மலையாள வார்த்தை - இன்னலெ (நேற்று)

இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தொடர்பை நன்கு விளக்கிய பதிவை ஜெகத் அவர்களின் பதிவில் வாசித்தேன்:
http://kaiman-alavu.blogspot.com/2006/08/blog-post.html
"இரண்டு மொழிகளில் உள்ள சொற்களுக்கு இடையே உள்ளத் தொடர்பை அறிய வழக்கொழிந்துவிட்ட பழஞ்சொற்களைப் பற்றிய அறிவும் தேவை. எடுத்துக்காட்டாக, 'இன்று' என்பதை 'இண்ணு' என்றும் 'நாளை' என்பதை 'நாள' என்றும் சொல்லும் மலையாளிகள் 'நேற்று' என்பதை மட்டும் 'இன்னலெ' என்று ஏன் சொல்கிறார்கள் என்று நான் குழம்பியதுண்டு. இதற்கான விளக்கம் வேங்கடராஜுலு என்பவர் எழுதிய "தமிழ் சொல்லமைப்பு" என்ற நூலில் கிடைத்தது. பழந்தமிழில் 'நேற்று' என்பதைக் குறிக்க 'நெருநல்' மற்றும் அதன் திரிபாகிய 'நென்னல்' ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. (குறள்: "நெருநல் உளனொருவன் இன்றில்லை.." - நேற்று இருந்தவன் இன்றில்லை). நென்னல் என்பதே கன்னடத்தில் 'நென்ன' என்றும் மலையாளத்தில் இன்னலெ என்றும் திரிந்திருக்கிறது."

என் பின்னூட்டம்: சிந்தனையைத் தூண்டும் பதிவு. திராவிட மொழிக் குடும்பச் சொற்களுக்கும், இந்தோ-ஐரோப்பிய மொழிச் சொற்களுக்கும் இவ்வாறு தொடர்பு அனேகமாக இருக்காது.

'தென்மொழிக் கட்டுரைகள்', சமணர் நூல்களாம் ஸ்ரீபுராணம், மேருமந்தர புராணம் போன்றவற்றை அச்சிட்ட பேரா. வேங்கடராஜுலு ரெட்டியார் என்று நினைக்கிறேன். நூலின் பதிப்பு விவரம், பதிப்பகம், அச்சான ஆண்டு, மொத்தப் பக்கம் அறிய ஆவல்.

சொல்முதல் நகரவொற்று கெடுதல் வேறு சொற்களிலும் பார்க்கமுடியும். காட்டுகள்:
(1) நெருநல் > நென்னல் > இன்னலெ
மணிமொழியாரின் திருவெம்பாவையில் நென்னலை என்ற சொல் பயில்கிறது.
(2) நீர்+அம் (சாரியை) > ஈரம்.
(3) நுண்ணி(ய) > உண்ணி
குருவாயூரில் குழந்தையாய்த் திகழ்பவர் உண்ணிக் கிருஷ்ணன் (நுண்மை ~ மழலை).
கவிஞர் கண்ணதாசன் அழகான கவிதைகள் உண்ணிக் கண்ணன் மீது பாடினார்.
தமிழில், நாய்மேல் உள்ள நுண்பூச்சியை உண்ணி என்கிறோம்.

உடல் என்னும் சதைப்பிண்டத்தில் ஏறும்/உகும் உயிரை, உகிர் > உசிர் > உயிர் என்றானதா? என்று பார்க்கவேண்டும்.

மேலும், வடசொல்லாகிய நகம் என்பதற்குத் தெளிவான இந்தோ-ஐரோப்பிய மூலம் காணோம் என்கின்றனர். நுகம் > நகம் என்றாகியிருக்கலாம். ஒப்பீடு: புல்லி > பல்லி, நுணா > நணா (திருநணா (பவானி) - சம்பந்தர் பாடிய தலம்.கூடுதுறை). உகிர் (நகம்) - நுகம் என்ற சொல்லின் முதல் ந அழிவதால் ஏற்படுவதா? என்னும் ஆய்வுவினாக்கள் எழுகின்றன.

மேலும் பார்க்க:
Consonant assimilaton in Tamil and Sanskrit
ஆஸ்கோ பார்போலா அவர்களின் மறுமொழி:
Prof. Parpola's reply

நா. கணேசன்

4 comments:

துளசி கோபால் said...

இப்போள் மனஸிலாயி. வளரே நன்னி

லதா said...

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை எழுப்புவன்
- திருவெம்பாவை - மாணிக்கவாசகர்

Anonymous said...

Also, tiruppAvai 16:

aRai paRai mAyan2 maNivaNNan2 nen2n2alE vAy nErntAn2

வெற்றி said...

அருமையான , மிகவும் பயனுள்ள பதிவு. அறிந்திராத பல சங்கதிகளை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.