பெற்றோர் பெற்ற திருமண வாழ்த்து

என் பெற்றோர் திருமண நாள் 9-நவம்பர்-1956.
அந்நாளில் வித்துவான் மாரி செட்டியார் பாடிய வாழ்த்துப்பா.
வித்துவான் பெயரர் கோவைக் கல்லூரியில் தமிழ்ப்
பேராசிரியராக விளங்குகிறார் என்று கவிஞர் சிற்பி
சொன்னார். அன்புடன், நா. கணேசன்

--------------------------------------

மாணிக்க - மரகதத்
திருமண வாழ்த்து

மண நாள்: துன்முகியாண்டு ஐப்பசி 24

வாழ்த்து

மங்கலஞ் செறிந்து வளம்பல வோங்கி
எங்கணும் புகழும் எழிற்பதி யாகும்
பண்புள புரவி பாளைய மருங்கில்
தண்பொழிற் சோலை தனியெழிற் காட்டும்
கழனிகள் புடைசூழ் காளியா புரத்தில்

ஓங்கிய சிறப்போ டொல்கா நல்லிசை
வீங்கிய விழுப்புகழ் வேளாண் குடியில்
தோன்றிய செல்வன் தூநெறி யாளன்
ஆன்றமைந் தொழுகும் அறிவின் திறலோன்
மாண்புடை நாக மாணிக்க மென்னும்
சுப்பிர மணியத் தோன்றல் தானும்
திருநிறை செல்வி மரகத மடந்தையைச்
செங்கரம் பற்றித் திருமண மென்னும்
மங்கல மணிந்தனன் மனமகிழ் வோடும்

ஈங்கிவர் வாழ்க்கை யோங்கி யுயர்க
நீங்காச் செல்வமும் நிறைநாட் பேறும்
இன்னுயிர் மக்கள் எழில்நலச் செல்வமும்
மன்னுயி ரோம்பும் மதிநல வளனும்
இன்ன பலவும் இயைபுடன் பெற்று
சுற்றமும் நட்பும் சூழ்தரச் சிறந்து
வாழிய மகிழ்ந்தென வாழ்த்துவன்
ஊழி முதல்வனை யுளமதிற் கொண்டே.


பொள்ளாச்சி அன்பு சிறக்க.
9-11-1956 வித்வான் ப. மாரி செட்டியார்