கணித்தமிழ் – கடந்து வந்த பாதையும், தற்போதைய நிலையும் (ஃபெட்னா மாநாடு, 2008)

ஜெ.சௌந்தர் (வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாடு, ஆர்லாண்டோ, ஃப்ளாரிடா. ஜூலை 2008 விழாமலரில் வெளியான கட்டுரை).

இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் கம்ப்யூட்டரிலும், பின்னர் இணையத்திலும் ஏறிய மொழி - தமிழ் மொழி. இத்தகைய பெருமைமிகு வரலாற்றுப் பின்னணியோடு கணித்தமிழ் கடந்து வந்த பாதைகளையும், ஏற்பட்ட தடைகளையும், தீர்வுகளையும், சாதனைகளையும், தற்போது உள்ள நிலைமை மற்றும் எதிர்நோக்கி உள்ள சவால்களையும் இங்குப் பார்ப்போம்.

கடந்து வந்த பாதை:

கணித்தமிழின் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால், அதன் கால கட்டத்தை நாம் இரு பிரிவுகளில் பிரிக்கலாம்.
ஒன்று: 1980 முதல் 1995 வரை.
இரண்டு:. 1996 முதல் 2007 வரை.


இன்னும் விளக்கிச் சொல்லப்போனால், இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் இணையம் அறிமுகமாகி வேகமாக வளர ஆரம்பித்தது 1995 முதல் 1997 ஆண்டுகளில் தான். அதனால், கணித்தமிழ் வரலாற்றையும் இணையத்திற்கு முன்பு, இணையத்திற்கு பின்பு என இரு வகையாகப் பிரித்துப் பார்ப்பது நல்லது. அப்படிப் பார்த்தால் தான் சூழ்நிலைகளுக்கேற்ப ( இணையத்தின் வருகைக்கு முன்பு , பின்பு ), அந்தந்தக் காலகட்டத்திற்கேற்ப உண்டான சவால்களையும், சிக்கல்களையும், தீர்வுகளையும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

1980 முதல் 1995 வரை (இணையத்தின் வருகைக்கு முன்பு)

கம்ப்யூட்டரில் தமிழ் என்பது 1980களின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டது. இந்த முதல் நிலை காலகட்டத்தில் உழைத்தவர்களை நன்றியோடு நினைத்துப் பார்ப்பதற்கு இந்தக் கணித்தமிழ் உலகம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. ஏனென்றால், கம்யூட்டரில் தமிழைத் தெரியவைப்பதற்கு அன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் , தன்னார்வலர்கள், கல்வி அறிஞர்கள், பேராசிரியர்கள் என்று பலர் நேரம் காலம் பார்க்காமல், எதையும் எதிர்பார்க்காமல் உழைத்துள்ளனர்.

இப்படி, பல்வேறு நபர்களின் உழைப்பால், தமிழ் மொழிக்கென்று ஏராளமான எழுத்துருக்களும், மென்பொருட்களும் இலவசமாகவே கிடைக்கத் தொடங்கின. அவற்றில் முக்கியமான சில:

• திரு, ஆதமி, திருவின், மயிலை-ஸ்ரீ எழுத்துருக்கள் - திரு. K. ஸ்ரீனிவாசன், கனடா
http://www.geocities.com/athens/7444/ , http://www.thiruwin.com/

• மயிலை எழுத்துரு – முனைவர். கல்யாணசுந்தரம்.
http://www.geocities.com/Athens/5180/index.html , http://www.projectmadurai.org

• பிசி தமிழ் மென்பொருள் – முனைவர். வாசு ரெங்கநாதன்
http://www.sas.upenn.edu/~vasur/project.html

• நளினம் செயலி – திரு. சிவகுருநாதன் செல்லையா
http://www.nalinam.com/

• கம்பன் செயலி – திரு. வாசுதேவன்
http://www.kamban.com.au/

• அணங்கு எழுத்துரு – திரு.குப்புசாமி
http://www.kalvi.com/

• துணைவன் செயலி – திரு. ரவீந்திரன் பால்
http://www.thunaivan.com/

• அஞ்சல் எழுத்துருக்கள், முரசு செயலி– திரு. முத்து நெடுமாறன்
http://www.murasu.com/

இத்தகைய எழுத்துருக்களும் (fonts), மென்பொருட்களும் பெரும்பாலும் ஆரம்பகால டாஸ், விண்டோஸ் இயங்குதளத்திலேயே (DOS, Window 92) பயன்படுத்தக் கூடியதாக இருந்தது. ஆனாலும், யுனிக்ஸ் இயங்குதளத்திற்கான தமிழ் எழுத்துருக்கள் மற்றும் மென்பொருட்கள் உருவாக்குவதற்கான முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தானிருந்தன.

இவ்வாறு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான எழுத்துருக்களும், செயலிகளும் வரத் தொடங்கிய பிறகு தான் பிரச்சனைகளும், சவால்களும் வரத்தொடங்கின. மிக முக்கிய பிரச்சனையாக இருந்தவை: தமிழ் படிக்கக் கண்டிப்பாக ஏதெனும் ஒரு தமிழ் எழுத்துருவையாவது கம்ப்யூட்டரில் நிறுவியாக வேண்டும். ஒரு எழுத்துருவில் எழுதப்பட்ட தரவை (file) மற்றொரு எழுத்துரு கொண்டு படிக்க முடியவில்லை. ஒரு எழுத்துருவைப் பயன்படுத்தி பழகியவர்களால் மற்ற எழுத்துருக்களைப் பயன்படுத்த முடியவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு எழுத்துருவும் வெவ்வேறான விசைப்பலகை வடிவமைப்பையும் (keyboard layout), குறியீட்டு முறையையும் (encoding) கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இத்தகைய பிரச்சனைகள் இருந்தாலும் தொடர்ந்து நிறைய எழுத்துருக்களும், செயலிகளும் வந்து கொண்டுதான் இருந்தன.

அன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டரின் பரவல் மற்றும் பொது மக்களுக்கான கம்ப்யூட்டர் பயன்பாடுகள் இன்று போல் பெரிதாக இல்லை. பெரும்பாலும் தினப்பத்திரிக்கைகள், வார, மாத இதழ்கள் போன்றவற்றை வெளியிடும் ஊடக நிறுவனங்கள் மற்றும் பதிப்புத் தொழிலில் உள்ளவர்கள் மட்டுமே தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி வந்தனர். அவர்களும் புதுப்புது வடிவ எழுத்துருக்களை மட்டுமே எதிர்பார்த்தார்களே தவிர பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முன் வரவில்லை. அதனால், ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த, வசதியான ஒரு விசைப்பலகை வடிவமைப்பு மற்றும் குறியீட்டு முறை கொண்டவற்றை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

கடைசியாகப் பார்த்தால், இந்த காலகட்டத்தின் இறுதியில் அதாவது 1990களின் மத்தியில் ஏராளமான எழுத்துருக்களும், செயலிகளும், மென்பொருட்களும் ஓர் ஒழுங்கு முறையின்றி வெவ்வேறு விசைப்பலகை வடிவமைப்புகள், குறியீட்டு முறைகள் கொண்டு ஒரு குழப்பமான நிலையிலேயே தொடர்ந்து வந்தன.

1996 முதல் 2007 வரை (இணையத்தின் வருகைக்கு பின்பு)

இணையத்தின் வருகை மற்றும் அதன் பரவலுக்குப் பிறகு தகவல் தொழில்நுட்பத் துறை மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் அதன் தாக்கம், ஆளுமை இருந்தது. அது ஒரு வகையான பரட்சியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. இணையத்தின் மூலம் தகவல் பரிமாற்றம் எளிதாக்கப்பட்டது மற்றும் விரைவாக்கப்பட்டது. மின்னஞ்சல், அரட்டை, குழுமங்கள், பல்வேறு வகையான இணைய தளங்கள் என்று அதன் வீச்சு பலமாகத் தொடங்கி வளர்ந்து கொண்டே இருந்தது. அத்தகைய வளர்ச்சி கணித்தமிழிலும் ஏற்பட்டது. ஏற்கனவே இருந்த ஏராளமான எழுத்துருக்கள் மற்றும் மென்பொருள்களுடன் இணையத்திலும் தமிழ் தன் பயணத்தைத் தொடங்கியது.

உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் தங்களுக்கென சொந்த இணையப் பக்கங்களை உருவாக்கினர். அதில் பழந்தமிழ் இலக்கியங்கள் உட்பட பல்வேறு விதமான தகவகளைப் பதிவு செய்யத் தொடங்கினர். அப்படி அன்று சிறு அளவில் தொடங்கி இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்பது தான் ”மதுரைத் திட்டம்” (http://www.projectmadurai.org) ஆகும். தனி மனிதர்களின் இணைய பக்கங்கள் தவிர , தமிழகத்தின் அனைத்து முன்னணி தினசரிப் பத்திரிக்கைகளும் தங்கள் பதிப்பை இணையத்தில் வெளியிடத் தொடங்கின. அதோடு ”தமிழர் பக்கங்கள்” என்ற தனிப்பகுதி கொண்ட சிஸ் இண்டியா – http://www.sysindia.com (தமிழ் மேட்ரிமோனியல் இணையத்தின் நிறுவனர் முருகவேல் ஜானகிராமன் முதலில் தொடங்கி நடத்தியது.) ஆறாம்திணை – http://www.aaraamthinai.com , இன்தாம் – http://www.intamm.com , திண்ணை – http://www.thinnai.com , மின்னம்பலம் – http://www.ambalam.com போன்ற மின் இதழ்களும் வந்தன. இங்கே, “தமிழ்.நெட்” (http://www.tamil.net) என்கிற குழுமத்தினைப் பற்றிக் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். இந்த “தமிழ்.நெட்” குழுமம் தான் இன்றைய யாஹூ மற்றும் கூகுள் தமிழ் குழுமங்களுக்கு முன்னோடியானது. இந்தக் குழுமத்திலே அன்று ஆரோக்கியமான விவாதங்கள் பல நடைபெற்றன.

இவ்வாறு, பல்வேறு வகையான இணையத்தளங்கள் தமிழில் வரத் தொடங்கினாலும் ஏற்கனவே இருந்த பிரச்சனைகளான பல வித விசைப்பலகை வடிவமைப்புகள், குறியீட்டு முறைகள் என்பதோடு இன்னும் புதிய வகை விசைப்பலகை வடிவமைப்புகள், குறியீட்டு முறைகள் என்று அதுவும் வளரத் தொடங்கியது. ஒவ்வொரு தமிழ் இணையத்தளத்தையும் பார்ப்பதற்கு அதெற்கென்ற ஒரு எழுத்துருவும், குறியீட்டு முறையும் தேவைப்பட்டது.

இத்தகைய சமயத்தில் தான் தமிழுக்கென ஒர் ஒழுங்குமுறை , தரக் கட்டுப்பாடு அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் சிங்கை. நா. கோவிந்தசாமி அவர்களின் முயற்சியால் சிங்கப்பூரில் முதல் தமிழ் தகவல் தொழில்நுட்ப மாநாடு 1997ல் நடந்தது. இதுவே, பின்னர் உலகத் தமிழ் இணைய மாநாடு என்று வருடம் தோறும் தொடர்ந்து 5 முறை நடப்பதற்கு முன்னோடியாக இருந்தது. இந்த மாநாடுகளில் உலகம் முழுவதிலும் இருந்து கணித்தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த 5 வருட மாநாடுகளின் முடிவில் கூட ஒரே ஒரு விசைப்பலகை வடிவமைப்பையும், குறியீட்டு முறையையும் அறிவிக்க முடியாதது தான் கணித்தமிழுக்கும், தமிழர்களுக்கும் நேர்ந்த கொடுமை எனலாம். இப்போது கூட குறைந்தது 16 வகை விசைப்பலகை வடிவமைப்புகளும், 5 வகை குறியீட்டு முறைகளும் புழக்கத்தில் உள்ளன.

இதற்கிடையில், தமிழைக் கம்ப்யூட்டரில் எளிதாக உள்ளீடு செய்வதற்கென்று பல்வேறு வகையான புதிய செலிகளும் வரத் தொடங்கின. அதில், முக்கியமானது திரு.முகுந்த் (http://www.thamizha.com) தலைமையில் உருவான இ-கலப்பை எனும் மென்பொருள். இதன் மூலம் தமிழை கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்வது எளிதாக்கப்பட்டது. இவ்வாறு உள்ளீடு செய்யப்படும் முறை எளிதாக்கப்பட்டதால் இன்னும் நிறைய வலைத்தளங்கள், யாஹூ குழுமங்கள் என்று இணையத்தில் தமிழ்ப் பக்கங்கள் அதிகமாயின. அத்தகைய யாஹு குழுமங்களிம் முக்கியமானது அகத்தியர் குழுமம், ராயர் காபி கிளப் ஆகியவை.

அதோடு , ஒவ்வொரு இணைய தளத்திற்கும் தேவையான எழுத்துருவைத் தானே தரவிறக்கம் செய்யக்கூடிய தொழில்நுட்பமும் உருவானது. ஏராளமான எழுத்துரு வகைகளைக் கொண்டிருந்த தமிழுக்கு இது வரப்பிரசாதமாக இருந்தது. அத்தகைய, தானே தரவிறக்கம் செய்யக்கூடிய ( தேனீ என்கிற ஒரு இலவச தமிழ் எழுத்துரு இணைப்புடன்) – இயங்கு எழுத்துருவை (http://www.geocities.com/csd_one/umar/THENEE.eot) அனைவருக்கும் இலவசமாக அளித்தவர் அமரர். திரு. உமர் அவர்கள் (http://www.pudhucherry.com/pages/umar.html ). அதோடு இன்னுமொரு சாதனையையும் அவர் செய்தார். அது – ஒரே எழுத்துருவில் TSC, Unicode என்கிற இரண்டு குறியீட்டு முறைகளைப் புகுத்தியது. இவ்வாறு, பல்வேறு நபர்களின் தன்னலமற்ற முயற்சியால் தமிழ் இணையத்திலும் வேகமாக வளர்ந்தது.

அதோடு, பிரபலமான விகடன், குமுதம் போன்ற வார இதழ்களும், மாத இதழ்களும் ஏதோ ஒரு வகை எழுத்துருவோடு இணையத்தில் வரத் தொடங்கின. தட்ஸ்தமிழ்.காம்,. வெப் உலகம்.காம் போன்ற மின்னிதழ்களும் வரத்தொடங்கின.

இந்த சமயத்தில் தான் 2003ம் ஆண்டுவாக்கில் வலைப்பதிவு (Blog) எனும் புது வரவு இணையத்தில் வந்தது. இந்த வலைப்பதிவின் மூலம் யார் வேண்டுமானாலும், அதிகம் கம்ப்யூட்டர் பற்றி தெரியாதவர்களும் கூட தங்களுக்கென ஒரு வலைப்பதிவைத் தொடங்கி எழுதலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதன் மூலம் ஏற்கனவே இருந்த பல்வகை எழுத்துருக்கள், செயலிகள், இயங்கு எழுத்துருக்கள் என்கிற வசதிகளோடு எந்த இந்திய மொழிகளையும் விட தமிழில் தான் அதிக வலைப்பதிவுகள் என்று அதிக எண்னிக்கையில் தமிழ் வலைப்பதிவுகள் வரத்தொடங்கின. அத்தகைய வலைப்பதிவுகள், ஒரு குறுகிய வட்டத்திலேயே இருந்தது. ஒருவர் எழுதிய வலைபதிவை அவரது நண்பர்களோ, அவரது வலைப்பதிவைத் தெரிந்தவர்களோ என மிகச் சிலரே படிக்க முடிந்தது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ”தமிழ்மணம்” (http://www.thamizmanam.com) என்கிற ஒரு வலைப் பதிவுத் திரட்டியை உருவாக்கினார் , திரு. காசி ஆறுமுகம். இந்த தமிழ்மணம் இணையத் தமிழ் உலகில் ஒரு புதிய பாய்ச்சலை உண்டாக்கியது எனலாம். இந்த ‘தமிழ்மணம்’ பல்வேறு மட்டங்களில் பல்வேறு தாக்கங்களை உண்டாக்கியது. ஒரு வலைப்பதிவர்க்கான வாசகர் அளவை அதிகரித்ததது முதல் ஒரு மாற்று ஊடகமாக தமிழ் இணையத்தை நிறுத்தியது வரை என சொல்லலாம். கருத்துத் திணிப்புகளையே செய்திகளாகக் கொண்ட அதிகாரமிக்க பத்திரிக்கை உலகில், தடைகளற்ற செய்திகளையும், தகவல்களையும், கருத்துக்களையும் கொண்ட வலைப்பதிவுகளை ஒருங்கிணைத்துத் தந்தது. மேலும், புதுப்புது வலைப்பதிவுகள் தொடங்கிட ஓர் ஆர்வத்தையும் கொடுத்தது.

இத்தகைய, புதுப்புது தமிழ் வலைப்பதிவுகள் மற்றும் இணைய தளங்களின் வருகை நல்ல தகவல்களை தமிழில் ஒரே ஒரு குறியீட்டு முறையில் ஓரிடத்தில் சேர்த்து வைக்க வேண்டும், அத்தகவல்களை தேடுவதற்கு வசதி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை எற்படுத்தியது. அதன் விளைவு தான், தமிழ் விக்கிபீடியா. ( http://ta.wikipedia.com ) . இப்போதி தமிழ் விக்கிபீடியாவில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் விதவிதமான தலைப்புகளில் கிடைக்கிண்றன. ஆனாலும், மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழில் கட்டுரைகள் குறைவாகவே உள்ளன.

தற்போதைய நிலை:

இன்றைய இணைய உலகில் கணித்தமிழின் அடுத்த கட்ட நகர்வாக இருக்கவேண்டியது யுனிகோட் எனும் ஒருங்குறியைப் பயன்படுத்துவது தான். ஆனால், கிட்டத்தட்ட கால் நூற்றாண்டைக் கடந்து விட்ட பிறகும், உலக மொழிகள் எல்லாம் யுனிகோட் பயன்படுத்த தொடங்கிய பிறகும், நாம் இன்னும் பழைய குறியீட்டு முறைகளையே பின்பற்றிக் கொண்டிருந்தால் கணித்தமிழ் வளர்ச்சி பாதிக்கப்பட்டு ஒரே இடத்திலேயே தேங்கி விடக்கூடிய நிலை உருவாகும். யுனிகோட் குறியீட்டு முறைக்கு மாறுவது மிகவும் அவசியம். ஏனென்றால் அதன் பயன்கள் அளப்பரியது. மிக முக்கியமானது அதன் தேடுதல் வசதி. அதனால் தான், தொடங்கப்பட்ட நாளிலிருந்து கூகுள் தனது சேவைகள் அனைத்தையும் யுனிகோட் குறியூட்டு முறையில் வழங்கத் தொடங்கியது. அதானலேயே, அதன் சேவைகளை மற்ற போட்டி நிறுவனங்களை விட எளிதாகவும், விரைவாகவும் மற்ற உலக மொழிகளிலும் வெளியிட முடிந்தது. தேடும் வசதி மட்டுமல்ல, யுனிகோட் பயன்படுத்தினால் தமிழ் மொழியில் இருக்கும் ஒரு தகவலை மற்ற இந்திய மொழிகளுக்கோ அல்லது உலக மொழிகளுக்கோ ஒலிபெயர்ப்பு (transliteration) செய்யலாம். மொழிபெயர்ப்பு (translation) செய்யலாம். ஒரு வடிவத்தில் சேர்த்து வைத்த தகவல்களை வெவ்வேறு வடிவங்களில் மாற்றலாம். (xml to text, html, PDF, flash ).

பன்னாட்டு நிறுவனங்களான யாஹூ (http://in.tamil.yahoo.com) , மைக்ரோசாப்ட் (http://tamil.in.msn.com), AOL (http://www.aol.co.in/tamil )ஆகியவை எல்லாம் தங்களது தமிழ்ப் பதிப்பு இணைய தளங்களை யுனிகோட் முறையில் வெளியிடும் போது , இந்தியாவில் இருந்து வெளிவரும் இணையதளங்கள் பெரும்பாலும் யுனிகோட் முறையில் வருவதில்லை. அந்த நிலை மாறவேண்டும்.

இந்தியாவில், 5% ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருந்த கம்ப்யூட்டர் மற்றும் இணையம் இன்று எல்லோரும் பயன்படுத்தும் வகையில் நகர்ப்புறம் மற்றும் கிராமங்களில் பரவி வருகிறது. அதிலும் இணையம் பயன்படுத்துபவர்களில் 60 % பேர் தங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் தங்கள் தாய் மொழியில் தகவல்களைக் காணவே விரும்புகிறார்கள் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. அப்படியே தமிழ் மொழியில் தகவல்களைப் பெற விரும்புகிறவர்களுக்குத் தேவையான தகவல்கள் இணையத்திலே கிடைக்கிறதா என்றால் இல்லை என்றே கூறலாம். ஒன்று திருக்குறள், ஆத்திசூடி, கம்ப ராமாயனம் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் கிடைக்கிறது. அல்லது சினிமா, அரசியல், மதம் மற்றும் சாதி சண்டைகள் போன்ற குப்பைகள் தான் இருக்கிறது. கலை, சுற்றுச்சூழல், அறிவியல், மருதுவம், வணிகம், வர்த்தகம் பற்றிய நல்ல தகவல்களையோ, ஆய்வுக் கட்டுரைகளையோ காண்பது மிக அரிது, அப்படியே இருந்தாலும் தேடுபவர்களுக்கு கிடைக்காத வைகையில் ஏதோ ஒரு குறியீட்டு முறையில் எங்கோ இருக்கும்.

அந்த நிலை மாற நாம் எல்லோரும் கணித்தமிழ் பழக வேண்டும். யுனிகோட் பயன்படுத்த வேண்டும். இன்னும் நிறைய பயனுள்ள ஆக்கங்களைக் கொண்டு வரவேண்டும். வருடக்கணக்கில் கம்ப்யூட்டர் பயன்படுத்தி வரும் நாம், என்றைக்காவது தமிழில் தமது பெயரையாவது கம்ப்யூட்டரில் பார்க்க நினைத்தது உண்டா? இந்த சின்ன முயற்சியோடு , கணித்தமிழில் நாம் நுழைவோம். அந்த சின்ன முயற்சிக்கு உங்களுக்கு உதவுவதற்காகவே ”FETNA” அமைப்பானது ”தமிழ்மணம்” மற்றும் ”INFITT” அமைப்புகளுடன் சேர்ந்து ”கணித்தமிழ் பயிற்சிப் பட்டறை”யை இந்த தமிழ் திருவிழாவில் நடத்துகிறது. நீங்களும் கண்டிப்பாக கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.

7 comments:

Anonymous said...

பல தகவல்களைச் சொல்கிறது. நன்றி!

முனைவர் அண்ணாகண்ணன் said...

மிகவும் பயனுள்ள கட்டுரை.

kathiresan said...

மிகச் சரியானா தருணத்தில் வந்துள்ள கட்டுரை. இன்னும் இதையும் தாண்டி நாம் போய் உள்ள பாதை ஒன்று உள்ளது. செல்பேசியில் கூட நம் தமிழ் வந்துள்ளது. அதற்க்கு நீங்கள் www.fublish.com என்ற இணையத்தில் உலவவும். வியக்கத்தக்க பல முற்ப்போக்கான நடவடிக்கைகள் நடந்துள்ளது. செல்பேசியில் தமிழ் என்பது வியக்கத்தக்க முயற்சி. அதில் நம் வெற்றி பெற்றுள்ளது.

kathiresan said...

மிகச் சரியானா தருணத்தில் வந்துள்ள கட்டுரை. இன்னும் இதையும் தாண்டி நாம் போய் உள்ள பாதை ஒன்று உள்ளது. செல்பேசியில் கூட நம் தமிழ் வந்துள்ளது. அதற்க்கு நீங்கள் www.fublish.com என்ற இணையத்தில் உலவவும். வியக்கத்தக்க பல முற்ப்போக்கான நடவடிக்கைகள் நடந்துள்ளது. செல்பேசியில் தமிழ் என்பது வியக்கத்தக்க முயற்சி. அதில் நம் தமிழ் வெற்றி பெற்றுள்ளது.

Unknown said...

செல்பேசியில் தமிழ் அதுவும் 500 மேற்ப்பட்ட புத்தகங்களை படிக்கும் வசதி. ஒரு பெரிய நூலகத்தை செல்பேசியில் கொண்டு வந்துள்ளது நல்ல ஒரு முயற்சி . www.fublish.com/seed என்ற இணையத்தில் எல்லா தகவல்களும் உள்ளது.

ஹரி ஓம் said...

அன்புடையீர்,வணக்கம்.உங்களது பதிவுகளின் வாசகன் நான்.பேரூர் அடிகளார் அமெரிக்கா வந்திருந்தபோது உங்களது வீட்டில் தங்கியதாக கேள்விப்பட்டேன்.மகிழ்ச்சி.நீங்கள் தமிழ்நாடு வரும்பொழுது சந்திக்க விரும்புகிறேன்.
அன்புடன்
ஸ்ரீநிவாசன்

செல்வமுரளி said...

அன்பின் கணேன் அய்யா
சரியான நேரத்தில் கிடைத்த கட்டுரை. மிக்க நன்றிகள். வேலூரில் நடைபெறவிருக்கும் புத்தக கண்காட்சியில் கணித்தமிழ் அரங்கில் அமைக்கப்படும் புகைப்பட கண்காட்சியில் இக்தகவல்களை பயன்படுத்திக்கொள்கிறேன்.
நன்றி!
என்றும் அன்புடன்
செல்வ.முரளி