கொசுத்தொல்லை ~ ஓமக்குச்சி நரசிம்மனும் கவுண்டமணியும்

இரண்டு ஆண்டுகளாக வலைப்பதிவுகளைப் பார்க்கிறேன். அடிக்கடி வரும் ‘கொசுத்தொல்லை தாங்கலை’ என்ற தொடர் விளங்காமல் இருந்தது. அண்மையில் மறைந்த நகைச்சுவை நடிகர் ‘ஓமக்குச்சி’ நரசிம்மன் பற்றிய வசனம் என்று பின்னர்தான் தெரிந்தது. எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கத் துவங்கிய ஓமக்குச்சி நரசிம்மன், கவுண்டமணி-செந்திலுடன் பின்னர் வடிவேலு பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானார். குறிப்பாக சூரியன் படத்தில், கவுண்டமணி, 'நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா' என ஓமக்குச்சி நரசிம்மனைப் பார்த்துச்சொல்லும் வசனம் மிகப் பிரபலம். சந்திரலேகா படத்தின் வசனம் ‘அல்வா கொடுக்கிறது’ போல், ‘கொசுத்தொல்லை தாங்கலை’ - இத்தலைப்பில் காங்கிரஸின் இலங்கை நிலைப்பாடு, புத்தக நாட்டுடமை பற்றிய வே. மதிமாறன் அவர்களின் பதிவு, ... என்று படித்திருக்கிறேன். பிரபலமான வாக்கியத்துக்குத் தொடர்புடைய நடிகர் மீளாத்துயில் கொண்டுவிட்டார். அன்னாரது குடும்பத்துக்கு எம் இரங்கல்கள்.



இந்தக் காணொளியைத் தந்த நிலாரசிகன் (பண்புடன் குழுமம் அவர்களுக்கு என் நன்றி!

நா. கணேசன்

------------

சென்னை, மார்ச் 13, 2009, (தினமலர்): பழம்பெரும் நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவருக்கு வயது 73. இறுதிச் சடங்கு நாள் சென்னையில் நடக்கிறது. தமிழில், "அவ்வையார்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஓமக்குச்சி நரசிம்மன். அதன் பிறகு எல்.ஐ.சி.,யில் பணிபுரிந்தபடியே 1969ம் ஆண்டு, "திருக்கல்யாணம்' படத்தில் நடித்தார். தொடர்ந்து சகலகலா வல்லவன், சூரியன், மீண்டும் கோகிலா, தம்பிக்கு எந்த ஊரு, குடும்பம் ஒரு கதம்பம், புருஷன் எனக்கு அரசன், போக்கிரிராஜா' உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழியின் 1,300 படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். "இந்தியன் சம்மர்' என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ள இவர், "தலைநகரம்' படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.

நாடக இயக்குனர் தில்லைராஜனின், "நாரதரும் நான்கு திருடர்களும்' நாடகத்தில் நரசிம்மன், கராத்தே பயில்வான் வேடத்தில் நடித்தார். சீன் காமெடியாக அமைய வேண்டும் என்பதற்காக ஜப்பானைச் சேர்ந்த பிரபல கராத்தே வீரர் யாமக்குச்சியின் பெயரை நாடகத்தில் கேரக்டர் பெயராக வைக்க இயக்குனர் முடிவு செய்தபோது, தமிழில் அப்பெயரை ஓமக்குச்சி என்று வைத்தால் காமெடியாக இருக்கும் என்று நினைத்து, வைத்தார். இந்த நாடகத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததால், நூறு நாட்கள் வரை நடந்தது. அதிலிருந்தே நரசிம்மனை, "ஓமக்குச்சி நரசிம்மன்' என அழைக்க ஆரம்பித்தனர்.
[...]

இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், காமேஸ்வரன் என்ற மகனும், விஜயலட்சுமி, நிர்மலா, சங்கீதா என்ற மகள்களும் உள்ளனர்; நிர்மலா அமெரிக்காவில் உள்ளதால், அவர் நாளை காலை சென்னை திரும்புகிறார்.

1 comments:

Anonymous said...

A great comedy actor is gone. My repects to him.