிச்ச பயலா இருக்கான்."

"என்ன செய்யப் போறான்?"

"யாழ்ப்பாணத்தில் லட்சம் புத்தகங்களை எரிச்சாங்களாம். அதுக்குப் பதிலா மேடையில விழா மலரை எரிச்சுக் காட்டப் போறேங்கறான். கேக்கறத்துக்கே விரசமா இருக்குது. எனக்கு என்னடான்னா கூட்டத்தில கலாட்டா ஆகி எங்கயாவது எனக்கு சந்தர்ப்பம் வரதுக்குள் கலைஞ்சு போச்சுன்னா அமைச்சர் வந்து..."

"த்ரீ மினிட்ஸ் ப்ளீஸ்"

"எக்ஸ்டென்ஷன் பண்ணுங்க"

"என்ன. கேக்குதா?"

"கேக்குது, கேக்குது. இதப் பாருங்க, உங்க பேச்சை இன்னைக்கு அமைச்சர் கேக்க வேண்டியது ரொம்ப முக்கியம். நீங்க முன்னாடி பேசிடுங்களேன்."

"எப்படி? நிகழ்ச்சி நிரல்ல மாறுதல் செய்யணுமே. தலைமை தாங்கறதால, இறுதியுரைன்னா நானு?"

கொஞ்ச நேரம் மதுரை யோசித்தது.

"என்ன செய்யச் சொல்றீங்க?"

"எப்படியாவது உங்க அண்ணன் கிட்ட அவசரமா போன் பண்ணிச் சொல்லிடு.."

"அதைத்தான் நானும் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.. வெச்சுருங்க"

"எப்படியாவது.."

"வெச்சிருங்கன்னு சொன்னனில்லையா? அதிக நேரம் இல்லை. ஒரு டிமாண்ட்கால் போட்டுர்றேன்."

"சரி மணிமேகலை"

"கவலைப்படாதீங்க. பேச்சு நல்லா பேசுங்க. கிடைச்ச மாதிரித்தான்னு அண்ணனும் சொல்லியிருக்காரு. அமைச்சர் உங்க பேச்சை கேட்டுட்டா போதும்னாரு.."

டெலிபோனை வைத்து விட்டு டாக்டர் சற்று திருப்தியுடன் எழுந்தார். மணிமேகலை செய்து காட்டிவிடுவாள். இவ்வளவு செய்யக் கூடியவள்.. இது என்ன? இப்போதே அவள் விரல்கள் தொலைபேசியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவள் சக்தி.

வாழ்வு பெருக்கும் மதியே சக்தி

மாநிலம் காக்கும் மதியே சக்தி

தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி

சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி

இரண்டு மணிக்குக் கூட்டம் துவங்கியது. எதிரே ஹால் நிரம்பியிருந்தது. வெள்ளைக்கார முகங்கள் முதல் வரிசையில் பளிச்சென்று தெரிந்தன. பட்டுப் புடவை உடுத்திய நங்கை மைக்கைத் தொட்டுப் பார்த்துவிட்டு "எண்ணிய முடிதல் வேண்டும். நல்லதே எண்ணல் வேண்டும்..." என்று இனிமையாகப் பாடினாள். மேடையில் பேச இருப்பவர்கள் வரிசையில் ஓரத்தில் செல்வரத்தினம் உட்கார்ந்திருந்தான். டாக்டரைப் பார்த்துப் புத்தகத்தை உயர்த்திக் காட்டினான். கவலையாக இருந்தது. என்ன. ஒன்றுமே செய்ய முடியவில்லையா? இரு இரு பார்க்கலாம். அமைச்சர் இன்னும் வரவில்லை. எல்லோரும் வாயிலையே பார்த்துக் கொண்டிருக்க, வரவேற்புரைஞர் "தலைவர் அவர்களே. உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும் தங்கத் தமிழர்களே.." என்று துவங்க, சலசலப்பு தொடர, அமைச்சர் அங்குமிங்கும் வணங்கிக் கொண்டு நடுவில் நடந்து வந்தார். டாக்டரைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுத் தன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு உடனே தன் முழுக்கைச் சட்டையை உருவி கடிகாரம் பார்த்தார். டாக்டர் அருகில்தான் உட்கார்ந்திருந்தார்.

இப்போது கேட்கலாமா? இது சந்தர்ப்பமா? இல்லை இல்லை. அவர் கேட்கும் வரை காத்திருப்போம். பின்னால் பார்த்தார். இன்னும் இருந்தான். கவலை சற்று அதிகமாகியது.

"முதற்கண் பிஜித் தீவிலிருந்து வந்திருக்கும் ஜார்ஜ் மார்த்தாண்டம் அவர்கள் பேசுவார்." என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்தார்.

"ரெஸ்பெக்டட் அண்ட் ஹானரபிள் மினிஸ்டர் அண்ட் பெல்லோ டெலிகேட்ஸ். ஐம் எ தர்ட் ஜெனரேஷன் டமிலியன் அண்ட் ஐம் ஸாரி ஐம் நாட் ஏபிள் டு ஸ்பீக் இன் டமில், பட் தி கிரேட் ஸுப்ரமண்ய பாரதி..."

டாக்டர் தன்னை அறியாமல் பின்னால் பார்க்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு காகிதத்தைப் பின் வரிசையில் ஓரத்தில் இருந்தவரிடம் காட்டி ஏதோ கேட்க, அவர் செல்வரத்தினத்தைக் காட்ட, இன்ஸ்பெக்டர் செல்வரத்தினத்தின் பின் நழுவி வந்து தாழ்ந்த குரலில் ஏதோ சொல்ல, செல்வரத்தினம் கலவரத்துடன் உடனே எழுந்து அவருடன் செல்வதைப் பார்த் தார்.

பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டார். மணிமேகலை மணிமேகலைதான். ஒரு மணிநேரத்தில் சாதித்து விட்டாள். அவருக்குள் புன்னகை ஒன்று மலர்ந்தது.

"அடுத்து பேசவிருந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த திரு.செல்வரத்தினம் அவர்களை மேடையில் காணாததால் சோவியத் நாட்டைச் சேர்ந்த கத்தரீனா ஐவனோவாவை அழைக்கிறேன்."

தினமணி நாளிதழில் மறுதினம் செய்தி வந்திருந்தது.

டாக்டர் இரா.நல்லுசாமி தன் தலைமையுரையின் போது "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று பாரதி சொன்னது கான்க்ரீட் பாலத்தை அல்ல, மனப்பாலத்தை.." என்றார். அமைச்சர் தன் உரையில் அரசு புதிதாகத் துவக்கப் போகும் பாரதி பல்கலைக் கழகத்துக்கு டாக்டர் நல்லுசாமி துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற செய்தியை அறிவித்தார்.

செல்வரத்தினத்தின் விசா ரத்து செய்யப்பட்டு இருபத்துநான்கு மணிநேரத்திற்குள் தாய்நாடு திரும்பிச் செல்லும்படி கட்டளையிடப்பட்ட செய்தி நாளிதழ்கள் எதிலும் வரவில்லை.

*****

பாரதி நூற்றாண்டு நினைவுத் தொகுப்பாக, பாரதி பதிப்பக வெளியீட்டில் சிறந்த எழுத்தாளர்கள் எழுதிய "பாரதி சிறுகதைகள்" முதற்பதிப்பில் (1982) இருந்து.

கொற்றவையின் புலி - சிந்துவெளியிலும், சிலப்பதிகாரத்திலும்

கொற்றவையின் புலி - சிந்துவெளியிலும், சிலப்பதிகாரத்திலும்

கொற்றவையின் பழைமை: கொற்றவை பாரத உபகண்டத்தின் பெருந்தேவி. அவளது அண்மைக் கால அவதாரம், வங்காள மறுமலர்ச்சி 20-ம் நூற்றாண்டின் முதலில் உருவாக்கிய பாரதமாதா.  மிகப் பழையவள் இந்தக் கொல்லி (< கொல்- மயிடனை மாய்த்தவள், போர்த் தெய்வம்):

           மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
          வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!
          இழையணி சிறப்பின் பழையோள் குழவி!
-(திருமுருகு 257-259)

இவள் வரலாறு தொல்லியல், இலக்கியம், கலைவரலாறுகளை ஆராய்கிறபோது துல்லியமாகத் தெரிகிறது. நிறைய எழுதியும் இருக்கிறேன். உதாரணமாக, கொற்றவையின் கலைமான் ஊர்தி//சின்னம், மகர விடங்கர் வாகனம்/சின்னம் (விடங்கர் = முதலை) இரண்டும் கொண்ட தாயத்துத் தாலியில் கோர்ப்பது இந்தியாவின் 4700 ஆண்டு வானியல் சாத்திரத்தின் தொன்மையை வெளிப்படுத்துகிறது. பின்னர் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழியின்   பானையோட்டிலும், பின் வட இந்தியாவில் குனிந்தர்களின் காசுகளிலும் துர்க்கையுடன் மான் காட்டப்படுகிறது. இளங்கோ அடிகள் எவ்வாறு கொற்றவை வழிபாட்டையும், அவள் சின்னம் ஆகிய புலியையும், கோவலன் கொல்லப்பட்டபின் கண்ணகி கொற்றவை ஆனமை வேங்கை எனும் படிமத்தால் பயன்கொள்கிறார் எனப் பார்ப்போம்.

Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

Gharial god and Tiger goddess in the Indus valley,

Some aspects of Bronze Age Indian Religion, my paper, 2007

https://archive.org/details/IVCReligionByNagaGanesan2007/page/n5/mode/2up

Paṭṭa-Mahiṣī: Proto-Koṟṟavai goddess in Indus civilization (Banawali and Mohenjadaro)
http://nganesan.blogspot.com/2021/01/banawali-mohenjadaro-proto-durga.html

Indus seal, M-312 - Proto-Koṟṟavai war with Mahiṣa
http://nganesan.blogspot.com/2021/01/m312-seal-is-not-jallikkattu.html

Kavari in Tirukkuṟaḷ and Sangam Texts: Dravidian word for Gauṛ bison and Tibetan yak  
http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html

இப்பொழுது ஹார்வர்ட் தமிழிருக்கை பெருஞ்செலவில் அமைந்துள்ளது. 4 பெண்கள் இண்டெர்வ்யூ நடந்துள்ளது. யார் வருவார் எனப் பார்ப்போம். அமெரிக்காவில் சங்க இலக்கியம் பற்றிய முனைவர் பட்ட ஆய்வேடு ஹார்வர்டில் தான் நிகழ்ந்தது. அதில் தமிழர் சமயம், சமூகம் பற்றிய அணங்குக் கோட்பாடு வரும். பின்னர் அதனை ருஷ்யாவில் அலெக்சாண்டர் துபியான்ஸ்கி மாணவர்களிடம் போதித்தார். பெர்க்கிலி, டொராண்டோ, ஹார்வர்ட், ஹூஸ்டன், கொலோன், லண்டன், ... எனத் தமிழ், திராவிடவியல் (Comparative Dravidian Researches) பெருகும்போது 21-ஆம் நூற்றாண்டில் பர்ரோ, எமனோ, ராமானுஜன், ஹார்ட், பார்ப்போலா, ... போலப் பேராசிரியர்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.

பசுபதி (மிருகபதி) சிந்துமுத்திரையில் நான்கு வனவிலங்குகள் மகர விடங்கரைச் சுற்றி இருக்கின்றன. அவை நான்கு திசைகளைக் குறிக்கும் என்பர். அவற்றில் புலி என்பது வடக்கு வாயில் செல்வி கொற்றவையின் சின்னம். எனவே, பசுபதி முத்திரை புலி வடக்கு திசை என்பர் (A. Hiltebeitel, The Indus Valley "Proto-Śiva", Reexamined through Reflections on the Goddess, the Buffalo, and the Symbolism of vāhanas.  Anthropos, 1978, pp. 767-797). 

 https://2.bp.blogspot.com/-fjnd1FO_r1M/Wgjir75AuiI/AAAAAAAAIb0/BJCHQ484v30EF83uUfHBkpUpoKvJcUoWwCLcBGAs/s1600/makara-vidangar-ivc-seal.jpg

இன்றும் ஜம்மு காஷ்மீர் மாகாணத்தில் வைஷ்ணோதேவி ஆலயத்திலும், ஒரிஸ்ஸாவிலும், பாக்கிஸ்தானத்தின் மிகப் பழைய கோவிலாகிய ஹிங்லாஜ் துர்க்கை ஆலயத்திலும், ராஜஸ்தான் ஜோத்பூரிலும், புலி மீது ஆரோகணிக்கும் துர்க்கை வழிபாடு. வடுகி - வடக்கே இருந்து வந்தவள் எனத் தமிழ்நூல்களில் இருக்கிறது.  “இன்றும் தென்னாட்டு மலைகளில் வாழும் பழங்குடி மக்கள் துர்க்கையின் வாகனமாகச் சிங்கத்திற்குப் பதிலாகப் புலியைச் சிற்பத்தில் காட்டுகின்றனர்.” (பக். 65, பி. எல். சாமி, தமிழ் இலக்கியத்தில் தாய்த் தெய்வ வழிபாடு).  “வாருணி சாமுண்டா என்ற தெய்வம் தன்னுடைய சக்தியால் எல்லோரையும் தன்பால் இழுப்பாள் என்று வடநூலொன்று கூறுகிறது.” (பி எல் சாமி, பக். 51). மிருகபதி முத்திரையின் விடங்கர் முதலில் வருணன் ஆகி, கௌரியுடன் விளங்குவது வேத காலத்திலும், பின்னரும் நிகழ்ந்துள்ளது. வருணனின் அமிசமாக புஷ்பதந்தர் எனும் தீர்த்தங்கரரும் (முதலை), அவரது யக்‌ஷியாக தருமதேவி (அம்பிகை) அமைவது இதனால் ஆகும். பல்லவர் ஆலயமான ஜீன காஞ்சி திரைலோக்கிய சுவாமி கோவிலில், மகாவீரர் சன்னதி நடுவே நிற்க, இருபுறத்திலும் புஷ்பதந்தர், அம்பிகை (தருமதேவி) கருவறைகள் பல்லவர் நாட்டுக்கே உரிய தூங்கானை (கஜப்ருஷ்டம்/அத்திப்புட்டம்) மாடங்களாக அமைந்துள. வாருணி எனத் துருக்கையை அழைப்பது இதனால்தான். சிற்ப சாத்திரங்களில் வருணனின் மனைவி கௌரி என்றிருப்பதை என் ஆய்வுக்கட்டுரைகளில் கொடுத்துள்ளேன். “விந்திய மலையில் இருந்த தாய்த்தெய்வத்தைக் “கவுட வாஹ”  என்று வாக்பதி எழுதிய எட்டாம் நூற்றாண்டுப் பிராகிருத மொழிக் காவியம் குறிப்பிடுகிறது.” (பக். 63, பி. எல். சாமி). கௌரி என்ற பெயர் எருமையின்கோடு  என்பதில் இருந்து உருவான பெயர்.

புலி எனும் பெயர் புலை, புலவு/புலால் போன்றவற்றோடு உறவுடையது (DEDR ). உழுதல், கூர்மையான உகிரால் தாக்கும் விலங்கு புலி (Normally retracted, while attacking by right ‘hand’ paw with force, claws extend to clutch, puli is THE word for carnivore in Tamil.).  புலியின் கூரிய நகங்கள் தசையை உழுது நன்றாக உள்ளே பதிந்துவிடும். எனவே, உழுவை எனப் பெயர் உண்டு. உழுவை < உழுதல் என்னும் தொழிற்பெயர். உழுதல் தொழில் உழவு. பேய் அணுக்கும். தொடர்புடைய சொல் உளியம் = கரடி. உளி போன்ற உகிரால் பெறும் பெயர். வருத்துவது, துன்புறுத்துவது, பொடிப்பொடியாய்த் துகள் ஆக்குவது அணுக்குதல்/அணுங்குதல். கணாதர் (கி.மு. ஆறாம் நூற்றாண்டு) - இந்தியாவில் அணுக் கோட்பாடு தந்தார்:  https://en.wikipedia.org/wiki/Kanada_(philosopher)

https://www.ias.ac.in/article/fulltext/reso/015/10/0905-0925

அணுக்கு/அணுங்கு என்னும் தமிழ் வினைச்சொல் தருவது அணு என்ற Atom என்பதற்கு வடமொழியில் பயன்படும் சொல். உ-ம்: இந்தியாவின் அணுசக்தி கமிஷன். அணுக்கும் தொழிலால் அணங்கு எனச் சங்க கால பேய்/தெய்வ சக்திக்குப் பெயர் (
Power to afflict, Aṇaṅku theory of ancient Tamil society, as discussed by Hart, Dubianski, ...) அணுக்குவது அணங்கு; உழுவது உழவு. வலிமை வாய்ந்த கையால் அடித்து, உகிரால் கிழிப்பதால், வேங்கை (வேம்+கை) எனப் புலிக்கு ஒரு பெயர். சங்கச் சோழர் நாணயங்களில், வேங்கைப் புலி வலக்கையால் அடிப்பது போலக் காட்டப்பட்டுள்ளது. வட இந்தியாவிலே மகிஷாசுரமர்த்தனியின் பழங்காலச் சிற்பங்களில் (12-ம் நூற்றாண்டு), சங்கப் புலவர்கள் விளக்குவதுபோலவும், சங்கச் சோழர் காசு போலவும் கொற்றி வாகனம் வடிக்கப் பட்டிருப்பது விந்தை அல்லவா? சோழருக்கு புலிக்கொடி, அவர்கள் வழிபடு தெய்வமாகிய துர்க்கை சம்பந்தத்தால் ஏற்பட்டது. கொல்- என்னும் வினைச்சொல்லால் அமைவது கொற்றி, கொற்றவை என்னும் பெயர்கள். கொற்றிகோடு கன்னியாகுமரியிலே உண்டு. இதன் பரியாயப் பெயர் குமரிக்கோடு என்பதைச் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். கொற்றியூர், கொற்றிப்புழை வட மலபாரில் இருக்கின்றன. கோடவி , கோட்டை (துர்கம்) தொடர்பாக அமையும் பெயர். சேரர் குலபருவதம் ஆகிய கொல்லி மலையின் பெயர் கொல்லி/கொற்றி காரணமாக அமைந்தது. கடுமான் என்று புலிக்குச் சங்க நூல்களில் பெயருண்டு. புலி கொற்றவையின் சின்னம் ஆதலால், கொற்றவைக்குக் கடுமி/கடும்மி என்ற பெயர்கள் 2000 ஆண்டுக்கு முந்தைய தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களிலே காண்கிறோம். அதியன் வழியினர் ஸதியபுதோ ( = அதியமான்) எனத் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களில் கூறப்படுவது போலவே, சேரர்கள் “கடுமி-புதோ” என அழைக்கப்படுகின்றனர். கல்வெட்டின் இறுதியில் கடுமி துர்க்கையின் ஆயுதம் ஆகிய திரிசூலம் காட்டப்பட்டுள்ளது. பல பழைய சிற்பங்களில் மகிஷாசுரனை மர்த்தனம் செய்யக் கொற்றவை இரும்புச் சூலத்தைப் பாய்ச்சுகிறாள். 'விறல் கெழு சூலி’ எனக் கொற்றவையைக் குறுந்தொகை பாடும். ஆர். பாலகிருஷ்ணன் கொல்லிமலைக் கொற்றவையும் புலியும் என 2019-ல் ஒரு கவிதை இயற்றி இருந்தார்.

குதிரை, இரும்பு, பிராமி எழுத்து, பெருஞ்சமயங்கள், ... போன்றன வேளிர் வருகையால் இரும்பூழிக் காலம் (Iron Age, in south India coincidning with the Megalithic Age, First Millennium BCE) தொடங்குவதன் முன்னம் முருகு, கொற்றி போன்றன அணங்குகளாக இருந்தன. வட நாட்டில் பெருஞ்சமயங்கள் (சைவம், வைஷ்ணவம், சமணம், பௌத்தம்) தோன்றித் தமிழகம் வந்தடையும் இரும்பூழியின் போது பழைய அணங்குகளுக்கு வானியல் சமயம் பொருத்தப்படுகின்றன. அதற்கும் 1000 ஆண்டு முன்னரே வடக்கேயும் அவ்வாறு நகரங்கள், நாகரிகம் ஏற்பட்ட போது நிகழ்ந்தது. அவ்வாறு ஏற்பட்டது தான் தவ்வை (முகடி) – கொற்றி [Cf. EreshkegalInanna in Sumeria] என்னும் சகோதரியர் வழிபாடு. பின்னர், இருவர்க்கும் நக்கன் கொற்றி திருப்பரங்குன்றில் குடைவரைக் கோயில் எடுப்பித்தான். தவ்வை வழிபாடு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகம் இருந்து பின்னர் அழிந்தது.

'கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கைஅம் செல்வி' - பெரும்பாணாற்றுப்படை

'ஓங்குபுகழ் கானமர் செல்வி அருளலின்’ – அகநானூறு

கலித்தொகையில் கொற்றி: கொற்றவையைக் கலித்தொகை கொற்றி எனக் குறிப்பிடுகிறது. கொற்றியே ஒரு பேய் (அணங்கு). அவளுக்கே பேய் பிடித்துவிட்டது என்று சொன்னால் யார் நம்புவார்கள் என்று தலைவி தலைவனிடம் கூறுவதாகப் பாடல் வருகிறது. கலித்தொகையில், தலைவனின் தன்னிடம் கூறும் வஞ்சக வார்த்தைகளுக்கு உவமை கூறுவதாக, "பெருங்காட்டுக் கொற்றவைக்குப் பேய் நொடி சொல்வதுபோல" என்னும் பொருள்படும் பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு என்னும் வரி உள்ளது. பரிபாடலிலும், ’நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங் கொண்டு ஓர் பெண்’ என்ற வரியில் கொற்றவை பற்றிய குறிப்பு வருகின்றது. பரிபாடலில் கொற்றவைக்குத் தனியாக ஒரு பாடல் இருந்து அழிந்துவிட்டது.

சிலம்பின் கொற்றவை: முதன்முதலாக, விரிவாக அணங்கு ஆகிய கொற்றவை/துருக்கை பற்றின அரிய செய்திகளைத் தமிழில் கூறுவது சிலப்பதிகாரக் காப்பியம் ஆகும்.  அ. ச. ஞானசம்பந்தன், “இளங்கோ அடிகள் சமயம் எது?” (1996) ஓர் ஆய்வுநூல் எழுதியுள்ளார். காப்பியக் கட்டுகோப்புக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதவையாகக் கண்ணனைப் பாடும் ஆய்ச்சியர் குரவை, முருகனைப் பாடும் குன்றக்குரவை அமைந்துள்ளது என விரிவாக விளக்கும் பேரா. அ.ச.ஞா கொற்றவையைப் புகழும் வேட்டுவவரி, காப்பியத்தை முன் நகர்த்தத் தேவையே இல்லை. எனினும், இளங்கோ அடிகள் பெருந்தெய்வம் கொற்றவையைப் புகழ்தற்காக மட்டும் நுழைத்து விரிவாய்ப் பாடியுள்ளார். ஐயைக் கோட்டத்தில் சூரியன் வெப்பந் தணிவதற்காகக் கண்ணகி, கோவலன், கவுந்தி அடிகளை நிழலில் தங்கவைத்து, வேட்டுவ வரியைப் பாடினர் அடிகள்.  அடுத்த காதை ’புறஞ்சேரி இறுத்த காதையில்’ பாண்டிநாட்டில் இரவில் அச்சமின்றிப் பயணிக்கலாம் எனக் கவுந்தி தெளிவிப்பதால், ஐயைக் கோட்டம், வேட்டுவவரி கொற்றி புகழ் பாட மட்டிலுமே இடைப்பிறவரலாக இளங்கோ அடிகள் இயற்றினார் என்பது தெளிவு (அ.ச.ஞா). கவுந்தி அடிகளின் சமயம் சமணம். இந்தியக் கலைவரலாற்றில் அம்பிகை எனப் கொற்றவைப் பெருந்தெய்வத்தை சிங்கவாகினியாக புலியில் இருந்து மாற்றுவதில் சமணருக்குப் பெரும்பங்கு உண்டு. லலிதா ஸஹஸிரநாமத்தின் துதிகளை அப்படியே மொழிபெயர்த்துப் பாடியிருப்பதைப் பல எடுத்துக்காட்டுகள் தந்து தெளிவுபடுத்துகிறார். முருகன் அடியார்கள் ஆகிய குறிஞ்சிக் குறவர்கள், கண்ணபிரான் தொண்டர்குழாம் ஆயர்களை விடுத்து, குமரிக் கொற்றவை வழிபாடு இயற்றும் வேட்டுவர்களை மூன்று முக்கிய இடங்களில் அமைத்துக் கண்ணகி காப்பியத்தை வழிநடத்திச் செல்கிறது. அம் மூன்று இடங்களைப் பற்றி இவண் பார்ப்போம்.

முத்தமிழ்க் காப்பியம் சிலம்பின் தொடக்கத்திலே அமைந்துள்ள பதிகத்திலேயே, கொற்றியின் அடியார்கள் குறிஞ்சி வேட்டுவர் வாயிலாக, கண்ணகி கதையைச் சேரன் செங்குட்டுவன் கேட்கச் செய்கிறார். ’ஒருமுலை இழந்த திருமா பத்தினி’ தேவருலகம் சென்ற செய்தியை வேடுவர் வாயிலாகச் சேரமன்னன் அறிந்தான் என்கிறார் பதிக ஆசிரியர். குன்றிலே வாழ்வதால் குறவர் என்றும், தொழிலால் வேட்டுவர் என்றும் அறியப்படுவர். முருகனின் காதலி வள்ளியை வேட்டுவச்சி என்றும், குறத்தி என்றும் அழைப்பது பண்டைமரபு.

கொற்றவையின் சின்னமாக, கலைமான் (Indian blackbuck) இருப்பது 4700 ஆண்டுக்கால சிந்துவெளி வானியல் மூலம் காட்டியிருக்கிறேன்.  மாதவியின் தோழி வசந்தமாலை வடிவில் வந்த சிறுதெய்வத்தை அடக்கப் பாய்கலைப்பாவை (துர்க்கை) மந்திரத்தைக் கோவலன் பயன்படுத்துகிறான் (காடுகாண் காதை). சமணர்களுக்கு அம்பிகை என்னும் துர்க்கை வழிபாடு உண்டு. தொன்மையானவள் என்பதற்காக யக்‌ஷி என்பர். தருமதேவி எனத் தமிழ்நாட்டில் அழைப்பர். தருமநாதர் எனும் தீர்த்தங்கரரின் யக்ஷி புலிவாகனி என்பது குறிப்பிடத்தக்கது. காடுகாண் காதைக்கு அடுத்ததாக வரும் வேட்டுவ வரியின் தொடக்கத்தில் சாலினி என்னும் குமரியைக் கொற்றவையாக கலைமான் ஊர்தியில் வைத்து வேடுவர் அலங்கரிக்கின்றனர்.குமரி வழிபாடு நேப்பாளத்தில் பிரசித்தம் (M. Allen, The cult of Kumari: Virgin worship in Nepal, 1975). அதனை, கல்கத்தாவில் சுவாமி விவேகானந்தர் 1901-ல் ராமகிருஷ்ணர் மடத்தில் தொடங்கிவைத்தார். திரிகோட்டுக் கருமானில்  அமர்ந்த சாலினிக்கு, கொற்றவை மயிடனுடன் போரிடும் போது உதவும் புலியின் பல்கோத்த தாலியைச் சூட்டினர். மேலும் புலித்தோலை உடுத்தினர். வேட்டுவ மகளாகிய சாலினி கொற் றவை உருக்கொண்டு ஆடிய கோலவரியில் கண்ணகி பற்றிக் கூறுகிறாள்:

    ‘கணவனோடு இருந்த மணம்மலி கூந்தலை -
இவளோ கொங்கச் செல்வி குடமலை ஆட்டி
தென்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒரு மாமணி ஆய் உலகிற்கு ஓங்கிய
திரு மாமணி என தெய்வம் உற்று உரைப்ப
பேதுறவு மொழிந்தனள் மூதறிவாட்டி என்று
அரும்பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப’

மிக முக்கியமான வருணனை இது. சேரர் தலைநகர் வஞ்சி மாநகரில் (இன்றைய கரூர்) செங்குட்டுவன் பின்னர் கண்ணகிக்குக் கோவில் எடுக்கிறான். மேலும், கொல்லி என்னும் கொற்றவை ஆட்சி செய்யும் கொல்லிமலையும், வட கொங்கில் கொல்லி என்னும் துர்க்காபரமேசுவரி கோவில்களும் இருப்பதால், கண்ணகி வர்ணனையில் முதலில் ‘கொங்கச் செல்வி’ என்றார். வேள்தங்கடி வட்டம், தட்சிண கர்நாடகத்தில் கொல்லி என்ற பெயரிலே திருக்கோயில் இன்றும் உள்ளது. வேள்தங்கடியில் குடிமல்லம் போலவே மிகப்பழைய லிங்கம் உள்ளது. அதற்கும் சற்று வடக்கே குடகு மலைப் பகுதியிலும் கொல்லி என்ற பேரோடு துர்க்கை வழிபாடு இருக்கிறது. ஒரு மாமணி என்னும் உலகப் பெருந்தெய்வம் (கொற்றவை) இந்தத் திருமாமணி என்றாள் சாலினி. சாலினி தெய்வ ஆவேசம் வந்து மயக்கத்தில் கூறுகிறாள் என்று கண்ணகி கோவலனின் பக்கலில் சாய்ந்துகொள்கிறாள். மதுராபதித் தெய்வத்தின் வழியாக, கோவலனின் பெயர்க்காரணம் உரைக்கும் இளங்கோ அடிகள், சாலினி என்னும் குமரி வழியாக, கண்ணகி/கர்ணகை பெயர்க் காரணமும், கொற்றவையாகவே எதிர்காலத்தில் ஆக இருப்பது காட்டும் பகுதி இது. விஷ்ணு போல நாகக் குடையின் கீழ் இருக்கும் பார்சுவநாதரின் யக்‌ஷி பத்மாவதி என்பது கோவலன் - கண்ணகி பெயர்க் காரணத்துடன் ஒப்பிடலாம். ஒரு மா மணி, திரு மா மணி என்பதில் மணி என்பது அரதனம் (> ரத்நம்) என்பதும், பத்மாவதி ஒரு நாகமாகச் சமணர்கள் காட்டுவதும், அரவின் தலை மணி ஈனும் என்னும் சங்ககால நம்பிக்கையையும் ஓர்க.

திருமா பத்தினி, திருமாமணி = ஸ்ரீ. திரு என்னும் ஸ்ரீலக்ஷ்மி பெயரால், கண்ணகி (< கர்ணகீ) பெயர் அமைந்ததைக் குறிப்பிடுகிறார். கர்ணகம் என்பது தாமரைப் பொகுடு. கர்ணகத்தின் மேல் அமர்வதால் கர்ணகீ என்பது திருமகளின் பெயர். பிராகிருத வழியில், கண்ணகி எனப் பெயர் அமைக்கிறார். மேலும், மாதவி என்ற குருக்கத்திப் பூவின் பெயரைக் கணிகைக்கு அமைக்கிறார். குருக்கத்தியும், முல்லையும் இணைபிரியாமல் இருப்பதைச் சங்கப் பாடல்கள் காட்டும். முல்லை கற்புக்குக் குறியீடு. கற்புக்கடம் பூண்ட கண்ணகிக்கு மாற்றாக பகரி போல,  மாதவி என்ற பெயரையும், மதுராபதித் தெய்வத்தின் வாக்கால் விளங்கும் கோவலன் என்பது கண்ணபிரான் பெயரையும் அமைத்தார். கண்ணன் கோபியர், பலதார உறவு எனவே காப்பியத்தில் இறக்கச்செய்தார். பார்த்த சாரதி இதிகாசத்தில் பார்த்தனுக்குப் போரில் கீதை போதித்தான்.. கனகன் – பொன் நிறம் கொண்ட ஹரி, விஜயன் – அர்ஜுனன் என்னும் மகாபாரதப் பெயர்கள். எனவே, வட நாட்டு மன்னர் பெயர்களாக, கனக விசயர் என்று தம் நாவலில் கொடுத்தார் சிலம்பின் ஆசிரியர்.

வளையுடைக் கையில் சூலம் ஏந்தி
கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய
அரியின் உரிவை மேகலையாட்டி
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி (வேட்டுவ வரி)

கொற்றவைத் தெய்வம் மீதான வர்ணனையில் “அரியின் உரிவை” எனச் சிங்கத்தின் தோலைப் போர்த்தியவள் என்கிறார். ஆனால், பின்வரும் பகுதியில் புலித் தோல் போர்த்த கொற்றவை என்கிறார். குமரி என்னும் சாலினிக்கு எயினர் அணிவிப்பதும் புலித்தோலே. திராவிட, ஆரிய மரபுகள் இரண்டையும் தமிழ்த் தேசிய நாவலில் இணைத்துவிடுகிறார்.

    ஆனைத்தோல் போர்த்து புலியின் உரி உடுத்து
   கானத்து எருமைக் கருந்தலை மேல் நின்றாயால்
   [...]
   சங்கமும் சக்கரமும் தாமரை கை ஏந்தி
   செங்கண் அரிமால் சினவிடை மேல் நின்றாயால்

தேவி மகாத்மியம் என்னும் நூலில் தான் பெண்தெய்வங்களின் பல மரபுகள் முதன்முதலாக, வடமொழியில் நூல்வடிவம் பெறுகின்றன. பெருந்தேவி என துர்க்கை வடிவம் பெறுகிறாள். தேவி மகாத்மியம் வட இந்தியாவில் ராஜசபைகளில் ஐந்து நூற்றாண்டுகளாக ஓவியங்களாகத் தீட்டப்படுகின்றன. அவற்றில், மகிஷனை மாய்க்கும் துர்க்கையின் ஓவியங்கள் ஏராளம். சிங்கமோ, அல்லது புலியோ வாகனமாக உள்ளவை பல. சிங்க முகத்துடன் புலியாய் இருப்பவையும் உண்டு. இவற்றை ஆங்கிலத்தில் leonine tiger என அழைப்பர்.ஒரிசா மாநிலத்தில் திராவிட மொழி பேசும் மக்கள் அதிகம். இனும் துர்க்கையை புலி மீது ஆரோகணிப்பவளாக வணங்குகின்றனர். மூரியர் என்னும் ஜனங்கள் இன்றும் எருமையின் கொம்பை, சிந்துவெளி போலவே, அணிதலைக் காண்கிறோம். புலிகளின் கண்களைச் செங்கண் என்பது சங்கப் புலவர் வாக்கு. ‘செங்கண் இரும்புலி’ (நற். 148, குறு. 321, அக. 92) . இதனை வில்லியம் பிளேக் போன்ற ஆங்கில மகாகவிகளும், “Tiger, Tiger burning bright” போன்ற சாகாவரம் கொண்ட கவிதைகளில் பொறித்துள்ளனர். மால் என்பது மயல், மயக்கம் என்ற பொருளினது. செங்கண் அரி மால்விடை என்பது பின்னர் ஓவியங்களில் தீட்டப்பெறும் சிங்கமுகங் கொண்ட புலி ஏற்றின் வர்ணனையாக இளங்கோ அடிகள் பாடியுள்ளார் எனக் கொள்ளலாம். 4000+ ஆண்டுகாலக் கொற்றவையின் புலியேறு, பின்னர் இடைக்காலத்தில் குஷாணர்கள் கந்தார நாட்டிலும், வட மதுராவிலும் புலியைச் சிங்கமாக மாற்றுதலும் அறிந்தே கொற்றவையின்  வாகனத்தை “செங்கண் அரி மால்விடை” (Leonine Tiger, a Chimera )என அடைமொழிகள் கொடுத்து வர்ணிக்கிறார்.

கேரள அம்பலங்களில், யானை மீது செல்லுமே திடம்பு, அதுபோல. புலியைத் திடம்பாக ஏந்திச் செல்லும் சிந்து முத்திரைகள் கிடைத்துள்ளன. இளங்கோ அடிகளும் புலி – கொற்றவைத் தொன்மை உறவுகளை இலாவகமாகக் கையாள்கிறார்.

மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே (தொல்காப்பியம், புறத். 4)

மறவர் ஆகோள் பூசலுக்குச் செல்லும்போது, கொற்றவை கொடி எடுத்துச் செல்வாள். அதைப் புலியா, சிங்கமா எனக் குறிக்காது விட்டார். மறவர் அறிந்தது புலி என்பதாலும், குமரி வழிபாட்டில் புலிப்பல்லும், தோலும் அக் கன்யாகுமரிக்குச் சார்த்துதலானும், புலித்தோல் உடுத்திக் எருமைக் கருந்தலை மேல் நிற்பவள் துர்க்கை எனப் பாடியிருப்பதாலும், புலிக்கொடி எனக் கொள்ளவியலும்:

 புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகுங் காலைக்
கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடுமர முன் செல்லும் போலும்
(சிலம்பு. வேட்டுவவரி, பா.13)

குமரிக்கு அணிகலன் புலியிடம் பெற்றவை:
மறம் கொள் வய புலி வாய் பிளந்து பெற்ற
மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி
வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து
உரிவை மேகலை உடீஇ (வேட்டுவ வரி)

“வெடி பட வருபவர் எயினர்கள் அரை இருள்
அடு புலி அனையவர் குமரி நின் அடி தொடு” (வேட்டுவ வரி)

”பலுச்சிஸ்தானத்தில் உள்ள ஹிங்லாஜ் என்ற ஊரில் உள்ள தாந்திர தாய்த்தெய்வ பீடத்தில் வழிபடப்படும் தாய்த்தெய்வத்திற்குக் கொட்டரி, கொட்டவி, கொட்டரீசா என்ற பெயர்கள் வழங்குகின்றன. இப்பெயர்கள் தமிழில் உள்ள கொற்றவைப் பெயரே என்று தெரிகிறது: கொற்றவை என்ற பெயரே வடமொழியில் கொட்டவி ஆகியதை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தெய்வத்தையே பீ பிநானி, மரிநானி என்ற பெயரில் இன்றும் தொழுவதைக் காணலாம். குஷாணர்களின் காசுகளில் நானா தெய்வமும், கொட்டவி எனப்படும் தமிழ் இலக்கியத் தெய்வமான கொற்றவையும் ஒன்றே என்று கருதலாம்.” (பக். 71, பி. எல்.சாமி)

”அடியார்க்கு நல்லார் கண்ணகி துர்க்கையாகப் பிறந்தாள் என்று கூறிய இடத்தில் கொல்லித்தெய்வம் என்று கூறியுள்ளார். மலையாளக் காடுகளிலும், மலைகளிலும் இந்தத் தாய்த் தெய்வம் பழங்குடி மக்களால் ‘புள்ளிக் கருங்காளி’ என்று வழிபடப்பெறுகின்றாள். இவளுடைய வாகனம் புள்ளியுடைய புலி. ஆடையும் புலித்தோல். கொல்லி என்பதற்குப் புலி என்ற பொருள் நிகண்டுகளில் கூறப்பட்டுள்ளது. கொல்லிப்பாவை கொல்லி மலையில் தோன்றிய புகழ்பெற்ற தாய்த்தெய்வம் என்று தெரிகின்றது.” (பக்.81, பி.எல்.சாமி)

மேலும், கொற்றவையைப் புலியேற்றுடன் எவ்வாறு இளங்கோ அடிகள் தொடர்புபடுத்துகிறார் எனப் பார்ப்போம். வேம்+கை என்பது வேங்கை ஆயிற்று எனவும், இதனைச் சங்கப்புலவரும், பழஞ்சிலைகளும் துர்க்கையின் புலியேறாகக் காட்டுதலும் கண்டோம். சொற்சித்திரமாக, கோவலன் கொலையுண்டபின் கண்ணகி (< கர்ணகீ, கர்ணகை) வேங்கை மர நீழலில் நிற்பதால் அவளது கொற்றவை அவதார உறவினை உறுதி செய்கிறது சிலப்பதிகாரம். பல இடங்களில், திரும்பத்திரும்ப வேங்கை மரத்தின் அடியில் கண்ணகி என்று அவளது துர்கா சம்பந்தத்தைத் தெளிவாக்குகிறார்.

வேங்கை மரத்தின் பூக்கள் உதிர்ந்து பாறை மேல் புலியின் தோற்றத்தைத் தருவதாகச் சங்கப் பாடல்கள் பல உண்டு (குறுந்தொகை 47, ஐங். 396, அகம் 205, அகம் 228, புறம் 202, நற். 383). இதே செய்தி 19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் வேட்டைக்காரர்களும் சொல்லியுள்ளனர் (e.g., Lt. Col. Pollock, ...). இதனாலேயே இம்மரம் வேங்கை எனப்பெயர் பெற்றது. புலி, புலி என்று பெண்கள் ஒலியெழுப்பி வேங்கைப் பூக்களைக் கொய்தனர். இச்செய்தி மேலும், இரத்தம் சொட்டுவது போலப் பால்வடியும் உதிர வேங்கை மரமும் உண்டு. எனவே தான், புலித் தெய்வம் கொல்லி/கொற்றவையாகி விட்டாள் என வேங்கை மர நீழலில் கண்ணகி நின்று தெய்வம் ஆனாள் எனச் சிலப்பதிகாரம் முழுவதிலும் பல இடங்களில் பொருத்தமாக அடிகள் பாடினார்.

பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல்
ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு (சிலம்பு, பதிகம்)

கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு
அவுணரைக் கடந்த சுடர் இலை நெடு வேல்
நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி
பூத்த வேங்கை பொங்கர் கீழ் ஓர்
தீத் தொழில் ஆட்டியேன் யான் என்று ஏங்கி
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின்
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி
பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி
வாடா மா மலர் மாரி பெய்து ஆங்கு
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்த
கோநகர் பிழைத்த கோவலன்-தன்னொடு
வான ஊர்தி ஏறினள்-மாதோ (கட்டுரை காதை, மதுரைக் காண்ட முடிவில்)

மலை வேங்கை நறு நிழலின் வள்ளி போல்வீர் மனம் நடுங்க
முலை இழந்து வந்து நின்றீர் யாவிரோ என (குன்றக் குரவை, வஞ்சிக் காண்டம்)

தெய்வம் கொள்ளுமின் சிறுகுடியீரே!
நிறம் கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறும் சினை வேங்கை நல் நிழல் கீழ் ஓர்
தெய்வம் கொள்ளு-மின் சிறுகுடியீரே ! (குன்றக் குரவை)

கான நறு வேங்கை கீழாள் ஓர் காரிகையே
கான நறு வேங்கை கீழாள் கணவனொடும்
வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே

கான வேங்கை கீழ் ஓர் காரிகை
தான் முலை இழந்து தனி துயர் எய்தி
வானவர் போற்ற மன்னொடும் கூடி (காட்சிக் காதை)

மதுரை மூதூர் மா நகர் கேடு உற
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்து
நல் நாடு அணைந்து நளிர் சினை வேங்கை
பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை
அறக்களத்து அந்தணர் ஆசான் பெருங்கணி (நடுகற் காதை)

புலி வேட்டையாடும்போது இடப்புறமாக வீழ்ந்ததை உண்ணாது என்பது இயற்கையான நிகழ்ச்சி அன்று. வேங்கை வலக்கையால் அடித்தால் இடப்புறமே இரை வீழும். ஆனால், வலக்கையால் அடித்து வலப்புறம் வீழ்ந்தால் சிறப்பு எனக் கருதி வேங்கைக்குச் சிறப்பு, மேன்மை, உயர்ச்சி கருதிச் சங்கப் புலவர் பாடியுள்ளனர். அதே போல, ஆளி (சிங்கம்??) பற்றிக் கற்பனையான செய்திகள் சங்க நூல்களில் உண்டு. ஆளியைக் கண்டு புலி நடுங்கும் என்ற சங்கப் புலவர் கற்பனையால் கொற்றவைக்கு ஆளிக்கொடி என்று புறப்பொருள் வெண்பாமலையில் பாடல். பின்னர், திருமுதுகுன்றத் தேவாரத்திலும் ஆளிபற்றிக் கேட்கலாம். சிங்கம், கங்கை முதலை (விடங்கர்) பற்றிய செய்திகள் சிற்பங்கள், கலைகள் வழியாகத் தமிழகத்துக்கு வேளிர் வருகையால் இரும்புக் காலத்தில் வந்திருக்கவேண்டும்.

சிந்துவெளிக் கொற்றவையின் புலி வாகனம் சிங்கமாக மாற்றம் . குஷாணர்கள் வடமேற்குத் திசையில் இருந்து இந்தியாவுக்கு வரும்போது கொற்றவையின் வாகனம் மாறுகிறது. இதுபற்றிப் பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

நா. கணேசன்

சிந்துவெளிக் கொற்றவை

  ~ஆர். பாலகிருஷ்ணன்  I.A.S (Retired),  05/ 01/ 2019

படைப்பில் தன்னை
பார்வையாளனாக மட்டும்
ஆண் உணர்ந்து
பயந்திருந்த காலம்.

வேட்டையாடித்
திரிந்தவன்..
பிறப்பின் ‌ரகசியம்
புரிந்தவன் அல்ல.

காட்டில் "இனிஷியல்"
வைத்துத் திரிந்தது
எந்தப் புலி...?

பெண்ணே
ஆணையும் பெற்றாள்
என்பதில்
ஆரம்பித்தது அவன் அச்சம்.
மாதக்குருதி
அவனை‌ மட்டுமல்ல
அவளையும் கூட
பயமுறுத்தியது..

அது ஒரு மாயம் போல
வந்து மறைந்தது.

கர்ப்பிணிகளின்
பெருத்த வயிறு
படைப்பு நிகழ்த்தும்
பானையாய்..
பனிக்குடம் உடைத்து
ரத்தச் சகதியில்
விழித்து அழுதது
தொப்புள் கொடி தாங்கி
இன்னொரு தலை...

கொற்றவையாய்
கொல்லிப்பாவையாய்
அணங்காய் துணங்காய்
ஆடித்தீர்த்தாள் அன்னை.

சிந்துவெளியில்
அவள்
எதைத் தொலைத்தாள்
கீழடியில் எதை மீட்டாள்?

கண்ணகி முலை அறுத்தாள்
காரைக்கால்
முலை தொலைய
வரம் கேட்டாள்.
கேரளத்தில்
இன்னொருத்தி
முலையறுத்துக் கொடுத்தாள்
வரித்தொகையாய்.

இவை.
ஆறும் சினம் அல்ல
என்று
அடிக்கோடிட்ட
ஆறாச் சினம்.

இதோ..
சேரர் பூமியில்
மகளிர் எழுப்பிய
மதிலில்
யுகங்களுக்கான
கேள்விகளும் ‌பதில்களும்..

கொற்றவை சிரித்தாள்
கொல்லிமலையில்...
பால் கொடுத்த புலியின்
பக்கத்தில் நின்று...