காமம் சான்ற ... தொல். கற்பியல் சூத்திரம் பற்றி தெ. ஞானசுந்தரம் கட்டுரை (2008)

காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம் புரி மக்களொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
- தொல். பொருள். கற்பியல் (சூத்திரம் 51)

நுட்பமான இந்த நூற்பாவை மின்தமிழ் குழும அறிஞர்களுடன் நானும் படித்து வருகிறேன். ‘சிறந்தது பயிற்றல்’ என்றால் என்ன? என்பதில்தான் கருத்து வேற்றுமைகள். பயிற்றல் = செய்தல், செய்வித்தல், நிகழ்வித்தல் என்றும் பொருள்கள் உள்ளன. வழிபாடு பயிற்றினான் = வழிபாடு இயற்றினான். நச்சினார்க்கினியர் பிராமணர்க்குரிய வானப்பிரஸ்தம் துறவறம் என்று குறித்துள்ளார்கள். ஆனால், தமிழ் வரலாற்றில், தம்பதியராக வானப்பிரஸ்தம் புகுந்தார் இல்லை.

சிறந்தது பயிற்றல் என்பது – இல்லறத்தின் வாயிலாக, நிலையாதவற்றைத் துறத்தல் என்பது பொருளாகும்.

நம்பியகப் பொருளும், இலக்கண விளக்கமும் தரும் விளக்கம் காண்போம்.

மக்களொடு மகிழ்ந்து மனையறம் காத்து
மிக்க காமத்து வேட்கை தீர்ந்துழி
தலைவனும் தலைவியும் தம்பதி நீங்கித்
தொலைவில் சுற்றமொடு துறவறம் காப்ப.


தம்பதி (dampati) = மண-இணையரின் புணர்நுகர்ச்சி, matrimonial sex. தம்பதி நீங்கி - ’தாம்பத்திய உடலுறவை ஒழித்து’. தொலைவில் = முடிவே இல்லாத, என்றும் பிரியாத என்று பொருள். முடிவிலாச் “சுற்றமொடு துறவறம்” என்றால் என்ன?

தொல்காப்பியர் சமணர் என்று உறுதிபட விளக்கிக் கட்டுரைகள் படைத்த தமிழ்ப் புலவர் பலர்: எஸ். வையாபுரி பிள்ளை, மே. வீ. வேணுகோபாலபிள்ளை, சுவெலெபில், ...
காமம் நீங்கிய பாலராய் வயோதிக காலத்தில் தம்பதியர் வாழ்வதைச் சொல்லும் சூத்திரம் இது. காமம் நீக்க உறுதுணையாய் என்ன செய்ய வேண்டும்? என்பதைச் சமண சித்தாந்தத்தில் இருந்து நோக்கினால் “சிறந்தது பயிற்றல்” என்றால் என்ன என்று ஒருவாறு புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன்.

சொர்ணம்பிள்ளை என்பவர் இளம்பூரனர் மீது ஒரு போலிப்பாயிரத்தை 20-ஆம் நூற்றாண்டில் செய்தார் அல்லவா? அதைப் பற்றி ஏற்கெனவே இங்கே எழுதியுள்ளேன். உங்களுக்கு நினைவிருக்கலாம்:
http://nganesan.blogspot.com/2009/11/ilampuranar.html
இளம்பூரணர் கற்பியல் 51-ஆம் நூற்பாவுக்கு அளிக்கும் உரை என்ன?

”இது தலைவற்கும் தலைவிக்கும் உரியதோர் மரபு உணர்த்திற்று.
(இ-ள்) சிறந்தது பயிற்றலாவது - அறத்தின் மேல் மன நிகழ்ச்சி.
*சூத்திரத்தாற் பொருள் விளங்கும்.”

தொல்காப்பியச் சூத்திரத்தின் ஈற்றடியில் உள்ள ‘பயிற்றல்’ என்பதன் பொருள்:

பயிற்றல் = செய்தல்/நிகழ்த்துதல்/பண்ணல் என்ற பொருள் தரும் தமிழ் இலக்கியங்கள் சிலவற்றைப் பார்ப்போம். எடுத்துக்காட்டுகள்:

[1] முறுவலின் இன்னகை பயிற்றி
-- ஐங்குறுநூறு 403
= முறுவற் புன்னகை செய்து.

[2] ”சோர்ந்த போல சொரிவன பயிற்றி”
-- அகநானூறு 374
= கருமேகங்கள் கவிழ்ந்தன போல ஆகி பெருமழை பொழிதலைச் செய்து.

[3] ”இன்னா இசைய பூசல் பயிற்றலின்”
-- அகநானூறு 52
= குறமகள் இன்னாமை தரும் ஆரவாரத்தைச் செய்தலின். இங்கு, பயிற்றல் = புலி, புலி என ஒலி செய்தல்.

[4] ”கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே”
-- பதிற்றுப்பத்து 69.
= பகைவரைக் கொன்ற போரின் பின் அதனால் கெட்ட குடிகளை மீண்டும் அவர் நாட்டிலே வாழச் செய்த வேந்தன். இங்கே, பயிற்றுதல் = வாழப் பண்ணுதல்.

[5] ”குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற”
- நற்றிணை 321
= தலைவன் தேர் குருந்த மரங்கள் பூத்த காட்டை நெருங்கலைச் செய்யும்போது/நிகழ்த்தும்போது. பயிறல் - கெழுமல் (பிங்கலந்தை) எனவே, இந்த நற்றிணைப் பாட்டில் நெருங்கி அடைதலாகிய செய்கை = பயிற்றல்.

[6] ”பகைவெல் சித்திரம் பலதிறம் பயிற்றி”
-- பெருங்கதை, உஞ்சைக் காண்டம், 37 விழாக் கொண்டது (வரி 43).
= பகைவரை வெல்லுதற்குரிய வித்தகச் செயல் பலவேறு வகைகளையும் செய்து

[7] ”பலபல அறங்களே பயிற்றி” - சம்பந்தர் தேவாரம்.
= ஓவாது பற்பல தர்மங்களைச் செய்து

[8] ”வாளொடு பரிசை யேந்தி மண்டலம் பயிற்றி”
-- வில்லி பாரதம்
= வாளும் கேடகமும் ஏந்தி மண்டலமாய்ச் சுற்றி வருதலைச் செய்து. பயிற்றி = செய்து.

[9] பாதகங்கள் செய்திடினுங் கொலைகளவு கள்ளுப்
பயின்றிடினு நெறியல்லா நெறிபயிற்றி வரினுஞ்
-- உண்மைநெறிவிளக்கம் 6.
இங்கு, பயிற்றல் - தீயொழுக்கம் செய்தல்/நிகழ்த்தல்.

[10] அன்ன மங்கலம் பயிற்றி - சோறு ஊட்டலாகிய
விழாவைச் நடத்தி (திருவிளையாடற் புராணம்).

பயிற்றல் செய்தல் என்பதிலும் மீட்டும் மீட்டும் செய்தல் என்ற பொருள் விசேடித்து வருகிறது. பயிர்/பயிறு என்ற சொல்லும் மீண்டும் மீண்டும் செய்தல் என்னும் பொருளதே. வேளாண்மை மீண்டும் மீண்டும் பயிர்களை வளரச் செய்து அறுவடை செய்தல். கொங்குநாட்டில் மாடு சினை ஆதலையும் “பயிறாகி இருக்குது” என்போம். வம்சம் அறுபடாமல் தழைக்க பயிறாதல் (மீண்டும் மீண்டும் சினையாதல்) தேவை. அதனால், பயிறல் = மீண்டும் மீண்டும் செய்தல், இங்கே வேளாண்மை.

விவசாயம் தழைக்கலை என்றால் இந்தியா வாடும். இப்போது அரசு உழப்பி, பயிர்விலை விவசாயியைச் சேராமல் நடுவில் இருப்போன் திருடுவதால் ஒவ்வொரு நாளும் எத்தனையோ விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார்கள். பாரதியார் அன்றே அறிவுரை தந்துள்ளார்:

வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்! - இங்கு
வாழும் மனிதரெல் லோருக்கும்;
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்! - பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.

பயிற்றுதல் - மீட்டும் மீட்டும் பயிர் செய்தல்
(வீணை பயிற்றல் = வீணை மீட்டல் போலே.)
http://bharathiarsongs.blogspot.com/2009/06/blog-post_5423.html

மறை ஓதுதல் மீண்டும் மீண்டும் ஒரே சொற்கோவைகளை பல முறை சொல்லுதல். அதனால் கிளிகளின் பேச்சுக்கு மறை ஓதுதலை உவமை ஆக்கும் சங்க இலக்கியம். கிளிகள் மீள மீள ஒரே விளியைப் பயிற்றும். அதாவது, ஒன்றே போல் மறுபடியும், மறுபடியும் ஒலிசெய்யும்.

’கிளிவிளி பயிற்றும் வெளில்ஆடு பெருஞ்சினை’ (அகநானூறு)

’பாம்புமணி யுமிழப் பல்வயிற் கோவலர்
ஆம்பலந் தீங்குழற் றெள்விளி பயிற்ற’ - குறிஞ்சிப்பாட்டு

’பருந்து இருந்து உயாவிளி பயிற்றும்’ - அகநானூறு

இங்கெல்லாம் மீட்டும்மீட்டும் ஒத்தோசை எழுதற் செய்கை. - கிளிவிளி, குழல்விளி பயிற்றல்

உதாரணமாக, ”கவைமுள் கருவியின் வடமொழி பயிற்றிக் கல்லா இளைஞர் கவளம் கைப்ப, (முல்லைப்பாட்டு 29 – 36). இதற்கு வேந்தன் அரசு இட்ட உரை: ”யானைக்கு யாரும் வடமொழி சொல்லிக்கொடுப்பது இல்லை. வடமொழியில் ஏவல் செய்ய வைக்கிறார்கள். அதனால் பயிற்றல் என்றால் மீண்டு மீண்டும் செய்தல்.” அதாவது பயிற்றல் = training.
சிறந்தது பயிற்றல் (தொல்.) என்பது மனத்தை விரதங்களால் training செய்வது.

”சிறந்தது பயிற்றல்” - தொல். நூற்பாவில் காம நுகர்ச்சி நீக்கமும் அதற்காகச் சிறந்த விரதங்களை - அடிப்படையாக பற்று நீக்கமும் கடைப்பிடித்தலை வயோதிக தம்பதிகள் செய்தலைக் குறிப்பிடுகிறது. நிர்வாணம் (வீடுபேறு) அடையப் பற்று அறுதல் வேண்டும். அதற்கு இல்லறத்தில் என்ன செய்ய வேண்டும்? என்று சமணம் வற்புறுத்துகிறது என்று பார்ப்போம். உதாரணம்: காமத்துக்கு அடிப்படை உணவுதான். எனவே, உணவுப் பற்றை முடிந்தவரை குறைத்தல்/விடுதல் அவசியம் என்கிறது சமணம். இன்சொல்லர்,
செல்வத்தை மக்களுக்கு ஈதல், உணவு குறைத்தல், ... ஆகிய விரதங்களை மீட்டும் மீட்டும் கைக்கொள்ளல் காமம் நீத்த பாலரின் கடைசிக்காலத்தில் சிறப்பு.

வயோதிகரான தம்பதியர் “சுற்றமொடு துறவறம்” - மக்களோடு வாழ்ந்து பயிற்ற வேண்டியதான (= செய்ய) தவம்/மன நிகழ்ச்சியாகிய துறவுபற்றி சமண நோக்கில் விரிவாக அடுத்துக் காண்போம். இச் சூத்திரத்துக்குப் பொருள் அறிஞர் சமணர் என்று கொள்ளும் இளம்பூரணரால் தெளிவாகிறது.

அதற்கு முன்னதாக, முனைவர் தெ. ஞானசுந்தரம் (பச்சையப்பன் கல்லூரி, சென்னை) 2008-ல் தினமணியில் எழுதிய கட்டுரையைப் படித்து விடுங்கள். அதில் நாம் பேசும் தொல். கற். 51 சூத்திரத்துரை (நச்சினார்க்கினியர்) தந்துள்ளார். முனைவர் வ. சுப. மாணிக்கம் “சிறந்தது” = “விருந்தோம்பல்” என்று எடுக்கிறார். ஆனால், விருந்தோம்பல் வயோதிக தம்பதியர் மக்கள் செய்ய வேண்டியது. காமம் நீத்த வயது முதிர்ந்தோரின் மனத் துறவுக்கு என்னென்ன செய்தல் வேண்டும்? அடுத்ததாகப் பார்ப்போம்.

”இது தலைவற்கும் தலைவிக்கும் உரியதோர் மரபு உணர்த்திற்று.* - இளம்பூரணம் குறிக்கும் மரபு என்னை? இனி அடுத்து ”சிறந்தது பயிற்றல்” என்னும் தொல்காப்பியத் தொடரில் சிறந்தது பயிற்றல் என்னும் தொடரின் பொருளை ஆராய்வோம்.

நா. கணேசன்

உரையாசிரியர்களும் மறு ஆய்வும்!
பேரா. தெ. ஞானசுந்தரம், தினமணி, ஆகஸ்ட் 2008

தமிழ் ஆயிரமாயிரம், ஆண்டுகளாகியும் அடிப்படை அமைப்பில் வேற்றுமை இல்லாமல் இருக்கிறது. இஃது அதன் தனிச்சிறப்பு எனினும் புறக்கட்டுமானத்தில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பழங்காலத் தமிழுக்கும், இன்றைய தமிழுக்குமிடையே வேறுபாடுகள் எழுத்துத் தொடங்கி அனைத்துப் பிரிவிலும் நிரம்ப உண்டு. மொழி, காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டிருக்கிறது. அதன்

- தொடர் அமைப்பு,
- சொற்பொருள்

முதலியவற்றில் மாற்றங்கள் நிகழ்கின்றன.

மொழி சில பழஞ்சொற்களை இழக்கிறது; புதுச்சொற்களை ஏற்கிறது. பழஞ்சொற்கள் புதிய பொருள்களில் ஆள இடம் அளிக்கிறது. இவை எல்லா மொழிகளிலும் நிகழ்கின்றன. ஒரு மொழியில் தோன்றும் இலக்கணங்கள் காலப்போக்கில் நிகழும் இந்த மாற்றங்களை ஒழுங்குபடுத்தி விதிகள் சமைக்கின்றன.

ஒரு நூல் எழுந்த காலத்தில் இருந்த மொழிநிலை அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் அப்படியே இருப்பதில்லை. அதனால் பண்டைய இலக்கியங்களைக் கற்கத் தலைப்படுவோர் கால இடைவெளியில் நிகழ்ந்த மாற்றங்களால் அவற்றின் சரியான பொருளை உணர முடியாமல் துன்பப்படுகின்றனர். ஒரு நூற்றாண்டுக்கு முன் தோன்றிய நூல்களின் பொருள்களை உணர்ந்து கொள்வதற்குக்கூட இன்று உரைகளின் உதவி தேவைப்படுகிறது.

இன்று தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியங்களையும், திருக்குறளையும் உரையின் உதவியின்றி நேரடியாகப் படித்து அறிவது அரிய முயற்சியாக அமைகிறது. தமிழில் உரையாசிரியர்கள் சிலர் மூல நூலாசிரியர்களுக்கு இணையாகக் கொண்டாடப்படுகிறார்கள்.

தொல்காப்பிய உரையாசிரியர்களில்

- இளம்பூரணர்,
- நச்சினார்க்கினியர்,
- சேனாவரையர்,
- கல்லாடர்,
- தெய்வச்சிலையார்

ஆகியோர் பெருமதிப்புக்கு உரியவர்களாகத் திகழ்கிறார்கள். உரையாசிரியர்கள்

- காகிதம்,
- பேனா,
- மின்சார விளக்கு,
- வசதியான கல்விக்கூடம்,
- விரைந்த தொடர்பு சாதனம்

போன்ற வசதிகள் இல்லாத காலத்தில் வாழ்ந்தவர்கள். அது பனையோலையும்,எழுத்தாணியும் எழுதுபொருளாக இருந்த காலம். அக்காலத்தில் வாழ்ந்த அப்பெருமக்கள் தங்கள் ஆர்வத்தால் அறிவுச் செல்வத்தைத் தேடிப் பெற்றவர்கள். உரையாசிரியர்களும் மனிதர்களே. முக்குணவயப்பட்டவர்களே. இக்காரணங்களால் அவர்கள் சிற்சில இடங்களில் பிழைபட நேர்ந்தது. *பண்டைய உரையாசிரியர்களைப் போற்றிக் கற்கும் வேளையில் அவர்கள் எழுதியுள்ளனவே இறுதியானவை என்றும், அவர்கள் கருத்துக்கு மாறாகச் சிந்தித்தல் கூடாது என்றும் கருதுவது அறிவார்ந்த அணுகுமுறை ஆகாது.*

தொல்காப்பிய பொருளதிகார நூற்பா ஒன்று இன்றளவும் பிழையாகப் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. அப்பிழையான பொருளைக் கடைக்காலாகக்கொண்டு அறிஞர் பலர் தங்கள் இலக்கிய மாளிகைகளை எழுப்பியுள்ளனர். அம்மாளிகைகளின் கடைக்கால் சரியாக அமையாமையால் அரிய முயற்சியில் உருவான அக்கட்டடங்கள் தகர்ந்து சிதறும் தவிர்க்க இயலாத நிலை உருவாகியுள்ளது.

"காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே." (கற்பியல், நூற்பா - 51)
என்பதே அந்நூற்பா.

இந்நூற்பா கற்பியலில் பிரிவுகளைக் குறித்து விளக்கும் நூற்பாக்களுக்குப் பின்னும், பிரிந்த தலைமகன் திரும்பிய நிலையில் தலைமகளோடு அவனைச் சேர்த்து வைக்கும் வாயில்களைப் பற்றியும், திரும்பி வரும் தலைமகன் இடையில் தங்கமாட்டான் என்பது பற்றியும் கூறும் நூற்பாக்களுக்கு முன்னும் அமைந்துள்ளது.

இதற்கு உரை எழுதிய இளம்பூரணர் "இது (இந்நூற்பா) தலைவற்கும்,தலைவிக்கும் உரியதோர் மரபுணர்த்திற்று," என்றும் "சிறந்து பயிற்றலாவது -அறத்தின்மேல் மனநிகழ்ச்சி," என்றும் குறித்து, "சூத்திரத்தானே பொருள் விளங்கும்," என்று முடித்துவிட்டார். அவர் இந்நூற்பாவின் பொருளை விரித்து எழுதியிருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்காது.

நச்சினார்க்கினியர் இந்த நூற்பாவுக்கு எழுதியுள்ள உரை முழுவதும் மாறாக அமைந்துள்ளது. அவர் "இது முன்னர் இல்லற நிகழ்த்திய தலைவனும் தலைவியும் பின்னர் துறவற நிகழ்த்தி வீடு பெறுப என்கிறது," என்று குறிப்பு எழுதிவிட்டு நூற்பாவின் பொருளைக் கீழ்வருமாறு தெரிவித்துள்ளார். "தலைவனும் தலைவியும் உரிமைச் சுற்றத்தோடே கூடிநின்று இல்லறஞ் செய்தலை விரும்பிய மக்களோடே தமக்கு முன்னர் அமைந்த காமத்தினையுந் தீதாக உட்கொண்ட காலத்திலே அறம்பொருளின்பத்திற் சிறந்த வீட்டின்பம் பெறுதற்கு ஏமஞ்சான்றவற்றை அடிப்படுத்தல் யான் முற்கூறிய இல்லறத்தின் பயன் என்றவாறு."

மேலும், விளக்கவுரையில், "சான்ற காமம்" என்றார், நுகர்ச்சியெல்லாம் முடிந்தமை தோன்ற. இது கடையாயினார் நிற்கும் நிலையென்று உரைத்தற்குக் "கடை" என்றார். ஏமஞ்சான்றவாவன: வானப்பிரத்தமுஞ் சந்நியாசமும். எனவே, "இல்லறத்தின் பின்னர் இவற்றின் கண்ணே நின்று பின்னர் மெய்யுணர்ந்து வீடு பெறுப என்றார். இவ்வீடுபேற்றினை இன்றியமையாது இவ்வில்லறமென்பது இதன் பயன்" என்று குறித்துள்ளார். அதன் பிறகு துறவினைக் கூறும் இப்பகுதி அகப்பொருட்பகுதியில் அடங்கும் என்பதனைத் தம் புலமையால் காட்ட முற்பட்டுள்ளார்.

அவர் "காமம் சான்ற கடைக்கோல்" என்பதற்குக் கிடந்தவாறே பொருள் காணாமல், "சான்ற காமம்" என்று மாற்றிக்கூட்டிப் பொருள் கொண்டுள்ளார். "ஏமஞ் சான்ற மக்களொடு" என்பதில் "ஏமஞ் சான்ற" என்னும் இருசொற்களைத் தனியே பிரித்து "சான்ற" என்பதனை வினையாலணையும் பெயராகக் கொண்டு வானப்பிரத்தமுஞ் சந்நியாசமும் என்று உரை கூறியுள்ளார். இவை தம் கருத்தை எவ்வாறேனும் நிலைநாட்ட முயலும் முனைப்பினையே காட்டுகின்றன. இக்கருத்தையே மெய்ப்பொருளாக மயங்கிய நாற்கவிராசநம்பி தம் "அகப்பொருள் விளக்கம்" என்னும் நூலில்,

"மக்களொடு மகிழ்ந்து மனையறங் காத்து
மிக்க காம வேட்கை தீர்ந்துழித்
தலைவனுந் தலைவியுந் தம்பதி நீங்கித்
தொலைவில் சுற்றமொடு துறவறங் காப்ப." (நம்பியகப்பொருள் - 116)

என்று நூற்பாவாக்கி அதனை அகத்திணையியல் இறுதியில் அமைத்துள்ளார். தொல்காப்பிய உரையாசிரியர்களுள் நச்சினார்க்கினியர் குறிப்பிடத்தக்கவர். அவர் இலக்கணத்திற்கு மட்டுமன்றி இலக்கியங்களுக்கும் உரைகண்டவர்.

தொல்காப்பியத்தில்,

- அகத்திணையியல்,
- புறத்திணையியல்,
- களவியல்,
- கற்பியல்,
- பொருளியல்,
- செய்யுளியல்
ஆகிய ஆறு இயல்களுக்கு மட்டுமன்றிப்

- பத்துப்பாட்டு,
- கலித்தொகை,
- சிந்தாமணி
ஆகியவற்றிற்கும் உரை கண்ட சிறப்புக்குரியவர்.

அவர் தந்துள்ள மேற்கோள்கள் அவரது பரந்த அறிவிற்குச் சான்றாக அமைந்துள்ளன. அவர் தமிழும், வடமொழியும் ஆழ்ந்து கற்ற அறிஞர். அவரை *"உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்"* என்று புலவர் உலகம் போற்றியது. அவர் சொன்னதே மெய்ம்மை என்று கொண்டு அதற்குமேல் பெரும்பாலோர் சிந்திக்க விரும்பவில்லை. இந்தத் "தலைமை வழிபாடு" (Hero Worship) இந்த நூற்பாவின் சரியான பொருளைக் காணத் தடையாக அமைந்து விட்டது.

இன்றுவரை வந்துள்ள தொல்காப்பிய வெளியீடுகளில் "தவம்" என்னும் தலைப்பிட்டு இந்நூற்பா தரப்பட்டுள்ளது.

- "ஒருங்கு தவம் பயிலல்" என்னும் உள்தலைப்போடு புலியூர்கேசிகனும்,
- தலைவனும் தலைவியும் "சிறந்தது பயிற்றும் தவம்" என்னும் தலைப்போடு டாக்டர்
சொ.சிங்காரவேலனும்,
- "தவம்" என்னும் மகுடத்தோடு முனைவர் ச.வே.சுப்பிரமணியனும்,

இந்நூற்பாவைப் பதிப்பித்துள்ளார்கள். இவர்கள் எல்லோரும் நச்சினார்க்கினியரின் கருத்தையே எளிமைப்படுத்தித் தந்துள்ளனர். தொல்காப்பிய நூற்பாக்களுக்கு உரையாசிரியர்களின் விளக்கத்தையே முற்றும் ஏற்றுக் கொள்ளாமல் விலகித் தங்கள் சொந்த சிந்தனையால் சென்ற நூற்றாண்டில்,

- நாவலர் சோமசுந்தர பாரதியார்,
- வ.சுப.மாணிக்கனார்

போன்ற அறிஞர்கள் சிலர் விளக்கம் காண முனைந்தார்கள். அவர்களால் சில புதிய விளக்கங்கள் கிடைத்தன.

இந்த நூற்பாவில் தொல்காப்பியனார் வானப்பிரத்தத்தையோ, துறவறத்தையோ கூறவில்லை. இதற்கு நச்சினார்க்கினியர் கருத்தை ஒதுக்கிப் புதிய விளக்கம் தந்தவர் முனைவர் வ.சுப.மாணிக்கனார் ஆவார். அவர் "தொல்காப்பியக் கடல்" என்னும் தம் நூலில் தந்துள்ள விளக்கம்: "காமம் நிறைந்த உறுதியான காலத்தில் நலம் சிறந்த மக்களொடு கூடி இல்லறம் புரியும் சுற்றத்தாரொடு தலைவனும் தலைவியும் சிறந்ததாகிய விருந்தோம்பலை இடைவிடாது செய்தொழுகுவதே களவிலிருந்து கற்பிற்கு வந்த பயனாகும்," என்பதாகும்.

அவரது விளக்கத்தால் இது துறவறம் குறித்த நூற்பா அன்று என்பதும் அக வாழ்க்கைக்கு உரியது என்பதும் தெளிவாகிறது. இந்நூற்பாவுக்கு மெய்ப்பொருள் காணும் முயற்சியில் ஒளிக்கீற்றுகள் சிலவற்றைப் பாய்ச்சுகிறது அவரது விளக்கம்.

அவர் "சிறந்தது" என்பதற்கு விருந்தோம்பல் என்று பொருள் கண்டுள்ளது பொருத்தமாக அமைகிறது. அவ்வறம் தனியே இருக்கும் ஆணாலும் பெண்ணாலும் செய்யமுடியாது. கணவன் மனைவியரால் மட்டுமே செய்யக்கூடியது. அவர்களும் சேர்ந்து வாழும் நிலையிலேயே அதனைச் செய்ய இயலும். ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் அமைப்பே இல்லறவாழ்வு. அதில் விருந்தோம்பல் என்னும் அறம் செய்யப் பெறாவிட்டால் அவ்வாழ்வே பயனின்றிப் போகும்.

கற்பு வாழ்க்கையின் நோக்கம் விருந்தினர்க்கு உணவிட்டு எஞ்சியதை உண்பது என்பதனைப் பத்துப்பாட்டும் தெரிவிக்கிறது. குறிஞ்சிப்பாட்டில், தலைமகன் தலைமகளிடம், "பெருந்தகையாளே, நெய் நிறைந்த ஊன்சோற்றினை உயர்ந்தவர்கள் தங்கள் சுற்றத்தினரோடு விருந்தாக உண்டு செல்ல எஞ்சியவற்றை நீ இட, யான் உண்பது மேலான செயலாகும்" என்று கூறிய குறிப்புக் காணப்படுகிறது.

"பைந்நிணம் ஒழுகிய நெய்ம்மலி அடிசில்
வசையில் லாந்திணைப் புரையோர் கடும்பொடு
விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது." (குறிஞ்சிப்பாட்டு 204 - 207)

என்பது கபிலர் பாட்டு.

இப்படிச் "சிறந்தது" என்பதற்கு அறிஞர் வ.சுப.மா தந்த விளக்கம் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால் அவர் அந்நூற்பா களவிலிருந்து கற்புக்கு வந்த பயனைச் சொல்வதாகத் தெரிவிக்கும் கருத்தும், "கடைக்கோட் காலை" என்பதற்கும் "இறந்ததன் பயனே" என்பதற்கும் தந்துள்ள விளக்கமும் பொருத்தமாக அமையவில்லை.

இந்நூற்பா நச்சினார்க்கினியர் சொல்வதுபோலத் துறவறத்தைச் சொல்வதாயின் புறத்திணையியலிலோ பொருளியலிலோ இடம் பெற்றிருத்தல் வேண்டும். அறிஞர் வ.சுப.மா அவர்கள் சொல்வதுபோல் களவு வாழ்க்கையிலிருந்து கற்பு வாழ்க்கைக்குக் கடந்து வந்ததன் பயனைத் தெரிவிப்பதாயின் கற்பியலில் முதலிலோ இறுதியிலோ இடம் பெற்றிருத்தல் வேண்டும். அவ்வாறு அமையாமல், இந்நூற்பா கற்பியலில் இறுதி இரு நூற்பாக்களுக்கு முன்னே இடம் பெற்றுள்ளது. அதனால் வ.சுப.மா அவர்கள் கருத்தினை ஏற்றுக்கொண்டால் இந்நூற்பா முன் பின் நூற்பாக்களோடு எவ்வித இயைபும் இல்லாமல் திடீரென்று கற்பு வாழ்க்கையின் பயனைச் சொல்வதாக அமைகிறது. அப்படி நூற்பாக்களை அமைப்பது இலக்கண ஆசிரியர்களின் நெறி அன்று. ஆதலால் இது களவிலிருந்து கற்புக்குக் கடந்து வந்ததன் பயனைத் தெரிவிப்பதன்று என்பது தேற்றம். அறிஞர் வ.சுப.மா அவர்கள், "கடைக்கோட் காலை" என்பதற்கு, "உறுதிப்பட்ட காலத்தில்" என்று பொருள்கொள்வது இயல்பாக அமையவில்லை. "சான்ற" என்பது உரிச்சொல்லடியாகப் பிறந்த வினைச்சொல். அதற்கு நிறைந்த என்பது பொருள். அச்சொல்லை அடுத்துள்ள கைகோள் என்னும் சொல்லோடு சேர்க்காமல் இடையிட்டுக் "காலை" என்னும் பெயரோடு சேர்ந்துச் "சான்ற காலை" என்று பெயரெச்சத்தொடராகக் கொண்டுள்ளார். இதனினும் அடுத்துள்ள "கடைக்கோள்" என்னும் அடையெடுத்த பெயரினோடு சேர்த்துச் "சான்ற கடைக்கோள்" என்று பெயரெச்சத்தொடராகக் கொள்வதே சிறப்பாகும்.

"கடைக்கோள்" என்பதில் "கடை என்பது அடைமொழி. கோள் என்பது கைக்கோள் என்னும் பெயரின் முதற்குறை. அது தாமரை மலரை "மரைமலர்" என்பது போன்றது. கைகோள் இரண்டு என்பதும் அவை

- களவு,
- கற்பு

என்பதும் தொல்காப்பியம் தெரிவிக்கும் கருத்தாகும். கைகோள் இரண்டனுள்,

- களவு தலைக்கோளும்,
- கற்புக் கடைக்கோளும்

ஆகும்.

இவ்விரு கைகோள்களுள் காமம் நிறைவது களவினும் கற்பொழுக்கம் நிகழும் காலத்திலேயே ஆகும். களவில் அஞ்சி அஞ்சி ஊர் அறியாமல் கூட்டம் நிகழும். அதனால் அங்கு அது நிறைவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் கற்பு வாழ்க்கையில் அஞ்சாமல் தலைமகனும் தலைமகளும் தங்கள் இல்லத்திலிருந்து இன்பம் நுகர்கிறார்கள். அதனால் அது கற்பு வாழ்க்கையிலேயே நிறைகிறது. எனவே, "காமஞ் சான்ற கடைக்கோள்" என்னும் தொடருக்குக் "காமம் நிறைந்த இறுதிக் கைக்கோளாகிய கற்பொழுக்கம் நிகழும் காலத்தில்" என்று பொருள் விரிப்பதே நேரிதாகும்.

எனவே இந்நூற்பாவிற்குக் *"காமம் நிறைந்த கற்பொழுக்கம் நிகழும் காலத்தில் நலம் நிறைந்த மக்களொடு விளங்கி, அறத்தை விரும்புகின்ற உறவினர்களோடு கூடித் தலைமகனும் தலைமகளும் விருந்தோம்பல் என்னும் அறத்தினைப் பலகாற் செய்தல் பொருள்வயிற் பிரிந்ததன் பயனாகும்"* என்று பொருள்கொள்வதே தக்கது.

தமிழ் செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் நிலையில், *உரையாசிரியரிகளின் கட்டுக்குள் இருந்து விலகிச் சுதந்திரமாகச் சிந்தித்து விளக்கங்கள் வருதல் பயனுடைய பணியாக அமையும். அறிஞர்கள் இத்துறையில் கருத்துச் செலுத்தினால் பெரும் பயன் விளையும்.*

முனைவர் தெ.ஞானசுந்தரம்
மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்,
பச்சையப்பன் கல்லூரி
சென்னை

தமிழ் இலக்கியத்தின் ஊளி விழா - ஹோளி பண்டிகை

நேற்று கூகுள் முகப்பில் இந்தியாவின் ஹோளி பண்டிகையைக் காட்டிக் கொண்டிருந்தது.
http://www.google.com/search?hl=en&source=hp&q=holi
இந்திய மொழிகளின் பண்டைய தொடர்புகளுக்கு ஹோளி விழா முக்கியமானது.

இப்பண்டிகைப் பெயரில் முக்கியமான தமிழ் வினைச்சொல் இருக்கிறது. கொங்குநாட்டில், “நாய் உளைக்கிறது” என்ற வாக்கியத்தை எங்கும் பரவலாய் நாடோறும் கேட்கலாம். ’நாய் வித்த காசு உளைக்காது’, ‘உளைக்கிற நாய் கடிக்குமா?’ எனும் பழமொழிகள் கேட்கலாம். நரி உளைத்து ஓசை எழுப்பலை மணிமேகலைக் காப்பியம் “உலப்பில் இன்பமோடு உளைக்கும் ஓதையும்’ என்று குறிக்கிறது. பிங்கலந்தை நிகண்டில் உளை = எடுத்தல் ஓசை (High tone of voice) என்பது வரையறை. கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாலிவதைப் படலத்தில் பேரோசை எழும் இடத்தில், ’உளைத்த பூசல்’ என்கிறார்.

வார்த்தை அன்னது ஆக, வான் இயங்கு தேரினான் மகன்,
நீர்த் தரங்க வேலை அஞ்ச, நீல மேகம் நாணவே,
வேர்த்து மண் உளோர் இரிந்து, விண் உளோர்கள் விம்ம, மேல்
ஆர்த்த ஓசை, ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே. 11

இடித்து, உரப்பி, 'வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென்' என்று,
அடித்தலங்கள் கொட்டி, வாய் மடித்து, அடுத்து அலங்கு தோள்
புடைத்து நின்று, உளைத்த பூசல் புக்கது என்ப - மிக்கு இடம்
துடிப்ப, அங்கு, உறங்கு வாலி திண் செவித் துளைக்கணே. 12
(வாலி வதைப் படலம், கம்பர்)

“உளைத்தல்” என்ற வினைச்சொல் பிறப்பிக்கும் பெயர்ச்சொல் ஊளி (அல்லது) உள்ளி என்றாகும். ஊளி என்ற தமிழ்ச்சொல்லுக்கும் ஹோளி என்னும் வட இந்தியச் சொல்லுக்கும் உள்ள உறவுகள் சிலவற்றைப் பார்ப்போம். வளைந்து ஆடும் கூத்து வள்ளிக்கூத்து, அதுபோல் உளைந்து ஓசை எழுப்பிக் கொண்டாடும் விழா உள்ளிவிழா. உளைத்தல் என்ற கொங்கு நாட்டில் இன்றும் புழங்கிவரும் வினைச்சொல்லில் பிறக்கும் ’உள்ளி விழா’ என்னும் காமன் பண்டிகை சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது. “கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” (அகநானூறு 368).

உயிரெழுத்தில் தொடங்கும் சில வார்த்தைகளில் வகர மெய்யோ (உ-ம்: ஒக்கலிகர் > வொக்கலிகர் (Vokkaliga in Karnataka), அக்கா > வக்கா, உடையார் > வொடெயாரு (மைசூர் மன்னர்) ...), ஹகர மெய்யோ ஏறுதல் பேச்சு மொழி இயற்கை. எடுத்துக் காட்டாக, ஊளி > ஹூளி/ஹோளி, ஏலராஜா (வேளராஜா) > ஹேலராஜா, எருமை/எம்மெ (கன்னடம்) > ஹேரம்பம், ஆரத்தி (ஆலத்தி) > ஹாரத்தி. அப்பளம் > ஹப்பளம் எனச் சில கிளை மொழிகளில் ஆதலை பேரா. எமனோ காட்டியுள்ளார். திண்ணைப் பள்ளிகளில் முதலில் கற்றுத்தரப்படும் ஜைநர்களின் ’அரி நமோத்து சிந்தம்’ என்னும் மந்திரம் தரும் சொல் அரிச்சுவடி. அது சில இடங்களில் (உ-ம்: சென்னை மாநகர்) ஹரிச்சுவடி என்று திரிதலும் உண்டு. எச்சரிக்கை என்பது கர்நாடக சங்கீதத்தில் தியாகையரிடம் ஹெச்சரிக்கை ஆகிறது. ஒலிக் குறிப்புகளை ஊளி என்று தமிழரும், ஹூளி/ஹோளி மற்ற இனத்தவரும் ஆளுதற்கு சில ஒப்புமைகளைப் பார்க்கலாம். அம் சிறை பறவை = ஹம் என்று ஓசை எழுப்பும் சிறகுகளை உடைய பறவை. ஆழியான் ஊர்திப் புள்ளின் *அம் சிறகு ஒலியின்* நாகம் மாழ்கிப் பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும் (சீவக சிந்தாமணி, 449). இதுபோலவே, உம் கொட்டுதலை > ஹும் கொட்டுதல் என்றும் சொல்கிறோம் [1].

ஊளி - பேரோசை, ஹோளி பண்டிகையின் ஆரவாரம் போல்.

திருவாய்மொழி - நம்மாழ்வார்:

நாளும் எழநிலம் நீரும் எழவிண்ணும்
கோளும் எழஎரி காலும் எழமலை
தாளும் எழச்சுடர் தானும் எழஅப்பன்
ஊளி எழஉல கம்உண்ட ஊணே.
7.4.4

இப் பாசுரத்துக்கு ஈடு : நான்காம் பாட்டு. திருவரங்கத்தில் "அடைய வளைந்தானுக்குள்ளே புகும்போது திருவாசலில் பிறக்கும் ஆரவாரம்போலே, திருவயிற்றிற் புகுகிறபோது பிராணிகளுக்கு உண்டான பரபரப்பான ஒலிகள் கிளர" என்றும், "இவற்றை உறிஞ்சுகிற போதை ஒலிகாண்" என்றும் பேசுகிறது. மஹா பிரளயத்தில் காத்த பிரகாரத்தை அருளிச்செய்கிறார். அன்றிக்கே, இப்போது இருப்பது போன்று மார்க்கண்டேயன் திருவயிற்றுள் ஒன்றும் அழியாது இருக்கக் கண்டான் என்கிற புராணத்துக்குத் தகுதியாக அவாந்தர பிரளயத்தை இவ்விடத்தே அருளிச்செய்கிறாராகவுமாம் என்று அருளிச்செய்வர்.

காமவேள் விழவு: சங்க காலத்தில் காதலர் தினம்
எஸ். இராமச்சந்திரன்
http://www.sishri.org/kaaman.html
”அகநானூற்றில் “கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டோம். கொங்கு நாட்டில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது எனத் தெரிகிறது. இறையனார் களவியல் நூற்பா 16-17க்கான உரையில் ‘கருவூர் உள்ளிவிழாவே’ என்ற குறிப்பு காணப்படுகிறது. ஊளி விழவு என்பது பிரதியெடுப்போரால் உள்ளி விழவு என்று தவறாக எழுதப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. ஊளி என்ற சொல் பேரோசை என்ற பொருளில் நம்பிள்ளையின் ‘ஈடு’ முப்பத்தாறாயிரப்படி ஏழாம் பத்தில் (4:4) இடம்பெற்றுள்ளது. உளை, ஊளை என்ற சொல் வழக்குகளையும் இதனோடு தொடர்புபடுத்தலாம். சமஸ்கிருதத்தில் ஹுல ஹுலி என்ற சொல் மகளிர் மகிழ்ச்சியில் எழுப்பும் பொருளற்ற ஓசை எனப் பொருள்படும். இந்த அடிப்படையிலேயே காமன் பண்டிகை என்பது வட இந்தியாவில் ஹோலகா ஹோலிகா என்றும் ஹூளா ஹூளி என்றும் அழைக்கப்பட்டது. இவ்விழா நாளில் ஆடவரும் பெண்டிரும், குறிப்பாக இளைஞர்கள் ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக்கொண்டும், சாயப் பொடிகளை தூவிக்கொண்டும், மதுபானம் அருந்தி ஊளையிட்டுக்கொண்டும் குதித்துக்கொண்டும் சில வேளைகளில் இருபொருள்படும் கொச்சையான பாடல்களைப் பாடிக்கொண்டும் திரிவர். இதுவே தற்போது ஹோலி என்று வழங்கப்படுகிறது. கொங்கு நாட்டில் ஒலி எழுப்புகின்ற மணிகளைக் கோத்து இடுப்பில் கட்டிக்கொண்டு நடுத்தெருக்களில் ஆடிப்பாடிக்கொண்டு இவ்விழாவைக் கொண்டாடினர். உறையூரிலும் (திருச்சிராப்பள்ளி) திருவரங்கத்திலும் ஆற்றின் இடையே இருந்த மணல் திட்டுகளில் ஆடவரும் பெண்டிரும் தததமக்கு விருப்பமான இணைகளுடன் சேர்ந்துகொண்டு கூடிக் களிப்பது சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

நா. கணேசன்

[1] உம் > ஹும் கொட்டுதல்.
1/1/2003 பாரிஸ் பல்கலையின் ழான் - லூய்க் செவ்வியாருக்கு நான் எழுதிய மடல். இந்தக் காட்சி (16 வயதினிலே படம்) யுட்யூபில் கிடைக்கிறதா? கொடுத்தால் முன்கூட்டின நன்றி உரித்தாகுக.

At 17:02 01/01/03 +0100, Jean-Luc Chevillard wrote:

"avar collum vArttaikaLil ovvon2Rukkum huGkAram ceytu koNTE iruppEn2. illA viTTAl, avar pEccu mElE pOkAtu."
en2 carittiram, UVS, p.15, 2nd edition 1982, Chennai

The Story of my life, part I (1990) & part II (1994), Institute of Asian Studies
Madras (Chennai), M. Shanmukam Pillai and A. Thasarathan translate this as:
"I had to counter every word of his with a soft grunt of assent; otherwise he would stop speaking".

------------

We find this incident in village life too. "16 vayatin2ilE" is a pioneer movie in tamil. It was the first to start a trend in TN to depict village life. Ilaiyaraja, Bharatiraja, Bhagyaraj, ... shot into fame from that period.

In "16 vayatin2ilE", there is a scene where the village girl, Mayil walks with her companion, the retarded ChappaaNi to a river. Mayil's mother has died due to what CT texts call as "alar tURRu-tal". ChappaaNi assures Mayil of his help to her always.
ChappaaNi says something like:
"ammaa, aattukkup pOkaiyila en2n2aik kuuTTip pOkum; appa Etaavatu katai collum, naan2 um, um koTTittE varuvEn2. ippa ammaavum cettiTiccu. aan2aakka, nii Etaavatu collu mayilu. naan um, um koTTiTTE varEn2."

I think this "um koTTutal" in village life, depicted so nicely in 16 vayatin2ilE, is refered as "huGkARam koTuttal" by UVS in his autobiography.

uGkAram:huGkAram - a parallel in M. B. Emeneau's note on pappad in his Sanskrit studies. pappaTam:vappaTam (Cf. paruppu/pappu + aTai) becomes appaLam. In some dialects, even happaLa.

Happy new year,
N. Ganesan
(1-January-2003)

புலிக்கொடி வரைந்த தமிழ்நாட்டு ஓவியர் நடராஜன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி உருவான வரலாற்றில் தமிழ்நாட்டு ஓவியருக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. சிவகாசியில் ஓவியராக ஆக இருந்தவர் திரு. நடராஜன். அவருக்குச் சொந்த ஊர் விருதுநகர் அருகே மல்லாங்கிணறு. 1977-ல் எல்டிடிஇ தலைவர் வே. பிரபாகரன் திறமையான சைத்ரிகர் நடராஜனைச் சிவகாசியில் சந்தித்து புலிக்கொடி உருவாக்க எண்ணக்கருவைப் கலந்துபேசி உருவானதுதான் புலிக்கொடி. பின்னாளில் பார்மசிஸ்ட் ஆக மதுரை அரசாங்க மருத்துவமனையில் வேலைபார்த்தார் என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர்கள் தலைமையேற்ற நாகரிகம் என்ப. அதில் கொற்றவையின் சின்னமாகப் புலி இருக்கிறது. சிங்கம் சிந்து சமவெளியின் கலைகளில் 10,000 சதுர மைல் பரப்பில் கலைப் படைப்புகளில் கிடையாது. அண்டை நாடுகளில் (பாக்ட்ரியா, மெசொபொடோமியா) சிங்கம் கலையில் உன்னத இடம்பெற்றதால் சிந்து சமவெளியில் பாரதத்தின் சிறப்பு விலங்கான புலி தெரிவுசெய்து சிங்கம் விலக்கப்பட்டிருக்கிறது [1]. தமிழ் இலக்கியத்தை எடுப்போம். சிலப்பதிகாரத்தில் இமயமலையில் கரிகால் சோழன் புலிக்கொடியை நாட்டினான் என்ற குறிப்பு இருக்கிறது. ராஜராஜன், ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் புலிக்கொடி இலங்கையில் பறந்திருக்கிறது. இதனால் சிங்களர் தமிழரைக் ‘கொட்டியா’ (புலி) என்று அழைக்கும் வழக்கம் உண்டு.

1972-ம் ஆண்டு தமிழரசுக் கட்சியாளர் ராஜரத்தினம் பிரபாகரனுக்கு தமிழ் வரலாற்றில் சோழர்களின் புலியின் முக்கியத்துவத்தைப் போதித்தார். ”இதே வேளை தமிழ் நாட்டில் தங்கியிருந்த தமிழரசுக் கட்சியைச் சார்ந்த ராஜரட்ணம் என்பவரின் தொடர்பு பிரபாகரனுக்கு ஏற்படுகிறது. குடியரசு தின எதிர்ப்புப் போராட்டங்களின் போதான வன்முறை நிகழ்வுகளில் தேடப்பட்டவர்களுள் ராஜரட்ணமும் ஒருவர். அவர்தான் பிரபாகரனுக்கு கரிகால் சோழன், புலிக் கொடி போன்ற சரித்திர நிகழ்வுகளைப் போதிக்கிறார். அவர் தான் இந்த அடிப்படைகளிலிருந்து தமிழ் புதிய புலிகள் என்ற பெயரை முன்வைத்து அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்குகிறார். பிரபாகரன் இந்த ஆலோசனைகளால் ஆட்கொள்ளப்படுகிறார்.” (ஐயர், http://inioru.com/?p=9025. 1976-ல் பிரபாகரன் தமிழ்ப் புதிய புலிகள் என்ற பெயரைத் தமிழீழப் புலிகள் என்று மாற்றுகிறார்.

ஓவியர் நடராசன் சி. என். ராமகிருஷ்ணனுக்கு அளித்த பேட்டி, நக்கீரன், 2009: ""எனக்குத் தெரிந்த மாறன் என்ற இலங்கை மாணவர் இரண்டு யாழ்ப்பாண இளைஞர்களை அழைத்து வந்தார். அவர்களின் பெயர்கூட எனக்குத் தெரியாது. பேச்சுவாக்கில் மாறன் ஒருவரை "தம்பி' என்றும், மற்றொருவரை "பேபி' என்றும் அழைத்தார். ஆனால் பேபியோ, தம்பியை மணி என்றே கூப்பிட்டார். இவர்கள் யாராக இருந்தால் என்ன? இவர்களின் உண்மையான பெயர் என்னவாக இருக்கும் என்பதிலெல்லாம் நான் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும் இலங்கைத் தமிழர்கள் மீதான பற்றால், "உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்' என்று கேட்டேன். அதற்கு அந்தத் தம்பி "நாங்கள் ஒரு இயக்கம் ஆரம்பித்திருக்கிறோம். அதற்கு "தமிழீழ விடுதலைப் புலிகள்' என்று பெயர்கூட வைத்துவிட்டோம். இந்த இயக்கமானது சிங்கள இனவெறி அரசுக்கும், அதன் அடக்குமுறைக்கும் எதிரானது. பண்டைய காலத்தில் தமிழன்தான் இலங்கையை ஆண்டான் என்பதற்குச் சான்றுகள் இருக்கிறது. அந்த சோழமன்னன் புலிக்கொடி பறக்க இலங்கையில் ஆட்சி நடத்தியிருக்கிறான். அதனால் எங்கள் இயக்கத்தின் சின்னத்திலும் புலி இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறோம். சிவகாசி பட்டாசு லேபிள்களில் வரையப்பட்டிருந்த புலிப்படங்கள் சிலவற்றைப் பார்த்தோம். எங்களுக்குப் பிடிக்கவில்லை. புலி என்றால் சீறவேண்டும். புலியின் முகத்தில் சீற்றம் பூரணமாக வெளிப்பட வேண்டும். இப்படி ஒரு படத்துக்காக பல இடங்களில் பல நாட்கள் அலைந்துவிட்டோம். எதுவும் மனநிறைவாக இல்லை. பிறகுதான் உங்களைப் பற்றி கேள்விப்பட்டு இங்கு வந்திருக்கிறோம்'' என்றார்.

அவர்களின் எண்ணத்துக்கேற்ப நான் வரைந்து கொடுத்த படத்தில் சீற்றம் கொண்ட புலியின் முகம் எதிர்பார்த்தபடியே அமைந்துவிட்டது. அவர்களுக்கும் திருப்தியாக இருந்தது. அப்போது நான், "வளையத்தைத் தாண்டி வெளியே வருவதுபோல் புலிகளின் நகங்கள் விரிந்த கால்கள் இருந்தால் நன்றாக இருக்குமே' என்று எனது அபிப்பிராயத்தைச் சொன்னேன். உடனே தம்பி "அப்படியே வரையுங்கள் அண்ணா' என்றார் ஆர்வத்தோடு. பிறகுதான் வளைவை மூன்றாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் 11 தோட்டாக்கள் என 33 தோட்டாக்களை வரைந்தேன். அவர்களின் விருப்பப்படியே நுனியில் குத்துக்கத்தி உள்ள இரண்டு துப்பாக்கிகள் ஒன்றுக்கொன்று குறுக்காக வளைவின் பின்புறம் இருக்கும்படி வரைந்தேன். இப்படித்தான் அந்த இயக்கத்துக்குப் புலிச்சின்னம் உருவாயிற்று.

இந்தச் சின்னத்துக்கு பிளாக் எடுத்துத்தரும்படி என்னிடம் கேட்டார் தம்பி. நானும் செய்து கொடுத்தேன். அந்த மூலப்படம் மற்றும் ஃபிலிம் நெகட்டிவ்கள் இப்போதும் என்னிடம் இருக்கின்றன. பிறகு புலிச்சின்னம் பொறித்த லெட்டர்பேடு, அடையாள அட்டைகள் அச்சடித்துத் தரவேண்டுமென்றார். அதையும் நிறைவேற்றிக் கொடுத்தேன்.” [விடுதலைப் புலிகளின் கொடி சின்னத்தில் புலி தலையை சுற்றி 33 குண்டு வைத்ததன் மூலம் 33 ஆண்டுகளில் ஈழம் மலர்ந்து விடும் என்பதாக நம்பிக்கை. நக்கீரன் பத்திரிகை வெளியிட்டுள்ள புத்தகம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்: ஓவியர் நடராசா, தம்பி, முதற்பதிப்பு: 2009.]



பண்டார வன்னியன் கொடியாகக் கேடயமும் குறுக்கே இரண்டு வாளும் வைத்து சைத்ரிகர் ஒருவர் 1960களில் படம் வரைந்தார். அதனை அடிப்படையாய்க் கொண்டு, புலிக்கொடி உருவாக்க எண்ணம் திரு. பிரபாகரனுக்கு உதித்தது. வாளை எடுத்துவிட்டு மாற்றாக, கத்திமுனை கொண்ட இரண்டு ரைபிளாகவும், கேடயம் வட்டமாகவும் புலிக்கொடியில் வரைந்தளித்தவர் ஓவியர் நடராஜன். அதில் பாயும் புலி சீறி உறுமுவதாக வடிவமைத்தவர் அவரே. சிங்களரின் ஸ்ரீலங்கா கொடியில் வாளைப் பிடித்த சிங்கம் நிற்கிறது, அதனைப் பல்லவர் தொடர்பால் சிங்களர் பெற்றனர்.

உசாக் குறிப்புகள்:

(1) புலிச் சின்னம் சிந்துவெளி நாகரிகத்தில் உன்னத இடம் பெற்றமையை இந்த ஆய்வேட்டில் காணலாகும். Dr. N. Ganesan, Gharial god and Tiger goddess in the Indus valley: Some aspects of Bronze Age Indian Religion, 2007.

(2) வீணை வித்தகரை வைணிகர் என்பதும், சித்திர நிபுணரை சைத்ரிகர்
என்பதும் உண்டு. எ-டு: புதுமைப்பித்தன் சிறுகதை, கலியாணி:
http://www.tamilauthors.com/Puthumaipithan/014.html

(3) http://www.suriyakathir.com/issues/2009/dec01/pg12.php

பிரபாகரனும் நானும்... பழ. நெடுமாறன்
(மரக்காணம் பாலாவுக்கு அளித்த பேட்டி)

தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி ஒருபோதும் அவர் கருத்து சொன்னதில்லை. சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. எல்லாருடைய ஆதரவும் தேவை என்பதுதான் அவர்களுடைய எதிர்பார்ப்பு. அவர்களுக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவோ உதவிகள் செய்தபோதும், கலைஞரை அவர்கள் துளிகூட விமர்சித்ததில்லை.

''1982-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி. சென்னை பாண்டி பஜாரில் தம்பி பிரபாகரனும், பிளாட் அமைப்பின் தலைவர் முகுந்தனும் எதிர்பாராத விதமாக சந்தித்துக்கொண்டார்கள். அது துப்பாக்கிச் சண்டையில் முடிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டார்கள்.

அப்போது நான் மதுரையில் இருந்தேன். புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த பேபி சுப்பிரமணியம் என்னை உடனடியாக சென்னைக்கு வரும்படி அழைத்தார். நான் இல்லாத வேளைகளில் மயிலாப்பூரில் உள்ள எனது அறையில்தான் பேபி தங்கியிருந்தார். அவரோடு வேறு சில புலிகளும்

இருந்தனர். கைது செய்யப் பட்ட பிரபாகரனையும் முகுந்தனையும் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, சிங்களப் போலீஸ் உயரதிகாரிகள் சென்னை வந்திருந்தார்கள்.

நான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினேன். 'பிரபாகரன், முகுந்தன் ஆகியோரை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் சிங்கள போலீஸாரிடம் ஒப்படைக்கக்கூடாது' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருபது கட்சிகள் ஒன்றுகூடி நிறைவேற்றிய இத்தீர்மானம், தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இருவரையும் நாடு கடத்துவது நிறுத்தப்பட்டது. இதன் பிறகு, நான் சிறையில் இருந்த பிரபாகரனையும் முகுந்தனையும் சந்திக்கச் சென்றேன்.

இந்த இடத்தில் ஓர் உண்மையைச் சொல்லியாக வேண்டும். அதுவரை நான் பிரபாகரனைச் சந்தித்தது இல்லை. எனது அறையில் தங்கும் பேபி மற்றும் அவரது தோழர்களிடம், 'பிரபாகரனை நான் சந்திக்க வேண்டும்' என்று பல முறை கேட்டிருக்கிறேன். ஏதேதோ சாக்குகள் கூறி வந்தார்களே தவிர, பிரபாகரனை அழைத்துவரவில்லை. சென்னைச் சிறையில் சிறை அதிகாரி அறையில் நான் அமர்ந்திருந்தேன். பிரபாகரன், முகுந்தன் மற்றும் இரு தோழர்கள் உள்ளே நுழைந்தார்கள். முகுந்தனை எனக்கு அடையாளம் தெரியும். எனவே, பிரபாகரன் யாரென்று தெரியாமல் நான் திகைத்தேன்.

பிரபாகரன் முன்வந்து, 'அண்ணா! நான்தான் பிரபாகரன்' என்றபோது..., அந்தக் காட்சியை பார்க்கவேண்டுமே! எனக்குப் பேரதிர்ச்சி. ஏனென்றால், பேபியோடு எனது அறையில் தங்கியிருந்தவர்களில் இவரும் ஒருவர். பலமுறை இவரை என் வீட்டில் பார்த்திருக்கிறேன். 'எங்கய்யா உங்க தலைவர்?' என்று கேட்டபோதெல்லாம், 'அவரும் உங்களை பார்க்கனும்னுதான் விரும்பறார்' என்று பதில் வரும். இவர் வாய் பேசாமல் உட்கார்ந்திருப்பார்.

புலிகளை மாதிரி ரகசியம் காப்பதற்கு இன்னொருவர் பிறந்துவர வேண்டும்.'' என்றபடி மலரும் நினைவுகளில் வியப்பில் ஆழ்கிறார், தடை செய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ.நெடுமாறன்.

''வழக்கறிஞர் என்.டி. வானமாமலைதான் பிரபாகரனுக்கு பிணை விடுதலை வாங்கிக் கொடுத்தார். 'அவர் மதுரையில் தங்கி கையெழுத்திடவேண்டும்' என்று உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைதான் பிரபாகரனை எனக்கு நெருக்கமாக்கியது. சுமார் ஏழு மாதங்கள் என் இல்லத்தில் அவர் தங்கியிருந்தார். அந்த காலகட்டத்தில், பிரபாகரனைப் பற்றியும் அவரது இயக்கத்தைப் பற்றியும் நிறையவே நான் அறிந்துகொண்டேன்.

மதுரையில் இருந்தபோதுதான் இயக்கத்துக்கான சின்னம் வடிவமைக்கப்பட்டது. ஓவியர் நடராசன் அதை வரைந்துகொடுத்தார். அவர் மதுரை அரசு மருத்துவமனையில் பார்மஸிஸ்ட்டாக பணியாற்றியவர்.

எங்கள் வீட்டில் குடியிருந்த டைலர் தங்கராசுதான் சீருடையை வடிவமைத்துக் கொடுத்தார். தொப்பி மட்டும் மதுரை புது மண்டபத்தில் இருந்த ஒரு கடையில் தேர்வு செய்தார்கள். சீருடையை பார்த்துவிட்டு, 'நூறு பேர் இந்த ராணுவ சீருடையோடு அணிவகுக்கவேண்டும். அதை நான் பார்க்கவேண்டும்' என்றார் பிரபாகரன். அது ஆயிரம், பல்லாயிரம் என்று பெருக்கெடுத்தது. இவ்வளவு பெரிய ராணுவத்தை கட்டமைத்து, அதற்கு திறம்பட பயிற்சியளித்த மாபெரும் தலைவன், யாரிடமும் பயிற்சி பெறவில்லை என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.

கைத்துப்பாக்கி முதல் கனரக பீரங்கிகள் வரை தனக்குத்தானே பயிற்சி எடுத்துக்கொண்டார். நேதாஜியை மட்டும் அவர் ரோல் மாடலாக எடுத்துக்கொண்டார். மதுரையில், முன்னாள் இந்திய தேசிய ராணுவ வீரர்கள் மாவீரர் நேதாஜிக்காக ஒரு விழா எடுத்தார்கள். என்னோடு சேர்ந்து பிரபாகரனும் அந்த விழாவில் கல்ந்துகொண்டார். இந்திய தேசிய ராணுவ கீதம் பாடும்போது கேப்டன் லட்சுமிக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்கிருந்தவர்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதனர். வரும் வழியில் தம்பி சொன்னார், 'எத்தனை வருஷம் ஆச்சு? இவர்கள் நேதாஜியையும் மறக்கவில்லை. அந்த சம்பவங்கள்ளையும் மறக்கவில்லை.' நேதாஜி மீது தம்பி அளவு கடந்த மரியாதை வைத்திருந்தார். அவர்தான் தனக்கு வழிகாட்டி என்று தம்பியே என்னிடம் கூறியிருக்கிறார். புலிகளின் அலுவலகங்களில் நேதாஜி, பகத்சிங் ஆகிய இரண்டு பேரின் படங்களை நான் பார்த்திருக்கிறேன்.''

''முதன் முதலில் எப்போது இலங்கைக்குச் சென்றீர்கள்?''

''யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டபோது, 1982-ல் அரசுக்குத் தெரிந்து விமானப் பயணம் மேற்கொண்டேன். அதன் பிறகு 1985-ம் ஆண்டில் படகில் ரகசியப் பயணம் மேற்கொண்டேன். பிரபாகரனின் சொந்த மெய்க்காப்பாளர் படைத் தலைவர் கேப்டன் லிங்கம், இப்போதிருக்கும் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு இருவரும்தான் என்னைக் கூட்டிச் சென்றனர். என் பாதுகாப்புக்கு வந்தவர்களில் நான்கு பேரை சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றுவிட்டது. அங்கே மக்கள் படும் அவலங்களை நான் வீடியோ படமாக எடுத்துவந்தேன். அதுதான் ஈழத் தமிழர்களின் நிலைமையை முதன் முதலில் உலகத்துக்குச் சொன்னது.

தமிழ்நாடு திரும்பியதும், ராஜீவ்காந்திக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவரும் சந்திப்பதற்கு நேரம் கொடுத்திருந்தார். ஆனால், மூப்பனாரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரமும் அதைக் கெடுத்துவிட்டார்கள். அதன் பிறகு, வை.கோ.தான் அனைத்துக் கட்சி எம்பிக்களை சந்திக்க ஏற்பாடு செய்தார். எதிர்கட்சித் தலவைராக இருந்த சந்திரசேகர் இதைப் பார்த்துவிட்டு, 'நான் புலிகள்னா டெரரிஸ்ட்னு நெனச்சேன். பட் தே ஆர் லைக் சுபாஷ் போஸ், ஐ.என்.ஏ' என்று சொன்னார்.

1987-ம் ஆண்டு திலீபன் உண்ணாவிரதத்தின்போது மீண்டும் ரகசியப் பயணம் மேற் கொண்டேன். நான் பிரபாகர னோடு இருந்தபோது, இருநாட்டு ராணுவமும் என்னை வலை போட்டு தேடிக் கொண்டிருந்தது. அது ஐ.பி.கே.எஃபுக்கும் புலி களுக்கும் எப்போது வேண்டுமானாலும் மோதல் ஏற்படலாம் என்கிற காலகட்டம். யாழ் நகருக்கு ஒதுக்குப் புறத்தில் இருந்த ஒரு வீட்டில்தான் அவர் தங்கியிருந்தார். வீட்டைச் சுற்றி பங்கர்கள் இருக்கும். புலிகள் ஆயுதம் ஏந்தி காவல் காப்பார்கள்.

நானும் பிரபாகரனும் ஒரே அறையில்தான் படுத்து உறங்குவோம். அவர் சாதாரண பாயில்தான் படுப்பார். தலையணை பயன்படுத்தமாட்டார். ஒரு கையை தலைக்கு வைத்துக்கொண்டு, இன்னொரு கையில் கைத்துப்பாக்கியுடன் படுப்பார். ஒருநாள் இரவு, சிறுநீர் கழிப்பதற்காக நான் படுக்கையைவிட்டு எழுந்தேன். அவ்வளவுதான்! 'சடக்'கென எழுந்து கைத்துப்பாக்கியை எடுத்து நீட்டிவிட்டார். காரணம், அவரது எச்சரிக்கை உணர்வு. இலைகள் அசைந்தால்கூட அவர் உஷாராகிவிடுகிறார். பாய் அசைந்த ஓசைதான் அவரை எழுப்பிவிட்டது என்பதை புரிந்துகொண்டேன். அதன்பிறகு, இயற்கை உபாதைக்குகூட நான் இரவில் எழுந்திருக்கவில்லை.

காலையில் எழுந்ததும் உடற்பயிற்சிக்குப் பிறகு அலுவகம் செல்வார். அங்கே முக்கிய தளபதிகளுடன் ஆலோசனை நடத்துவார். அதன் பிறகுதான் குளியல், சாப்பாடு. மதிய வேளைகளில் பயிற்சிக் களத்துக்குச் சென்றுவிடுகிறார். அங்கே ஒரு மனித பொம்மை வைத்திருப்பார்கள். அதன்மீது துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடக்கும்.

நான் பார்த்தவரையில் மையப்புள்ளியில் சுடும் ஒரே நபர் பிரபாகரனாகவே இருந்தார். வலது கையில் துப்பாக்கியை பிடித்துக்கொண்டு இடது கையால் வலது கையை பிடித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தோட்டா விசை காரணமாக கை அசைந்து குறி தவறிவிடும். பிரபாகரன் தன்னுடைய கைத்துப்பாக்கியைக் கொடுத்து, 'அண்ணா! நீங்க சுடுங்க...' என்றார். அப்போது காசி ஆனந்தன் பக்கத்தில் இருந்தார். நான் கையை பேலன்ஸ் செய்யவேண்டும் என்பதை மறந்து, ஒற்றைக் கையால் சுட்டுவிட்டேன். ஒரே கைத்தட்டல் ஆரவாரம்! மையப்புள்ளிக்கு அடுத்த வட்டத்தில் தோட்டா பாய்ந்ததுதான் அதற்குக் காரணம். தம்பி உடனே, 'என்னண்ணா! எடுத்த எடுப்பிலேயே அசத்திட்டீங்க. அதுவும் ஒரே கையால!' என்றார். 'இதுதான் தம்பி குருட்டுப் பூனை விட்டத்துல பாஞ்ச கதை. எனக்கென்ன தெரியும்? ஏதோ குருட்டாம்போக்குல சுட்டேன். அது சரியா பாஞ்சிருக்கு' என்றேன். 'ஆபத்துணா... உங்களுக்கு சொல்லிக்கொடுக்கிறதே ஆபத்து' என்று சொல்லி சிரித்தார்.

இன்னொரு ஆச்சர்யமான விஷயம் சொல்கிறேன். மேசை மீது விதவிதமான துப்பாக்கி ரவைகள் பரப்பி வைக்கப்பட்டு இருந்தது. போராளிகள், அவருடைய கண்களை இருக்கக் கட்டினர். அவர் ஒவ்வொரு ரவையாக தடவிப்பார்த்து, எது எது, எந்தெந்த துப்பாக்கிகளுக்கு உரியது என்பதை மிகச் சரியாக சொல்லிக்கொண்டு போனார். அதேபோல புதிய புதிய ஆயுதங்களை தயார் செய்வதிலும் புலிகள் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள்.

தளபதிகள் மீது மிகவும் பாசமாக இருப்பார் தம்பி. வெளிநாட்டிலிருந்து வரும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள், காமிரா, வாட்சுகள் என அனைத்தையுமே தளபதிகளுக்கு கொடுத்துவிடுவார். 'டே! நீ இதை எடுத்துட்டுப் போடா' என்பார். நான், 'வாட்சையாவது நீங்க கட்டலாமே!' என்றேன். 'நீங்க வேறண்ணா! என் மனைவி ஒரு கடிகாரம் கொடுத்திருக்கா. அதைத்தான் கட்டிட்டு இருக்கேன். வேற கட்டினா, அவ சண்டைக்கு வந்துடுவா!' என்றார். தனக்கென அவர் எதையும் வைத்துக்கொண்டதில்லை.

அவருடைய கைத்துப்பாக்கி இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டது. கிட்டுதான் அதை பரிசாக அளித்திருந்தார். தமிழ்நாட்டுத் தலைவர்களில் எம்.ஜி.ஆர்.மீதுதான் அவர் அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். அந்தளவுக்கு எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார். அதேபோல, புலவர் கலியபெருமாள், பெருஞ்சித்திரனார் ஆகியோர் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.'' -சற்று இடைவெளிவிட்டு தொடர்கிறார் நெடுமாறன்.

''ஒருபோதும் அவர் மக்கள் வேறு குடும்பம் வேறு என்று பிரித்துப் பார்த்ததில்லை. ஒரு தடவை நாங்கள் காட்டில் உட்கார்ந்திருந்தோம். அவர் மகன் சார்லஸ் ஓடி வந்து அவர் மடி மீது ஏறி விளையாடிக்கொண்டிருந்தான். துவாரகாவும் இருந்தாள். 'இந்தக் குழந்தைகள் இன்றைக்குச் சிரித்து விளையாடுகிறார்கள். நான் இவர்கள் மீது பாசம் வைக்கவில்லை. எங்கள் நாட்டில் எத்தனையோ குழந்தைகள் செத்துப் போகிறார்கள். நாளைக்கு இவர்களுக்கும் அந்தச் சாவு வரலாம்.' என்றார். எதையும் தாங்கும் மனப்பக்குவத்தை நாங்கள் பெற்றுவிட்டோம். அதேபடிதான் சார்லஸுக்கு ஆகிவிட்டது.

''பெண் புலிகளைப் பற்றி?''

''பெண்களை அவர் ஆண்களுக்கு நிகராகக் கருதினார். நேதாஜி படையணியில் இருந்த மகளிர் பிரிவுகூட மருத்துவ உதவிப்படைதான். உலகிலேயே, ஆண்களுக்கு நிகராக ராணுவத்தில் பெண்களைப் பயன்படுத்தியது பிரபாகரன்தான். அதன்பிறகுதான் மற்ற நாடுகள் பெண்களைச் சேர்த்தன. 'ஈழத் தமிழினம் எண்ணிக்கையில் குறைவு. எனவே பெண்களின் பங்கு தவிர்க்க முடியாதது. சுதந்திரப் போராட்டத்தில் ஆயுதம் தாங்கிய பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம், பெண் அடிமைத் தனத்தையே நாம் உடைக்கிறோம்' என்று பெருமையுடன் என்னிடம் கூறினார்''.

''பிரபாகரன் கண்ணீர்விட்ட சம்பவம் ஏதாவது உண்டா?''

''நவம்பர் 27 மாவீரன் சங்கர் இறந்த நாள். கொரில்லா போரின்போது, குண்டடி பட்ட சங்கரை குற்றுயிரும் குலையுயிறுமாய் மதுரைக்குத் தூக்கி வந்தார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு அதிகமான தண்ணீர் தாகம் ஏற்படும். படகில் வரும்போது அவருக்கு நிறைய தண்ணீர் கொடுத்திருக்கிறார்கள். அவ்வாறு செய்திருக்கக்கூடாது. அதனால், ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தும் சங்கர் மரணம் அடைந்துவிட்டார். 'தம்பி, தம்பி' என்று அலறியபடியே பிரபாகரன் மடியில்தான் உயிரைவிட்டார். பிரபாகரன் அப்போது கண்ணீர்விட்டதை நான் பார்த்தேன். அதன் பிறகு திலீபன் இறந்தபோதும் கலங்கினார்.'' என்கிறவர், ''அங்கிருந்து நான் கிளம்பும்போது எல்லோரும் சேர்ந்து குதூகலமாக என்னை வழியனுப்பினார்கள். 'அண்ணா ஒவ்வொரு தடவையும் உங்களை அழைக்கிறப்போ, சரியான வசதிகளை செஞ்சு கொடுக்க முடியலை. அடுத்த தடவை நீங்க வரும்போது, சுதந்திரத் தமிழீழத்தில் உங்களுக்கு ராஜமரியாதையோடு வரவேற்பு கொடுப்போம்' என்றார்கள்'' சொல்லிக்கொண்டே கண்களை மூடி மீண்டும் நினைவுகளில் ஆழ்கிறார்.

''கடைசியாக எப்போது தொலைபேசியில் பேசினீர்கள்?''

''நான் எப்போது தொலைபேசியில் பேசினேன்? இதுவரை அப்படி பேசியதே கிடையாது. நான் மட்டும் அல்ல, யாருமே அவருடன் தொலைபேசியில் பேச முடியாது. காரணம், அவர் தொலைபேசியோ, கைபேசியோ பயன்படுத்துவது இல்லை.''

''அப்படியானால், பிரபாகரனுடைய செல்போன் என்று இலங்கை ராணுவம் காட்டியது?''

''பல கட்டுக்கதைகளில் அதுவும் ஒன்று. அப்படி அவர் செல்போன் பயன்படுத்தி இருந்தால், எப்போதோ அவரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து குண்டுவீசி இருப்பார்களே! இந்த நவீன யுகத்தில் செல்போன் என்பது இருப்பிடத்தை அறியும் ஒரு கருவி. சிங்களவர்களுக்கு பொய் சொல்வதில்கூட புத்திசாலித்தனம் இல்லை.''

''ஒலிப்பதிவு செய்யப்பட்ட பிரபாகரனின் பேச்சு ஒன்று இருக்கிறது. தமிழக தேர்தல் குறித்து அதில் பேசப்பட்டிருக்கிறது. இப்பேச்சு வெளியானால், தமிழகத்தில் கொந்தளிப்பான நிலை ஏற்படக்கூடும் என்பதால், உளவுத்துறை அதைக் கைப்பற்றி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறதே?''

''வேடிக்கையான கருத்து. தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி ஒருபோதும் அவர் கருத்து சொன்னதில்லை. சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. எல்லாருடைய ஆதரவும் தேவை என்பதுதான் அவர்களுடைய எதிர்பார்ப்பு. அவர்களுக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவோ உதவிகள் செய்தபோதும், கலைஞரை அவர்கள் துளிகூட விமர்சித்ததில்லை.

91-ல் பிரபாகரன் கை ஓங்கியிருந்த நேரம். கலைஞர் பேசி, முரசொலியில் ஒரு செய்தி வெளியாயிற்று. 'பிரபாகரன் யார்? எனக்காக சைதாப்பேட்டை தொகுதியில் தேர்தல் வேலை பார்த்த தம்பிதானே!' என்று எழுதப்பட்டிருந்தது. நான் பிரபாகரனைச் சந்தித்தபோது முரசொலியை எடுத்துக் காட்டினேன். தம்பி அதற்கு, 'வை.கோ.கூட தேர்தல்ல நின்னாரு. அப்போ நான் அங்கேதான் இருந்தேன். நானோ, எங்க ஆட்களோ உங்க தொகுதிகளுக்காவது வந்திருக்கிறோமா? இல்லையே! ஏதோ சொல்றாரு. சொல்லிட்டுப் போகட்டும்' என்றார். ஆக, தமிழ்நாடு பற்றியோ, அதன் தலைவர்கள் பற்றியோ தம்பி விமர்சனம் செய்யமாட்டார். 'மாவீரர் நாளில் அவருடைய பேச்சு வெளியாகுமா?' என்று எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள். நானும் அப்படித்தான்.'