புதிய பதிவுகளுக்கு ஒரு தோரணவாயில்

தமிழில் 3 வலைத்திரட்டிகள் இயங்கிவருவதைப் பலரும் பயன்படுத்துகிறோம்:

(அ) தமிழ்மணம்:
http://thamizmanam.com

(ஆ) தேன்கூடு:
http://thenkoodu.com

(இ) தமிழ்ப்லாக்ஸ்:
http://tamilblogs.com

புதிய வலைத்தோரண வாசல் ஒன்றைப் பாரதத்தின் பல மொழிகளுக்கும் கூகுள் தந்துள்ளதைக் கண்டேன். நம் தமிழின் வலைவாசல்:
http://www.google.com/blogsearch?lr=lang_ta&q=site:com

முக்கியமான வசதி என்னவென்றால் ஒரு தேடுசொல் கொடுத்து எளிதாகத் தேடமுடிவதுதான். மேலும் சென்ற ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ துழாவலைக் குறுக்கமுடிகிறது. எப்போதும் போல், கூகுளின் எளிமை, அதன் பரந்துபட்ட வியாபகம், தமிழில் வரும் எல்லா வலைப்பதிவுகளையும் காட்டும் திறன், திரட்டி நடத்துநரிடம் எழுதிப் பதிவு செய்ய அவசியமினமை - இப் புதிய திரட்டியின் சிறப்பம்சங்களாகத் தோன்றுகின்றன. திங்களுக்கு ஒருமுறை இதில் காட்டும் பதிவுகளின் மொத்த எண்ணிக்கையைக் குறித்துவைத்தால் தமிழில் ப்லாகுகள் வளர்ச்சி பின்னால் ஆராயப் பயன்படும்.

இந்தத் திரட்டியின் தொடுப்பில், lang_ta என்னும் தொடரில்,
ta (= தமிழ்) 2 எழுத்தை மாற்றி ml = மலையாளம், te = தெலுங்கு, kn = கன்னடம், gu = குஜராத்தி, pa = குருமுகி (பஞ்சாபி), th = தாய் (தாய்லாந்து மொழி), ko = கொரியன், bo = திபெத்தியம் என்று பிற மொழிகளின் பதிவுநீட்சியைக் கணக்கிடலாம்.

எனக்கு, சிங்களம், ஹிந்தி (தேவநாகரி எழுத்து), வங்கம், கிமர் (கம்போடியம்) பதிவுகளைத் தேடும் முறை தெரியவில்லை. தெரிந்தால் மடலிடுங்கள்.

நன்றி,
நா. கணேசன்

புகையிலை விடுதூது - ஒரு பிரபந்தம்

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான உணவுத் தாவரங்கள், பறவைகள், கால்நடைகள் பலவாகும். 19-ஆம் நூற்றாண்டில் பஞ்சம் போக்க டெக்சாஸிலிருந்து சப்பாத்திக் கள்ளியை அறிமுகப்படுத்தினர். வான்கோழி, தக்காளி, நிலக்கடலை, புகையிலை, கொக்கோ (சாக்லெட்டுக்குத் தேவையான மூலப்பொருள்) போன்றவை அமெரிக்காவில் தோன்றி போர்ச்சுகீசியர், ஒல்லாந்தர் வழியாக இந்தியாவை அடைந்தன. இன்று மிளகாய் இல்லாவிட்டால் தமிழ்ச்சமையல் இல்லை என்பதுபோல் தோன்றிடினும் மிளகாய் உருவான இடம் மத்திய அமெரிக்காதான். மிளகாய்க்கு முன்னர் குறுமிளகு பயன்பட்டது. குறுமிளகைத் தேடிவந்த வெள்ளைக் காலனி மேலாண்மையர் அதனை இந்தோனேசியாவில் பயிரிடத் தொடங்கிய பின்னர் விலைசரிந்தது.

புகையிலை நூதனமாகத் தமிழகத்தில் அறிமுகமான பின்னர், முருகனுக்கு நிவேதனமாக அளிக்கும் வழக்கம் ஒன்று ஏற்பட்டது. விராலிமலையில் சுப்பிரமணியருக்குச் சுருட்டுப் படையல் உண்டு. பழனியைச் சுற்றிலும் வேளாண்மக்களால் புகையிலைப் பயிர் சாகுபடி இன்றும் ஆகிறது. பழனி மலையில் கோயில்கொண்டு எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணிக் கடவுள்மீது புகையிலையைத் தூதுவிடுவதாக ஒரு பிரபந்தம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் சீனிச் சர்க்கரைப் புலவர் பாடியிருக்கிறார். அதனை மதிப்பிற்குரிய உவேசா அவர்கள் அச்சுவாகனம் ஏற்றினார்கள். சீனிச் சர்க்கரைப் புலவர் இராமநாதபுரம் ஸம்ஸ்தான வித்துவானாக விளங்கிய சர்க்கரைப்புலவரின் குமாரர்; காளையார்கோயில் மருதுபாண்டியரைக் குறிக்கும் மயூரகிரிக் கோவை இயற்றிய சாந்துப் புலவரின் தம்பியார்.

உவேசா தன் முன்னுரையில் புகையிலை மீதான சில பழைய தனிப்பாடல்களைத் தந்துள்ளார்:

         நாலெழுத்துப் பூடு நடுவே நரம்பிருக்கும்
         காலுந் தலையுங் கடைச்சாதி - மேலாக
         ஒட்டு முதலெழுத்து மோதுமூன் றாமெழுத்தும்
         விட்டாற் பரமனுக்கு வீடு


(நாலெழுத்துப்பூடு = புகையிலை. 1, 4 எழுத்து = புலை. 1,3 எழுத்தை நீக்கினால், பரமன் வீடு = கைலை)


         ஊசிக் கழகு முனைமழுங் காமை யுயர்ந்தபர
         தேசிக் கழகிந் திரிய மடக்கல் தெரிகலன்சேர்
         வேசிக் கழகின் னிசைபல நூல்கற்ற வித்வசனர்
         நாசிக் கழகு பொடியெனக் கூறுவர் நாவலரே.


ஆ. இரா. வெங்கடாசலபதி 'அந்தக் காலத்தில் காப்பி இல்லை' (காலச்சுவடு பதிப்பகம்) என்ற நூலில் இப்பிரபந்தத்தையும் ஆய்கிறார். பின்னர் அப்புத்தகம் In Those Days There Was No Coffee: Writings In Cultural History என்ற ஆங்கில மொழிபெயர்ப்பும் ஆனது.

சீனிச்சர்க்கரைப் புலவர் இயற்றிய புகையிலை விடுதூது:
http://groups.google.com/group/CTamil/msg/6f5f04035dd7e2bc
பழைய உவேசா பதிப்பிலிருந்து தட்டெழுதினேன். அதில் இச் சிற்றிலக்கியத்தில் உள்ள கதையின் சாரமும் இணைத்தேன். புகையிலை விடுதூது பற்றிய கருத்துக்கள் உண்டா?

சீனிச்சர்க்கரைப் புலவர் (கி.பி. ~1800)
இயற்றிய
புகையிலை விடுதூது

பதிப்பாசிரியர்:
மகாமகோபாத்தியாய தாக்‌ஷிணாத்திய கலாநிதி
உ. வே. சாமிநாதையரவர்கள்,
பதிப்பாண்டு: 1939

[திருமாலுக்கும் புகையிலைக்கும் சிலேடை]

சீர்தந்த மாநிலத்திற் செல்வப் பயிர்தழைப்ப
நீர்தந்த பச்சை நிறங்கொண்டே - ஏர்தந்து

கார மணைந்து கனநீரிற் கண்வளர்ந்து
பாரை மணந்து படியளந்து - சாரமுடன்

எல்லார்க்கு மாலா யிசைந்து பரந்தோங்கிப்
பல்லா யிரவடிவம் பாரித்தே - அல்லாமல்

அம்புகையிற் சாரங்க மான தனுவெடுத்துத்
தம்ப வரிவடிவந் தானாகிச் - சொம்புடனே

[சிவபெருமானுக்கும் புகையிலைக்கும் சிலேடை]

தோலுரியும் போர்த்துத் துலங்கவன லேந்திநிறை
பாலத்து வெண்ணீறு பாலித்தே - கோலமுள்ள

பாசடையுங் கொண்டு பசுங்கொழுந்து பாலுகந்து
காசடையா ருக்கருமை காண்பித்துக் - காசினியில்

அம்பலத்துண் மேவிநிறைந் தங்காடி நின்றுநல்ல
தம்பமெனப் பித்தேறித் தாணுவாய் - இன்பமுடன்

நன்பிரமை கொண்டு நலத்தினா னற்பதங்கொண்
டன்பர்சுமை தாங்க வரனுமாய் - பண்பாய்

[பிரமதேவருக்கும் புகையிலைக்கும் சிலேடை]

மறைவாய் வளர்ந்து மனுக்களுண்டு பண்ணி
நிறைவாய் நாலுமுக நேர்ந்து - பிறர்தேறா

வாசவனஞ் சேர்ந்து மலர்க்கொம்பு தாங்குதலாற்
றேசு தரும்பிரம தேவனுமாய் - நேசமுள்ள (10)

முத்தே வருமாய் முளைத்தெவருங் கொள்ளவரும்
சித்தே புகையிலையே செப்பக்கேள் - வித்தகமாய்

[தமிழுக்கும் புகையிலைக்கும் சிலேடை]

ஏடதனை யாய்ந்தே யிலகுபதி கஞ்சேர்த்துப்
பாடமது போற்றிமொழி பன்னியே - கூடுபல

கோவை புனைந்து குறித்து வளமடல்சேர்
பாவுசந்த மேவிப் பதங்கொண்டு - சேவைபெறக்

கட்டமைந்து நற்பரணி கண்டுவிலைக் கானபின்பு
செட்டமைந்து பின்மதுரஞ் சேரவே - மட்டில்லாத்

தாவில்பல வித்தையுடைத் தாகித் தமிழ்போல
நாவில் விளையாடு நாமகளாய்ப் - பூவுலகில்

[புகையிலையின் வரலாறு]

வந்த புகையிலையுன் மாமகத்து வங்களைநான்
எந்த விதமென் றியம்புவேன் - விந்தையதாய்

மூவரொரு வர்க்கொருவர் முன்னொருகால் வாதாகித்
தேவ சபையகத்துச் செல்லவே - மேவிவிண்ணோர்

உங்கள்விவ கார முரைப்போம்பின் னாகவென்று
தங்குமொவ்வோர் பத்திரம தாகவே - அங்கவர்பாற்

கூவிளமும் பைந்துளவும் கொள்ளும் புகையிலையும்
தாவளமாய்க் கைக்கொடுத்துத் தாமனுப்ப - ஆவலுடன்

பின்மூவ ரந்தப் பெருஞ்சபையில் வந்தவுடன்
முன்கொடுத்த பத்ர முறைப்படியே - அன்பினுடன் (20)

தாருமென்ற போதிற் சதாசிவனார் பத்திரமும்
கார்வண்ணர் பத்திரமுங் காணாமல் - நேரான

கங்கை யிடத்துங் கவின்பாற் கடலிடத்தும்
பொங்குமலை தான்கொண்டு போகவே - இங்கிதஞ்சேர்

ஓகையுட னேபிரம னுற்ற நமதுபத்ரம்
போகையிலை யென்று புகன்றுடனே - வாகுகலை

வாணிதிருக் கையினின்றும் வாங்கியிந்தா வென்றுவைக்க
நாணியிரு வோரு நயவாமற் - பூணும்

வழக்கிழக்கச் செய்தந்த வானோர்முன் வெற்றி
விளக்கவுன் னாமம் விளக்கத் - துளக்கமொடு

ப்ரம்மபத்ர மென்றெவரும் பேசவே வந்துதித்த
தன்மப் புகையிலையே சாற்றக்கேள் - இன்னம்

[புகையிலையின் பெருமை]

குடியாத வீடு குணமாகா தென்றும்
விடியாதென் றுங்கூறல் வீணோ - படிமேற்

குடியா தவனாநீ கொற்றவன்கா ணுன்னைக்
குடியா தவன்சா குடியே - வடிவாக

எட்டுமா சித்திதரு மேகசித்து மூலிகைக்கும்
இட்டமா நீகலப்ப தில்லையே - திட்டமுடன்

வாடைப் பொடிகதம்ப மானவெல்லா முன்னுடைய
சாடிப் பொடிக்குச் சரியுண்டோ - நாடியே (30)

கற்றுத் தெளிந்த கனப்ரபல வான்களுமுன்
சுற்றுக்கு ளாவதென்ன சூழ்ச்சியோ - மற்றொப்பில்

ஆகாய முன்புகைபோ லானமையா லேயரனார்
ஆகாய மேகாய மாயினார் - வாகான

தாம்பூல நாவுக்குச் சாரமது தானுமுன்றன்
காம்பி லடக்கமன்றோ கட்டழகா - வீம்பாகப்

பூராய மான பொருளை வெளிப்படுத்தும்
சாராயந் தானுனக்குத் தம்பியோ - நேரா

அதனகா மீசுரமா யார்க்குமயல் பூட்டும்
மதனகா மீசுரமச் சானோ - விதனமற

மோகப் பயிராய் முளைத்த புகையிலையே
தாகப் பயிரான சஞ்சீவீ - ஆகத்தின்

அச்ச மகற்றுவிக்கு மாண்பிளைநீ யுன்றனக்கோர்
அச்சமகத் துக்குவர லாகுமோ - விச்சையுடன்

காரமுங் காயக் கடுமையுமுண் டாமுனக்கோர்
ஈரவெங்கா யப்பகையு மேதையா - கூரும்

தகையிலையன் றோதெரியுந் தானுன் னருமை
புகையிலையே தெய்வப் பொருளே - சகமேவும்

பூத்தான மாகப் பொருந்துதிரு மாதுவளர்
பூத்தான மான புகையிலையே - பார்த்தாய்ந்து (40)

நண்ணிய மாதவத்தோர் நாடோறுந் தேடுகின்ற
புண்ணிய மான புகையிலையே - எண்ணியெண்ணிக்

கொத்தடிமை யாக்கிக் குடிகுடி யாண்டுவரும்
புத்தமுத மான புகையிலையே - வர்த்தனைசேர்

லாபமும் வர்த்தகர்க்கு நம்புவிடர் கட்குச்சல்
லாபமுங் காட்டு நயக்காரா - சோபமுடன்

வெட்டுண்டு பின்னே வெயிலிற் கிடந்தாலும்
கட்டுண்டு வந்ததென்ன காரணங்காண் - தொட்டாற்

குறுகுறுத்துத் தும்முங் குணத்துடனே பின்னும்
கிறுகிறுப்ப தென்ன கெறுவம் - முறுகப்

பகைக்கட்டாய்க் கட்டும் படுசூலைக் கட்டும்
புகைக்கட்டா லோடாதோ போக - நகையாக

முன்பொரும லையை முனிந்துவெகு வாய்மலைபோற்
றன்பொரும லைத்தீர்க்குஞ் சாமியே - அன்பாகப்

பாவியுனை நட்டுப் பலன்காணார் தம்மைமுழுப்
பாவியென்று சொல்வார் பலருமே - நாவினாற்

சொற்காட்டு நல்ல துடிகார ராரையும்போய்ப்
பற்காட்ட விட்ட பழிகாரா - கற்கவென்று

பார்த்திப ரான பரத்தை வயற்குடியார்
போற்றி வளர்க்கும் புகையிலையே - தோத்திரமாம் (50)

காங்கயம் யாழ்ப்பாணங் கானக் கறுப்பனுடன்
பாங்குபெறு குள்ளம் பலவாக - நீங்கா

அழகன் குளமுதலா மானசரக் கெல்லாம்
பழகு முனக்கிணையோ பார்க்கின் - புளகமது

கொண்ட புகையிலையே கொள்ளு மெனதுமயல்
உண்டதனை நின்பா லுரைக்கக்கேள் - வண்டிசைந்த

[பழனியாண்டவர் பெருமை]

பூங்கடப்ப மாலையான் போரசுரர் தங்களுயிர்
வாங்கடப்ப வேலையான் வாலவுருப் - பாங்குபெறு

கந்தன் முருகன்வேள் காங்கேயன் வள்ளிபுணர்
சொந்தமண வாள துரந்தரிகன் - அந்தம்

தருபழனி யூரனெங்கள் சண்முகவேள் வீதிக்
கொருபவனி மாமயின்மே லுற்றான் - வருபவனி

[தூது சென்றுவர வேண்டுதல்]

சேவிக்க யான்போய்த் தெரிசிக்கு மவ்வளவிற்
கோவித்து மாரனம்பு கொல்லவே - ஆவலுடன்

ஆகினே னென்மயக்க மாருரைப்பா ருன்னையன்றி
வாகுபெற நீபோய் வகையாக - ஓகையுடன்

சென்றுரைத்துத் திண்புயமேற் சேர்ந்திலகு பூங்கடப்ப
மன்றல்கமழ் தார்வாங்கி வா. (59)

- சுபம் -
" புகையிலையின் வரலாறாக இப்பிரபந்தத்திலே கூறப்படும்
கற்பனைக்கதை வருமாறு:

ஒருமுறை மும்மூர்த்திகளுள்ளே ஒரு வழக்கு உண்டாயிற்று. அதனைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு அவர்கள் தேவர்கள் கூடியுள்ள சபைக்குச் சென்று தம் வழக்கை எடுத்துரைத்தனர். தேவர்கள் அவற்றைக் கேட்டபின், "உங்கள் வியவகாரத்தைப் பிறகு கவனித்துக்கொள்வோம்" என்று சொல்லி அம்மூவர்களிடத்தும் வில்வம், திருத்துழாய், புகையிலை என்னும் இவற்றைக் கொடுத்து இவற்றை மறுநாள் கொண்டுவரச் சொல்லியனுப்பினர். அவர்கள் மூவரும் அங்ஙனமே சென்றனர். சிவபெருமான்பாற் கொடுத்த பத்திரமாகிய வில்வத்தைக் கங்கையின் அலை கொண்டு போயிற்று; திருமாலிடம் கொடுத்த திருத்துழாயைப் பாற்கடலிலுள்ள அலை கொண்டுபோயிற்று. பிரமதேவர் தாம் பெற்ற புகையிலையைத் தம் நாவிலுள்ள கலைமகளிடத்திற் கொடுத்துவைத்திருந்தார். மறுநாள் மூவரும் விண்ணவர் சபைக்கு வந்தபோது தேவர்கள், "முன்னே நாம் கொடுத்த பத்திரங்களைக் கொடுங்கள்" என்று கூறவே சிவபெருமானும் திருமாலும் விழித்தனர்; "எங்கள் பத்திரங்கள் போயின" என்று அவர்கள் கூறினர். அது கண்டு மகிழ்ச்சியுற்ற பிரமதேவர் கலைமகளிடத்திலிருந்து புகையிலையை வாங்கி, "இதோ, எனக்கு அளித்த பத்திரம்" என்று முன்வைத்து, "மற்றவர்கள் பத்திரங்கள் போயின; என்னுடையது போகையிலை" என்று கூறினார். அவர் கூற்றில் புகையிலை யென்பதன் மரூஉவாகிய போகையிலை என்னும் பெயர் தோன்றியது; பிரமதேவரிடமிருந்து நழுவாமல் அவருக்கு உரியதானமையின் அதனைப் பிரம்ம பத்திரம் என்று யாவரும் அன்றுமுதல் வழங்கலாயினர். பிரமதேவர் தாம் கூறிய வழக்கில் வெற்றிபெற்றனர். ஏனை இருவரும் தம் வழக்கிழந்தனர்."

பதிப்பாசிரியர்:
மகாமகோபாத்தியாய தாக்‌ஷிணாத்திய கலாநிதி
உ. வே. சாமிநாதையரவர்கள்,
பதிப்பாண்டு: 1939

வையவலை வைப்பு:
டாக்டர் நா. கணேசன்

தமிழுக்கு ஒரு புதிய வலைவாசல்

இ-கலப்பையை யுனித்தமிழுக்கு மேம்படுத்திப் பலரும் பதிய வாய்ப்பளித்த முகுந்த் புதிதாகத் திறமூல மென்பொருளைப் பயன்படுத்தி ஒரு வலைத்திரட்டி அளித்துள்ளார். http://tamilblogs.com

வலைப்பதிவர்கள் அங்கேயும் பதிந்துகொள்ள வேண்டுகிறேன், http://tamilblogs.com/submit_blog.php

வலைத்திரட்டிகள் வடிவமைப்போர் மற்ற இந்திய மொழிகளில் நடப்பதையும் பார்த்துத் தமிழுக்கு அந்நுட்பைக் கொணர்தல் வேண்டும். வலைச்சுவடிகளின் சில வரிகளையும் சுட்டிகளையும் ஒரு கூகுள் குழுமத்தில் சேர்த்தால் பல மாதங்கள், ஆண்டுகள் சென்றபின் தேடுதல் எளிது. எடுத்துக்காட்டு:
http://groups.google.com/group/blog4comments

நன்றி, நா. கணேசன்