தமிழ் (யூனிக்கோட் 5.1-இலும் பிறகும்)

வரும் மார்ச் திங்களில் (2008) யூனிக்கோடு 5.1 இணையத்தில் இயங்கும். பல மொழிகளின் எழுத்துக்களும் வலையுலா முதன்முதலாய்க் காணும் வேளையிது. எ-டு: பல்லவ கிரந்தத்தின் கொடிவழித் தோன்றிய பாலித் தீவின் எழுத்துக்கள், சௌராஷ்ட்ர மொழிக்கு மதுரைக்காரர் நூறு ஆண்டுக்கு முன்னால் தோற்றிய எழுத்து (மொத்தம் அதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஐம்பது ஆளுக்கும் குறைவே). மலையாளத்துக்கு நானளித்த 10, 100, 1000 சின்னங்களும், தமிழ் ஓம் சின்னமும் அத்தருணத்தில் தொழிற்படத் தொடங்கும். மலையாளப் பூச்சியம் என்று கால் (1/4) பின்னத்தைக் கொடுத்திருந்தனர்! முதலில் அடியேன் சுட்டியபோழ்து மறுத்தாலும், பின்னர் பிழையை இப்போது ஏற்றுச் சரி செய்துவிட்டனர்.

பாரதிதாசன் பல்கலைத் துணைவேந்தரும், தமிழ் அறிஞரும் ஆகிய முனைவர் பொன்னவைக்கோ போன்றோர் யூனிக்கோடை மாற்றிடப் பல்லாற்றானும் முயற்சிகள் எடுத்தமை தாங்கள் அறிந்ததே. இது சம்மந்தமாக, என் பழைய வலைப்பதிவுகள் இரண்டு:

(1) யூனிக்கோடில் மேலதிகமாகத் தமிழ்எழுத்துக்கள்
http://nganesan.blogspot.com/2008/01/blog-post.html
(2) யூனிக்கோடு அதிகாரிகள் சென்னைச் செலவு:
http://nganesan.blogspot.com/2008/01/unicode-chennai_7911.html

விளைவாக, தமிழ் பற்றிய விவரணங்கள் சற்றே மாறியிருக்கிறது.
http://www.unicode.org/versions/Unicode5.1.0/

அதிகாரபூர்வமாக, யூனிக்கோடு தமிழ் மெய்யெழுத்துக்கள் என்பவை தனிமெய்களே என்று அறிவித்துள்ளதற்கு மகிழ்ச்சி. அதே நேரத்தில், யுடிசி அடிப்படையான மாற்றங்கள் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நா. கணேசன்

0 comments: